Thursday, March 24, 2016

பகத்சிங்

ல்ல உயரம், பாந்தமற்ற உடை, அடக்கமான சுபாவம் மற்றும் தன்னம்பிக்கை இல்லாத ஒரு கிராமத்து வாலிபம் போன்ற தோற்றம். அவரை சந்திக்கும் யாருக்கும் முதல் பார்வையில் அவர் மீது உடனே நம்பிக்கை வராது. தேச வரலாற்றில் இந்த இளைஞன் நீங்கா இடம் பெறப் போகிறான் என்று அவரை அப்போது பார்த்த யாரும் நம்பி இருக்க மாட்டார்கள்.  ஆனால், பல தசாப்தங்கள் கடந்தும் அவர் பேசப்படுகிறார். அவரை தவிர்த்து இந்திய வரலாற்றை எழுத முடியாது. ஆம். நான்  பகத்சிங் குறித்துதான் சொல்கிறேன்.

கடைசி மூச்சின் போதும் தன் பாதங்கள், தன் உயிரினும் மேலாக கருதிய இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என்று கருதியவர். தூக்கில் தொங்கி அந்தரத்தில் சாவதை அவர் விரும்பவில்லை. துப்பாக்கி குண்டு ஏந்தி சாவதற்குத் தயாராக இருந்தவர் பகத்சிங். குருதியின் ஒவ்வொரு அணுக்களிலும், தேசத்தின் மீதான காதலும் அதன் விடுதலையும் மட்டுமே நிரம்பி வழிந்தது. தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் இல்லாமல், இந்திய விடுதலையையும், சோஷியலிச சமூகத்தை கட்டியமைப்பது மட்டுமே தன் சுவாசம் என்று கருதிய மாமனிதன் அவர். அவர் மட்டுமல்ல அவர் வயதொத்த ராஜகுருவும், சுகதேவ்வும் இப்படித்தான் வாழ்ந்தார்கள்.
சதி வழக்கின் விசாரணையை புரட்சிகரமான முறையில் பயன்படுத்தியவர்:

அப்போது ஊடகங்கள் என்று எதுவும் இல்லை. தன் மனித ஊடகங்கள் மட்டும்தான். செவி வழியாக மட்டுமே செய்திகள் பரவிய காலம் அது. ஆனால், அப்போது லாகூர் சதிவழக்கை தேசமே உற்று நோக்கியது. பகத்சிங்கின் நெருங்கிய நண்பரான, அஜய்கோஷ் சொல்கிறார், “மத்திய சட்டசபையில் குண்டு வெடித்த நாளிலிருந்து, பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூன்று வீரர்களும் தூக்குக் கயிற்றில் தொங்கிய நாள் வரையிலும் அந்தக் கைதிகள் மீதும், அந்த வழக்கின் மீதும், அரசியல் கைதிகளின் நல உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், தாங்கள் மேற்கொண்ட இலட்சியத்திற்காகவும் அவர்கள் நடத்திய எண்ணற்ற போராட்டங்கள் மீதுமே பொதுமக்களின் முழுகவனமும் இருந்தது. பகத்சிங்கும், அவரது தோழர்களும்  பல வீரக் கதைகளின் நாயகர்களாயினர்....”.   ஆம். இதில் ஊசி முனை அளவும் மிகை இல்லை.  ஊடகங்கள் இமாலய வளர்ச்சி பெற்றுள்ள இந்த காலக்கட்டத்திலும், நாம் இன்னும் அரசியல் விழிப்புணர்ச்சி பெறாமல் தான் இருக்கிறோம். ஆனால், பகத்சிங்கும் அவரது தோழர்களும், தங்கள் வழக்கின் ஊடாகவே மக்களை தேச விடுதலை குறித்து சிந்திக்க வைத்தார்கள். சிறைக்கம்பிகளுக்கு பின்னிருந்தும் கைதிகளின் நல உரிமைக்காக போராடினார்கள்.  

“இந்த வழக்கின் விசாரணையைப் புரட்சிகரமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் சர்க்காரின் நீதியின் போலிதனத்தை அம்பலப்படுத்தவும்,  புரட்சிகாரர்களின் உறுதியை சிதறடிக்க முடியாதென்பதை காட்டி கொள்வதற்கும், இந்த வழக்கு விசாரணையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். சர்க்காரை அலட்சியம் செய்ய வேண்டும். சர்க்காரின் போலீஸ், நீதிமன்றம் ஆகியவற்றை எவ்வளவு அலட்சியப்படுத்துகிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இதன் மூலமாக தேச மக்களை விடுதலையை நோக்கி தட்டி எழுப்ப வேண்டும். “ இது வழக்கு நடந்து கொண்டிருந்தபோது பகத்சிங் தம்மை சந்திக்க வந்த தோழர்களிடம் சொல்லியது.

ஏன் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு வரலாற்றை நம் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும்...?

எது பகத்சிங்கை விடுதலை போராட்டம் நோக்கி இழுத்தது,  1919-ம் ஆண்டு ஏப்ரல் 13. அப்போது பகத்சிங்கிற்கு 12 வயது. மைக்கேல் டயர் என்கின்ற லெப்டினட் கவர்னர் உத்தரவின்பேரில் ஜெனரல் டயர்,  ஜாலியன் வாலாபாக்கில் 1650 ரவுண்டுகள் சுட்டான். 400 க்கும் மேற்பட்டவர்கள் அந்த இடத்திலேயே குண்டடிபட்டு இறந்தனர். கிணற்றுக்கு உள்ளே குதித்துச் செத்துப்போனவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றார்கள். இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது ஜாலியன் வாலாபாக்கில். அங்கு குருதி ஓடிய தியாக மண்ணை, ஒரு ஜாடியில் போட்டு, பகத்சிங் வீட்டுக்கு கொண்டு வருகிறான். அந்த மண்ணை தினமும் பூசிக்கிறான். அந்த அடைக்கப்பட்ட மண் தான், அவன் சுதந்திர வேட்கைக்கு காரணமானது.

அன்று அந்த பன்னிரெண்டு வயது சிறுவனுக்கு இருந்த அரசியல் தெளிவு, இன்று வயது முதிர்ந்த பலருக்கும் இல்லாமல் இருக்கிறது.  நிகழ்வுகளை நாம் வெறும் தட்டையாக மட்டும் பார்க்கிறோம். விடுதலை மட்டுமல்ல.. அந்த இளைஞன், விடுதலைப்பெற்ற பிறகு, இந்திய சமூகம் எப்படி இருக்க வேண்டுமென்று பெருங்கனவு கண்டவன். ஏற்றத் தாழ்வற்ற, இல்லாமை எவருக்கும் இல்லாத, சாதி பேதங்களற்ற சமூகமாக இருக்க வேண்டும் என்று விரும்பியவன்.  அவனின் ஒரு கனவாக இருந்த சுதந்திரம் நமக்கு கிடைத்தது. ஆனால், அவனின் மற்ற விருப்பங்கள் இன்னும் கனவாக மட்டுமே இருக்கிறது.  இந்த சூழ்நிலையில், நாம் அனைவரும் பகத்சிங் குறித்தும் அவனின் தோழர்கள் குறித்தும், அவர்கள் இந்த சமூகம் குறித்து கண்ட கனவுகள் குறித்தும் குழந்தைகளிடம் உரையாடுவது இன்றியமையாதது ஆகிறது.

No comments: