Tuesday, August 04, 2015

அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில முக்கியப் பக்கங்கள் - 2

தலைமை அறிவியல் ஆலோசகர்:
 
(நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்)


* 1992 முதல் 1999 வரை பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்- II அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களிப்பு அளித்தார்.

* 1998-ல் இதயம் சம்பந்தமான டாக்டர். சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவில் கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை கெளரவப்படுத்தும் வகையில் 'கலாம்-ராஜூ ஸ்டென்ட்' என பெயரிடப்பட்டது.

* 2012-ல் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார வழிமுறைக்காக வடிவமைத்த டேப்லெட் கணினி 'கலாம்-ராஜூ டேப்லெட்' என்று பெயரிடப்பட்டது. 


 
இந்தியாவின் சக்தி - ப்ரமோஸ்
 

ஆயுதங்கள் உருவாக்கத்தில் இந்தியா கொஞ்சம் வீக்தான். சீனாவே பாராட்டினாலும், அர்ஜுன் டேங்க் இந்திய ராணுவத்தின் நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை. லைட் காம்பேட் ஏர்கிராஃப்ட் ப்ராஜெக்ட் மிகவும் தாமதமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், BrahMos பிராஜெக்ட் மட்டும் சூப்பர் சக்ஸஸ். யார் காரணம்? அப்துல் கலாம்.
 

‘ரோஹிணி’ செயற்கைக் கோள் வெற்றிக்குப் பிறகு, Integrated Guided Missile Development திட்டத்தின் மூலம் ஏவுகணை மேல் ஏவுகணை விட்டு இந்தியாவின் சக்தியை உலகுக்கு பறைசாற்றினார் கலாம். ஆனால், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளராகவும் அப்துல் கலாம் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட BrahMos ப்ராஜெக்ட்தான், உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது.
 
 

ரஷ்யாவுடன் இந்தியா இணைந்து BrahMos ஏவுகணையை உருவாக்கலாம்’ என்று அப்துல் கலாம் நினைத்த நொடி, இந்தியாவின் பாதுகாப்பு வல்லமையில் முக்கியமான தருணம். ப்ரமோஸ் ஏவுகணை உருவாக்கத்தில் கலாம் வகித்த பங்கைத் தெரிந்துகொள்ள ‘ப்ரமோஸ் ஏவுகணையின் தந்தை’ என்று அழைக்கப்படும் ஏ. சிவதாணு பிள்ளை எழுதிய ‘The Path Unexplored’ புத்தகத்தைப் படிக்கலாம். இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியதே அப்துல் கலாம்தான்.  
 
 

அதில், சிவதாணு பிள்ளை, அப்துல் கலாம் 1995-ல் தன்னிடம்  க்ரூஸ் ஏவுகணை உருவாக்கத்துக்கான  இந்தியா - ரஷ்யா கூட்டுமுயற்சிக்கு தலைமை செயல் இயக்குனராக பொறுப்பேற்றுக்கொள்ளச் சொன்னார் என்று எழுதியிருக்கிறார். ப்ரமோஸ் உருவாக்கத்தில் பிள்ளை என்ன திட்டத்தைச் சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்வாராம் கலாம். அதேபோல், கலாம் இந்த ப்ராஜெக்ட் சம்பந்தமாக எந்தக் கோப்புகளை அனுப்பினாலும், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ், முதலில் முக்கியத்துவம் கொடுத்து, கையெழுத்திட்டு திருப்பி அனுப்புவாராம்.

இன்று, ப்ரமோஸ் ஏவுகணைதான் உலகிலேயே மிகவேகமான க்ரூஸ் ஏவுகணை. ஏன், உலகிலேயே கடற்படை, விமானப் படை, தரைப்படை ஆகிய மூன்றுமே சூப்பர்சானிக் ஏவுகணை (ப்ரமோஸ்) கொண்ட ஒரே நாடு இந்தியாதான். ப்ரமோஸ் வெற்றியில் முக்கியப் பங்கு அப்துல் கலாமுக்கு இருக்கிறது.
 
ப்ரமோஸ் சீறிப்பாய்வதைப் பார்ப்பதற்கே கெத்தாக இருக்கும்

 
 
 


 

கலாமின் கனவு இந்தியா 2020!
 
 

'எப்போது பார்த்தாலும் வீண் கனவு கண்டு கொண்டே இருக்காதே! எல்லாம் பகல் கனவு தான்!' இப்படி தான் 'கனவு' என்ற வார்த்தை நம் மனதில் இந்த மனிதர் பேசுவதற்கு முன் இருந்தது. கண்களை மூடிக்கொண்டு காணும் கனவை, கண்களை திறந்து கொண்டும் காண முடியும் என்று புரிய வைத்தவர் அப்துல் கலாம். இன்று இந்தியா 2020-ம் ஆண்டுக்குள் வல்லரசாக வேண்டும் என்று பலர் கூறுவதை கேட்டிருப்போம். அவர்கள் அனைவரது பேச்சிலும் 'அப்துல் கலாம் கனவு கண்டது போல் இந்தியா 2020க்குள் வல்லரசாகும்' என்றுதான் மேற்கோள் காணப்படும்.
 

இந்தியாவிற்காக அவர் கண்ட நம்மை காண சொன்ன கனவு மிகப்பெரியது, மிகச்சிறந்தது. ஒருவேளை அவர் இந்திய குடியரசு தலைவர் ஆகாமல் போயிருந்தால் இதே விஷயத்தை ஏதோ ஒரு கல்லூரியின் விழாவில் மாணவர்களிடையே புகுத்தி நமக்குள் இந்தியாவின் வல்லரசு கனவுக்கான விதையை விதைத்திருப்பார்.
 

 
அவர் கண்ட கனவில் முதலாவது, இந்தியாவில் உள்ள மக்களின் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பது தான். இந்தியாவின் வளர்ச்சியை அளவிடும் அளவுகளான ஜிடிபி மூலம் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி என்பது 1996களில் மற்ற நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டால் 15வது இடத்தில் இருந்தது. அதனை 2020ல் 4வது இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அவரது கனவு. 
 

தொடர்ந்து உள்ளூர் சந்தைகளை ஊக்குவிப்பது, உற்பத்தி மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி என்பது நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டும். உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் நிதித்துறையில் தொழில்நுட்ப மேம்பாடுகளை கொண்டுவர வேண்டும். இந்தியாவில் தொழிநுட்ப மேம்பாடுகளை கொண்டுவர நிலையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடாக உலக நாடுகள் பார்க்க வேண்டும் என்பது தான் அவர் கண்ட முதன்மையான கனவு. மேலைநாடுகளில் இருந்த CAD மற்றும் CAM போன்ற இயந்திரவியலின் புதுமைகளை பற்றி கலாம் ஆரம்பத்தில் இருந்தே ஆணித்தரமாக வலியுறுத்தி வந்தார். அவரது சீரிய முயற்சியால் பல கல்லூரிகளில் இந்த பாடங்கள் இடம்பெற்றன.
 
 

இந்தியாவை உணவு பற்றாக்குறை இல்லாத நாடாகவும், விவசாய வளமிக்க நாடாகவும் மாற்ற வேண்டும், இந்தியாவில் ஆண்டுக்கு 14 மில்லியன் டன் உணவை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனால் இந்தியாவில் 40 சதவிகிதம் பேர் வறுமை கோட்டுக்குக்கீழ் உள்ளனர். இந்த நிலையை மாற்ற உணவுக்கான வழிவகைகளை செய்து விவசாயத்தை முன்னேற்ற வேண்டும்.
 

உற்பத்தி துறை தான் இந்தியாவின் வருங்காலம் என்று அவர் குடியரசு தலைவராக இருந்தபோது இந்தியா 2020 புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இன்று மேக் இன் இந்தியா திட்டத்தில் அரசு கணித்திருக்கும் அளவுகள் அப்துல் கலாமின் கணிப்புகளுடன் பொருந்துகின்றன என்பது ஆச்சர்யமாக உள்ளது. தற்போது வந்துள்ள திட்டத்தை பல வருடங்களுக்கு முன் கணித்திருக்கிறார் என்றால் அவர் மாமனிதர் தானே!
 

இந்தியாவில் சிறப்பான சாலைகள் இல்லாதது தான் இந்தியாவின் உற்பத்திதுறை வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது என்பதை கூறி இருந்தார். அதன்படி தான் அன்றைய பிஜேபி அரசு தங்க நாற்கர சாலை திட்டத்தையும், துறைமுகங்களை இணைக்கும் சாலைகளையும் கொண்டுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

இங்குள்ள தொழில்களையும் அதில் பணிபுரியும் பணியாட்களின் திறனையும் அதிகரிக்க சிறப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டும் அதன் மூலம் இந்தியாவுக்கு அனைத்து துறைகளிலும் வல்லமைமிக்க மனித வளத்தை அளிக்க முடியும் என்றார். இந்த கனவுகளை இந்திய இளைஞர்களால் எளிதில் சாத்தியப்படுத்த முடியும் என நம்பியவர் கலாம்.
 


 
ஒரு சினிமா நடிகரின் பேச்சையும், ஒரு கிரிக்கெட் வீரர் சொல்லும் குளிர்பானத்தை குடித்துக்கொண்டும் இருந்த இளைய சமுதாயம் 83 வயது இளைஞர் சொன்னால் இந்தியாவை உயர்த்த எண்ண வேண்டுமானாலும் செய்வோம் என மாறியது. இளைஞர்கள் நாட்டின் சொத்துக்கள். அவர்களது சக்தியை சிறப்பாக செயல்படுத்தினால் இந்தியா உலகின் அழிக்க முடியாத சக்தியாக மாறும் என்பதில் அச்சமில்லை என்றார்.

அவரது 'கனவு இந்தியா' இன்னும் உருவாகவில்லை. ஆனால் அவர் சொன்ன பாதையில் உருவாகி கொண்டிருக்கிறது. அவர் கனவு கண்ட தேசத்தை அவருக்காக உருவாக்கி தருவது அவர் நம்பிக்கை வைத்த இளைஞர்களின் கடமை. இங்கு ஊரைச் சுற்றும் இளைஞர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உலகை சுற்றும் செயற்கைக்கோள்களை தயாரித்து விண்ணைச் சுற்றுவார்கள். இந்தியா 2020-ம் ஆண்டில் அப்துல்கலாம் கண்ட 'கனவு இந்தியா'வாக உருவாகும். இந்தியாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் செயலில், கோடிக்கணக்கான அப்துல்கலாம்களை பார்ப்பது மட்டுமே இந்தியாவின் தற்போதைய இலக்கு. 
 
 


கனவு காணுங்கள்! அப்துல் கலாம் மறையவில்லை! இந்தியாவின் வளர்ச்சிக்கான கனவுகள் உள்ளவரை கலாமை அழிக்க முடியாது!
 
 
- டிஜிட்டல் ஃபர்ஸ்ட் டீம், விகடன்
 
(நன்றி: ClaysonsSkitlibrary)

No comments: