Sunday, February 24, 2013

News on அபினி

பருத்தி, அபினி இந்த இரண்டையும் 'வெள்ளைத் தங்கம்’ என்று குறிப்பிடுகிறது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி. இந்த இரண்டும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துத் தந்தன. இன்று, மாஃபியா எனும் குற்றக் குழுக்கள் ஹாங்காங், பாங்காக், மலேசியா, சீனா என விரிந்து வளர்ந்து வலிமையான கடத்தல் மற்றும் அழித்தொழிப்பு இயக்கங்களாகச் செயல்படுகின்றன. இதற்கான தொடக்கப் புள்ளி பிரிட்டிஷ் அரசு, சீனாவுக்கு அபினி கடத்தியதில்தான் ஆரம்பம் ஆனது. ஓபியம் எனப்படும் அபினிச் செடியை தமிழில் கசகசாச் செடி என்று அழைக்கிறோம். இதற்கு, கம்புகம் என்ற பெயரும் இருக்கிறது. பளுப்புக் கசகசாச் செடி, வெள்ளைக் கசகசாச் செடி என்று இரண்டு வித செடிகள் உண்டு. இதில், வெள்ளைக் கசகசாச் செடி இந்தியாவில் அதிகம் விளைகிறது. கசகசா சாற்றைக் குடித்தால் மிதமிஞ்சிய போதை இருக்கும் என்கின்றனர்.
இந்தியாவில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் வங்காளத்தில் அதிகமாக அபினி விளைகிறது. வங்காளத்தில் விளையும் அபினி தரத்தில் உயர்ந்தது என்கின்றனர். கசகசா காய்கள் முற்றும்போது, அதில் விதைகள் உண்டாகின்றன. அந்த விதைகளை முற்றவிடாமல் உறிஞ்சிகள் வழியாக பாலை எடுத்து உறையவைத்து அபினி எடுக்கிறார்கள். சில நேரத்தில், கத்தியால் காயைக் கீறி அதில் இருந்து வடியும் பாலில் இருந்தும் அபினி எடுக்கப்படுகிறது. இந்தப் பாலில் 10 சதவிகிதம் முதல் 14 சதவிகதம் வரை மார்பின் எனும் போதைப் பொருள் இருக்கிறது. அதுபோலவே, 4 சதவிகதம் நார்க்கோடின் இருக்கிறது. காய் முற்றி விதையாகிவிட்டால் இந்த போதைதன்மை அற்றுப்போய்விடும்.
ரோமானியரின் உறக்கத்துக்கான கடவுளின் பெயர் சோம்னாஸ். இந்தப் பெயரில் இருந்தே கசகசா செடியின் தாவரவியல் பெயரான பபாவேர் சோமினிபெரம் என்பது உருவானது. அதுபோல, மார்பின் எனப்படும் போதைப் பொருள் மார்பியஸ் என்ற கனவுக்கான கடவுளின் பெயரில் இருந்து தோன்றியுள்ளது.
ஓபியத்தின் சரித்திரம் மிகவும் பழைமையானது. கிறிஸ்து பிறப்பதற்கு 3,400 ஆண்டுகளுக்கு முன்பே மெசபடோமியா, சுமேரியா, எகிப்து பகுதிகளில் ஓபியம் செடி பயிரிட்டு இருக்கின்றனர். மருந்துச் செடியாகவே ஆரம்ப காலத்தில் அபினி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, வேதனையில் தவிக்கும் நோயாளிகளுக்குத் தூக்கம் வரவழைப்பதற்கும், ஆண்மையை அதிகரிக்கவும், வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தாகவும் அபின் பயன்படுத்தப்பட்டது.
எகிப்தியர்கள், துயில் தரும் செடி என்று கசகசாவைக் குறிப்பிடுகின்றனர். கிரேக்கர்கள், தங்கள் கடவுளுக்கு கசகசா செடியின் பூக்களை அணிவிப்பதன் மூலம் மனிதர்களுக்கு நிம்மதியான உறக்கம் கிடைக்கும் என்று நம்பினர். ஆகவே, பண்டைய காலத்தில் மகிழ்ச்சி தரும் செடியாக அபினி கருதப்பட்டது. அபினி புகைப்பது அல்லது அதன் சாற்றைக் குடித்து போதை ஏற்றிக்கொள்வது திருவிழா மற்றும் மதச்சடங்குகளுடன் சம்பந்தப்பட்ட பழக்கமாக ராஜஸ்தானில் இன்றும் நிலவுகிறது. இதே பழக்கம், இந்தியாவின் பல மாநிலங்களிலும் இருக்கிறது. மருத்துவப் பொருளான அபினியை, வணிகத்துக்கான போதைப் பொருளாக அடையாளம் கண்டுகொண்டது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிதான்.
அக்பர் காலத்திலேயே, பீகார் மற்றும் வங்காளப் பகுதியில் விளைந்த அபினியை கிழக்கிந்தியக் கம்பெனி வாங்கி விற்பனை செய்துவந்தது. வங்காளம், பரோடா, மால்வா ஆகிய பகுதிகளில் அபினி அதிகமாக விளைந்தது. இந்த வியாபாரத்துக்காகவே, பாட்னாவில் அபினி வணிகக் கூட்டமைப்பு ஒன்றும் செயல்பட்டது. அபினி விற்பனையில் கொள்ளை லாபம் கிடைக்கிறது என்று கண்டுகொண்ட டச்சுக்காரர்கள், பீகார் வணிகர்களுடன் பேரம்பேசி தாங்களே அபினியை மொத்தமாகக் கொள்முதல் செய்யத் தொடங்கினர். இதைஅறிந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அபினி வணிகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தது. அதற்காக, விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்து உற்சாகப்படுத்தியதோடு தானே மொத்தமாக வாங்கிக்கொள்ள ஆரம்பித்தது.
1770-களில் அபினி வணிகம் பெரும் போட்டியாக மாறியது. டச்சு வணிகர்கள் இந்தோனேஷியாவுக்கு அபினியைக் கடத்தினர். போர்த்துக்கீசியர்களோ, சீனாவுக்கு விற்க முயற்சித்தனர். ஆனால், 1773-ல் வங்காள ஆளுனராகப் பொறுப்பு ஏற்ற வாரன் ஹேஸ்டிங், அபினி வர்த்தகத்தை கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார். அதற்காக, பாட்னாவில் இருந்த அபினி கூட்டமைப்பை உடைத்து, அபினி வணிகத்தை ஏகபோகமாக்கினார். இவரது முயற்சியின் தொடர்ச்சியாகவே, சீனாவுக்கு அபினி பெருமளவு கடத்தப்பட்டது.
அபினி வணிகத்தைப் பற்றி அறிந்துகொள்ள, சீனா மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனி ஆகிய இரண்டுக்கும் இடையே இருந்த வணிக உறவைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.
உலகுக்குத் தேயிலையை அறிமுகப்படுத்தியது சீனர்கள் தான். தேயிலைச் செடி அங்குதான் முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்தது. ஐரோப்பிய நாடுகளில் தேயிலை புகழ்பெறத் தொடங்கவே, சீனாவில் இருந்து தேயிலையை வாங்கி ஐரோப்பாவில் விற்கத் தொடங்கியது கிழக்கிந்தியக் கம்பெனி. அதுபோலவே, பட்டுக்கும் சீனக் களிமண்ணால் செய்த பாத்திரங்களுக்கும் ஐரோப்பாவில் பெரிய கிராக்கி இருந்தது. இந்த மூன்றையும் வாங்கி விற்றதில், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு லாபம் கொட்டியது. ஆனாலும், தேயிலைக்கு மாற்றாக பிரிட்டிஷ் கொடுத்த கைக் கடிகாரம், வெள்ளிப் பொருட்கள், கண்ணாடிகள் ஆகியவை, கொள்முதலுக்குப் போதுமானதாக இல்லை. ஆகவே, சீனாவிடம் இருந்து கடனாளி யாகவே தேயிலையைப் பெற்றுக்கொள்ள நேர்ந்தது.
இதை ஈடுசெய்யும் விதமாக இந்தியாவில் விளைந்த, போதைப் பொருளான அபினியை சட்டவிரோத முறையில் சீனாவுக்கு அனுப்பத் தொடங்கியது கிழக்கிந்தியக் கம்பெனி. இந்த போதைப் பொருள் வணிகத்தில் கொள்ளை லாபம் கிடைத்ததால், அபினி வணிகத்தை முதன்மையாக்கியது பிரிட்டிஷ் கம்பெனி. துருக்கி மற்றும் அரேபிய வணிகர்களின் மூலம் 6 அல்லது 7-ம் நூற்றாண்டில்தான் சீனாவுக்கு அபினி அறிமுகமானது. அது, வலி நிவாரணியாகவே ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், 17-ம் நூற்றாண்டில் புகைப்பிடிக்கும் பழக்கம் சீனர்களிடம் மேலோங்கத் தொடங்கவே, போதைக்காக அபினியைப் புகைக்கும் பழக்கம் தலைதூக்க ஆரம்பித்தது.
போதை தரும் அபினியை உட்கொண்ட காரணத்தால், சீனாவில் போதை அடிமைகள் அதிகரித்தனர். குற்றச் சம்பவங்கள் அதிகரித்தன. இந்த அவலம்பற்றி எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல், அபினியை டன் டன்னாக சீனாவுக்கு அனுப்பி பணத்தைக் குவித்தது கிழக்கிந்தியக் கம்பெனி. இவ்வளவுக்கும், அபினி இறக்குமதி பிரிட்டனில் தடைசெய்யப்பட்டு இருந்தது. இங்கிலாந்தில், அபினியை போதைப் பொருள் எனத் தடை செய்துவிட்டு, இன்னொரு தேசத்தில் கப்பல் கப்பலாக அபினியை விற்றதுதான் கிழக்கிந்தியக் கம்பெனியின் சாதனை! இப்படிக் கிடைத்த பணத்தில் இந்தியப் பருத்தியை வாங்கி கனரக இயந்திரங்களுடன் புதிய நூற்பாலைகளைத் தொடங்கியது கிழக்கிந்தியக் கம்பெனி.
பம்பாய் துணி ஆலைகள் பெருமளவு, அபினி விற்பனையில் கிடைத்த உபரிப் பணத்தில் தொடங்கப்பட்டதே என்கிறார், இதைப்பற்றி ஆய்வு செய்த ஆர்.எஸ்.கேல்கர். இதுபற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் சிவனடி, தனது இந்திய சரித்திரக் களஞ்சியம் என்ற புத்தகத்தில், 'ஜீஜீபாய் என்ற பார்சிக்காரர், சீனத்துடன் நடத்திய அபினி வணிகத்தில் பெரும் லாபம் சம்பாதித்தார். அதற்கு உறுதுணையாக இருந்த பிரிட்டிஷ்காரர்களை சந்தோஷப்படுத்துவதற்காக, 1857-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பம்பாய் ஓவியப் பள்ளிக்கு மிகப் பெரிய தொகை நன்கொடை வழங்கினார். அபினிப் பணம்தான் இந்தியாவில் ஓவியக் கலை வளருவதற்கும் காரணமாக இருந்தது’ என்கிறார்.
18-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய வணிகர்கள், சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் ஓடும் பியர்ல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள காண்டோன் துறைமுகத்தில் மட்டுமே வணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்காக, 13 பண்டக சாலைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இந்த வளாகத்துக்குள் மட்டுமே அவர்கள் தங்கள் வணிகத்தை நடத்த முடியும். அதுவும், கோடைக் காலத்தில் மட்டுமே வணிகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
வணிகம் செய்யவந்த ஐரோப்பிய வணிகர்கள், சீன மொழி கற்பதற்கு அனுமதி கிடையாது. பொழுதுபோக்குவதற்குக்கூட துறைமுகத்தைத் தாண்டி, நாட்டுக்குள் செல்ல முடியாது. இவ்வளவு கட்டுப்பாடுகளுக்குள்தான் சீனாவில் ஐரோப்பிய கம்பெனிகளின் வணிகம் நடைபெற்று வந்தது. அபினி கடத்துவது என்று முடிவு செய்தவுடன் கிழக்கிந்தியக் கம்பெனி ஓர் பெரிய திட்டத்தை உருவாக்கியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விளைவிக்கப்பட்ட அபினியை, மொத்தமாக விலைக்கு வாங்கி வந்து பக்குவப்படுத்தி கல்கத்தாவில் ஏலம்விட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி, சீனாவில் நேரடியாக அபினி விற்பது தடைசெய்யப்பட்டு இருப்பதால், ஒரு மாற்று வழியை உருவாக்கியது. அதன்படி, கம்பெனியின் உயர் அதிகாரிகளும், ஆங்கிலேய விசுவாசிகளாக செயல்பட்ட தனியாரும் அபினியை விலைக்கு வாங்கி தங்களுக்கான கப்பலில் ஏற்றி லிண்டின், ஹாங்காங் போன்ற இடங்களுக்கு அனுப்பிவைப்பார்கள். இதனால், சீன அரசு பிரிட்டிஷ் கம்பெனியைக் கேள்வி கேட்கவே முடியாது.


ப்படிக் கப்பலில் கொண்டுசெல்லும் அபினிக்குப் பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய கூலிப் படைகள் உடன் சென்று இருக்கின்றனர். இந்தக் கள்ள வணிகத்தில் சீனாவின் உயர் அலுவலர்களாக இருந்த மாண்ட்ரின்களுக்கும் தொடர்பு உண்டு. 1780-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 15 டன் அபினி, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதுவே, 1813-ம் ஆண்டில் 75 டன்னாக உயர்ந்தது. இந்தக் காலகட்டத்துக்குள் 93 கப்பல்கள் அபினி ஏற்றிச் சென்றுள்ளன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் காமன் சபையின் 1782 ஜுலை 7-ம் தேதியிட்ட பதிவில், சீன அரசு அலுவலர்களுக்குக் கையூட்டு கொடுத்துத்தான் அபினி விற்பனை நடைபெற்றது என்பதற்காக சான்று இருக்கிறது. அபினி விற்பனையில் 1830-ம் ஆண்டு மட்டும் 34 மில்லியன் டாலர்கள் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கிடைத்து இருக்கிறது. ஆண்டுக்கு 900 டன் அபினி சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது.
அபினி கடத்தலுக்கு உதவி செய்ய துப்பாக்கி ஏந்திய கூலிப் படைகள் பல்வேறு குழுக்களாக உருவாக்கப்பட்டன. இதுதான், ஆசிய நாடுகளில் இன்று புகழ்பெற்றுள்ள மாஃபியா என்ற தொழில்முறைக் கடத்தல்காரர்கள் உருவானதின் முதல் புள்ளி.
அப்போது, சீனாவில் குவிங் வம்சப் பேரரசு ஆட்சி செய்துவந்தது. பிரிட்டிஷ்காரர்களின் அபினி வணிகத்தால் சீனாவுக்குள் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்நாட்டுக் குழப்பம் ஏற்படுகி றது என்று உணர்ந்த குவிங் பேரரசு, அபினி இறக்குமதிக்குத் தடை விதித்தது. ஆனாலும், பிரிட்டிஷ் கம்பெனியின் அபினி வணிகத்தை அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1810-ம் ஆண்டில் சீனப் பேரரசு கடுமையான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், 'அபினி ஓர் மோசமான போதைப் பொருள். அதை ஐரோப்பியப் பேய்கள் நம் நாட்டில் விற்பனை செய்கின்றனர். அபினி பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். அபினி நுழைகிற குவான்டுங் மற்றும் பூக்கீன் பகுதிகளைப் பொறுத்தவரை, அங்குள்ள, சுங்க அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முறையான தேடுதல் வேட்டை நடத்தி அபினியை முற்றிலும் தடுக்குமாறு உத்தரவு இடப்படுகிறது’ என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவால், பிரிட்டிஷ் கம்பெனியின் அபினி வணிகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம், சீன அரசாங்கத்தின் தலைமை பெய்ஜிங்கில் இருந்தது. கடத்தல் நடக்கும் துறைமுகங்களை அவர்களால் நேரடியாகக் கண்காணிக்க முடியவில்லை. மேலும், பணத்தாசை காரணமாக சீன அதிகாரிகள் பலரும் கடத்தலுக்கு துணை நின்றனர். அப்போது, குவண்டோன் பகுதியின் சிறப்பு ஆளுனராக லின் சே சூ என்பவர் பொறுப்பு ஏற்றார். இவர், சீனாவுக்குள் சட்ட விரோதமாக நடந்த போதைப் பொருள் இறக்குமதியை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுத்தார். அத்துடன், சீனாவுக்குள் பிரிட்டிஷ் கம்பெனி அபினி இறக்குமதி செய்வதை உடனே நிறுத்தும்படி விக்டோரியா மகாராணிக்கும் கடிதம் எழுதினார். ஆனால், அந்தக் கடிதம் மகாராணி கைக்கு சென்று சேரவே இல்லை.
கடத்தல் விவகாரத்தில் சீன அரசின் உத்தரவுகள், விதிமுறைகள் எதையும் பிரிட்டன் கண்டுகொள்ளவே இல்லை. இதனால், லின் சே சூ ஆத்திரம் அடைந்தார். இவர் முன்னதாக, ஹுனான் பகுதியின் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றியவர். தேர்ந்த அறிவாளி மற்றும் தைரியசாலி. ஆகவே, சீனாவின் தெற்குக் கடல் பகுதி முழுவதும் அபினி கடத்தல்காரர்கள் வசமாவதை ஒடுக்குவதற்கு கமிஷனர் லின் கடும் நடவடிக்கையைத் தொடங்கினார். துறைமுகப் பகுதியில் எங்கெல்லாம் அபினி பதுக்கிவைக்கப்பட்டு இருக்கிறதோ, அங்கெல்லாம் தேடிச் சென்று அவற்றை அழிக்கத் தொடங்கினார்.
இந்த அதிரடி நடவடிக்கையில் 1,700 கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டனர். 70,000 ஓபியக் குடுவைகள் அழிக்கப்பட்டன. 23 நாட்களில் 500 அரசாங்க வீரர்கள் ஒன்று சேர்ந்து 1.2 மில்லியன் கிலோ அபினியை அழித்தனர். கடத்தல்காரர்கள் பொது இடத்தில் தூக்கில் போடப்பட்டனர். காவல் படகுகள் துறைமுகத்தில் இரவு பகலாக ரோந்து சென்று கண்காணித்தன. இந்தக் கெடுபிடி, பிரிட்டிஷின் அபினி வணிகத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால், கிழக்கிந்தியக் கம்பெனி 6 போர்க் கப்பல்களையும் 7,000 பேர்கொண்ட படைகளையும்கொண்டு, 1839-ல் சீனாவைத் தாக்கத் தொடங்கியது. அந்தப் போர், 'அபினி யுத்தம்’ என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. உலக அளவில் போதைப் பொருள் வணிகத்துக்காக நடந்த முதல் போர் இதுவே!
இரண்டு ஆண்டுகள் நடந்த இந்தப் போரின் முடிவு, பிரிட்டிஷ§க்குச் சாதகமாக அமைந்தது. பிரிட்டிஷ் படைகள், ஹாங்காங் தீவுகளைக் கைப் பற்றின. இதன் விளைவாக, ஒரு தலைப்பட்சமாக தயாரிக்கப்பட்ட நான்கிங் என்ற ஒப்பந்தத்தில் சீனா கையெ ழுத்துப் போட்டு ஹாங்காங்கை பிரிட்டனின் காலனி நாடாக விட்டுக் கொடுத்தது. கூடவே, ஆண்டுக்கு 15 மில்லியன் வெள்ளிப் பணமும் கப்பமாக செலுத்த ஒப்புக்கொண்டது. அதன் மூலம், விரிவான அபினி சந்தை ஒன்றை பிரிட்டிஷ் கம்பெனி ஆசிய நாடுகளில் உருவாக்கியது.
அதே நேரம், இந்திய சமஸ்தானங்கள் பலர் தாமே நேரடியாக அபினி வணிகத்தில் ஈடுபட முயற்சிப்பதை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு அதை ஒடுக்க லைசென்ஸ் முறையை அறிமுகம் செய்தது. அதன்படி, உரிமை பெற்றவர்கள் மட்டுமே அபினி விளைவிக்க முடியும், அத்துடன், அபினி விவசாயிகள் அதை வேறு யாரிடமும் விற்க முடியாதபடி தந்திரமும் மேற்கொண்டது.
ஒரு பக்கம் சீனாவுக்குள் போதைப் பொருளைக் கடத்தி தனது வருவாயைப் பெருக்கிக்கொண்டது என்றால், மறு பக்கம் தனது காலனிய ஆட்சியில் இருந்த இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தேயிலையை அறிமுகம் செய்து தங்களுக்கான தேயிலைத் தேவையை தாங்களே உற்பத்திசெய்துகொண்டது கிழக்கிந்திய கம்பெனி. இந்த தேயிலைத் தோட்டப் பணிக்காக கொத்தடிமைகளாக பல ஆயிரம் பேர் வேலைக்கு சென்று குளிர் தாங்காமலும், நோய் ஏற்பட்டும் செத்து மடிந்தது தனிக் கதை.
