Sunday, February 24, 2013

My India...Different Punishments...

உலகிலேயே அதிக நீதி சாஸ்திரங்கள் உள்ள நாடு இந்தியா. ஆனால், இவை எழுத்து வடிவமாக மட்டுமே எஞ்சி இருக்கிறதே அன்றி, அவற்றை நடைமுறைப்படுத்துவது எளிதாக இல்லை. இன்றும் நீதியின் முன்னால் யாரோ ஓர் அப்பாவி மனிதனின் கரங்கள் கட்டப்பட்டு வாய் மூடி தனக்கான நியாயம் கிடைக்கக் கூடும் என்று காத்துக்கொண்டே இருக்கிறான். உலக வரலாற்றின் பக்கங்களில் நியாயம் கிடைக்காமல் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை அதிகம். ஏதென்ஸ் நகரில் இளைஞர்களிடம் மோசமான சிந்தனைகளைப் பரப்பியதாக பொய்க் குற்றம் சாட்டப்​பட்ட சாக்ரடீஸ், விஷம் கொடுத்துக் கொல்லப்​பட்டார். ஐரோப்பாவில் சூனியக்காரிகள் என்று மத சபையால் குற்றம் சாட்டப்பட்டு, அப்பாவி​யான கிராம மருத்துவச்சிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
அறிவியல் கருத்துகளைப் பரப்புகின்றனர் என்று விஞ்ஞானிகள் பலருக்குக் குரூர தண்டனைகள் வழங்கப்​​பட்டு இருக்கின்றன. இதன் உச்சகட்டமாக அறிவியல் அறிஞர் புருனோ உயிரோடு தீவைத்து எரிக்கப்​பட்டார். எகிப்து, லிபியா, அரேபியா போல​வே, இந்தியா​விலும் சிங்கத்துக்கும் முதலைக்கும் மனிதர்​களை பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. வலி இல்லாத மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என, பிரெஞ்சு மன்னன் 16-ம் லூயி, கில்லட்​டின் என்ற தலைவெட்டும் கருவியை அறிமுகப்படுத்தினார். பொதுமக்கள் முன்னிலையில், தலை துண்டிக்கும் தண்டனை பலருக்கும் நிறைவேற்றப்பட்டன. பின்னொரு நாள், அதே கில்லட்டின் கருவி லூயி மன்னனின் தலையையும் வெட்டியது.
இந்திய சமூகத்திலும் இப்படிப்பட்ட கொடூரத் தண்டனை முறைகள் இருந்திருக்கின்றன. குறிப்பாக, கழுவில் ஏற்றுதல் என்னும் கொடிய வழக்கம் பண்டைய காலத்தில் இருந்தது. கழு மரம் என்பது ஒரு கொலைக் கருவி. கூர்மையாகச் சீவப்பட்ட கழு முனையில் எண்ணெய் தடவி, குற்றவாளியை நிர்வாணமாக்கி, அவன் கால்களை நெஞ்சோடு சேர்த்து மடக்கி குண்டுக்கட்டாகத் தூக்கி ஆசனவாயை கழு முனையில் வைத்து அப்படியே செருகிவிடுவார்கள். உடலின் எடையாலும், கழுவின் கூர்மையாலும், எண்ணெய்யின் வழுக்கலாலும் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக மேலே துளைத்துக்கொண்டு ஏறும். மரம் கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் ஏறி, வலி தாங்காமல் கூப்பாடுபோட்டு செத்துப்போவான். இறந்த உடலை பறவைகள் கொத்திக்கொத்தி உண்ணும்.
டிராகுலா என்று நாம் அழைக்கும் டிரான்சில்வேனி​யா மன்னர் விலாட், அதிகார வெறியில் மூன்று லட்சம் பேரைக் கழுவேற்றியதாகக் கூறுகிறார்கள். அதனால்தான் அவனை ரத்தம் குடிக்கும் காட்டேரி என்று மக்கள் அழைத்தனர். அதுபோலவே, பெண்களின் மார்பை அறுக்கும் தண்டனைக் கருவி ரோமில் பிரபலமாக இருந்தது. இந்தக் கருவி பெண் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்டது. மத நிந்தனை, விபசாரம், ராஜ துரோகம், அரசியல் சூழ்ச்சி போன்ற குற்றங்களில் ஈடுபடும் பெண்களைத் தண்டிப்பதற்கு இந்தக் கருவி பயன்பட்டது. இந்தக் கருவியை சுவரில் நிலையாக மாட்டி இருப்பார்கள். பெண்ணை நிர்வாணமாக்கி அவரின் மார்பை இந்தக் கருவியில் பொருத்துவார்கள். அதன் கூர்மையான முனை மார்பினுள் ஆழமாகச் சென்றதும் ரத்தம் பீறிடும். வலி தாங்காமல் அந்தப் பெண் அலறுவாள். உடனே, அவள் உடலை கருவியைவிட்டு பலவந்தமாக இழுப்பார்கள். அவளது மார்பு துண்டாகிக் கிழிந்துவிடும். இந்தத் தண்டனையைப் பற்றி எழுத்தில் படிக்கும்போதே மனம் பதைபதைக்கிறது. ஆனால், இதை பல நூறு வருடங்களாக பெண்கள் அனுபவித்து இருக்கின்றனர். சித்ரவதை செய்வதுதான் தண்டனையின் முதல் படி. எப்படி எல்லாம் மனிதர்களை விதவிதமாக சித்ரவதை செய்வது என்பதில் ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு விதம். சித்ரவதைக்காக விதவித​மான தண்டனைக் கருவிகள். அந்தக் கருவிகள் காலஓட்டத்தில் வலுப்பெற்று, அழிக்க முடியாத ஆயுதங்களாக நிலைபெற்று விட்டன. 5-ம் நூற்றாண்டில் இருந்து 16-ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியே கொலைக் கருவிகள் அதிகம் உருவான காலம். ஐரோப்பாவில்தான் அதிகமான கொடுந்தண்டனைகள் கொடுக்கப்பட்டன.
இன்றைய இந்தியாவில் இப்படிப்பட்ட குரூரத் தண்டனைகள் கிடையாது. ஆனால், குற்றங்கள் பெருகிக்கொண்டேதான் இருக்கின்றன. நமது காலத்தில் குற்றம் ஒரு தொழிலாகிவிட்டது. குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்படுவதோடு, பொது இடங்களில் கௌரவிக்கப்படுவதும், பதவிகள் அடைவதும் வருத்தப்பட வேண்டிய விஷயம். கடந்த காலங்களில் இந்தியா இப்படித்தான் இருந்ததா என்ற கேள்வி சாமான்யன் மனதில் எழுகிறது. கசையடி, சூடு போடுதல், யானைக் காலால் மிதித்துக் கொல்வது, மாறுகால் மாறுகை வாங்குதல், கழுமரம் ஏற்றுவது, கண்களைப் பறித்து பறவைகளுக்கு இரையாகப் போடுவது, கல்லால் அடித்துக் கொல்வது, சுண்ணாம்புக் காளவாசலில் போடுதல் போன்ற குரூரத் தண்டனைகள் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டன.
ஆனால், இந்தத் தண்டனைகளை யார் உருவாக்​கினர்? எதற்காக இந்தத் தண்டனைகள் வழங்கப்பட்டன? இவற்றை அறிமுகப்படுத்தியது யார்? இந்தத் தண்டனை முறைகளை எங்கிருந்து கற்றுக்கொண்டனர் என்ற வரலாற்றை அறியும்போது வியப்பான தகவல்கள் கிடைக்கின்றன. தண்ட​னைக் கருவிகளும், தண்டனை முறைகளும் நாடு​விட்டு நாடு பரவிக்கொண்டே இருக்கின்றன. துருக்கியர்களிடம் இருந்து சாட்டையால் அடிக்கும் கசையடி முறையையும், சீனர்களிடம் இருந்து மாறுகால் மாறுகை வாங்கும் தண்டனையையும், பெர்ஷியாவில் இருந்து கெண்டைக்காலில் தடியால் அடிப்பதையும், மூங்கிலை கை, கால்களுக்குள் கொடுத்துக்கட்டி அடிப்பதை ஜப்பான் நாட்டில் இருந்தும், உள்ளங்கையில் பிரம்பால் அடிப்பதை பிரிட்டனிடம் இருந்தும், பல்லைப் பிடுங்கி எடுப்பதை மங்கோலியரிடம் இருந்தும் இந்தியா கற்றுக்கொண்டு இருக்கிறது என, 'பண்டைய இந்தியாவில் குற்றமும் தண்டனையும்’ என்ற புத்தகத்தில் வி.கே.கானே கூறுகிறார்.
சமாதானத்தைப் பரப்புவதற்குத்தான் பெரும் முயற்சிகள் எடுக்கவேண்டி இருக்கிறது. தண்டனைகள் தானே பரவிவிடக் கூடியவை. அறியாமையாலும் ஒழுங்கின்மையாலும் விளையும் கேடுதான் குற்றங்கள் என்கிறது அர்த்த சாஸ்திரம். சூதாடுதல், மதுப் பழக்கத்துக்கு அடிமையாதல், பெண் மோகம், வேட்டையாடுதல் ஆகியவை குற்றத்துக்கான முக்கியக் காரணிகள் என்று வரையறுக்கிறார் சாணக்​கியர். அர்த்த சாஸ்திரம் பண்டைய இந்தியாவின் நீதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துச் சொல்கிறது. ஆனால், அவற்றில் தண்டனை முறைகள் சாதிக்குச் சாதி வேறுபடுவது கவனிக்கத்தக்க ஒன்று. ச.சுவாமிநாதன் எழுதியுள்ள, 'பழந்தமிழர்களின் வினோதத் தண்டனைகள்’ என்ற கட்டுரை, தமிழகத்தில் நிலவிய பல்வேறு தண்டனை முறைகள் குறித்துக் கூறுகிறது. குறிப்பாக, அரசன் போரில் வெற்றி பெற்றால் தோல்வி அடைந்த மன்னர்களின் நாட்டைத் தீக்கிரையாக்குவது, ராணியின் கூந்தலை அறுத்துக் கயிறாகத் திரிப்பது, தோல்வி அடைந்த மன்னர்களின் மகுடங்களை உருக்கித் தனது காலடியில் பலகையாகப் போட்டுக்கொள்வது, தோற்ற மன்னரின் அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கி, அந்த இடத்தில் கழுதையைப் பூட்டி ஏர் உழுவது, எதிராளியின் தலையை மொட்டை அடித்து நெய்யை ஊற்றி அவமதிப்பது, பெண்ணைத் திருமணம் செய்யவில்லை என்று பொய் சொன்னவனை மரத்தில் கட்டிவைத்து அவன் உடலில் சாம்பலைப் பூசி சவுக்கால் அடிப்பது, பிடிபட்ட கைதிகள், எதிரிகளின் தலைகளை யானையின் காலால் இடறச்செய்துக் கொல்வது, தவறான செய்தி அளித்த ஒற்றர்களைக் கொலைசெய்வது, தேவதாசிப் பெண்களுக்கு மார்பு மற்றும் தொடையில் சூடு போடுவது என எத்தனையோ விசித்திரமான தண்டனைகளைச் சுட்டிக்காட்டுகிறது அந்தப் புத்தகம்.
அதுபோலவே, 'பண்டைய தமிழகத்தில் சட்டமும் நீதியும்’ என்ற புத்தகத்தில், தமிழகத்தில் நிலவிய சட்டமும் நீதியும் பற்றி கூறுகிறார் சி.வி.கணபதி. அதில், பழந்தமிழகத்தில் நீதி விசாரணை நடக்கும் இடம் அறக்களம் என்றே அழைக்கப்பட்டது. அரசனின் அரண்மனை முகமண்டபமே நீதிமன்றமாகச் செயல்பட்டது என்கிறார். மன்றம், மகாசபை, நியாயத்தார் சபை, எண்பேராயம், ஐம்பெருங் குழு, நாற்பெருங் குழு போன்ற மக்கள் நீதிமன்றங்கள் பழந்தமிழகத்தில் இயங்கி இருக்கின்றன. இவற்றில், மன்றம், மகாசபை, நியாயத்தார் சபை, சித்ரமேழி போன்றவை கிராம நீதிமன்றங்கள். எண்பேராயம், ஐம்பெருங் குழு, நாற்பெருங் குழு போன்றவை மேல் முறையீட்டு நீதிமன்றங்கள். பல்லவர் ஆட்சிக்காலத்தில், அதிகரணம் என்ற குற்றவியல் நீதிமன்றம் இருந்தது. இந்த நீதிமன்றம் இயங்கி வந்த இடம் 'அதிகரண மண்டபம்’. இங்கு பணிபுரிந்த நீதிபதிகள் தர்ம அதிகரணிகர், அதிகரணிகர் மற்றும் அதிகரண போஜகர் என்று அழைக்கப்பட்டனர். தலைமை நீதிபதியின் பெயர் மகாதர்ம அதிகரணிகர். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட தண்டனைகளின் வரலாற்றை ஆராய்ந்து பார்க்கையில், கடுமையான தண்டனைகள் மூலம்தான் குற்றங்களைத் தடுக்க முடியும் என்ற எண்ணம் பிரதானமாக இருந்ததை அறிய முடிகிறது.
தண்டனைகளின் வரலாறு ஆச்சர்யம் அளிக்கக்​கூடியது. கசையடித் தண்டனை அடிமைகள் சமுதாயத்​தில் துருக்கியில் பிரபலமாக இருந்த ஒன்று. அங்கிருந்து கிரேக்கத்துக்குப் போயிருக்கிறது. ரோமானியர்கள் வெளிநாட்டுப் பிரயாணிகள் தவறு செய்யும்போது அவர்களை நிர்வாணப்படுத்தி, கசையடி கொடுத்து இருக்கின்றனர். யூத சட்டப்படி ஒருவரை 40 முறை கசையால் அடிக்க வேண்டும். ஓர் அடி அதிகமாக அடித்துவிட்டால் அடித்தவர்கள் தண்டிக்கப்படுவர். எட்டாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் கசையடி தருவது சட்ட​பூர்வமாக மாற்றப்பட்டதுடன், பொது இடத்தில்தான் அந்தத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கசையடித் தண்டனை பிரான்ஸ், ரஷ்யா, ஆப்பிரிக்கா என நாடுவிட்டு நாடு பரவி ஒரு காலத்தில் மிக முக்கியத் தண்டனையாகக் கருதப்பட்டது. இந்தியாவில் இந்தத் தண்டனை முறை இப்போது நடைமுறையில் இல்லை. ஆனாலும், நில உடைமையாளர்கள் தங்களிடம் வேலை செய்யும் கூலிகளுக்கு இன்றும் கசையடி தருவதை பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். சிங்கப்பூர், புரூனே, மலேசியா போன்ற நாடுகளில் கசையடித் தண்டனை இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. யானைக் காலால் மிதித்துக் கொல்வது என்ற தண்டனை இந்தியா உட்பட பெரும்பான்மையான ஆசிய நாடுகளிலும் கொடுந்தண்டனையாக இருந்தது. இந்திய யானைகளைவிட பெரியதாக ஆப்பிரிக்க யானைகள் இருந்தபோதும், ஆப்பிரிக்காவில் யானையை வைத்துத் தண்டனை வழங்கும் முறை இல்லை. இந்தியா மற்றும் இலங்கையில் வரி ஏய்த்தவர்கள், ராஜ துரோகம் சாட்டப்பட்டவர்கள், கொள்ளை அடித்தவர்கள், கொலை செய்தவர்கள் மற்றும் பிடிபட்ட எதிரி நாட்டு வீரர்கள் ஆகியோர் யானையின் காலால் மிதிபட்டு இறந்து இருக்கின்றனர்.

No comments: