Tuesday, February 05, 2013

Madurai - Few info

சென்னைக்கு வயது 400-தான். மதுரையின் வயதோ 4,000-க்கும் அதிகம். தங்கள் நகரின் உண்மையான பெருமையை உணர்வதற்கும், பிறருக்கு உணர்த்துவதற்கும் 'மாமதுரை போற்றுவோம்’ என்ற விழாவை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார்கள் மதுரை மண்ணின் மைந்தர்கள்.
மதுரை கலெக்டரான அன்சுல் மிஸ்ரா, ''வெறும் ஆயிரம் வருட வரலாற்றைக் கொண்ட நகரங்களுக்கு எல்லாம், 'மும்பை டே’, 'ஹைதராபாத் டே’ என்று விழா கொண்டாடு​கிறார்கள். ஆனால், வருஷத்தில் 293 நாட்கள் விழா நடக்கும் திருவிழா நகரான மதுரையில், இந்த நகரத்துக்கு என்று ஒரு விழா இல்லை. அந்தக் குறை இனி நீங்கப்போகிறது. இனி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 'மாமதுரை போற்றுவோம்' என்ற பெயரில் விழா கொண்டாட இருக்கிறார்கள். அந்த நாளில், பூமிப்பந்தில் எங்கு குடி இருந்தாலும் ஆண்டுதோறும் இந்த விழாவுக்கு மதுரை தன் மைந்தர்களை அழைத்துக்கொள்ளும்'' என்றார்.
''பிப்ரவரி 8, 9, 10 என்று மூன்று நாட்கள் நடக்கிறது விழா. மதுரையில் கண்டுபிடிக்கப்​பட்ட கல்வெட்டுக்களிலேயே மிகப்பழைமை​யானது அழகர்கோயில் அருகே ஒரு பாறையில் உள்ள எழுத்துக்கள்தான். 'மத்திரை’ என்று 2,400 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்தக் கல்வெட்டுதான், மதுரை என்று எழுதப்பட்ட முதல் எழுத்து. அங்கு இருந்து மதுரை தீபத்தை தொடர் ஓட்டமாகக் கொண்டு​வந்ததும், மதுரை விழா ஆரம்பம் ஆகிறது.
முதல் நாள், 'மதுரையைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் மதுரையைப்​பற்றிய கண்காட்சி நடக் கிறது. அந்தக் கண்காட்சியில் தற்கால மதுரை, 100 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை, 500 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை, 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை, 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை எல்லாம் எப்படி இருந்தது என்று காட்டும் வகையில் தனித்தனியே முழு நகரத்தையும் முப்பரிமாணத் தோற்றத்தில் காட்சிப்படுத்த உள்ளனர்.


இரண்டாம் நாளில், 'தொன்மைப் போற்று​வோம்’ என்ற தலைப்பில் விழா நடக்கிறது. அதையட்டி மதுரை நகர் முழுவதும் அலங்கார வாகன அணிவகுப்பு நடக்கிறது. நிறைவு நாளில், 'வைகையைப் போற்றுவோம்’ என்ற பெயரில் வைகை ஆற்றுக்குள் கண்காட்சி நடக்கிறது. அதில் வைகை உற்பத்தியாகும் இடத்தில் இருந்து மதுரையைக் கடந்து செல்வது வரை முப்பரிமாணத் தோற்றத்தில் காட்சிக்கு வைக்க உள்ளனர். அதைப்போலவே வைகையில் எடுக்கப்பட்ட அரிதான புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

அன்றைய தினம் வைகையைச் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியும், ஆற்றின் இரு கரைகளிலும் பொதுமக்கள் தீபம் ஏந்தும் நிகழ்வும் நடக்க இருக்கிறது. இதற்கெல்லாம் முன்னோட்டமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 1-ம் தேதி, 'மதுரைக்காகத்தான்’ என்ற தலைப்பில் மராத்தான் ஓட்டமும் நடக்கிறது. விழாவில் மதுரை மக்கள் கலந்துகொள்ள வசதியாக 'லோக்கல் ஹாலிடே’ விடவும் ஏற்பாடுகள் நடக்கின்றன'' என்கிறார்கள் விழா கமிட்டியினர்.

மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன், நாவலாசிரியர் சு.வெங்கடேசன், கே.எஸ்.பரத் ஆகிய மூவரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.


'காவல் கோட்டம்’ நாவலாசிரியர் வெங்கடேசனிடம் பேசினோம். ''நகரங்களில் அதிசயங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு நகரமே அதிசயமாக இருப்பது மதுரைதான். மதுரையில் உள்ள எந்த ஒரு வீதியும் 2,500 வருட வரலாறு கொண்ட வீதியாகத்தான் இருக்கிறது. அந்த வீதிகளுக்கு எல்லாம் வரலாற்றுக் காரணப் பெயரும் இருக்கிறது. பாண்டியன் அகழ் தெரு என்றொரு தெரு இருக்கிறது. அதன் வரலாறு என்ன தெரியுமா? பாண்டியர்களின் கோட்டையைச் சுற்றி அகழி இருந்திருக்​கிறது. நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கோட்டைக்கு வெளியிலும் மதுரையை விரிவுபடுத்தினர். அப்போது அந்த அகழி மூடப்பட்டது. பிறகு, அதுவே ஒரு தெருவாகி விட்டது. அதுதான் பாண்டி​யன் அகழ் தெரு. 'மதுரை விழா’ பழங்கதை பேசுவதற்கோ, தற்பெருமை அடித்துக் கொள்வதற்கோ அல்ல.

மதுரையின் காவிய முகத்தை வெளிக் கொண்டு வருகிற, மற்றவர்களுக்குக் காட்டுகிற ஒரு முயற்சி. நாளைக்கேகூட ஒரு நகரம் முன்னேறிவிடலாம். ஆனால், இவ்வளவு பழைமையான, பாரம்பரியமான விஷயம் வேறு எந்த நகருக்கும் வாய்க்காது.

 'இது தமிழ்நாட்டின் கலாசாரத் தலைநகர் என்பதை மதுரைக்காரர்களும், அவர்களுடைய வீட்டுப் பெண்களும், குழந்தைகளும், இளைஞர்களும் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். பிறகு, மதுரையின் பெருமையை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்​டும்' என்பதுதான் இந்த விழாவின் நோக்கம்'' என்றார்.


யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதுபோல, விழாவுக்காக மதுரை விளக்குத்தூண், மேலவாசல் கோட்டை, பழங்காநத்தம் ரவுண்டாரா பகுதியில் வைக்கப்பட்டுள்ள முப்பரிமாண காட்சிகள் இருக்கின்றன. விழாவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் மதுரை மக்கள்

No comments: