Thursday, March 24, 2016

பகத்சிங்

ல்ல உயரம், பாந்தமற்ற உடை, அடக்கமான சுபாவம் மற்றும் தன்னம்பிக்கை இல்லாத ஒரு கிராமத்து வாலிபம் போன்ற தோற்றம். அவரை சந்திக்கும் யாருக்கும் முதல் பார்வையில் அவர் மீது உடனே நம்பிக்கை வராது. தேச வரலாற்றில் இந்த இளைஞன் நீங்கா இடம் பெறப் போகிறான் என்று அவரை அப்போது பார்த்த யாரும் நம்பி இருக்க மாட்டார்கள்.  ஆனால், பல தசாப்தங்கள் கடந்தும் அவர் பேசப்படுகிறார். அவரை தவிர்த்து இந்திய வரலாற்றை எழுத முடியாது. ஆம். நான்  பகத்சிங் குறித்துதான் சொல்கிறேன்.

கடைசி மூச்சின் போதும் தன் பாதங்கள், தன் உயிரினும் மேலாக கருதிய இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என்று கருதியவர். தூக்கில் தொங்கி அந்தரத்தில் சாவதை அவர் விரும்பவில்லை. துப்பாக்கி குண்டு ஏந்தி சாவதற்குத் தயாராக இருந்தவர் பகத்சிங். குருதியின் ஒவ்வொரு அணுக்களிலும், தேசத்தின் மீதான காதலும் அதன் விடுதலையும் மட்டுமே நிரம்பி வழிந்தது. தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் இல்லாமல், இந்திய விடுதலையையும், சோஷியலிச சமூகத்தை கட்டியமைப்பது மட்டுமே தன் சுவாசம் என்று கருதிய மாமனிதன் அவர். அவர் மட்டுமல்ல அவர் வயதொத்த ராஜகுருவும், சுகதேவ்வும் இப்படித்தான் வாழ்ந்தார்கள்.
சதி வழக்கின் விசாரணையை புரட்சிகரமான முறையில் பயன்படுத்தியவர்:

அப்போது ஊடகங்கள் என்று எதுவும் இல்லை. தன் மனித ஊடகங்கள் மட்டும்தான். செவி வழியாக மட்டுமே செய்திகள் பரவிய காலம் அது. ஆனால், அப்போது லாகூர் சதிவழக்கை தேசமே உற்று நோக்கியது. பகத்சிங்கின் நெருங்கிய நண்பரான, அஜய்கோஷ் சொல்கிறார், “மத்திய சட்டசபையில் குண்டு வெடித்த நாளிலிருந்து, பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூன்று வீரர்களும் தூக்குக் கயிற்றில் தொங்கிய நாள் வரையிலும் அந்தக் கைதிகள் மீதும், அந்த வழக்கின் மீதும், அரசியல் கைதிகளின் நல உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், தாங்கள் மேற்கொண்ட இலட்சியத்திற்காகவும் அவர்கள் நடத்திய எண்ணற்ற போராட்டங்கள் மீதுமே பொதுமக்களின் முழுகவனமும் இருந்தது. பகத்சிங்கும், அவரது தோழர்களும்  பல வீரக் கதைகளின் நாயகர்களாயினர்....”.   ஆம். இதில் ஊசி முனை அளவும் மிகை இல்லை.  ஊடகங்கள் இமாலய வளர்ச்சி பெற்றுள்ள இந்த காலக்கட்டத்திலும், நாம் இன்னும் அரசியல் விழிப்புணர்ச்சி பெறாமல் தான் இருக்கிறோம். ஆனால், பகத்சிங்கும் அவரது தோழர்களும், தங்கள் வழக்கின் ஊடாகவே மக்களை தேச விடுதலை குறித்து சிந்திக்க வைத்தார்கள். சிறைக்கம்பிகளுக்கு பின்னிருந்தும் கைதிகளின் நல உரிமைக்காக போராடினார்கள்.  

“இந்த வழக்கின் விசாரணையைப் புரட்சிகரமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் சர்க்காரின் நீதியின் போலிதனத்தை அம்பலப்படுத்தவும்,  புரட்சிகாரர்களின் உறுதியை சிதறடிக்க முடியாதென்பதை காட்டி கொள்வதற்கும், இந்த வழக்கு விசாரணையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். சர்க்காரை அலட்சியம் செய்ய வேண்டும். சர்க்காரின் போலீஸ், நீதிமன்றம் ஆகியவற்றை எவ்வளவு அலட்சியப்படுத்துகிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இதன் மூலமாக தேச மக்களை விடுதலையை நோக்கி தட்டி எழுப்ப வேண்டும். “ இது வழக்கு நடந்து கொண்டிருந்தபோது பகத்சிங் தம்மை சந்திக்க வந்த தோழர்களிடம் சொல்லியது.

ஏன் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு வரலாற்றை நம் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும்...?

எது பகத்சிங்கை விடுதலை போராட்டம் நோக்கி இழுத்தது,  1919-ம் ஆண்டு ஏப்ரல் 13. அப்போது பகத்சிங்கிற்கு 12 வயது. மைக்கேல் டயர் என்கின்ற லெப்டினட் கவர்னர் உத்தரவின்பேரில் ஜெனரல் டயர்,  ஜாலியன் வாலாபாக்கில் 1650 ரவுண்டுகள் சுட்டான். 400 க்கும் மேற்பட்டவர்கள் அந்த இடத்திலேயே குண்டடிபட்டு இறந்தனர். கிணற்றுக்கு உள்ளே குதித்துச் செத்துப்போனவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றார்கள். இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது ஜாலியன் வாலாபாக்கில். அங்கு குருதி ஓடிய தியாக மண்ணை, ஒரு ஜாடியில் போட்டு, பகத்சிங் வீட்டுக்கு கொண்டு வருகிறான். அந்த மண்ணை தினமும் பூசிக்கிறான். அந்த அடைக்கப்பட்ட மண் தான், அவன் சுதந்திர வேட்கைக்கு காரணமானது.

அன்று அந்த பன்னிரெண்டு வயது சிறுவனுக்கு இருந்த அரசியல் தெளிவு, இன்று வயது முதிர்ந்த பலருக்கும் இல்லாமல் இருக்கிறது.  நிகழ்வுகளை நாம் வெறும் தட்டையாக மட்டும் பார்க்கிறோம். விடுதலை மட்டுமல்ல.. அந்த இளைஞன், விடுதலைப்பெற்ற பிறகு, இந்திய சமூகம் எப்படி இருக்க வேண்டுமென்று பெருங்கனவு கண்டவன். ஏற்றத் தாழ்வற்ற, இல்லாமை எவருக்கும் இல்லாத, சாதி பேதங்களற்ற சமூகமாக இருக்க வேண்டும் என்று விரும்பியவன்.  அவனின் ஒரு கனவாக இருந்த சுதந்திரம் நமக்கு கிடைத்தது. ஆனால், அவனின் மற்ற விருப்பங்கள் இன்னும் கனவாக மட்டுமே இருக்கிறது.  இந்த சூழ்நிலையில், நாம் அனைவரும் பகத்சிங் குறித்தும் அவனின் தோழர்கள் குறித்தும், அவர்கள் இந்த சமூகம் குறித்து கண்ட கனவுகள் குறித்தும் குழந்தைகளிடம் உரையாடுவது இன்றியமையாதது ஆகிறது.

Saturday, March 05, 2016

வேற்றுகிரகவாசிகள் @ ஏலியன்ஸ்

கண்ட பால்வெளியில் உள்ள ஏதாவது ஒரு கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா இல்லையா என்று பல வருடங்களாக ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிவருகின்றனர்.

ஏலியன்ஸ் உண்மையிலேயே உள்ளதா இல்லை கட்டுக்கதையா?  வாங்க விரிவாக அலசலாம்.

பிரான்ஸ் நாட்டின் அன்றைய மன்னன் நெப்போலியன் பானர்பட்டின் மண்டையோட்டில் அரை அங்குலம் அளவுள்ள வெளிப்பொருள் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர். கி.பி 1794 ஆம் ஆண்டில் அவர் பல நாட்கள் காணாமல் போயிருந்தார். மீட்கப்பட்டபின் நெப்போலியனே, வித்தியாசமான மனிதனால் தான் சிறைப்படுத்தப்பட்டதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பழங்கால எகிப்தியர்களின் சித்திரவடிவ எழுத்துக்களின் ஆய்வுகள், ஏலியன்கள் பறக்கும் தட்டுகளில் நைல் பள்ளத்தாக்கிற்கு வந்ததை உறுதி செய்கின்றன. எகிப்தில் காணப்படும் பிரமிட் அமைப்புகள் மனிதனால் உருவாக்கியிருக்க சாத்தியமே இல்லையென்றும், அவையெல்லாம் ஏலியன்களால் உருவானவை என்று கூறுபவர்கள் பலர். 1971 ஆம் ஆண்டு அப்போல்லோ 14 திட்டப்பணியின் அங்கமாக நிலாவில் காலடி வைத்த ஆறாவது மனிதர் என்ற பெயரை பெற்றவர் நாசா விண்வெளி வீரர் எட்கர் மிட்செல்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள ரோஸ்வெல் பாலைவனத்தில் 1947- ல் நடந்த விபத்தில் யூ.எப்.ஒ எனப்படும் அன்ஐடெண்டிபைட் பிளைட் ஆப்ஜக்ட், அதாவது பறக்கும் தட்டில் வந்த ஏலியன்கள் இருந்திருக்கின்றனர் என்று மிட்செல் உறுதியாக கூறுகிறார்.

இறந்த ஏலியன் புகைப்படம் ஒன்று அமெரிக்க பத்திரிக்கைகளில் வெளியானது. அது ஒரு குழந்தையின் சடலம் என்று கூறுபவர்கள் பலர். ஆனால் மிட்செல் கூறுகிறார், “ரோஸ்வெல்லில் நடந்த சம்பவத்தை நான் நேரில் பார்த்தேன். என்னுடைய கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்நிகழ்வு நடந்தது. நான் நிலாவிற்கு சென்று வந்ததும் பல கருத்தரங்கில் பேசும்போது 'அது' ஏலியன் தான் ...குழந்தையின் சடலமல்ல ..என்று கூறியிருக்கிறேன்.  அமெரிக்க அதிகாரிகள் ரகசிய இடத்தில் 'அதை' பாதுகாத்து வருகின்றனர். என் குடும்ப நண்பரும் அமெரிக்க விமானப்படையின் மேஜர் ஆகவும் இருந்தவர், இது ஏலியன் தான் என்று உறுதிப்படுத்தினார். நிலாவில் இருந்து திரும்பிய பின், பெண்டகனுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் என்னுடைய கதையை கூறி அவர்களின் கருத்தை கேட்டேன்.

அவர்கள் நியூ மெக்ஸிகோவிற்கு சென்று ஆராய்ந்துவிட்டு, நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே என்றனர். அமெரிக்க அரசு, பறக்கும் தட்டு விபத்தில் உயிருடனும், சடலமாகவும் ஏலியன்களை கண்டுபிடித்தது. ரோஸ்வெல் சம்பவத்தை அமெரிக்கா மூடி மறைப்பதற்கு காரணம், ஏலியன்ஸின் வருகை நம்மை எதிர்க்கின்ற நோக்கத்துடன் இருந்திருக்கலாம் என்றும், சோவியத் ரஷ்யா இதைப்பற்றி கண்டுபிடித்துவிடக்கூடாது என்ற அமெரிக்காவின் விருப்பமாக இருந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்.

தான் நாசாவில் பணியில் இருந்த காலத்தில் பறக்கும் தட்டுக்கள் பூமிக்கு வந்து போயுள்ளதாக மிட்செல் உறுதியாக கூறுகிறார். ஆனால் இவர் 1995 அன்று வெளியிட்ட ஏலியன் பிரேத புகைப்படத்தை போலி என்று மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வானவியல் நிபுணர்கள், சூரிய குடும்பத்திலிருந்து வெகு அப்பாலிருந்து வரும் ரேடியோ சிக்னல்களைக் கொண்டு ஏலியன்ஸ் வாழ்க்கையை அறிய தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பை கொண்டு பால்வெளியையும் விண்மீன்களையும் ரேடியோ சிக்னல்கள் பெற முடியுமா என்று தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். ஜூலை 21, 2015 அன்று ரஷ்ய கோடீஸ்வரர் யூரி மில்னர், (break through initiatives) 'சாதனை முறியடிப்பு முயற்சிகள்' என்ற அமைப்பை, பூமிக்கு அப்பால் ஏதேனும் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா என கண்டுபிடிக்க 100 மில்லியன்ஸ் டாலரில் ( சுமார் 650 கோடிகள்) உருவாக்கியுள்ளார்.
இது 10 வருட திட்டமாகும். இந்த திட்டத்திற்கு பிரபல வானவியல் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இவர் வேற்றுகிரகவாசிகள்  இருப்பது உறுதியானால், நாம் அவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பதே நல்லது என்று கூறி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சாதனை முறியடிப்பு முயற்சிகள்’ அமைப்பானது அதிக சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் சூரிய மண்டலத்திற்கு அப்பால், நமக்கு நெருக்கமாக உள்ள 100 விண்மீன் கூட்டங்களில் ஏலியன்ஸ் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை ஆராயும்.

இந்த அமைப்பின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய ஸ்டீபன் ஹாக்கிங் “ஏதோ வேற்று கிரகத்தில் உள்ள ஒரு புத்திசாலி உயிரினம் நம் பூமியில் மின்னும் விளக்கொளிகளை கவனித்துக் கொண்டிருக்கலாம். இதன் அர்த்தம் என்னவென்று அதற்க்கு தெரிந்திருக்கலாம். பூமிக்கு அப்பால் வேற்றுகிரக உயிரினத்தை கண்டுபிடிக்க நாம் தீவிரமாக ஈடுபடும் நேரம் வந்துவிட்டது” என்று கூறினார்.

இந்த அமைப்பின் நோக்கம், வேற்று கிரகத்திலிருந்து ரேடியோ சிக்னல் வந்தால் அதை அதிநவீன தொலைநோக்கியை பயன்படுத்தி கண்டறிவதுதான். வேற்றுகிரகவாசிகளை கண்டுபிடித்தபின், அவர்களிடம் எந்த வகையில் செய்திகளை அனுப்பலாம் என்று சொல்பவர்களுக்கு 10 லட்சம் டாலர்கள் ( சுமார் ரூ.6.5 கோடிகள்) பரிசுத்தொகையும் அறிவித்துள்ளது இந்த அமைப்பு.  போட்டியின் முழு விவரங்களை விரைவில் அதன் இணைய தளத்தில் அறிவிக்க உள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் அமெரிக்காவின் நாசா அமைப்பு கடந்த ஜூலை 23, 2015 அன்று ஒரு புதிய கிரகத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. பூமியை போலவே உள்ள அந்த கிரகமானது, பூமியை விட 60% பெரியது. கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட அந்த கோளுக்கு கெப்லர் 452 b  என பெயரிட்டுள்ளது. அது சுமார் 1400 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. அது நமது சூரியனை போன்றே அமைந்துள்ள ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவது மட்டுமில்லாமல், பூமியின் சுற்று வட்டப்பாதையின் தொலைவைப்போலவே அதன் தொலைவும் அமைந்து உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா இல்லையா என்று ஆய்வுகளை மேற்கொள்ள இருகின்றனர்.

வரும் காலங்களில் ஏலியன்ஸ் கண்டுபிடிக்கப்படலாம். சாதி,மதம், நாடு கடந்து நடக்கும் திருமணத்தைப்போல கிரகம் கடந்தும் திருமணம் நடக்கலாம்.

Aliens Exist - Stephen Hawking

வேற்று கிரகவாசிகள் நிச்சயம் இருக்கிறார்கள் என்று அடித்துக் கூறுகிறார் ஸ்டீபன் ஹாகிங் (68).


இயற்பியலில் உலக மேதையான இந்த அறிவியல் அறிஞர் பிறப்பிலேயே சில குறைபாடுகளுடன் பிறந்தாலும் அவற்றையெல்லாம் மீறி தன்னுடைய அறிவாற்றலை நிரூபித்து உலகையே வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருப்பவர்.

இவர் சொன்னால் அது உண்மையாகத்தானே இருக்க வேண்டும். வேற்று கிரகங்களில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அவர் நம்புவதற்கு ஒரே காரணம் கணக்குதான். அது என்ன கணக்கு? உலகில் பத்தாயிரம் கோடிக்கும் மேற்பட்ட நட்சத்திர கூட்டங்கள் இருக்கின்றன. நட்சத்திர கூட்டம் என்றால் தனித்தனி சூரிய மண்டலங்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதில் பூமியில் நாம் எல்லோரும் இருப்பதைப் போல எத்தனையோ கிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழ நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது என்று கணக்கு அடிப்படையில் கூறுகிறார்.

அப்படியானால் அவர்களும் நம்மைப்போல நாகரிகம் அடைந்தவர்களா என்று கேட்டால், இருக்கலாம் என்கிறார் ஸ்டீபன் ஹாகிங். நம்மைவிட புத்திசாலிகளாகவும் நம்மைவிட நவீன விண்வெளி வாகனங்களைப் பயன்படுத்துகிறவர்களாகவும் இருக்கலாம், அவர்களுடைய நட்சத்திர மண்டலத்தில் வசதிக் குறைவு ஏற்பட்டாலோ, அல்லது பிற கிரகங்களை ஆராய்ந்து பார்த்துவிடுவோம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டாலோ பூமிக்கும் அவர்கள் வரக்கூடும் என்கிறார் ஹாகிங்.

வேற்றுகிரகங்களில் பூமியின் ஆரம்ப கட்டத்தில் இருந்ததைப் போன்ற சிறிய வகை உயிரினங்கள் இருக்கலாம் என்பது ஒரு எதிர்பார்ப்பு.

வேற்றுகிரகவாசிகளைப் பார்த்துவிட வேண்டும் என்ற குறுகுறுப்பு நமக்கு இருந்தாலும் அவர்கள் நம்மைச் சந்திக்கும் வேளை நமக்கு பேராபத்தாகக்கூட முடியலாம் என்றும் எச்சரிக்கிறார். ஏன் என்றால் அவர்கள் நம்முடைய பூமியைத் தங்களுடைய காலனியாகக்கூட பயன்படுத்த முற்படலாம் என்கிறார்.

டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பவுள்ள குறும்படத்துக்கான விளக்கக் காட்சியில் இடையில் தோன்றும் ஸ்டீபன் ஹாகிங் இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். இதை லண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் நாளிதழ் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது.

Thursday, February 25, 2016

Tale of Man who made forest in dharmapuri, in Tamilnadu

ருமபுரி என்ற வார்த்தையை கேட்டவுடன் உங்கள் மனசித்திரம் எப்படி விரியும்...? அது ஒரு பாலை நிலம், பெண் சிசு கொலை அதிகம் நடந்த ஊர், சாதிக் கலவரங்கள், நக்சல் பகுதி... இப்படியானதாகதான் இருக்கும் உங்கள் எண்ணம்.
 
ஆம். எனக்கும் இப்படிதான் அந்த ஊர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  அதில் உண்மைகளும் இல்லாமல் இல்லை. ஆனால், அது மட்டுமே உண்மையும் இல்லை.... அந்த ஊருக்கென இன்னொரு முகம் இருக்கிறது, யாருக்கும் அதிகம் தெரியாத முகம். பசுமை முகம்.  இந்த கட்டுரை அந்த பசுமை முகத்தை பற்றி அல்ல. அதை விதைத்த ஒரு தனி மனிதனை பற்றி...  ஆம். வரலாறு நெடுகிலும் சில அற்புதங்கள் தனி மனிதர்களால் நிகழ்ந்து இருக்கிறது.
 
அப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்திய ஒரு மனிதனை பற்றி 
 
 
உங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜாதவ் பயேங்கை தெரிந்து இருக்கும். யாரது என்கிறீர்களா...?  அசாமில் பிரம்மபுத்திரா மணல் படுகையில் ஒரு காட்டையே உருவாக்கியவர். அதற்காக பத்ம ஸ்ரீ விருது வரை வாங்கியவர்.   நம் ஊரிலும் ஒரு ஜாதவ் பயேங் இருக்கிறார்... அதுவும் தருமபுரியில்.  அவரை அறிமுகப்படுத்தவே இந்த கட்டுரை....  
 
தமிழகத்தின் ஜாதவ் பயேங்:
 
ஜாதவ் பயேங் உருவாக்கிய காடு அரசுக்கு தெரிய வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை. ஊருக்குள் வந்த யானைகளை துரத்திக் கொண்டே சென்றவர்கள்,  கடைசியில் அடைந்த இடம் ஒரு காடு. தங்கள் வரைப்படத்தில் இல்லாத  காட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், இது எப்படி உருவானது என்ற தேடலுக்கான விடைதான் ‘ஜாதவ் பயேங்’. இதுபோல்தான் எனக்கும் தமிழகத்தின் ஜாதவ் பயேங் அறிமுகமானார்.  வேறொரு வேலையாக தருமபுரி மாவட்ட எர்ரப்பட்டிக்கு சென்று, அரசு வரைபடத்தில் இல்லாத ஒரு கானகத்தில் சிக்கி கொண்டேன். என்னை தொலைத்து அந்த அற்புத கானகத்தை கண்டடைந்தேன்.  அங்குதான் அந்த காட்டை உருவாக்கிய ‘பியுஷ் மனுஷ்’ அறிமுகமானார்... ராஜஸ்தான் பூர்வீகம். போன தலைமுறையில் தமிழகம் வந்து குடியேறியவர். 
 
 தமிழ் ஜாடையில் இல்லாத, ஆங்கிலத்தில் உரையை துவங்கிய அவருடன் என்னால் உடனே ஒட்ட முடியவில்லை. ஆனால் பேச ஆரம்பித்த சில மணிநேரங்களில் அவரின் உற்சாகம், என்னையும் தொற்றிக் கொண்டது. அவருடன் மாலை நேரத்தில் துவங்கிய இந்த உரையாடல் பின்னிரவு வரை நீண்டது...
 
 
காடெனப்படுவது யாதெனில்...
 
இந்த காடு எப்படி உருவானது...? 
 
“2007 ல் இந்த பகுதிக்கு வேறு வேலையாக வந்தேன். இந்த பகுதியின் நில அமைப்பு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்போது மழை தொடர்ந்து பல ஆண்டுகள் பொய்த்து இருந்ததால், விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று,  நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டு இருந்தார்கள். சூழலியல் மீது அக்கறை கொண்ட நண்பர்களிடம் பேசி நிதி திரட்டி, இடம்பெயர்ந்து கொண்டிருந்தவர்களிடமிருந்து நிலத்தை வாங்கினேன். ஏறத்தாழ நூறு ஏக்கர். நான் விவசாயி கிடையாது, விவசாயமும் தெரியாது.... ஆனால் கல்லூரிக் காலங்களில் ஆயிரக்கணக்கில் மரங்கள் நட்டு இருக்கிறேன். அந்த  அனுபவத்தில் இந்த வறண்ட நிலத்தில், மரங்கள் நட துவங்கினேம். ஏக்கருக்கு 1300 மரங்கள் வீதம், இது வரை ஒரு லட்சத்து முப்பதாயிரம் மரங்கள் நட்டேன்...இப்படியாகதான் இந்த கூட்டுறவு காடு உருவானது...” என்று பியூஷ் தன் மழலை தமிழில் சொன்னார்.  
 
காடெனப்படுவது யாதெனில், வெறும் மரங்களின் தொகுப்பு மட்டுமல்ல.... ஓடைகள், குளங்கள், இதெல்லாம் இருக்க வேண்டும். அப்போதுதான் வனவிலங்குகள் வரும்... இப்போது இந்த காட்டில் ஒரு வற்றாத ஓடையும், 8 குளங்களும், 2 ஏரிகளும், 17 தடுப்பணைகளும் இருக்கிறது. அவ்வபோது காட்டு பன்றிகளும், எப்போதும் மயில்களும் வந்து போகிறது...
 
வளங்குன்றா வாழ்வும், பசுமை தொழிற்களும்
 
 
இனி அவருடனான உரையாடலில் இருந்து...
 
வணிக குடும்பத்தில் பிறந்த உங்களை எது சூழலியல் செயற்பாட்டில் ஈடுபடத் தூண்டியது...?
 
நானும் ஒரு வணிகனாகத்தான் என் வாழ்க்கையை துவங்கினேன். கொசு வலை உற்பத்தி செய்யும் ஒரு சிறு தொழிற்சாலை வைத்து இருந்தேன். அப்போது, தினமும் காலையில் மிதிவண்டியில் செடிகளை சுமந்து கொண்டு வீதி, குளக்கரை ஓரங்களில் மரம் நடுவதை பழக்கமாக வைத்து இருந்தேன். ஆனால், இன்னொரு புறம், என் தொழிற்சாலையில் கொசு வலையில் சாயம் ஏற்றுவதற்காக நீர் நிலைகளை மாசுப்படுத்தி கொண்டிருந்தேன். இந்த முரணில் செயல்பட பிடிக்கவில்லை. தொழிற்சாலையை மூடினேன். பிறகு சூழலுக்கு மாசு உண்டாக்காத பசுமை தொழில்களை செய்ய துவங்கினேன். அதன் ஒரு பகுதிதான் இந்த காடும்.

என்ன... காடு உருவாக்குவது ஒரு தொழிலா...? அதிலிருந்து எப்படி வருமானம் வரும் ?
 
ஆம் தொழில்தான்... சொல்லப்போனால் இதுதான் நீடித்த வருமானம் வரும் தொழில். பிற தொழிற்சாலைகள் உற்பத்தியை உண்டாக்குகிறோம் என்று இயற்கையை சுரண்டும் போது, நாங்கள் இயற்கைக்கு கொடுத்து அதிலிருந்து உரிமையுடன் எங்களுக்கு வேண்டியதை பெறுகிறோம்.

புரியவில்லையே...? 
 
நாங்கள் பத்து விதமான பசுமை தொழிற்களை பட்டியலிட்டுள்ளோம். மூங்கிலிலிருந்து மேசை, நாற்காலி உற்பத்தி செய்கிறோம், பழங்களை மதிப்புக்கூட்டி விற்கிறோம், தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு என இயற்கையை சுரண்டாத தொழில்கள் செய்கிறோம்...

என்ன விளையாடுகிறீர்களா.... இதிலிருந்து எப்படி வருமானம் வரும் ?
 
உங்களின் இந்த பொது புத்திதான், பலர் இது போன்ற பசுமை தொழில்களுக்கு வராமல் இருப்பதற்கான காரணம். நாங்கள் உற்பத்தி செய்யும் மூங்கில் சாமான்களுக்கு, சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.  சொல்லப்போனால், என்னால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. என்னிடம் ஒரு பெரிய ஜீப் இருக்கிறது, பெரிய வீட்டில் குடி இருக்கிறேன். நம்புங்கள்.... இது  அனைத்தும் இங்கிருந்து கிடைக்கும் வருமானம்தான்... 

ஹோ... பொருட்களை மதிப்புக் கூட்டி விற்றால், வருமானம் வரும் என்கிறீர்கள்...? 
 
ஆம். மதிப்பு கூட்டுதல் மட்டுமல்ல... காலத்திற்கு ஏற்றார் போல் விவசாயத்தையும் நவீனப்படுத்தாமல், விவசாயம் நஷ்டம் தருகிறது என்று கூறுவது வெற்று பிதற்றல் என்கிறேன்.
 
புரிகிறது. ஆனால், இதை எப்படி விவசாயிகள் செய்ய முடியும். அரசு தானே செய்ய வேண்டும்...?
 
ஆம். நான் அரசைத்தான் சொல்கிறேன். பன்னாட்டு நிறுவனங்கள், பல ஆயிரங்கள் முதலீடு செய்கிறது. ஆனால், அவர்கள் தரும் வேலை வாய்ப்பு சில ஆயிரங்கள்தான். ஆனால், நாங்கள் இது போன்ற பசுமை தொழிற்கள் மூலம், சில லட்சங்கள் முதலீட்டில், பல பேருக்கு வேலை தருகிறோம். வளங்குன்றா வாழ்விற்கு, இது போன்ற தொழிற்களே சிறந்தது என நான் நம்புகிறேன். இயற்கையை சுரண்டுவதும் இல்லை, சூழலை மாசுப்படுத்துவதும் இல்லை. இது போன்ற தொழிற்களை ஊக்கப்படுத்த அரசு முன் வர வேண்டும். அதேவேளை, இளைஞர்களும் பசுமை தொழிற் பக்கம் வர வேண்டும். நான் என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். மகிழ்வானதும், நிரந்தர வருமானம் வரக்கூடியதும் இதுதான்.
 
இப்போது சூழலியல் குறித்து அதிக விழிப்புணர்வு  ஏற்பட்டு இருக்கிறது. இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த தளத்தில் மிக உற்சாகமாக வேலை பார்க்கிறார்கள். ஆனால், நான் ஆரம்பத்தில் செய்த தவறையே செய்கிறார்கள், இயற்கையை சுரண்டும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே, இயற்கையை காக்க போராடுகிறார்கள்... அவர்கள் பசுமை தொழில் செய்ய முன் வர வேண்டும்.  
 
இரவு அவருடைய கானகத்திலேயே தூங்கிவிட்டு காலை கிளம்பும் போது,  “பசுமை தொழிற்களில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு இந்த கூட்டுறவு காட்டின் வாசற்கள் திறந்தே இருக்கிறது. அவர்கள் இந்த இடத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளாலாம்”  என்று சொல்லி விடை கொடுத்தார்.
 
நுரையீரல் முழுவதும், கானகத்தின் சுத்தமான பிராணவாயுவை நிரப்பிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்

Wednesday, February 10, 2016

வீர மதராஸி... இந்தியாவின் அரண் மெட்ராஸ் ரெஜிமென்ட்!

டந்த சில நாட்களாக சியாச்சின் பனிச்சரிவு நிகழ்வு பற்றிதான் இந்தியாவே பேசிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் சியாச்சின் அவலாஞ்சி பகுதியில் பனிச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றார். உலகிலேயே உயரமான போர்க்களமான சியாச்சினை  பாதுகாப்பதிலும் தமிழர்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றர். ஆம் சியாச்சினை பாதுகாக்கும் பொறுப்பு தமிழகத்தை சேர்ந்த மெட்ராஸ் ரெஜிமென்டின் கையில்தான் இருக்கிறது.
இந்திய ராணுவத்திலேயே மிகப் பழமையான ரெஜிமென்டும் இதுதான். இந்தியா எடுக்கும் ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையிலும் அல்லது ராணுவம் தொடர்பான எந்த ஒரு ரகசிய நடவடிக்கையிலும் மெட்ராஸ் ரெஜிமென்டின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். இதன் தலைமையகம் உதகை அருகேயுள்ள வெலிங்டனில் உள்ளது. சரி இந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் எப்படி உருவானது?

கடந்த 1639-ம் ஆண்டு சென்னை நகரம் உருவானது. தொடர்ந்து 1644-ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை எழுப்பப்பட்டது. 1660-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால்,  முதன் முதலில் மெட்ராஸ் ரெஜிமென்ட் ஈரோப்பியன் என்ற பெயரில் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. எனினும்  1758-ம் ஆண்டுதான் 100 சிப்பாய்கள்  கொண்ட படையாக உருவானது.  மேஜர் லாரன்ஸ் என்பவர்தான் இதன் முதல் தலைவர். பிரிட்டிஷ் வீரர்களுடன் இந்தியர்களும் இந்த படைப்பிரிவில் இருந்தனர். தென்னகத்தில் இருந்த பிரெஞ்சு படையினருடன் போரிடுவதுதான் மெட்ராஸ் ரெஜிமென்டிடம் ஒப்படைக்கப்பட்டமுதல் பணி.

அந்த காலகக்கட்டத்தில் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர்களிலும் மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் சுதந்திரத்துக்கு பின், இந்தியாவின் மிக முக்கியமான ரெஜிமென்டாக மெட்ராஸ் ரெஜிமென்ட் உருவானது. இந்தியாவை பொறுத்தவரை எந்த ஒரு ராணுவ நடவடிக்கையும் முதலில் ஒப்படைக்கப்படுவது மெட்ராஸ் ரெஜிமென்டிடம்தான்.
தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்கள்,  மெட்ராஸ் ரெஜிமென்டில் பணியில் அமர்வதை ஒரு பெருமையாகவே கருதினர்.  தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைதான் முதலில் தேர்வு செய்வர். எனினும் தமிழகத்தை தலைமயிடமாகக் கொண்டு இயங்குவதால்,  இந்த ரெஜிமென்டில் தமிழர்கள்தான் அதிகமாக இடம் பெறுகின்றனர். 

பழமை வாய்ந்த இந்த ரெஜிமென்டின் பெருமைக்கு இரண்டே இரண்டு சான்றுகளை கூறலாம்.  ஒன்று இந்தியாவே அலறிய ஆபரேசன் புளூ ஸ்டார். இன்னொன்று உலகமே கதறிய பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு. பஞ்சாப் மாநிலம் அமிர்தரசரஸ் பொற்கோவிலுக்குள் சென்று காலிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடியது இந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் படையினர்தான். அடுத்து வாஜ்பாய் அரசில்,  1998-ம் ஆண்டு அப்துல்கலாம் தலைமையில் பொக்ரானில் அத்தனை ரகசியமாக அணுகுண்டு வெடித்து காட்டியதும் இதே மெட்ராஸ் ரெஜிமென்ட்தான்.
அதுமட்டுமல்ல,  இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் பெருமை வாய்ந்த ராணுவத் தலைவர்கள் தங்களது கடைசிகாலத்தை மெட்ராஸ் ரெஜிமென்டில்தான் கழிக்க விரும்புவார்கள். இந்திய ராணுவத்தில் ஜெனரல் கரியப்பா, ஜெனரல் ஷாம் மானக் ஷா ஆகிய இருவர்தான் பீல்டு மார்ஷல் அந்தஸ்த்தை பெற்றவர்கள். இதில் பீல்ட் மார்ஷல் ஷாம் மானக் ஷா,    தனது கடைசி காலத்தை மெட்ராஸ் ரெஜிமென்டில்தான் கழித்தார்.

இப்படி பல பெருமைகளை பெற்ற மெட்ராஸ் ரெஜிமென்ட்தான் உலகிலேயே அதிக உயரத்தில் உள்ள போர்முனையை  பாதுகாத்து வருகிறது.  கிட்டத்தட்ட மைனஸ் 50 டிகிரி  வரை குளிர் வீசும் போர் முனை இது. இந்தியாவில் எத்தனையோ ரெஜிமென்டுகள் இருக்க,  இந்த கடின பணியை மெட்ராஸ் ரெஜிமென்ட்தான் ஏற்று செய்து வருகிறது. பாகிஸ்தானும் இங்கு தனது ராணுவத்தினரை நிறுத்தியுள்ளது.  அந்த வகையில் பாகிஸ்தானை முதலில் எதிர்கொள்வதும் இந்தியாவின் வால் பகுதியில் இருக்கும் தமிழர்கள்தான்.  

மெட்ராஸ் ரெஜிமென்டின் போர்க்கள வார்த்தை என்ன தெரியுமா? '' ஏ வீர மதராசி... அடி கொல்லு, அடி கொல்லு'' என்பதுதான். ஜெய் ஹிந்த்! 

Saturday, January 09, 2016

இசைஞானி 40

சைஞானி என அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்படும் மேஸ்ட்ரோ இளையராஜா, இசையமை்பபாளராக 40வது ஆண்டில் அடிவைக்கிறார்.
அவரது இசைச் சாதனைகளை ஒரு கட்டுரைக்குள் அடக்கிவிட முடியாது. பேசி முடியாத பிரமாண்டம் அவர். 1000 படங்களைத் தாண்டி, இன்னமும் இன்னிசையைத் தந்து கொண்டிருக்கிறார். அவரது சமீபத்திய ருத்ரமாதேவி பாடல்களைக் கேட்டவர்கள், அந்த மெலடியில் கிறங்கி நிற்கிறார்கள்.

ராகதேவனின் 40 ஆண்டுகால இசைப் பயணத்தில், சில துளிகளை இங்கே தந்திருக்கிறேன். இதுபோல இன்னும் ஆயிரமாயிரம் துளிகளைத் தரமுடியும்…
இப்போது இசைஞானி 40…
1. ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத்
தேவைப்பட்டதில்லை. ‘தென்றல் வந்து தீண்டும்போது…’ என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான். அருகிலிருந்து பார்த்த நாசர் பரவசப்பட்டு இளையராஜாவின் கால்களைக் கட்டிக் கொண்டாராம்!
2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்து முடித்த படம் ”நூறுவாது நாள்”.
3. இளையராஜா பின்னணி இசையில் மிரட்டிய சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களைக் கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது!
4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை ‘பக்கா’ நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.
5. வாசித்துப் பார்த்து அந்த இசைக் கருவியின் ஒலி எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதில்லை இளையராஜா. மனதுக்குள்ளேயே அந்த இசையை இசைத்துப் பார்த்து அதை நோட்ஸாக எழுதுகிறார். இந்த அற்புதம் படைத்தவனுக்கு மட்டுமே கைவந்த அதிசயம்.
6. அமிர்தவர்ஷினி என்ற மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகத்தை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் ‘தூங்காத விழிகள்
ரெண்டு..’ பாடலை அமைத்து மழையையும் வர வழைத்தவர் இசைஞானி.
7. பாடலின் மெட்டும் அதற்கான 100 சதவீத ஆர்கெஸ்ட்ரேஷனையும் ஒருவரே செய்யும்போதுதான் கிடைக்கும் ஒரு பாடலுக்கான முழுமை! அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு… இவை அனைத்தையும் எந்த இசையமைப்பாளரிடமும் ஒருங்கே காண முடியாது… இளையராஜாவைத் தவிர!
8. இசைஞானி தான் முதல்மgறையாக ரீதிகௌளை என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார் . ‘கவிக்குயில்’ என்னும் படத்தில் பாலமுரளி கிருஷ்ணா மற்றும் ஜானகி குரல்களில் தனித்தனியாக ஒலிக்கும் ‘சின்ன கண்ணன் அழைக்கிறான்…’ என்ற பாடல்தான் அது.
9. ‘கவுன்ட்டர்பாயின்ட்’ என்ற யுக்தியை சர்வதேச இசையின் நுட்பங்களை இசைஞானி சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற “என் கண்மணி” என்ற பாடலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.
10. இந்தியத் திரை இசையில் காயத்ரி என்ற படத்தில்தான் முதன் முதலாக இசைஞானி ‘எலெக்ட்ரிக் பியானோ’ உபயோகபடுத்தினார்.
11. இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.
12. உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத, ஏன் கற்பனையும் செய்து பார்த்திராத ஒரு விஷயம் இது. ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து, பாடல் வரிகள் எழுதப்பட்டு, படமாக்கப்பட்ட ஒரு காட்சிக்கு, அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்றவர் இசைஞானி ( ஹேராம் )
13. முன்பெல்லாம் பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டுக் காண்பித்ததும் இயக்குனரோ மற்றவர்களோ இசையமைப்பாளரிடம் வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள், இந்த படத்தில் வந்தது போல போடுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பின் இசைச் சேர்ப்பு முடிந்து, அது சரியில்லாமல் மறுபடி இசையமைப்பாளரே வேறு மாதிரி இசை சேர்ப்பார். ஆனால் இளையராஜாவிடம் அப்படி இல்லை. ஒரு ரீல் திரையில் பார்த்தால் போதும் உடனே இசைக் குறிப்புகளை எழுத ஆரம்பித்து விடுவார். அதை வாசித்தாலே போதும். இப்படி வேண்டாம், வேறுமாதிரி போடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பே இருக்காது.
14. இந்தியாவில் அல்ல ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி. சிம்போனி கம்போஸ் பண்ண குறைந்தது
ஆறு மாதங்களாவது ஆகும். ஆனால் வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.
15. இசைஞானி விசிலில் டியூன் அமைத்து அதை ஒலிநாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல், “காதலின் தீபம் ஒன்று”.
16. படத்தின் கதையைக் கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம், ‘கரகாட்டக்காரன்’.
17. வசனமே இல்லாத காட்சியில் கூட, அந்த காட்சியை இசையால், மௌனத்தால் செழுமைபடுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். அதில் ராஜா கிரேட். இரண்டு பேர் மௌனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட, அவர்களின் மன உணர்வுகளைக் கூட புரியாதவர்களுக்கும் புரிய வைத்துவிடுவார் ராஜா. அந்த அற்புதமான ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு. இந்திய சினிமாவில் பின்னணி இசையில் நம்பர் ஒன் ஜீனியஸ் இளையராஜாதான்.
18. ராஜா ரீ-ரெக்கார்டிங் செய்வதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை படத்தைப் பார்ப்பார், மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பித்துவிடுவார். அவர் ஆரம்பித்து முடிக்கும்போது படம் சரியாக முடிந்திருக்கும். அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.
19. இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே படம் ‘பிள்ளை நிலா’. சவுண்ட்ராக்குகளும் பாடல்களைப் போல ரிக்கார்ட் மற்றும் கேசட்டுகளில் இடம்பெற்றது இளையராஜா இசையமைத்த படங்களில்தான்.
20. பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்தவர் இசைஞானி
21. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதைப் பெற்றவர் இசைஞானி (பழசிராஜா)
22. இசைஞானி முதன் முதலாக ‘ஸ்டீரியோ” முறையில் பாடல்களை பதிவு செய்த படம் ப்ரியா.
23. 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’
24. இசைஞானியின் பாடலுக்காக கதை எழுதிய வெற்றிக்கண்ட படங்கள் வைதேகி காத்திருந்தாள், இளமைக் காலங்கள், அரண்மனைக் கிளி.
25. இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இசைஞானி (புன்னகை மன்னன்).
26. ‘பஞ்சமுகி’ என்றொரு ராகம் நமது ராகதேவனால் இயற்றப்பட்டுள்ளது.. ஆனால் இதுவரை அவர் இந்த ராகத்தினை எந்த பாடலிலும் பயன்படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளார்..
27. பொதுவாக 2 அல்லது 3 நாட்களில் படத்திற்கான இசையமைப்பை முடித்துவிடுவார் ராஜா, ஆனால் அதிகபட்சமாக, அதாவது 24 நாட்கள் பின்னணி இசைக்கோர்ப்புக்காக எடுத்துக்கொண்ட படம் ( காலாபாணி ) தமிழில் ( சிறைச்சாலை).
28. முன்பெல்லாம் கிட்டார், தபேலாக் கலைஞர்கள் உதவியுடன் ஆர்மோனியத்தை இசைத்து டியூன் உருவாக்குவார். அதற்குப் பிறகு ஆர்மோனியத்தில் வாசித்துப் பார்ப்பதில்லை, கண்களை மூடிச் சிந்திப்பார், இசை வடிவங்கள் அவர் மூளையில் இருந்து புறப்படும். அவற்றை அப்படியே இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவார். ஆர்மோனியம் இல்லாமல் இசை அமைக்கும் இந்த ஆற்றல், இந்திய சினிமா இசை
அமைப்பாளர்களில் இவரிடத்தில் மட்டுமே இருக்கிறது என்பது பிரமிப்பான உண்மை.
29. இசைஞானியின் பின்னணி இசை மற்றும் ட்யூன்களைக் காப்பியடித்து பெரிய இசையமைப்பாளரானவர்கள் ஏராளம். இல்லாதவன் எடுத்துக்கிறான் என்று ஆரம்பத்தில் சும்மா விட்டுவிட்டார் இசைஞானி. இப்போதுதான் அதற்கு ஒரு தீர்வு கண்டிருக்கிறார்.
30. இளையராஜா இதுவரை நான்கு முறை தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். பத்மபூஷன் விருதும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.
31. உலகின் முக்கிய இசை விற்பன்னர் எனப்பட்ட பால் மரியா, பிரான்ஸ் வந்த இசைஞானியைச் சந்திக்க 5 நிமிடங்கள்தான் முதலில் நேரம் ஒதுக்கினார். ஆனால் சந்தித்த பிறகு, ராஜாவின் மேதைமை வியந்து, 3 மணி நேரம் பேசிக் கொண்டே இருந்தாராம்!
32. ரஜினி, கமல் இருவரின் அதிகப் படங்களுக்கு இசை தந்தவர் இளையராஜாதான்.
33. ரஜினியை எப்போதும் சாமி என்றுதான் இளையராஜா அழைப்பார். ரஜினியும் ராஜாவை சாமி என்றுதான் அழைப்பார்.
34. புகைப்படங்கள் எடுப்பதில் நிபுணத்துவம் மிக்கவர் இசைஞானி. இவர் எடுத்த புகைப்படங்களை வைத்து சென்னை மற்றும் கோவையில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. இவரது 100 சிறந்த புகைப்படங்களைத் தொகுத்து தனி புத்தகமும் வெளியாக உள்ளது. இதில் அவரது படங்களைப் பற்றி பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
35. இளையராஜாவின் பிரபலமான பாடல்கள் பலவற்றுக்கு வரிகள் தந்தவர் அவரது தம்பி கங்கை அமரன். ‘இசைக்குக் கிடைத்த மிகச் சிறந்த வரம் இளையராஜா’ என்பது அவர் கருத்து.
36. திரைப்படங்களுக்கு பாடல்களே எழுதமாட்டேன் என்பதைக் கொள்கையாகவே வைத்திருந்த கவிஞர் சிற்பி, இளையராஜா இசையில் எழுதிய ஒரே பாடல் ‘மலர்களே.. நாதஸ்வரங்கள்…!’ படம்: கிழக்கே போகும் ரயில்.
37. தனது சொந்தப் படங்களின் இசை வெளியீடு, தன் மகன்கள் இசையமைக்கும் படங்களின் இசை வெளியீடுகளுக்குக் கூடப் போகாத இளையராஜா, பாரதிராஜாவின் பொம்மலாட்டம், கமலின் விஸ்வரூபம் படங்களின் இசை வெளியீட்டு நிகழ்வுகளுக்குப் போய்ச் சிறப்பித்தார். இரண்டு படங்களுக்குமே அவர் இசையமைக்கவில்லை. நட்புக்கு அவர் தந்த மரியாதை அது!
38. இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி ஆரட்டோரியோவைக் கேட்ட எழுத்தாளர் சுஜாதா, ‘கடவுளைக் கோயில்களில் தேடிக் கொண்டிருக்க வேண்டாம். இளையராஜாவின் திருவாசகத்தைக் கேட்டால் போதும்.. கடவுளைக் காணலாம்!’ என்றார்.
39. தன்னிடம் பணியாற்றிய ஏ ஆர் ரஹ்மான் இரு ஆஸ்கர் விருதுகளுடன் நாடு திரும்பினார். அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் இளையராஜா பங்கேற்று ரஹ்மானுக்கு தங்கச் சங்கிலி அணிவித்தார். அப்போது ரஹ்மான், ‘எனக்கு விருது கிடைக்கக் காரணம், எனது முகவர்கள் சரியாக என் இசையை ஆஸ்கர் குழுவுக்குக் கொண்டு சென்றதுதான். ராஜா சார் இதைச் செய்திருந்தால் அவரது இசைக்கு எப்போதோ ஆஸ்கர் கிடைத்திருக்கும்,” என்றார்.
40. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல… அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது ‘குரு’ என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி

Thursday, December 31, 2015

அலிபாபாவும் ஜாக் மாவின் வெற்றிக் கதையும்!

"தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான், தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்" என்ற பழமொழியை சுக்கு நூறாக உடைத்து வெற்றி கண்டவர் தான் ஜாக் மா.
அலிபாபா இன்று உலகம் முழுவதும் வர்த்தகம் செய்துவரும் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம். இது விற்பனை செய்யாத பொருட்களே இல்லை. விற்பனை செய்யாத இடமும் இல்லை.
1999 இல் ஜாக்மா என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2.6 லட்சம் கோடி. 2015 இல் இதன் வருமானம் ரூ.24 ஆயிரம் கோடி. முழுக்க முழுக்க இன்டர்நெட்டும், தொழில்நுட்பமும் பங்கு பெறும் ஒரு தொழிலில், இவை பற்றி அனுபவமோ நிபுணத்துவமோ இல்லாத ஒருவர் எப்படி உலகளாவிய வெற்றி பெற முடிந்தது என்பது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான்.

எப்படி சாத்தியம்?

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினால் 10 முறை நிராகரிக்கப்பட்டவர், பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ஜாக் மா தொழிலதிபரானது எப்படி?
அவருக்கு ஆங்கிலம் தெரியாது, ஊர் சுற்றிப் பார்க்க வந்த பயணிகளிடம் இருந்து ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அதிலும் நாட்டமின்றி அதில் இருந்து வெளியேறினார். வேலை தேடி அலைந்தார். கேஎஃப்சியில் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இன்று உலகின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கிறார்.
இவையெல்லாம் தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று அவர் குறிப்பிடுகிறார். இன்டர்நெட் என்ற வார்த்தை பரவத் தொடங்கிய நேரம் அது. எல்லோரும் இன்டர்நெட் உலகை மாற்றப் போகிறது என்று பேசும்போது, அது என்ன இன்டர்நெட், நாமும் தெரிந்துகொள்ளலாமே என்ற ஆர்வம் அவருக்குள் உருவானது. ஆனால் அதில் அனைத்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், இத்தாலி என்று இருந்ததே தவிர சீனர்களுக்காகவென்று எதுவும் இல்லை. அப்போது அவருடைய மனதில் உதித்த ஒரு யோசனைதான் இன்று 'அலிபாபா' சாம்ராஜ்யமாக எழுந்து நிற்கிறது.
சரியான நேரத்தில் அவருக்கு கிடைத்த யோசனையும், அந்த யோசனையை பிசினஸாக்க அவருக்கு அமைந்த நல்ல குழுவும்தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். ஒரு விஷயத்தில் வெற்றியடைய நமக்கு தேவையெல்லாம், ஆர்வம், அதன் மீதான முழு கவனம் மற்றும் சரியான ஒரு அணி ஆகியவைதான்.
இன்டர்நெட் உலகை மாற்றப் போகிறது என்பதிலும், அதற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது என்பதையும் உலகில் முதன்முதலில் நம்பத் தலைப்பட்டவனாகவே தன்னை கருதுகிறேன் என்றார். தான் நம்பியதையே தன்னுடைய பிசினஸுக்கும் பயன்படுத்திக்கொண்டார். அசுர வேகத்தில் வளர்ந்தார்.
ஜாக் மாவின் வெற்றிக்கு அவர் வைத்திருக்கும் மந்திரங்கள்:
- வளர்ச்சியை மட்டுமே நோக்கி பயணம் வேண்டும்.
- புத்திசாலித்தனமான செயல்பாடு வேண்டும்.
- யாரும் கண்டுபிடிக்காத வாய்ப்புகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
- திறமையானவர்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்களுடைய சிந்தனைகளுக்கு இடமளிப்பது.
- வாடிக்கையாளர்கள் உள்ளே வரும் வழி எப்போதும் எளிமையாக இருக்க வேண்டும்.
விஷயம் தெரிந்தவர்களை மதிக்க வேண்டும்:
தனக்கு, புரோகிராமிங் பற்றியோ, தொழில்நுட்பங்கள் பற்றியோ எதுவும் தெரியாதிருந்த போதிலும் அதற்காக தொழிலில் இருந்து பின்வாங்கவில்லை. விஷயம் தெரிந்த திறமைப்படைத்த கம்ப்யூட்டர் இன்ஜினியர்களை அவருடைய அணியில் சேர்த்துக்கொண்டார். அவர்களுடைய திறமைக்கான மரியாதையைக் கொடுத்து அவர்களுடைய சிந்தனைகளுக்கும் இடம் கொடுத்திருக்கிறார். இன்று அலிபாபா நிறுவனத்தின் வெற்றிக்கு அவரது அணியினரின் திறமையும், உழைப்பும்தான் காரணமாக இருக்கிறது.
பலர் தோல்வியடைய காரணம்?
பல பெரு நிறுவனங்களும் கூட தோல்வியடைய ஒரே காரணம் அவர்களிடம் இருக்கும் அதிகபட்ச பணமாகக் கூட இருக்கும். ஏனெனில் செலவு செய்யும் கவனிக்காத ஒவ்வொரு ரூபாயும் தோல்வியை நமக்கு அருகில் அழைத்து வந்துவிடக் கூடும். சிறியதோ, பெரியதோ எவ்வளவு தொகையாக இருந்தாலும் செலவுகளைக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். தேவையற்ற அல்லது அதீத செலவுகளைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.
ஒரு பழைய பழமொழி உண்டு "தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான், தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்" என்று. இந்தப் பழமொழி கூட வெற்றிக்கு ஒரு தடைதான். இதைச் சுக்கு நூறாக உடைத்து வெற்றி கண்டிருக்கிறார் ஜாக் மா. தோல்விகளெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்

Saturday, December 19, 2015

உயிர் பெறும் ராமாயண ஜடாயு...!

ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள ஜடாயு பறவையின் பிரமாண்ட சிலையுடன்,  கேரளத்தில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள பறவைகள் சரணாலயம், வரும் ஜனவரி 2016 மாதத்தில் திறக்கப்படவுள்ளது.
கொல்லம் மாவட்டம், ஜடாயுமங்கலம் என்ற இடத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் பறவைகளுக்கான இந்த அழகிய பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பூங்கா அமைப்பதற்காக ரூ. 100 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்படப்பட்டது. அழகிய குட்டி குட்டி மலைகள், பள்ளத்தாக்குள், நீர்வீழ்ச்சிகள் இந்த பூங்காவில் உள்ளன .அதோடு சுற்றுலாப்பயணிகள்  'ட்ரெக்கிங்' மேற்கொள்ளும் வகையிலும் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

ராமாயணத்தில் இடம் பெற்றுள்ள பறவை ஜடாயுவின் சிலை 200 அடி நீளத்திலும், 150 அடி அகலத்திலும், 70 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு செல்லும் போது, வழிமறித்த ஜடாயு பறவை அவனுடன் போரிடுகிறது. ராவணனால் வீழ்த்தப்பட்டு, ஜடாயு பறவை தரையில் விழுந்தது.
ஜடாயுவின் தியாகத்தை போற்றும் வகையில், அதே வடிவிலான சிலை அமைக்கப்பட்டுள்ளதாக கேரள சுற்றுலாத்துறை கூறியுள்ளது.



அதோடு இந்த ஜடாயு சிலைக்குள் 6 டி தியேட்டர், ராமாயண கதையின் டிஜிட்டல் கண்காட்சி அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. வரும் ஜனவரி மாதத்தில் ஜடாயு சிலை திறக்கப்படவுள்ளது.

 

Saturday, December 12, 2015

மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! -- சென்னை மூழ்க என்ன காரணம்?

சென்னையை மூழ்கடித்தது கொட்டித் தீர்த்த பெருமழை அல்ல... திட்டமிடாமல் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறந்துவிட்டதுதான் காரணம். ஏரிகளின் நீர்மட்டத்தைக் கையாள்வதில் நிகழ்ந்த குளறுபடிகள் பேரழிவுக்குக் காரணமாகி​விட்டன’ எனப் பரவும் தகவல்கள் அதிர வைத்திருக்கின்றன.

சென்னை குன்றத்தூர் அருகே 6,250 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையையும், காஞ்சிபுரம் மாவட்​டத்தில் ஒரு பகுதி விவசாயத்துக்கும் பயனளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்தான் சென்னை மக்களின் மீளாத் துயரத்துக்குக் காரணம். செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. மொத்தமாக 3,645 மில்லியன் கன அடி நீரைத் தேக்கிவைக்கலாம். உபரிநீரை 11 மதகுகள் வழியாக வெளியேற்ற முடியும். இப்படி வெளியேற்றப்படும் நீர் குன்றத்தூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், மணப்பாக்கம், ராமாபுரம், ஜாஃபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு முகத்துவாரம் வழியாகக் கடலில் கலக்கிறது. இதில் எங்கே தவறு நடந்தது?




சென்னையை வெள்ளம் சூழ்ந்தது டிசம்பர் 1-ம் தேதி. அதற்கு முந்தைய தினம் நவம்பர் 30-ம் தேதி ஏரியில் 3,126 மில்லியன் கன அடி நீர் இருந்தது. செம்பரம்பாக்கத்தில் அந்த நாளில் 500 கன அடி நீர் ஏரிக்கு வந்துகொண்டிருந்தது. வெளியேற்றப்பட்ட நீர் 600 கன அடி நீர். இதுதான் 30-ம் தேதி நிலவரம். 1-ம் தேதி செவ்வாய்கிழமை பெருமழை பெய்தது. அன்றைய நிலவரத்தைப் பார்ப்போம். அன்றைய தினம் 3,141 மில்லியன் கன அடி நீர் இருந்தது. வினாடிக்கு 960 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்துகொண்டிருந்தது. இதை ஏரி தாங்காது என்று சொல்லி 2-ம் தேதியன்று வினாடிக்கு 29 ஆயிரம் கன அடி வீதம் வெளியேற்றி விட்டார்கள். ஒரே நாளில் இவ்வளவு திறந்தால் என்ன ஆவார்கள் மக்கள்?
பருவ மழை ஆரம்பித்த நாளில் இருந்து  அதிக அளவு  நீர் திறந்துவிடப்பட்டது 2-ம் தேதிதான். மறுநாள் 3-ம் தேதி வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட்டிருக்கிறார்கள்.

‘டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து கனமழை பெய்யும்’ என நவம்பர் 25-ம் தேதியே அறிவித்து​விட்டது சென்னை வானிலை ஆய்வு மையம். இதுதவிர, பிறநாட்டு வானிலை ஆய்வகங்களும் சென்னையில் அதிக மழை பெய்யும் என எச்சரிக்கை செய்திருந்தன. ஆனால், இதை​யெல்லாம் அரசு அக்கறையோடு கவனத்தில் கொள்ள​வில்லை. நவம்பர் 20-ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் 3,268 மில்லியன் கன அடி நீர் இருந்தது. கிட்டத்தட்ட ஏரி நிரம்பிவிட்டது. அதன்பிறகு 10 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதற்காகத் தினமும் குறைந்தபட்சம் 500 அடியில் இருந்து அதிகபட்சம் 4 ஆயிரம் கன அடி வரையில் தினமும் தண்ணீரைத் திறந்து​விட்டார்கள். ஆனால், 1-ம் தேதி பெருமழை பெய்யும் என முன்கூட்டியே தெரிந்து அதற்கு ஏற்றார்போல தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால், ஏரிக்கு வரும் நீர்வரத்தை எதிர்கொண்டிருக்க முடியும். ஏரி நிரம்பியிருந்த நிலையில், நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் ஏரியின் அளவு தாங்க முடியாத அளவுக்கு உயர என்ன செய்வது எனத் தெரியாமல் அதிகபட்சமாக வினாடிக்கு 29 ஆயிரம் கன அடியை முதல் நாளிலும், 11 ஆயிரம் கன அடியை அதற்கு அடுத்த நாளிலும் திறந்துவிட்டு பெரு வெள்ளத்துக்குக் காரணமாகிவி​ட்டார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. இப்படி திறந்து விடப்பட்ட நீர் அடையாற்றில் பாய்ந்து வந்து சென்னை நகருக்குள் புகுந்து, பல லட்சம் வீடுகளை துவம்சம் செய்தது.

தண்ணீர் திறப்பில் அரசு காட்டிய மெத்தனத்துக்கு காரணம் ஒன்று சொல்லப்படுகிறது.
கன மழையை எதிர்பார்த்து சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, ‘செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் 5 ஆயிரம் கன அடி வெளியேற்றப்​படுகிறது. ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் வெளியேற்றப்படும் அளவு 7,500 கன அடியாக அதிகரிக்கப்​படலாம். அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்’ என்பதை டிசம்பர் 1-ம் தேதியிட்ட தன்னுடைய உத்தரவில் அவசர செய்தியாகக் கொடுத்து இருந்தார். சுந்தரவல்லி சொன்னதுபோல 7,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. 2-ம் தேதி 29 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றி​யிருக்கிறார்கள். இதை சென்னை குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியமே தனது இணைய தளத்தில் சொல்லியிருக்கிறது. கலெக்டர் சுந்தரவல்லி அறிவிப்பது ஒன்று என்றால், அரசின் பொதுப்பணித் துறை செய்தது வேறு. இப்படி அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்புக்கூட இல்லாமல், உயிர்களோடும் உடமை​களோடும் விளை​யாடி​யிருக்​கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்து நிற்கிறது. இங்கே சொன்னது எல்லாம் அரசின் கணக்கு​களை வைத்து. ஆனால், செம்பரம்​பாக்கம் ஏரியில் இருந்து 29 ஆயிரம் கன அடியைத் தாண்டி அதிகளவில் திறந்துவிட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
இப்படித்​தான் பூண்டி ஏரியின் நிலையும். அதையும் பார்ப்போம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. 2-ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியை​விட, பூண்டி ஏரியில் திறந்து​விடப்பட்ட தண்ணீரின் அளவு அதிகம். அதாவது வினாடிக்கு 30,200 கன அடி தண்ணீரை அன்றைய தினம் திறந்து​விட்டிருக்கிறார்கள். சென்னையில் மழை கொட்டியபோது ஆந்திராவில் மழை கொட்டியது. அந்த நீரும் பூண்டிக்கு வந்தது. எனவே, 2-ம் தேதி 30,200 கன அடி திறந்துவிட்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாள் 3-ம் தேதி பூண்டியில் இருந்து திறந்துவிடப்பட்டது அதைவிட அதிகம் 36,484 கன அடி. செம்பரம்பாக்கமும் பூண்டியும் சேர்த்து டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் திறந்துவிட்ட அதிகாரபூர்வ மொத்த நீரின் அளவு மட்டும் வினாடிக்கு 1 லட்சத்து 6 ஆயிரத்து 684 கன அடி. இந்தத் தண்ணீர்தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை மூழ்கடித்தது.
அதிகாரபூர்வமற்ற முறையில் கணக்கிட்டால் இரண்டு நாட்களில் இந்த இரண்டு ஏரிகளில் இருந்து வினாடிக்கு ஒன்றரை லட்சம் கன அடிக்கும் அதிகமாகத் தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கிறார்கள் என்கிற பகீர் குற்றச்சாட்டை வைக்கின்றன எதிர்க் கட்சிகள். ‘‘செம்பரம்​பாக்கம், பூண்டி ஏரிகள் தவிர அடையாற்றுடன் இணைக்கப்பட்ட 50 ஏரிகள் நிரம்பியதால், அவற்றிலிருந்து உபரி நீர் பல ஆயிரம் கன அடி வெளியேறியது. இதனால், ஒரே  நேரத்தில் 65 ஆயிரம் கன அடி உபரி நீர் அடையாற்றில் கலந்தது. இந்த நீர் அடையாற்றில் கடல்போல பெருக்கெடுத்தது. அது சென்னை நகரையும் நாசம் செய்தது. மொத்தத்தில் சொதப்பியது அரசின் பொதுப்பணித் துறைதான்’’ என்கிறார்கள். இந்தத் துறையின் அமைச்சராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். பொதுவாக, மழைக்காலங்களில் ஏரிகள் நிரம்பி வரும்போது கடந்த காலங்களில் துறையின் அமைச்சர் ஏரிகளுக்கு விசிட் அடித்து ஆய்வுசெய்வது வழக்கம். அப்படி மழைக்கு முன்பே பன்னீர்​செல்வம் போய் பார்க்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் படிக்கப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் ‘பசுமை நடை’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நடராஜன், ‘‘மக்களின் தாகம் தீர்க்க குடிநீரையும், வயிற்றுப் பசிக்கு உணவையும் கொடுத்து வரும் ‘ஹீரோ’ செம்பரம்பாக்கம் ஏரி. ஆனால், அந்த ஏரிதான் பாதிப்பை உண்டாக்கி விட்டது என ‘வில்லன்’போல பழி தூற்றுகிறார்கள். நீர் போக்குவரத்துகளைச் சீர் செய்யாமல் ஆக்கிர​மிப்பு செய்துவிட்டு, ஏரியைக் குறை சொல்வதில் பயனில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை இயற்கை நமக்குப் பாடம் புகட்டி இருக்கிறது. மூன்று சுற்று மழை பெய்து, முதல் சுற்றிலேயே செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிவிட்டது. வரலாறு காணாத மழை பெய்யும் என்று வானிலை வல்லுநர்கள் சொல்லியும் அரசு கவனத்தில் எடுக்காதது ஏன்? முதல் மழைக்கே விவரங்களைக் கணக்கிட்டு அதற்கு ஏற்றாற்போல முன்கூட்டியே திட்டமிடாமல், கண்மூடிக் கிடந்ததை என்னவென்று சொல்வது? மனித மெத்தனமே, இந்தப் பேரழிவுக்குக் காரணம்’’ என்கிறார்.
அலட்சியமும், ஆக்கிரமிப்பும் சென்னையை மூழ்கடித்தது என்பதே உண்மை!

சென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கை பேரிடரே!

சென்னையில் பெய்த பெருமழையை வெள்ளமாக மாற்றியது தமிழக அரசின் மெத்தனப்போக்குதான் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவற்றிலிருந்து முக்கிய தகவல்களை தொகுத்திருக்கும் இந்தக் கட்டுரை சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதில் அரசு அதிகாரிகள் காட்டிய மெத்தனத்தை தெள்ளத் தெளிவாக காட்டும் கட்டுரை இங்கே அப்படியே வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 8, 9, 12, 13, 15, 23 தேதிகள்: சென்னையில் கனமழை பெய்கிறது.

நவம்பர் இறுதி வாரம் (தோராயமாக 26-ம் தேதி):

1) சர்வதேச வானிலை மையங்கள் சென்னையில் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி 50செமீ வரையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கின்றன.

2) எச்சரிக்கையை ஏற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம், அதாவது பொதுப்பணித்துறை செயலாளரிடம்  செம்பரம்பாக்கம் ஏரியில் 22 அடி இருக்கும் நீரின் அளவை 18 அடியாக குறைக்க சொல்கிறார்கள். குறைத்தால் மட்டுமே வர இருக்கும் அதீத கனமழையை ஏரி தாங்கும் என்றும் சொல்கிறார்கள்.

நவம்பர் 27-ம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 28-ம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 29-ம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 30-ம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.


அதாவது சுருங்கச் சொன்னால் மழை மிகவும் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்த நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் ஏரியில் இருக்கும் நீரை வெளியேற்றி, நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பொதுப்பணித்துறை செயலாளர் தலைமைச் செயலாளரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். தலைமைச் செயலாளரோ முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார்.

டிசம்பர் 1-ம் தேதி நடந்தது என்ன?

· சர்வதேச வானிலை மையங்கள் சொன்னதைப் போலவே கிட்டத்தட்ட 50செமீ கனமழை பெய்கிறது. (தாம்பரத்தில் அவர்கள் சொன்னதை போலவே மிகச்சரியாக 49செமீ பெய்தது)

· செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு அரசு தளத்தின்படி 3141 மில்லியன் கன அடியாக இருக்கிறது.

· டிசம்பர் 1-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை கலெக்டர் சுந்தரவல்லியிடம் இருந்து பத்திரிக்கையாளர்களுக்கு, செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் நொடிக்கு 5000 கனஅடி நீரை வெளியேற்ற இருப்பதாகவும், இந்த அளவு நொடிக்கு 7500 கனஅடி வரை உயர்த்தப்படலாம் என்றும் பொத்தம்பொதுவாக ஒரு செய்தி கிடைக்கிறது.

· மாலை 5 மணிக்கு முதலில் ஏரியை திறக்கிறார்கள். பெயரை வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் நொடிக்கு 10000 கன அடி நீரை வெளியேற்றியதாகவும், இவ்வளவு பெரிய வெள்ளத்தை திறந்துவிட முடிவுசெய்த அரசு கண்டிப்பாக முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருப்பார்கள் என தான் நம்பியதாகவும்  பேட்டி அளித்துள்ளார்.

· ஆனால் தமிழக அரசின் இணையதளத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நொடிக்கு வெறும் 900கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டதாக குறிப்பிட்டிக்கிறார்கள்.

ஆகமொத்தத்தில், செய்தியாளர்களுக்கு கலெக்டர் சொன்னபடி நொடிக்கு 5000-7000 கன அடியை திறந்துவிட்டார்களா? அல்லது பொதுப்பணித்துறை ஊழியர் கூறியதைப் போல நொடிக்கு 10000கன அடி நீர் திறந்துவிட்டார்களா? அல்லது அரசு தளம் சொல்வதைப் போல நொடிக்கு வெறும் 900கன அடி நீர்தான் திறந்துவிட்டார்களா? எது உண்மை?
ஆனால், உண்மையோ இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது!

சென்னையை அலற வைத்த டிசம்பர் 2

அரசு தளத்தின்படி டிசம்பர் 1-ம் தேதி ஏரியில் நீரின் அளவு 3141 மில்லியன் கன அடி.  அதேவேளையில் டிசம்பர் 2-ம் தேதி ஏரியில் நீரின் அளவு 1134 மில்லியன் கன அடி. ஆக 2007 மில்லியன் கன அடி நீர் முந்தைய இரவு 10 மணிக்கு வெளியேற்றப்பட்டிருக்கிறது. அதாவது அறிவித்த நொடிக்கு 7500கன அடிக்கு மாறாக கிட்டத்தட்ட நொடிக்கு 29000 கன அடி நீரை டிசம்பர் 1-ம் தேதி எந்த முன்னறிவிப்புமின்றி  திடீரென வெளியேற்றியிருக்கிறார்கள். அதிகாலை 2 மணிக்கு சென்னையை வெள்ளம் வந்தடைகிறது. இரவு 10 மணிக்கு அபாயகரமான அளவில் திறந்துவிடப்பட்ட வெள்ளம் தூங்கிக்கொண்டிருந்த மக்களையும், வீடுகளையும் மூழ்கடிக்கிறது.

வெள்ளத்திற்கான பிற  காரணங்கள்:

1) 26-ம் தேதியே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கச் சொல்லியும், 27,28,29,30 ஆகிய மழையில்லா தேதிகளில் ‘மேலிட’ உத்தரவுக்காக காத்திருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

2) டிசம்பர் 1-ம் தேதி மாலை நான்கு மணிக்கு வெறும் 7500கன அடி மட்டுமே திறக்கப்போகிறோம் என செய்தி கொடுத்துவிட்டு, இரவு 10 மணிக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல், மக்கள் வெளியேற நேரமும் கொடுக்காமல் திடீரென நொடிக்கு 29000கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

3) சொல்லாமல் கொள்ளாமல் திறந்துவிட்டதை கொஞ்சம் சீக்கிரமாக 6 மணிக்கு திறந்துவிட்டிருந்தால் இரவு 10 மணிக்கு வெள்ளம் சூழ்ந்திருக்கும். ஆனால் இரவு 10மணிக்கு திறந்ததால் அதிகாலை 2மணிக்கு வெள்ளம் சூழ்ந்து மக்கள் தப்பிக்க வழியின்றி மாட்டிக்கொண்டார்கள். இவ்வளவு அபாயகரமான அளவு நீரை நடு இரவில் திறப்பது என்பது மிகப்பெரிய தவறு.


இந்த 29000 கன அடி திறப்பைப் பற்றி பத்திரிக்கைகளுக்கு எந்தத் தகவலும் தரப்படவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டபின் சில அதிகாரிகள் வாய்மொழியாக மட்டுமே இதை டிசம்பர் 2-ம் தேதி,  எல்லாம் முடிந்தபின் தெரிவித்திருக்கிறார்கள்.

5) பொதுவாகவே ஏரியில் இருக்கும் நீரை, வெளியேற்றுகிறேன் பேர்வழி என தண்ணீர் தொட்டியை உடைப்பது  மரபல்ல. அபாயகரமான அளவை எட்டிவிட்டால் தொட்டியிலிருந்து குழாய் மூலம்  நீரை வெளியேற்றுவதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவதுதான் முறை. இதை நவம்பர் 27,28,29,30-ம் தேதிகளில் செய்திருந்தால் வெள்ளத்தை கண்டிப்பாக தடுத்திருக்க முடியும் என்றும், இந்த வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல, முழுக்க முழுக்க அரசுதான் இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

6) இதெல்லாம் போக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக அரசு அவசர அவசரமாக சாலைகள் அமைத்தது நினைவிருக்கலாம். அந்தக் குப்பைகள், கழிவுகள் எல்லாம் அடையாறு கடலில் கலக்கும் வழியை அடைத்துக்கொண்டதும் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.

7) சென்னையை சுற்றியுள்ள நான்கு ஏரிகளையும், அடையாறு, கூவம் நதிப்பாதைகளையும், ஓட்டேரி, பக்ககிங்காம் கால்வாய்களையும் ஜூன் ஜூலை மாதத்தில் தூர்வாருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதைச் செய்யாமலோ/சரியாகச் செய்யாமலோ விட்டிருப்பது இன்னொரு முக்கிய காரணம். ஆனால் முறையாக தூர்வாரியதைப் போல கணக்கு மட்டும் காட்டியிருக்கிறார்கள்.
நிச்சயம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர் இது...

ஆக, மேலுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது சென்னையையும், சென்னை மக்களையும் மீளாத்துயரில் தள்ளியிருக்கும் வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல. கனமழையை அரசின் மெத்தனமும், அதிகாரிகளின் பயமும் ஊரை அழித்த வெள்ளமாக மாற்றியிருக்கிறது. இப்போது நாம் அனைவரும் ‘ஸ்டிக்கர்’ பணிகள் பற்றி பேசுவதிலும், அதிமுகவை கிண்டலடிக்கும் மீம்கள் செய்வதிலும், எல்லா கட்சிகளும் இப்படித்தான் என உண்மைகளை அறியாமல் பேசுவதுமாக  பிசியாக இருக்கிறோம்.
இன்னும் சிலரோ ஏரியில் வீடு கட்டினால் வெள்ளம் வரத்தான் செய்யும், பல்லாண்டு காலம் செய்த தவறு என்றெல்லாம் பேசி அரசின் நிர்வாகமின்மைக்கும், மெத்தனபோக்குக்கும் தங்களை அறியாமலேயே துணை போகின்றார்கள். அரசும் அதையேதான் விரும்புகிறது. இந்திய ஊடகங்கள் நம்மைக் கவனிப்பதில்லை என கூக்குரலிட்டதன் பலனாக சென்னை வெள்ளத்தின் காரணங்களை அலசி ஆராய்ந்து அவர்கள் உண்மைகளை வெளியிட்டிருக்கின்றார்கள். இதை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்?
உண்மையான நிவாரணம் என்னவாக இருக்க வேண்டும்?
எந்த அளவுக்கு நிவாரணப்பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபாட்டுடன் வேலை செய்தார்களோ, அதே அளவில் உண்மையை வெளிக்கொணர்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆட்சியாளர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் முறையான சுதந்திரமான விசாரணைக் கமிஷன் வைத்து உண்மையை உலகுக்கு கூறுவது மட்டும்தான் இறந்தவர்களுக்கும், இழந்தவர்களுக்கும் நாம் அளிக்கும் உண்மையான நிவாரணமாக இருக்கும். +

Saturday, September 12, 2015

செப் 11( 1893): சிகாகோவில் விவேகானந்தர் நிகழ்த்திய எழுச்சியூட்டும் உரை

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் எழுச்சியூட்டும் உரையை விவேகானந்தர்  இன்று தான் 1893-ல் நிகழ்த்தினார் என்றும் வழிகாட்டும் அவரின் உன்னத வாசகங்கள் இவை

* வாய்மை எந்தச் சமூகத்துக்கும் மரியாதை செலுத்துவதில்லை. வாய்மையைச் சமூகம் மதிக்க வேண்டும். இல்லையேல் அந்தச் சமூகம் அழிந்துபோகும்.


* இளம் நண்பர்களே! வலிமையோடு இருங்கள் என்பதே என் அறிவுரை. நீங்கள் பகவத் கீதை படிப்பதன் மூலம் சொர்க்கத்தை நெருங்குவதை விடக் கால்பந்து ஆடுவதன் மூலம் வேகமாக அடைய முடியும். இவை தைரியமிகுந்த வார்த்தைகள்; இருந்தாலும் உங்களை நேசிப்பதால் இதனைச் சொல்கிறேன். ... தோள்களின் வலிமை கூட்டுங்கள். தசைகளை மேலும் உறுதிப்படுத்துங்கள்.

* முரடர்களை எதிர்கொள்ளுங்கள். இதுவே வாழ்க்கைக்கான பாடம். கடுமையனவற்றைத் தீரத்தோடு எதிர்கொள்ளுங்கள். குரங்குகளைப் போல வாழ்க்கையின் துயரங்கள் நாம் அஞ்சி ஓடாத பொழுது பின்னோக்கி செல்லும்.

* ஒரு சிந்தனையை எடுத்துக்கொள்ளுங்கள். அதை வாழ்க்கையாக்கி கொள்ளுங்கள். அதைப்பற்றிக் கனவு காணுங்கள், அதனோடு வாழுங்கள். உங்கள் மூளை, தசை,நரம்பு, எல்லாப் பாகங்களும் அந்தச் சிந்தனையால் நிரம்பி வழியட்டும். இதுவே வெற்றிக்கான வழி.

* உயர்ந்த பொருட்கள் உங்கள் காலடியில் உள்ளன, ஏனெனில், நீங்கள் தேவலோக நட்சத்திரங்கள். எல்லாம் உங்கள் காலடியில் உள்ளன. உங்களில் கைகளில் அள்ளி விண்மீன்களை நீங்கள் விரும்பினால் விழுங்க முடியும். இதுவே உங்களின் உண்மையான பண்பு. வலிமையோடு இருங்கள். எல்லா மூடநம்பிக்கைகளையும் கடந்து விடுதலையுற்று இருங்கள்.

* நாம் 'என்னைத் தீண்டாதே' என்பவர்களாக இருக்கிறோம். நம்முடைய மதம் சமையலறையில் இருக்கிறது. நம்முடைய கடவுள் சமையல் சட்டியில் இருக்கிறார், நம்முடைய மதம்,'நான் புனிதமானவன், என்னைத் தீண்டாதே' என்பதாக இருக்கிறது. இது இன்னுமொரு நூறு ஆண்டுகாலம் தொடர்ந்தால் நாம் எல்லாரும் பைத்தியக்கார விடுதியில் தான் இருப்போம்.

* எல்லா விரிவடைதலும் வாழ்க்கை. சுருங்கிக்கொள்ளுவது எல்லாம் மரணம். எல்லா அன்பும் விரிவடைதல். சுயநலம் என்பது சுருங்கிக்கொள்ளுதல். இதுவே வாழ்க்கையின் ஒரே சட்டமாகும். அன்பு செய்கிறவர் வாழ்கிறார், சுயநலத்தோடு இருப்பவன் இறக்கிறான். அன்புக்காக அன்பு செய்யுங்கள், அதுவே வாழ்க்கையின் ஒரே சட்டம் என்பதற்காக அன்பு செய்யுங்கள். சுவாசிப்பதற்காக அன்பு செய்யுங்கள். இதுவே சுயநலமற்ற அன்பு, செயல் அனைத்துக்குமான ரகசியமாகும்.

* ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரை, கல்வியறிவு அற்றவர்களை, செருப்பு தைக்கும் தொழிலாளியை, தெரு பெருக்குபவரை, மறந்து விடாதீர்கள். அவர்களும் ரத்தமமும் சதையாலும் ஆன நம்முடைய சகோதரர்கள். வீரம் மிகுந்தவர்களே, தீரத்தோடு, தைரியம் பூண்டு இந்தியன் என்பதற்குப் பெருமை கொள்ளுங்கள். பெருமையோடு, 'நான் இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன்!' என்று ஆராவரியுங்கள்.

* நீங்கள் சுயநலம் அற்றவரா என்பதே இப்போதைய கேள்வி. ஆமாம் என்றால் எந்த ஒரு மதப்புத்தகத்தையும் படிக்காமலேயே, எந்த ஒரு தேவாலயத்திற்குள்ளோ கோயிலுக்குள்ளோ போகாமலேயே நீங்கள் முழுமையானவர் ஆகிறீர்கள்.

* கோடிக்கணக்கான மக்கள் பசியிலும், அறியாமையிலும் உழல்கிற பொழுது அவர்களின் நசிவில் கற்றுவிட்டு அவர்களின் குறைகளுக்குச் செவிமடுக்காமல் இருக்கிற ஒவ்வொரு மனிதனையும் நான் தேசத்துரோகியாகவே கருதுவேன்.

* வெற்றி பெற உங்களுக்கு அளவில்லாத உத்வேகமும், முனைப்பும் இருக்க வேண்டும். "நான் பெருங்கடலைப் பருகுவேன்' என்று உத்வேகம் மிகுந்த ஆன்மா கூறவேண்டும்; "என் விருப்பத்தில் மலைகள் பொடிப்பொடியாகும்!' அப்படியொரு ஆற்றலோடு இருங்கள்; அப்படியொரு முனைப்போடு முன்னேறுங்கள். ஓயாமல் உழையுங்கள், உங்களின் இலக்கை அடைவீர்கள்.


* பொதுமக்கள் தங்களின் அன்றாடப் போராட்டங்களை எதிர்கொள்ள உதவாத கல்வி, அவர்களின் பண்பின் ஆற்றலை வெளிப்படுத்தாத கல்வி, வாரிக்கொடுக்கும் தயாள உள்ளத்தைத் தராத கல்வி, சிங்கத்தின் தீரத்தை தராத கல்வி - கல்வி எனப்படும் தகுதியுடையது அல்ல. தன்னுடைய சொந்தக் கால்களில் ஒருவன் நிற்கச் செய்வதே உண்மையான கல்வியாகும்.

* யாரையும் நிந்தனை செய்யாதீர்கள். உங்களால் முடியுமென்றால் உதவிக்கரம் நீட்டுங்கள். இல்லை என்றால், கைகளைக் கூப்பி உங்கள் சகோதரர்களை வாழ்த்தி அவர்களின் பாதையில் அவர்களைச் செல்ல அனுமதியுங்கள்.

* கோழையும், மூடனுமே 'இது என்னுடைய விதி' என நொந்து கொள்வார்கள். ஆனால், வலிமை மிகுந்தவன் எழுந்து நின்று 'என் விதியை நான் தீர்மானிப்பேன்' என்பான். வயதாகிக்கொண்டிருப்பவர்கள் தான் விதியைப் பற்றிப் பேசுவார்கள். இளைஞர்கள் ஜோதிடத்தை நோக்கி செல்வதில்லை.

* கண்மூடித்தனமாக எதையும் நம்புவது ஆன்மாவை அழிப்பதாகும். நீங்கள் நாத்திகவாதியாகக் கூட இருங்கள், ஆனால், எதையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.

Saturday, September 05, 2015

செப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..

'கப்பலோட்டிய தமிழன்'வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்
 September 5.  விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய
பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில்
பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில்
வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு
இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின்
விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு
காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில்
வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை 'வந்தே மாதரம் பிள்ளை ' என்று
அழைத்தார்கள் தலைவர்கள்.



இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில்
தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி
உணர்ந்தார். சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஷாலேன் ஸ்டீமர்ஸ்
கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார்.
ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. கிளம்பிப்போய் கொழும்பில் இருந்து
கப்பல்கள் வாடகைக்கு கொண்டு வந்தார்.

இருந்தாலும் சொந்த கப்பல் தேவை என்று உணர்ந்து எங்கெங்கோ அலைந்து காலியா
எனும் கப்பலை கொண்டு வந்தார் ; வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ்.
எஸ். லாவோ" கப்பலை வாங்கி வந்தார். ஆங்கிலேய அரசின் வியாபாரம்
பாதிக்கப்பட்டது. விலையை குறைத்து ஈடு கொடுத்தது அரசு. இவரும்
குறைத்துப்பார்த்தார். இறுதியில் கப்பலில் ஏறினாலே குடை இலவசம் என்று
அரசு அறிவிக்க மக்கள் கூட்டம் அங்கே போனது

தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில்
கோரல் நூற்பாலை யில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்
வ.உ.சி. பன்னிரண்டு மணிநேரம் ஓயாமல் வேலை,விடுமுறையே இல்லாத சூழல்
ஆகியவற்றை ஒன்பது நாள் போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார்.
விடுமுறை,வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் பெறப்பட்டன. அப்பொழுது
தன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை இதற்கென்று செலவு செய்தார்.

பிபன் சந்திர பால் மார்ச் ஒன்பதை விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு
விடுத்ததும் வ.உ.சி அதை தன் பகுதியில் கொண்டாட முடிவு செய்தார். கலெக்டர்
வின்ச் பார்க்க அழைத்து சில நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்க மறுத்ததால்
அவரை கைது செய்தார். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்து
ஸ்தம்பித்து,ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு,கடைகள் மூடப்பட்டு ,நகராட்சி
ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி
ஓட்டுபவர்கள் என்று எல்லாரும் வேலை நிறுத்த போராட்டம் செய்தார்கள். அரசு
மசியவில்லை.

தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை
விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே  சிதம்பரம்பிள்ளையின்
பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்
பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில்
விடுதலை பெறும்" என்று எழுதினார். பின்னர் அந்த தண்டனை மேல்
முறையீட்டுக்கு பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.

கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து
புண்ணாகின ; சணல் நூற்று,கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த
கொடிய உணவு அவரைப்புரட்டி போட்டது.

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில்
நோவதுவுங் காண்கிலையோ?'
என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார். விடுதலைபெற்று
வ.உ.சி வந்ததும் அவரை அழைத்துப்போக கூட ஆளில்லை என்பது கசப்பான வரலாறு.

அவர் எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்தார். மணக்குடவரின் திருக்குறள் உரையை
வெளியிடுகிற பொழுது அந்நூலின் முகப்பில் ,"இந்நூலின்
எழுத்து,கட்டமைப்பு,அச்சு,மை யாவும் சுதேசியம் !" என்று குறிப்பிட்டார்.
சென்னைக்கு லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர் பஞ்சம் பிழைக்க வந்தார்.
மண்ணெண்ணெய் கடை வைத்து தெருத்தெருவாக போய் விற்று பசியாற்ற முயன்றார்.

அவரின் வழக்கறிஞர் பட்டத்தை மீட்டுத்தந்த ஆங்கிலேய நீதபதி வாலஸ் நினைவாக
தன் பிள்ளைக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார். பல்வேறு ஊர்களில் வறுமை
நீங்காமலே வாழ்ந்து  தீவிர சைவராக இருந்த பொழுதிலும் இறக்கிற பொழுது அவர்
மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின்
மோகம்? " என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய உயிர் துறந்தார்.

Monday, August 10, 2015

One of the Kural which Kalam always says..

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்; மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.


 Ulluvadhu yellam uyarvullal; mattradhu
thallinum thallamai neerthu.


Meaning of the Above Thirukural

எண்ணுவதெல்லாம் உயர்வானதாகவே இருக்கட்டும். அவ்வுயர்வு கை கூடாவிட்டலும் உயர்ந்த அந்த எண்ணத்தைக் கைவிடுதல் கூடாது.

Let the thoughts be always great, even if it is not successful, let not those thoughts be left out.

புகழை தலையில் ஏந்திக் கொள்ளாதவருக்கு சலாம்! கலாமுக்கு கமல் கவிதாஞ்சலி

கலாம்களும் கமால்களும்
கமல்களும்
இலாதுபோகும்
நாள்வரும்
இருந்தபோது
செய்தவை
அனைத்துமே
கணிப்பது
ஹெவன்என்று
ஒருவனும்
பரம் என்று ஒருவனும்
ஜன்னத்தென்று ஒருவனும்
மாறி மாறிச் சொல்லினும்
இகத்திலேயவன்
நடந்த பாதையே
புகழ் பெறும்
நிரந்தரம் தேடுகின்ற
செருக்கணிந்த
மானுடர்
தொண்டருக்கடிப்பொடி
அம்மெய்யுணர்ந்த நாளிது
புகழைத் தலையிலேந்திடாது
பாதரட்சையாக்கிய
கலாம் சாஹெப்
என்பவர்க்கு
சலாம் கூறும் நாளிது
- கமல்ஹாசன்

ஜனாதிபதி மாளிகை: குரங்குகள் வாங்கும் பென்சன்

அந்த அலுவலகம் பிரம்மாண்டமானதாக, குடைந்து வைத்ததுபோல குறைவான வெளிச்சத்தில் இருந்தது. இடுப்பளவு உயரத்தில் இருந்து சீலிங் வரைக்கும் நீண்ட பிரெஞ்சு ஜன்னல்கள். பெரும்பாலான ஜன்னல்கள் வேலைப்பாடுகள் செய்த வெல்வெட் திரைச்சீலைகளால் மறைக்கப்பட்டு டெல்லியின் சூரியனும், வெக்கையும் உள்ளே வராமல் தடுத்தன. புறாக்கள் ஜன்னல் விளிம்புகளில் உட்கார்ந்து சத்தமிட்டன. அண்மையில் இருந்த மரங்களிலும், கட்டடங்களிலும் குரங்குகள் நிறைய சஞ்சரித்தன. இயற்கையான வனப்பிரதேசச் சூழல் யன்னல்களை அங்காங்கே கறைபட வைத்திருந்தது. எந்த மனிதனுக்கு

இந்த யன்னல்களை கழுவும் பணி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நான் யோசித்தேன். அதுவரை ஒரு பெண் பணியாளரைக்கூட நான் காணவில்லை. அந்த அறையில் எதை எடுத்தாலும் அது பிரம்மாண்டமானதாகவே இருந்தது. பிரம்மாண்டமான சோபாக்கள், தடிப்பான கம்பள விரிப்புகள், ராட்சத தொங்கு விளக்குகள். அவருடைய மெய்க்காவலர்கள்கூட திடகாத்திரமாகவும், பாரமாகவும் இருந்தார்கள்.

பென்னம் பெரிய கதவுகள் வழியாக வந்துபோகும் மிலிட்டரி உடையணிந்த உதவியாளர்கள்கூட கனமான ஆகிருதிகளுடன் காணப்பட்டார்கள். எல்லாமே பெரியதாக இருந்தது, ஒரு மேசையின் முன் உட்கார்ந்து கம்ப்யூட்டர் திரையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அந்த மனிதரைத் தவிர. அவருடைய சிறிய உடலில் இருந்து சன்னமாகத்தான் குரல் எழும்பியது. அந்த அறையின் பரப்புக்குள், அவர் குரலை கேட்க வேண்டுமென்றால் சுற்றிவர கடுமையான மௌனம் தேவை. ஆனால் அந்தப் புறாக்கள் அவர் பேசுவதை மூழ்கடித்தன.'எல்' எழுத்துப்போல உயர்ந்த மரத்தில் வடிவமைக்கப்பட்ட அவருடைய தொன்மையான மேசை, ஒரு தூரத்து மூலையில் தள்ளப்பட்டு, இந்த ஆடம்பரங்களுக்கு மன்னிப்பு கேட்பதுபோல காட்சியளித்தது.

அப்துல் கலாம் ஆட்சி செலுத்துவது போலவே இல்லை. இந்தப்பெரிய படாடோபங்களில் அவர் சங்கடப்படுவது போலவே தோற்றமளித்தார். ஒரு கல்விக் கூடத்திலோ, ஒரு பல்கலைக் கழகத்திலோ அவர் இன்னும் கூடுதலான சௌகரியத்துடன் தன்னை உணர்ந்திருப்பார் என்று எனக்குப்பட்டது. என்னையும் ஒரு மாணவர் போலவே அவர் வரவேற்றார்.

நான் பிபிசி குழுவுடன் கடந்த ஒரு மாத காலமாக, விவரணப்படம் ஒன்று எடுப்பதற்காக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் அலைந்திருந்தேன். உலக அழகி ஐஸ்வர்யராயின் பேட்டி அடுத்த நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்ததால், மூன்று மாதம் முன்பாகவே ஒழுங்கு செய்திருந்த ஜனாதிபதியின் பேட்டியிலும் கடைசி நிமிடங்களில் சிறு மாறுதல் செய்யவேண்டி நேர்ந்தது. ஒரு நாட்டின் ஜனாதிபதியிலும் பார்க்க ஒரு நடிகை பிஸியாக இருந்ததை கண்டு பிபிசி டீம் அதிசயித்தது. நாளைய பேட்டியே கடைசி. அத்துடன் வந்த காரியம் முடிந்து, நான் மறுபடியும் வாஷிங்டனுக்குப் பயணமாகி விடுவேன்.

பிபிசி குழுவில் நாங்கள் எட்டுப்பேர் இருந்தோம். எல்லாமே வெள்ளைக்கார முகங்கள், என்னுடையதை தவிர்த்து. பல பாதுகாப்பு அரண்களை தாண்டி, பதினைந்து நிமிடங்கள் முன்பாகவே வந்துவிட்ட எங்களை ஒரு வரவேற்பு அறையில் உட்காரவைத்திருந்தார்கள். அதுவே ஒரு ஜனாதிபதிக்கு தகுதியான கம்பீரத்தோடு இருந்தது. எங்கள் குழுவின் தலைவர், விவரணப் படக் கலையில் புகழ்பெற்ற பட்டி ஸ்மித் என்பவர். ஜனாதிபதியைப் பார்க்க உள்ளே போகவேண்டிய நேரம் வந்ததும் இரண்டு பாதுகாவலர்களும், ஓர் உயர் அதிகாரியும் எங்களை அழைத்துச் சென்றார்கள். நான் மட்டுமே ஜனாதிபதியிடம் கைகுலுக்கினேன். மற்றவர்கள் காமிராவுக்கு பின்னே நின்று கொண்டார்கள். எங்களை அழைத்து வந்த அதிகாரியின்
முகத்தில் ஆச்சரியத்திலும் பார்க்க ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.

பாதுகாவலர் படக்கென்று திரும்பி,  தன் நேரம் வீணாகிவிட்டது என்பதை அப்பட்டமாகக் காட்டியபடி மறைந்துபோனார். ஜனாதிபதி என்னை சஞ்சயன் என்று உரிமையுடன் அழைத்தார்; நான் பதிலுக்கு ‘மிஸ்டர் பிரெசிடென்ட்’ என்றேன். எங்கள் சம்பாசணை தொழில் நுட்பம், இந்தியாவின் எதிர்காலம், சாதாரண மக்களின் அன்றாட சந்தோசம் இவற்றையெல்லாம் தொட்டது. இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தின் சிருஷ்டிகர்த்தாவான ஒரு ஜனாதிபதியின் சிந்தனைகள் கவித்துவமாகவே இருந்தது என்னை வியப்பிலாழ்த்தியது.
"இங்கே பாருங்கள் சஞ்சயன், நான் நூறு கோடி மக்களைச் சிரிக்கவைக்க விரும்புகிறேன். உங்களுக்குப் புரிகிறதா? நூறுகோடி மக்கள் சிரிக்கவேண்டும். இது முடியும்."-  அவர் அதை சொன்னவிதம், அறிவை மீறிய ஒரு தேவவாக்கு போல என் காதுகளில் விழுந்தது. என் தலை என்னையறிமால் அசைந்தது.

அவர் தன் கனவை சொல்ல ஆரம்பித்தார். "இந்தியாவைத் தொடுக்கவேண்டும். முக்கோண வடிவமான இந்தியாவை குறுக்கறுத்து ஆயிரம் புதுச்சாலைகள் ஓடவேண்டும்; இணையம் மூலமும், சாட்டிலைட் மூலமும் இந்தியா முழுவதையும் இணைக்கவேண்டும். ஒவ்வொரு நூறு கிராமத்துக்கும் ஓர் இணைய செர்வர். அதிலிருந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்னஞ்சல், இணைய தள வசதிகள். ஒரு புதிய EDUSAT என்ற செயற்கைகோளை விண்வெளியில் நிறுவுவதற்கான ராக்கெட் ஒன்று விரைவிலேயே ஏவப்படும். உலகத்திலேயே கல்விக்காக முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சாட்டிலைட் இதுவாகவே இருக்கும். இதிலிருந்து லட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களுக்கு கல்வி அறிவுப் போதனைகள் ஒலிபரப்பாகும்..." என்ற கலாம்,  'ignited minds' என்றார்.
இளம் மனங்களில் ஒரு தீ பற்றவேண்டும். வெளியே வரத் துடிக்கும் இந்திய இளைஞர்களின் உச்சமான திறமைகளை விடுவிக்கவேண்டும். இந்த அரிய மனிதர், சந்தேகமில்லாமல் தன் பரிவான உள்ளத்தில் கனவுகள் காணும் ஒரு நம்பிக்கைக்காரர்.

தேநீரும் பிஸ்கட்டும் பரிமாறினார்கள். தேநீரை சிறிய பீங்கான் கிண்ணத்தில் பருகியபடி, ஜனாதிபதி தன் மாளிகையைப் பற்றி சொன்னார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் காலத்து கட்டடக் கலைஞர்களால் நிர்மாணிக்கப்பட்ட அந்த மாளிகையின் முதல் வைஸ்ராய் எர்வின்; கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன். என்றென்றைக்கும் அடக்கியாளலாம் என்ற எண்ணத்தில் பிரிட்டிஷார் எழுப்பிய மாளிகையில், அவர்கள் 17 வருடங்கள் மட்டுமே ஆட்சி செலுத்தினர்.

ஜனாதிபதி பேசிக்கொண்டிருந்தபோது எனக்கு இன்னொன்று புலப்பட்டது. இந்த கண்ணைப் பறிக்கும் சோடனைகளும், அலங்கார தூண்களும், மாளிகையும் அப்துல் கலாமின் மாபெரும் கனவுகளை தாங்குவதற்கு போதாத ஒரு சிறு குடிசையாகவே எனக்கு அப்போது தோன்றியது.

நான் விடை பெறுமுன் கேட்டேன். "மிகுந்த அழகுணர்வோடு பராமரிக்கப்படும் உங்கள் தோட்டத்துக்கு போவீர்களா? குரங்குகள் தொல்லைப் படுத்துவதில்லையா?"

"ஓ, குரங்குகள், அவை பெரிதாக என்னை தொந்திரவு செய்வதில்லை." -இப்படிச் சொல்லியவாறே தன் மேசையில் பதித்த சிவப்பு பொத்தானை ஜனாதிபதி அழுத்தினார். அந்தப் பொத்தானை அவருடைய மேசையில் ஒருவித ஒளிவு மறைவுமின்றி ஒட்டி வைத்திருந்தார்கள். அதிலே இருந்து தாறுமாறாக சென்ற வயர்கள் மேசையின் ஓரத்தில் ஸ்டேப்பிள் செய்யப்பட்டிருந்தன. ஒரு விண்வெளி விஞ்ஞானியும், மாபெரும் நாட்டின் ஜனாதிபதியுமான அவருடைய மேசையிலே ஓடும் வயர்களை மறைத்து வைப்பது அவ்வளவு கடினமான காரியமா என்று என்னை யோசிக்க வைத்தது.

"இந்தக் குரங்குகள் எங்களைத் தொந்திரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள சில உபாயங்கள் உண்டு" என்றார். அப்பொழுது ஜனாதிபதி எழுதிய இரண்டு புத்தகங்களை அவருடைய உதவியாளர் கொண்டு வந்து கொடுத்தார். ஆங்கிலப் புத்தகத்தில் கையப்பமிட்டு என்னிடம் தந்தார். மற்றது தமிழ் புத்தகம். அதில் தமிழில் கையெழுத்து வைத்து, "இதை எழுத்தாளரான உங்கள் அப்பாவிடம் கொடுங்கள்!" என்றார்.
நான் விட்ட இடத்தைப் பிடித்துக்கொண்டு என்ன உபாயங்கள்? என்றேன். "காவல்கார குரங்குகள். எங்களுக்கு ஓயாது தொல்லை தரும் சிறிய குரங்குகளுக்கு பெயர் லங்கர். பெரிய குரங்குகளின் பெயர் மக்காக்கி. பயிற்சி கொடுத்த மக்காக்கி குரங்குகளை சங்கிலியில் கட்டி, காவல்காரர்கள் சுற்றிலும் உலாத்துவார்கள். இவற்றைக்கண்டதும் சிறிய குரங்குகள் ஓடிவிடும், கிட்ட வராது".
என் முகத்தில் தோன்றிய ஆச்சரியத்தை என்னால் மறைக்கமுடியவில்லை. 

‘காவல் காக்கும் பெரிய குரங்குகளுக்கு சம்பளம் உண்டா?’ என்றேன், பாதி நகையுடன்,  "நிச்சயமாக. ராஷ்டிரபதி பவன் ஊழியர்களின் பட்டியலில் அவற்றின் பெயர்களும் உண்டே...!"- உலகத்தின் ஆகப்பெரிய ஜனநாயகத்தின் அதிபதி என்னுடைய முழங்கையை பிடித்து தன் அற்புதமான தோட்டத்திற்கு அழைத்து சென்றார்.
கருணையே உருவான அந்த நல்ல மனிதருக்கு என்னுடைய மனக்கிலேசம் எப்படியோ தெரிந்துவிட்டது. "அவை ஓய்வு பெற்றபிறகு அவைக்கு பென்சனும் இருக்கிறது" என்றார்

ஜனாதிபதி மாளிகையில் அப்துல் கலாம் இப்தார் விருந்து வழங்காதது ஏன்?

குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது  பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார். அப்துல் கலாம் மறைவுக்கு பின் டிடி தொலைக்காட்சி பி.எம். நாயரை பேட்டி எடுத்தது. அவருடன் பணியாற்றிய அனுபவங்களை 'கலாம் எபெக்ட்' என்று நாயர் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.
அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சமயத்தில் அவருக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் வரும். வெளிநாடுகளில் இருந்தும் ஏகப்பட்ட பரிசுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கும். அவற்றையெல்லாம் அப்துல் கலாம் போட்டோ எடுத்து வைத்து வகைப்படுத்துவார். பின்னர் அப்படியே அதனை ஆவண காப்பகத்துக்கு அனுப்பி விடுவார். ஒரு பொருளை கூட திரும்பி பார்த்ததது இல்லை. ஒரு பென்சிலை கூட தனக்கு என்று எடுத்து கொண்டது இல்லை. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் அன்பளிப்புகளை மறுத்தால், அந்த நாடுகளை அவமானப்படுத்துவது போல் அமைந்து விடும் என்பதால்தான் பரிசுபொருட்களை அப்துல்கலாம் பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ரமலான் மாதத்தில் குடியரசுத் தலைவர் 'இப்தார்' விருந்தளிப்பது வழக்கமான பாரம்பரியமான நிகழ்வு.  கடந்த 2002ஆம் ஆண்டு அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற சமயம். என்னைஅழைத்த அப்துல் கலாம், இப்தார் விருந்துக்கு ராஸ்டிரபதி பவனில் எவ்வளவு செலவாகும்? என்று கேட்டார். நான் 22 லட்ச ரூபாய் செலவழிப்போம் என்றேன். இருக்கப்பட்டவர்களுக்கு இப்தார் விருந்தளிப்பதால் என்ன பயன்? அந்த 22 லட்சத்தை அனாதை இல்லங்களுக்கு பிரித்து வழங்கி விடுவோம். அந்த தொகைக்கு இணையாக அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய சொன்னார். பின்னர் தனியாக என்னை அழைத்து ஒரு லட்ச ரூபாய்க்கும் செக் அளித்து இதையும் சேர்த்து 23 லட்ச ரூபாய்க்கு குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யுங்கள் என அப்துல்கலாம் கூறிய போது, மனித நேயமிக்க மனிதரிடம் பணிபுரிவது குறித்து மிகுந்த பெருமையடைந்தேன். கலாம் இஸ்லாமியர்தான் என்றாலும் அவர் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த வரை குடியரசு தலைவர் மாளிகையில் 'இப்தார்' விருந்து அளிக்கப்பட்டதில்லை.

அப்துல் கலாம் 'யெஸ் சார்' வகை அதிகாரிகளை பக்கத்தில் வைத்து கொண்டதில்லை. ஒரு முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். இருவரும் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் நின்ற என்னை பார்த்து மிஸ்டர். நாயர் நான் சொல்வது சரியா? என்று வினா எழுப்பினார். அது சரியாக இருக்காது என்றும் அதற்கான காரணங்களையும் நான் அடுக்கி கூறினேன். உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பிரமிப்பு. ராஷ்டிரபதியின் கருத்துக்கு சாதாரண அதிகாரி எதிர் கருத்து சொல்வதும் அதனை அவர் அனுமதிப்பதையும் கண்டு நீதிபதி அசந்தே போனார்.

குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பொறுப்பேற்ற போது ராமேஸ்வரத்தில் இருந்து அவரது உறவினர்கள் 50 பேர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கியிருந்தனர். அவர்கள் டெல்லியை சுற்றிபார்க்க ஒரு பஸ் அமர்த்தி தரப்பட்டது. அந்த பேருந்துக்கான கட்டணத்தை அப்துல் கலாம் வழங்கி விட்டார். இவர்களில் யாருக்கும் எந்த சமயத்திலும் அரசுக்கு சொந்தமான கார் பயன்படுத்தப்படவில்லை. கலாமின் உறவினர்கள் டெல்லியில் தங்கியிருந்த சமயத்தில் அவர்களுக்கு உணவு செலவாக 2 லட்ச ரூபாய் குடியரசுத் தலைவர் மாளிகையில் செலவிடப்பட்டது. அந்த தொகையை கலாம் தனது கையில் இருந்து செலுத்தி விட்டார். எந்த குடியரசுத் தலைவரும் இது போன்று செலுத்தியதே இல்லை.

அப்துல் கலாமின் 5 ஆண்டு பதவி காலம் முடிய சில நாட்கள் இருந்த சமயத்தில் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் ஊழியர்கள் அவரை சந்தித்துக் கொண்டிருந்தனர். அப்போது நானும் அவரை சந்தித்தேன். என்ன மிஸ்டர் . நாயர் உங்கள் மனைவியை காணோம்? என்று கலாம்  கேட்டார். எனது மனைவி ஒரு விபத்தில் சிக்கி கால் உடைந்து வீட்டில் இருக்கிறார் என்றேன். அடுத்த நாள் எனது வீட்டை சுற்றி ஒரே போலீஸ். என்னவென்று பார்த்தால் கலாம் எனது மனைவியை பார்க்க வீட்டுக்கே வந்து விட்டார். ஒரு குடியரசுத் தலைவர் சாதாரண ஊழியரின் மனைவியை சந்தித்து பேசுகிறாரே என்று நான் வியந்து போனேன்.

இவ்வாறு முன்னாள் குடியரசுத் தலைவர் பற்றி பி.எம். நாயர் கூறியுள்ளார்

Tuesday, August 04, 2015

அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!

நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்!’ என்றேன்.
 
 
2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது. ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை. ஒவ்வொரு முறை டர்புலென்ஸ் காரணமாக விமானம் ஆட்டம் காணும்போது, நான் பயத்தில் அமர்ந்திருக்க, ஜன்னலை மூடிவிட்டு, 'இப்போது பயம்  போயிருக்குமே! என்பார்.  
கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டுக்கு 2.5 மணிநேரம் காரில் பயணம். மொத்தமான 5 மணிநேரப் பயணத்தில் நாங்கள் நிறைய பேசினோம், விவாதித்தோம். இதுவரை நூற்றுக்கணக்கான முறை அவருடன் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையுமே விஷேசமான அனுபவமாகவே இருக்கும். 
இந்தக் கடைசி பயணத்தில் இருந்து 3 முக்கிய சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...
முதலாவதாக, பஞ்சாபில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி மிகவும் கவலையுடன் இருந்தார் டாக்டர் கலாம். அப்பாவி உயிர்கள் பலியானது அவருக்கு பெரும் வேதனையை அளித்திருக்கிறது. ஷில்லாங் ஐஐஎம்மில் அவர் பேசவேண்டிய தலைப்பு ‘Creating a Livable Planet Earth’. இதனுடன் பஞ்சாப் சம்பவத்தை இணைத்து என்னுடன் பேசினார். ‘பொல்யூஷனைவிட மனிதர்களின் வேலைகள்தான் இந்த உலகுக்கு பெரிய அச்சுறுத்தல்’ என்றார்.
'வன்முறை, மாசு, மனிதர்களின் பொறுப்பில்லாத நடவடிக்கைகள்  போன்றவை தொடர்ந்தால் நாம் உலகைவிட்டு வேறு எங்காவது சென்றுவிட வேண்டியதுதான்...' என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தோம். ‘இப்படியே போனால் 30 வருடங்கள்தான். இளைஞர்களாகிய நீங்கள்தான் ஏதாவது செய்யவேண்டும். இது உங்களுடைய எதிர்கால உலகம் இல்லையா?’ என்றார் கலாம். 
இரண்டாவது. கடந்த 2 நாட்களாகவே பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து கலாம் கவலையாக இருந்தார். ‘நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது 2  முறை ஆட்சிகள் மாறியது.  பதவியில் இல்லாதபோதும் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறேன். பாராளுமன்றம் செயலிழந்துதான் இருக்கிறது. இது சரியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் பாராளுமன்றத்தில் நடைபெற வேண்டும். இதற்கான வழியை நான் கண்டுபிடிக்கவேண்டும்’ என்றார். 
உடனே, என்னை ஷில்லாங் ஐஐஎம் மாணவர்களுக்காக, சர்ப்ரைஸாக ஒரு அசைன்மென்ட் கேள்வியைத் தயார் செய்யச் சொன்னார். இந்தக் கேள்வியை தன்னுடைய உரை முடித்தபின்தான் கலாம் மாணவர்களுக்கு சொல்வதாக இருந்தார். நம் பாராளுமன்றம் இன்னும் சிறப்பாக செயல்பட 3 புதுமையான ஐடியாக்களை மாணவர்கள் தரவேண்டும் என்பதே அது. ஆனால், ‘என்னிடமே இதற்கு பதில் இல்லாதபோது, எப்படி மாணவர்களிடம் பதில் கேட்பது?’ என்று வருந்தினார் கலாம். அடுத்த 1 மணிநேரம் இதுகுறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த ஆரோக்கியமான விவாதத்தை எங்களுடைய அடுத்த புத்தகமான ‘அட்வான்ட்டேஜ் இந்தியா’வில் சேர்க்கலாம் என பேசிக்கொண்டோம்.  
 
மூன்றாவது. இங்குதான் கலாம்-ன் உண்மையான, அழகான மனதை தெரிந்துகொண்டேன். ஆறேழு கார்கள் கொண்ட அணிவகுப்பில், 2வது காரில் நாங்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்பு, ஒரு ஜிப்ஸியில் 3 பாதுகாப்பு வீரர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் மட்டும் பாதுகாப்புக்காக ஜிப்ஸி மேல் துப்பாக்கியுடன் நின்று கொண்டு வந்தார். ஒருமணிநேரம் இருக்கும். ‘ஏன் அவர் நின்றுகொண்டே இருக்கிறார். சோர்வடைந்துவிடுவாரல்லவா? பார்ப்பதற்கு ஏதோ தண்டனைக்காக நிற்பதுபோல் இருக்கிறது. உடனே அவருக்கு வயர்லெஸ்ஸில் அவரை அமரச் சொல்லி தகவல் அனுப்புங்களேன்’ என்றார் கலாம். பாதுகாப்புக்காக அவர் நிற்கக்கூடும் என்று கலாமை சமாதானப்படுத்தினேன். ஆனால், அவர் கேட்கவில்லை. எனவே, ரேடியோ மூலம் தகவல் அனுப்பினோம். அது வேலையும் செய்யவில்லை. அடுத்த ஒன்றரை மணிநேரப் பயணத்தில் மூன்று முறை அவரை அமரச்சொல்லுமாறு கை சைகை கொடுக்கச் சொல்லி என்னிடம் நினைவூட்டினார். ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. எனவே, ‘நான் அந்த பாதுகாப்பு வீரரை சந்தித்து நன்றி சொல்லவேண்டும்’ என்றார்.
 
 
ஷில்லாங் சென்றவுடன் அந்த பாதுகாப்பு வீரரைக் கண்டுபிடித்து கலாமிடம் அழைத்துச் சென்றேன். டாக்டர் கலாம் அந்தப் பாதுகாப்பு வீரரை வரவேற்று வாழ்த்தினார். கைகுலுக்கி ‘thank you buddy’ என்றார். ‘நீ சோர்வாக இருக்கிறாயா? ஏதாவது சாப்பிடு. என்னால் நீ அவ்வளவு நேரம் நிற்க வேண்டியிருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்றார். கலாம் இப்படிச் சொன்னது அந்த வீரருக்கு ஆச்சரியமாக இருந்தது. வார்த்தைகள் இல்லாமல், ‘சார். உங்களுக்காக இன்னும் 6 மணிநேரம்கூட நிற்பேன்' என்றார். 
 
பின்னர், லெக்சர் அறைக்கு சென்றோம். ‘எப்போதும் மாணவர்களைக் காக்கவைக்ககூடாது!’ என்று அடிக்கடி சொல்வார் கலாம். எனவே, அவருடைய மைக்கை உடனடியாக செட் செய்து கொடுத்து, லெக்சர் குறித்து விளக்கினேன். மைக் செட் செய்யும்போது ‘Funny guy! Are you doing well?” என்றார் கலாம். அவர் ‘Funny guy’ என்று சொன்னால் அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. அவர் சொல்லிய விதத்தைப் பொறுத்து அர்த்தங்கள் மாறுபடும். நாம் நன்றாக இயங்கினாலோ, ஏதாவது சொதப்பிவிட்டாலோ என பல தருணங்களுக்கும் இதைச் சொல்வார் கலாம். இல்லாவிட்டால் சும்மா ஜாலிக்காகவும் சொல்வார். அவருடன் இருந்த 6 வருடங்களில் ‘Funny Guy’ என்ற அவருடைய வார்த்தை பிரயோகத்தை நான் முழுவதும் புரிந்துவைத்திருந்தேன். ஆனால், இதுதான் இறுதி முறை என்பது எனக்கு அப்போது புரியவில்லை. 
 
"Funny guy! Are you doing well?” என்றார் ‘ஆம்’ என்றேன். அவைதான் கலாம் என்னிடம் கூறிய கடைசி வார்த்தைகள். 
 
மேடைப் பேச்சில் 2 நிமிடங்கள் பேசியிருப்பார். ஒரு வாக்கியத்தை  முடித்துவிட்டு, நீண்ட இடைவெளி விட்டார். நான் அவரைப் பார்த்தேன். மேடையில் இருந்து அப்படியே சரிந்தார். 
 
அவரை தூக்கி நிறுத்தினோம். மருத்துவர் ஓடி வந்தார். எல்லா விதத்திலும் முயற்சித்தோம். அவருடையை கடைசி தருணத்தை மறக்கவே முடியாது. முக்கால்வாசி கண்கள் மூடியிருந்த நிலையில் அவருடைய பார்வை இன்னும் நினைவில் உள்ளது. ஒருகையில் அவர் தலையைப் பிடித்துக்கொண்டிருந்தேன். அவருடைய கை என் விரல்களைப் இறுக்கிப் பிடித்திருந்தன. அவர் முகத்தில் ஒரு பேரமைதி. அவர் கண்களில் இருந்து ஞானம் பிரகாசித்தது. அவர் ஒருவார்த்தை பேசவில்லை. அவர் வலியையும் வெளிக்காட்டவில்லை. அவர் வாழ்க்கையின் அர்த்தம் மட்டுமே எங்களுக்குப் புரிந்தது. 
 
அடுத்த 5 நிமிடங்களில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தோம். சில நிமிடங்கள் கழித்து, கலாம் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். கடைசி தடவையாக அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன். என் நண்பர் , என் வாழ்வின் வழிகாட்டி விடைபெற்றுவிட்டார். என் நினைவுகளிலும், அடுத்த பிறப்பிலும் உங்களை மீண்டும் சந்திப்பேன் சார்!
 
இப்போது என் நினைவுகள் என்னை ஆக்கிரமித்தன.   
 
'நீ இளைஞன். நீ என்னவாக நினைவில் கொள்ளப்பட விரும்புகிறாய்?’  என்று அடிக்கடி என்னைக் கேட்பார். நானும் ஒவ்வொரு முறையும் அவரைக் கவர்வதற்காக வித்தியாசமான பதில்களைக் கண்டுபிடிப்பேன். ஒருநாள் பொறுமையிழந்து அவரிடமே திரும்பக் கேட்டேன். ‘முதலில் நீங்கள் சொல்லுங்கள். எதற்காக மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள்? குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகன், இந்தியா 2020….சொல்லுங்கள்!’ என்றேன்.
 
'ஆசிரியர்’ என்றார் கலாம்.
 
 
2 வாரங்களுக்கு முன்பு அவருடைய நண்பர்களைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது,’பிள்ளைகள்தான் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளவேண்டும். சில சமயங்களில் அப்படி நடக்காதது வருத்தமாக இருக்கிறது’. ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்பு, ‘2 விஷயங்கள் அனைத்து பெரியோர்களுக்கும். எப்போதும் உங்கள் இறுதிப் படுக்கையில் பணத்தை விட்டுச் செல்லாதீர்கள். இது குடும்பத்தின் மகிழ்ச்சியைக் குலைத்துவிடும். இரண்டாவது. வாழ்வின் முடிவில் தான் நினைத்த வேலையைச் செய்துகொண்டே மரணிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். நம் கடைசி தருணங்கள் டக்கென்று முடிந்துவிடவேண்டும்'  என்றார். 
 
இன்று, அவர் விரும்பியதை செய்தபடியே இறுதிப் பயணதை மேற்கொண்டிருக்கிறார். கற்பித்தல். இதற்காகத்தான் தான் நினைவு கொள்ளப்படவேண்டும் என்று விரும்பினார் கலாம். அவருடைய கடைசி தருணத்தில், அவருக்குப் பிடித்தவாறு, மேடையில் கற்பித்துக்கொண்டே மறைந்துவிட்டார் கலாம். ஒரு மகத்தான ஆசிரியராக நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார். அவருடைய வங்கிகணக்கில் ஒன்றுமில்லை. நமக்கான வாழ்த்துக்களும், மக்களுக்கான காதலும் மட்டுமே அவர் விட்டுச்சென்ற சொத்துகள். வாழ்க்கையில் வெற்றிபெற்றுவிட்டார் அப்துல் கலாம். 
 
உங்களுடன் நான் பகிர்ந்துகொண்ட தருணங்கள், உங்களுடைய தன்னடக்கம், எதையும் தெரிந்துகொள்ள விரும்பும் ஆர்வம் இனி எனக்கு தரிசிக்கக் கிடைக்கப் போவதில்லை. வாழ்க்கையின் அர்த்தத்தை வாழ்ந்த விதத்திலும், வார்த்தைகளிலும் நீங்கள் எனக்கு சொல்லிக்கொடுத்தீர்கள். நாம் விமானத்தைப் பிடிக்க விரைந்த தருணங்கள், நம் பயணங்கள், நம் விவாதங்கள் இனி நினைவுகள்தான். எனக்கு கனவுகள் கொடுத்தீர்கள்.  இப்போது நீங்கள் இல்லை. ஆனால், கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது! "
 
உங்கள் மாணவன்,
 
ஶ்ரீஜன் பால் சிங் 

அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில முக்கியப் பக்கங்கள் - 2

தலைமை அறிவியல் ஆலோசகர்:
 
(நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்)


* 1992 முதல் 1999 வரை பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்- II அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களிப்பு அளித்தார்.

* 1998-ல் இதயம் சம்பந்தமான டாக்டர். சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவில் கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை கெளரவப்படுத்தும் வகையில் 'கலாம்-ராஜூ ஸ்டென்ட்' என பெயரிடப்பட்டது.

* 2012-ல் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார வழிமுறைக்காக வடிவமைத்த டேப்லெட் கணினி 'கலாம்-ராஜூ டேப்லெட்' என்று பெயரிடப்பட்டது. 


 
இந்தியாவின் சக்தி - ப்ரமோஸ்
 

ஆயுதங்கள் உருவாக்கத்தில் இந்தியா கொஞ்சம் வீக்தான். சீனாவே பாராட்டினாலும், அர்ஜுன் டேங்க் இந்திய ராணுவத்தின் நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை. லைட் காம்பேட் ஏர்கிராஃப்ட் ப்ராஜெக்ட் மிகவும் தாமதமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், BrahMos பிராஜெக்ட் மட்டும் சூப்பர் சக்ஸஸ். யார் காரணம்? அப்துல் கலாம்.
 

‘ரோஹிணி’ செயற்கைக் கோள் வெற்றிக்குப் பிறகு, Integrated Guided Missile Development திட்டத்தின் மூலம் ஏவுகணை மேல் ஏவுகணை விட்டு இந்தியாவின் சக்தியை உலகுக்கு பறைசாற்றினார் கலாம். ஆனால், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளராகவும் அப்துல் கலாம் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட BrahMos ப்ராஜெக்ட்தான், உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது.
 
 

ரஷ்யாவுடன் இந்தியா இணைந்து BrahMos ஏவுகணையை உருவாக்கலாம்’ என்று அப்துல் கலாம் நினைத்த நொடி, இந்தியாவின் பாதுகாப்பு வல்லமையில் முக்கியமான தருணம். ப்ரமோஸ் ஏவுகணை உருவாக்கத்தில் கலாம் வகித்த பங்கைத் தெரிந்துகொள்ள ‘ப்ரமோஸ் ஏவுகணையின் தந்தை’ என்று அழைக்கப்படும் ஏ. சிவதாணு பிள்ளை எழுதிய ‘The Path Unexplored’ புத்தகத்தைப் படிக்கலாம். இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியதே அப்துல் கலாம்தான்.  
 
 

அதில், சிவதாணு பிள்ளை, அப்துல் கலாம் 1995-ல் தன்னிடம்  க்ரூஸ் ஏவுகணை உருவாக்கத்துக்கான  இந்தியா - ரஷ்யா கூட்டுமுயற்சிக்கு தலைமை செயல் இயக்குனராக பொறுப்பேற்றுக்கொள்ளச் சொன்னார் என்று எழுதியிருக்கிறார். ப்ரமோஸ் உருவாக்கத்தில் பிள்ளை என்ன திட்டத்தைச் சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்வாராம் கலாம். அதேபோல், கலாம் இந்த ப்ராஜெக்ட் சம்பந்தமாக எந்தக் கோப்புகளை அனுப்பினாலும், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ், முதலில் முக்கியத்துவம் கொடுத்து, கையெழுத்திட்டு திருப்பி அனுப்புவாராம்.

இன்று, ப்ரமோஸ் ஏவுகணைதான் உலகிலேயே மிகவேகமான க்ரூஸ் ஏவுகணை. ஏன், உலகிலேயே கடற்படை, விமானப் படை, தரைப்படை ஆகிய மூன்றுமே சூப்பர்சானிக் ஏவுகணை (ப்ரமோஸ்) கொண்ட ஒரே நாடு இந்தியாதான். ப்ரமோஸ் வெற்றியில் முக்கியப் பங்கு அப்துல் கலாமுக்கு இருக்கிறது.
 
ப்ரமோஸ் சீறிப்பாய்வதைப் பார்ப்பதற்கே கெத்தாக இருக்கும்

 
 
 


 

கலாமின் கனவு இந்தியா 2020!
 
 

'எப்போது பார்த்தாலும் வீண் கனவு கண்டு கொண்டே இருக்காதே! எல்லாம் பகல் கனவு தான்!' இப்படி தான் 'கனவு' என்ற வார்த்தை நம் மனதில் இந்த மனிதர் பேசுவதற்கு முன் இருந்தது. கண்களை மூடிக்கொண்டு காணும் கனவை, கண்களை திறந்து கொண்டும் காண முடியும் என்று புரிய வைத்தவர் அப்துல் கலாம். இன்று இந்தியா 2020-ம் ஆண்டுக்குள் வல்லரசாக வேண்டும் என்று பலர் கூறுவதை கேட்டிருப்போம். அவர்கள் அனைவரது பேச்சிலும் 'அப்துல் கலாம் கனவு கண்டது போல் இந்தியா 2020க்குள் வல்லரசாகும்' என்றுதான் மேற்கோள் காணப்படும்.
 

இந்தியாவிற்காக அவர் கண்ட நம்மை காண சொன்ன கனவு மிகப்பெரியது, மிகச்சிறந்தது. ஒருவேளை அவர் இந்திய குடியரசு தலைவர் ஆகாமல் போயிருந்தால் இதே விஷயத்தை ஏதோ ஒரு கல்லூரியின் விழாவில் மாணவர்களிடையே புகுத்தி நமக்குள் இந்தியாவின் வல்லரசு கனவுக்கான விதையை விதைத்திருப்பார்.
 

 
அவர் கண்ட கனவில் முதலாவது, இந்தியாவில் உள்ள மக்களின் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பது தான். இந்தியாவின் வளர்ச்சியை அளவிடும் அளவுகளான ஜிடிபி மூலம் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி என்பது 1996களில் மற்ற நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டால் 15வது இடத்தில் இருந்தது. அதனை 2020ல் 4வது இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அவரது கனவு. 
 

தொடர்ந்து உள்ளூர் சந்தைகளை ஊக்குவிப்பது, உற்பத்தி மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி என்பது நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டும். உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் நிதித்துறையில் தொழில்நுட்ப மேம்பாடுகளை கொண்டுவர வேண்டும். இந்தியாவில் தொழிநுட்ப மேம்பாடுகளை கொண்டுவர நிலையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடாக உலக நாடுகள் பார்க்க வேண்டும் என்பது தான் அவர் கண்ட முதன்மையான கனவு. மேலைநாடுகளில் இருந்த CAD மற்றும் CAM போன்ற இயந்திரவியலின் புதுமைகளை பற்றி கலாம் ஆரம்பத்தில் இருந்தே ஆணித்தரமாக வலியுறுத்தி வந்தார். அவரது சீரிய முயற்சியால் பல கல்லூரிகளில் இந்த பாடங்கள் இடம்பெற்றன.
 
 

இந்தியாவை உணவு பற்றாக்குறை இல்லாத நாடாகவும், விவசாய வளமிக்க நாடாகவும் மாற்ற வேண்டும், இந்தியாவில் ஆண்டுக்கு 14 மில்லியன் டன் உணவை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனால் இந்தியாவில் 40 சதவிகிதம் பேர் வறுமை கோட்டுக்குக்கீழ் உள்ளனர். இந்த நிலையை மாற்ற உணவுக்கான வழிவகைகளை செய்து விவசாயத்தை முன்னேற்ற வேண்டும்.
 

உற்பத்தி துறை தான் இந்தியாவின் வருங்காலம் என்று அவர் குடியரசு தலைவராக இருந்தபோது இந்தியா 2020 புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இன்று மேக் இன் இந்தியா திட்டத்தில் அரசு கணித்திருக்கும் அளவுகள் அப்துல் கலாமின் கணிப்புகளுடன் பொருந்துகின்றன என்பது ஆச்சர்யமாக உள்ளது. தற்போது வந்துள்ள திட்டத்தை பல வருடங்களுக்கு முன் கணித்திருக்கிறார் என்றால் அவர் மாமனிதர் தானே!
 

இந்தியாவில் சிறப்பான சாலைகள் இல்லாதது தான் இந்தியாவின் உற்பத்திதுறை வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது என்பதை கூறி இருந்தார். அதன்படி தான் அன்றைய பிஜேபி அரசு தங்க நாற்கர சாலை திட்டத்தையும், துறைமுகங்களை இணைக்கும் சாலைகளையும் கொண்டுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

இங்குள்ள தொழில்களையும் அதில் பணிபுரியும் பணியாட்களின் திறனையும் அதிகரிக்க சிறப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டும் அதன் மூலம் இந்தியாவுக்கு அனைத்து துறைகளிலும் வல்லமைமிக்க மனித வளத்தை அளிக்க முடியும் என்றார். இந்த கனவுகளை இந்திய இளைஞர்களால் எளிதில் சாத்தியப்படுத்த முடியும் என நம்பியவர் கலாம்.
 


 
ஒரு சினிமா நடிகரின் பேச்சையும், ஒரு கிரிக்கெட் வீரர் சொல்லும் குளிர்பானத்தை குடித்துக்கொண்டும் இருந்த இளைய சமுதாயம் 83 வயது இளைஞர் சொன்னால் இந்தியாவை உயர்த்த எண்ண வேண்டுமானாலும் செய்வோம் என மாறியது. இளைஞர்கள் நாட்டின் சொத்துக்கள். அவர்களது சக்தியை சிறப்பாக செயல்படுத்தினால் இந்தியா உலகின் அழிக்க முடியாத சக்தியாக மாறும் என்பதில் அச்சமில்லை என்றார்.

அவரது 'கனவு இந்தியா' இன்னும் உருவாகவில்லை. ஆனால் அவர் சொன்ன பாதையில் உருவாகி கொண்டிருக்கிறது. அவர் கனவு கண்ட தேசத்தை அவருக்காக உருவாக்கி தருவது அவர் நம்பிக்கை வைத்த இளைஞர்களின் கடமை. இங்கு ஊரைச் சுற்றும் இளைஞர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உலகை சுற்றும் செயற்கைக்கோள்களை தயாரித்து விண்ணைச் சுற்றுவார்கள். இந்தியா 2020-ம் ஆண்டில் அப்துல்கலாம் கண்ட 'கனவு இந்தியா'வாக உருவாகும். இந்தியாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் செயலில், கோடிக்கணக்கான அப்துல்கலாம்களை பார்ப்பது மட்டுமே இந்தியாவின் தற்போதைய இலக்கு. 
 
 


கனவு காணுங்கள்! அப்துல் கலாம் மறையவில்லை! இந்தியாவின் வளர்ச்சிக்கான கனவுகள் உள்ளவரை கலாமை அழிக்க முடியாது!
 
 
- டிஜிட்டல் ஃபர்ஸ்ட் டீம், விகடன்
 
(நன்றி: ClaysonsSkitlibrary)