இந்திய ஆங்கில எழுத்தாளரான அமிதாவ் கோஷ் 'ஸீ ஆஃப் பாப்பிஸ்’ என்ற தனது நாவலில், அபினி வணிகத்தின் வரலாற்றை விரிவாக எழுதி இருக்கிறார். இதற்காக விரிவான ஆய்வுகள் மேற்கொண்ட அமிதாவ் கோஷ், வங்காளத்தின் காஸிப்பூரில் இன்றும் இயங்கிவரும் ஓபியம் தொழிற்சாலையைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். 'பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தே அபினி வணிகத்தின் மையமாக இருக்கிறது காஸிப்பூர். இங்கேதான், அபினி உற்பத்தி ஒருமுகப்படுத்தப்பட்டது. 32 மாவட்டங்களில் விளைந்த அபினி இங்கே கொண்டு வரப்பட்டுப் பதப்படுத்தப்பட்டது. ஓபியம் ஏஜென்ட் என்று அழைக்கப்படும் ஓர் உயர் அதிகாரி இந்த அபினி விற்பனையை நடத்திவந்தார். காஸிப்பூரில் உள்ள குரங்குகள்கூட அபினி சாற்றைக் குடித்து போதையில் அலைகின்றன. அந்த அளவுக்கு அந்த ஊர் அபினி தொழிலில் கொழிக்கிறது. இன்றும் காஸிப்பூரில் ஓபியம் தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. அங்கே எடுக்கப்படும் ஓபியம் உலகெங்கும் விற்பனை ஆகிறது. 1800-களில் மத்திய இந்தியாவில் இருந்த பல சமஸ்தானங்கள் தங்களின் வருமானத்துக்கு அபினி உற்பத்தியைத்தான் பெரிதும் சார்ந்து இருந்தன. மால்வாவின் முக்கிய வருமானம் அபினியே. இந்தியாவில் 6,42,831 ஏக்கர் நிலத்தில் அபினி பயிரிடப்பட்டு இருக்கிறது. இந்த உற்பத்தி 1920-களில் 1,63,125 ஏக்கராகக் குறைந்தது. அதுவரை, இந்தியாவின் முக்கிய வணிகப் பயிராகவே அபினி கருதப்பட்டது’ என்கிறார் அமிதாவ் கோஷ்.
சீனாவுக்குப் போதை மருந்து கடத்துவது மன்னிக்க முடியாத குற்றம் என்ற எதிர்ப்புக் குரல்கள், 1890-களில் இங்கிலாந்தில் எழுந்தன. இதையடுத்து, அபினி உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பாக ஆய்வு நடத்த 9 பேர்கொண்ட ராயல் கமிஷனை நியமித்தார் விக்டோரியா ராணி. இந்தக் கமிஷன், தனது அறிக்கையை 1895-ம் ஆண்டு வெளியிட்டது. அதில், 'இந்தியர்கள் அபினியை காலம் காலமாகவே மருத்துவ ரீதியாகப் பயன்படுத்திவருகின்றனர். ஆகவே, அதை விற்பது தவறு அல்ல. சீனாவுக்கு, அபினி விற்பனை செய்ததைப் பற்றிய குற்றச்சாட்டுகள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை. கம்பெனி நேரடியாக சீனாவில் அபினி விற்கவில்லை’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
1916 மற்றும் 17-ம் ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு துறைகள் சார்ந்த ஆண்டு வருமானம் 11,87,99968 ஸ்டெர்லிங் பவுண்ட். இதில், அபினி விற்பனையில் மட்டும் கிடைத்த தொகை 31,60,005 ஸ்டெர்லிங் பவுண்ட். அந்த அளவுக்குப் பணம் காய்க்கும் செடியாக அபினி இருந்தது. அது போலவே, அபினி புகைக்கும் பழக்கம் உருவான காரணத்தால், நாடெங்கும் ஓபியம் பார்கள் ஏற்பட்டன. அபினி போதைக்கு அடிமை ஆன வர்கள், அபின் வாங்குவதற்காக மனைவி, குழந்தை களைக்கூட விற்கத் தயாராகினர். தெற்கு சீனாவில் ஒருவன், தனது பிறந்த குழந்தையை ஐந்து கிராம் அபினிக்கு விற்ற கொடூரம் நடந்தது. அபினி பழக்கத்தால் சீனாவின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. சீனாவில் மட்டும் அல்லாமல் ஜப்பான், ஜாவா, சியாம் போன்ற இடங்களிலும் கிழக்கிந்தியக் கம்பெனி அபினி வணிகம் செய்தது.
கிழக்கிந்தியக் கம்பெனியின் அபினி வணிகத்துக்குத் துணைபோனவர்களில் முக்கியமானவர் டேவிட் சசூன். யூதரான இவர் மும்பையில் வசித்தார். பாக்தாத்தில் பெரிய வணிகக் குடும்பத்தில் பிறந்தவர் சசூன். இவரது அப்பா 1829-ம் ஆண்டு வணிகத்தில் பணமோசடி செய்த காரணத்தால், சசூனின் குடும்பம் பாக்தாத்தில் இருந்து வெளியேறி மும்பை வந்தது. மும்பையில், பருத்தி வாங்கி விற்கும் வணிகத்தைத் தொடங்கினார் சசூன். நான்கிங் ஒப்பந்தத்துக்குப் பிறகு, பிரிட்டன் சுதந்திரமாக அபினி விற்பனையை செய்யத் தொடங்கியபோது, டேவிட் சசூன் அபினி விற்பனை செய்ய ஆரம்பித்து, அபினி சக்கரவர்த்தி என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்தார்.
ஹாங்காங் நகரின் மொத்த அபினி விற்பனையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இதற்காக, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு தாராளமாகப் பணத்தை வாரி வழங்கினார் டேவிட் சசூன். போதைப் பொருள் விற்பனையில் சம்பாதித்த பணத்தைக்கொண்டு எண்ணெய் தொழிற்சாலைகளும், துணி ஆலைகளும் தொடங்கினார். கொழுத்த லாபத்துடன் லண்டன் சென்று வசிக்கத் தொடங்கி, பிரிட்டிஷ் அரசின் விசுவாசத்துக்கு உரிய பணியாள் என்ற விருதையும் பெற்றார் டேவிட் சசூன். இவருக்குப் பிறகு இவரது பிள்ளைகள் ஹாங்காங்கின் அபினி வணிகத்தைக் கவனித்தனர். இன்று, இங்கிலாந்தின் முக்கியத் தொழில் அதிபர்களாக டேவிட் சசூனின் குடும்பம் இருக்கிறது.
பிரிட்டிஷின் போதை வணிகம், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மட்டும் அல்லாது இதுபோல அதன் துதிபாடிகளுக்கும் கொள்ளை லாபம் சம்பாதிக்க கதவைத் திறந்துவிட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ இந்தியாதான். உலகின் பார்வையில், இந்தியாவை ஒரு அபினிக் கிடங்குபோல மாற்றியது பிரிட்டிஷ் காலனியத்தின் வெட்கமற்ற செயல். சுயலாபத்துக்காக கிழக்கிந்தியக் கம்பெனி மேற்கொண்ட போதைப் பொருள் கடத்தல் இன்று சர்வதேசக் குற்றமாக வளர்ந்து நிற்கிறது. இன்றைய இந்தியாவின் மிக முக்கியப் பிரச்னை போதைப் பொருள் கடத்தல். குறிப்பாக மணிப்பூர், நாகாலாந்து, அஸ்ஸாம், மிசோரம் போன்ற மாநிலங்களில் போதைப் பொருள் கடத்துவது ஒரு குடிசைத் தொழில்போல நடக்கிறது. பள்ளி மாணவர்கள்கூட போதை மருந்து பழக்கத்துக்கு அடிமை ஆகியிருக்கின்றனர்.
போதை என்பது கண்ணுக்குத் தெரியாத ஆயுதம். அதைவைத்து எந்த நாட்டையும் எளிதாக வீழ்த்திவிடலாம் என்ற பிரிட்டனின் தந்திரம் இன்று அதற்கே சவால் விடுவதாகவும் மாறியிருக்கிறது.
சீனர்களைக்கொண்டு தங்களது தேசத்தின் ரயில் பாதை, சாலை மற்றும் பாலங்களை அமைத்துக் கொண்ட அமெரிக்கா இன்று, சீனர்கள் வழியாகத்தான் போதைப் பழக்கமும் அதிகரித்து வருகிறது என்று கூக்குரலிடுகிறது. தனது வரலாற்றைத் தானே மறந்து அதற்கு இங்கிலாந்தும் ஒத்து ஊதுகிறது. அதுதான் காலத்தின் கொடுமை.

No comments: