Thursday, December 31, 2015

அலிபாபாவும் ஜாக் மாவின் வெற்றிக் கதையும்!

"தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான், தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்" என்ற பழமொழியை சுக்கு நூறாக உடைத்து வெற்றி கண்டவர் தான் ஜாக் மா.
அலிபாபா இன்று உலகம் முழுவதும் வர்த்தகம் செய்துவரும் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம். இது விற்பனை செய்யாத பொருட்களே இல்லை. விற்பனை செய்யாத இடமும் இல்லை.
1999 இல் ஜாக்மா என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2.6 லட்சம் கோடி. 2015 இல் இதன் வருமானம் ரூ.24 ஆயிரம் கோடி. முழுக்க முழுக்க இன்டர்நெட்டும், தொழில்நுட்பமும் பங்கு பெறும் ஒரு தொழிலில், இவை பற்றி அனுபவமோ நிபுணத்துவமோ இல்லாத ஒருவர் எப்படி உலகளாவிய வெற்றி பெற முடிந்தது என்பது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான்.

எப்படி சாத்தியம்?

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினால் 10 முறை நிராகரிக்கப்பட்டவர், பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ஜாக் மா தொழிலதிபரானது எப்படி?
அவருக்கு ஆங்கிலம் தெரியாது, ஊர் சுற்றிப் பார்க்க வந்த பயணிகளிடம் இருந்து ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அதிலும் நாட்டமின்றி அதில் இருந்து வெளியேறினார். வேலை தேடி அலைந்தார். கேஎஃப்சியில் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இன்று உலகின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கிறார்.
இவையெல்லாம் தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று அவர் குறிப்பிடுகிறார். இன்டர்நெட் என்ற வார்த்தை பரவத் தொடங்கிய நேரம் அது. எல்லோரும் இன்டர்நெட் உலகை மாற்றப் போகிறது என்று பேசும்போது, அது என்ன இன்டர்நெட், நாமும் தெரிந்துகொள்ளலாமே என்ற ஆர்வம் அவருக்குள் உருவானது. ஆனால் அதில் அனைத்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், இத்தாலி என்று இருந்ததே தவிர சீனர்களுக்காகவென்று எதுவும் இல்லை. அப்போது அவருடைய மனதில் உதித்த ஒரு யோசனைதான் இன்று 'அலிபாபா' சாம்ராஜ்யமாக எழுந்து நிற்கிறது.
சரியான நேரத்தில் அவருக்கு கிடைத்த யோசனையும், அந்த யோசனையை பிசினஸாக்க அவருக்கு அமைந்த நல்ல குழுவும்தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். ஒரு விஷயத்தில் வெற்றியடைய நமக்கு தேவையெல்லாம், ஆர்வம், அதன் மீதான முழு கவனம் மற்றும் சரியான ஒரு அணி ஆகியவைதான்.
இன்டர்நெட் உலகை மாற்றப் போகிறது என்பதிலும், அதற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது என்பதையும் உலகில் முதன்முதலில் நம்பத் தலைப்பட்டவனாகவே தன்னை கருதுகிறேன் என்றார். தான் நம்பியதையே தன்னுடைய பிசினஸுக்கும் பயன்படுத்திக்கொண்டார். அசுர வேகத்தில் வளர்ந்தார்.
ஜாக் மாவின் வெற்றிக்கு அவர் வைத்திருக்கும் மந்திரங்கள்:
- வளர்ச்சியை மட்டுமே நோக்கி பயணம் வேண்டும்.
- புத்திசாலித்தனமான செயல்பாடு வேண்டும்.
- யாரும் கண்டுபிடிக்காத வாய்ப்புகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
- திறமையானவர்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்களுடைய சிந்தனைகளுக்கு இடமளிப்பது.
- வாடிக்கையாளர்கள் உள்ளே வரும் வழி எப்போதும் எளிமையாக இருக்க வேண்டும்.
விஷயம் தெரிந்தவர்களை மதிக்க வேண்டும்:
தனக்கு, புரோகிராமிங் பற்றியோ, தொழில்நுட்பங்கள் பற்றியோ எதுவும் தெரியாதிருந்த போதிலும் அதற்காக தொழிலில் இருந்து பின்வாங்கவில்லை. விஷயம் தெரிந்த திறமைப்படைத்த கம்ப்யூட்டர் இன்ஜினியர்களை அவருடைய அணியில் சேர்த்துக்கொண்டார். அவர்களுடைய திறமைக்கான மரியாதையைக் கொடுத்து அவர்களுடைய சிந்தனைகளுக்கும் இடம் கொடுத்திருக்கிறார். இன்று அலிபாபா நிறுவனத்தின் வெற்றிக்கு அவரது அணியினரின் திறமையும், உழைப்பும்தான் காரணமாக இருக்கிறது.
பலர் தோல்வியடைய காரணம்?
பல பெரு நிறுவனங்களும் கூட தோல்வியடைய ஒரே காரணம் அவர்களிடம் இருக்கும் அதிகபட்ச பணமாகக் கூட இருக்கும். ஏனெனில் செலவு செய்யும் கவனிக்காத ஒவ்வொரு ரூபாயும் தோல்வியை நமக்கு அருகில் அழைத்து வந்துவிடக் கூடும். சிறியதோ, பெரியதோ எவ்வளவு தொகையாக இருந்தாலும் செலவுகளைக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். தேவையற்ற அல்லது அதீத செலவுகளைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.
ஒரு பழைய பழமொழி உண்டு "தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான், தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்" என்று. இந்தப் பழமொழி கூட வெற்றிக்கு ஒரு தடைதான். இதைச் சுக்கு நூறாக உடைத்து வெற்றி கண்டிருக்கிறார் ஜாக் மா. தோல்விகளெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்

No comments: