Monday, November 15, 2021

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை -- தேர்ச் சக்கரம்

 இந்தியாவிடமிருந்து ஆங்கில உலகம் பெற்றுக்கொண்ட சொற்களில் ஒன்று, ‘ஜகர்நாட்.’ பிரபஞ்சத்தின் கடவுளான ஜெகந்நாதரிடமிருந்து உருண்டுவந்த பெயர் இது. விஷ்ணுவின் அவதாரமான ஜெகந்நாதருக்கு ஒடிசாவிலுள்ள பூரியில் 12-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய கோவிலொன்று எழுப்பப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் அங்கே நடைபெறும் தேரோட்டத்தைக் காண உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் பக்தர்களும், அவர்களுக்குச் சமமாகச் சுற்றுலாப்பயணிகளும் திரண்டுவருவது வழக்கம். உற்சவ மூர்த்தியான ஜெகந்நாதர் தனது சகோதர, சகோதரியான பலபத்திரர், சுபத்ரா தேவி இருவரோடு எழுந்தருளுவதை லட்சக்கணக்கானவர்கள் தரிசிப்பது வழக்கம். முதலில் பலபத்திர தேரும், பிறகு சுபத்ரா தேவி தேரும் புறப்பட்டு வரும். ஜெகந்நாதரின் பிரமாண்டமான தேர் இறுதியாகத் தோன்றும்.

உருண்டோடி வரும் தேர்ச் சக்கரத்தைக் காணும்போது, `என் பாதையில் ஆயிரம் மலைகள் குறுக்கிட்டாலும் தவிடுபொடியாக்கி விட்டு முன்னேறிச் செல்வேன்’ என்று அது சொல்வதுபோல் இருந்தது பலருக்கும். நீங்காத அச்சத்தோடும் பரவசத்தோடும் சக்கரத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றனர் அயல்நாட்டுக்காரர்கள். தேர் அவர் களை மயக்கியது, குழப்பியது, அச்சுறுத்தியது, நிலைகுலையவைத்தது. அவர்கள் கற்பனையில் ஏறி கல்போல் அமர்ந்துகொண்டு, விலக மாட்டேன் என்றது. இந்த அசாதாரண உணர்வை ஏற்படுத்தியவர் ஜெகந்நாதர் அல்லவா?

எனவே ஓங்கி உலகளந்து நிற்கும் எதையும் ஆங்கில உலகு, `ஜகர்நாட்’ என்று அழைக்கத் தொடங்கியது.

அளவில் பெரிய சரக்கு வண்டிக்கு பிரிட்டனில் இந்தப் பெயர்தான். எதைக்கொண்டும் தடுத்து நிறுத்த முடியாத, எப்பாடுபட்டாலும் வெல்ல முடியாத, நம் சிற்றறிவுக்குச் சிக்காத பெரும் ஆற்றலுக்கும் இந்தப் பெயரையே சூட்டினார்கள்.

பூரி தேரோட்டம் குறித்து இத்தாலியப் பயணியான நிகோலோ டி காண்டி எழுதியுள்ள பதிவு முக்கியமானது. இந்தியா என்றதும் இன்றும் உலகின் மனதில் சட்டென்று விரியும் சித்திரங்களில் ஒன்றாக இது இன்றளவும் நீடிக்கிறது.

டெல்லி சுல்தானகம் எறும்பாகத் தேய்ந்துகொண்டிருந்தபோது, முகமது பின் துக்ளக்கிடம் பணியாற்றிவந்த ஹரிஹரா, புக்கா ஆகிய இரு சகோதரர்களும் பிரிந்துவந்து கர்நாடகத்தின் தலைநகரான விஜயநகரத்தில், துங்கபத்திரா நதிக்கரையில் ஒரு புதிய ஆட்சியைத் தொடங்கிவைத்தனர். அது விஜயநகரப் பேரரசாக மலர்ந்தது. விஜயநகரத்தை நேரில் கண்டு எழுதிய அயல்தேசத்துப் பயணிகளில் முக்கியமானவர் நிக்கோலோ டி காண்டி. மார்கோ போலோ தனது பயணங்களை முடித்துக்கொண்டு 1295-ம் ஆண்டு வெனிஸ் திரும்பினார். கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பிறகு காண்டி இங்கு வந்துசேர்ந்தார். குறிப்பாக, எந்த ஆண்டுகளில் அவர் பயணம் செய்தார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. சங்கம மரபைச் சேர்ந்த முதலாம் தேவராயன் (1406-1422) அல்லது இரண்டாம் தேவராயன் (1424-1446) ஆட்சிக்காலத்தில் அவர் கர்நாடகத்துக்கு வந்திருக்கலாம்.

வெனிஸில் செல்வச் செழிப்புமிக்க பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர் காண்டி. டமாஸ்கஸில் வணிகத்தில் ஈடுபட்டுவந்த அவரை, கிழக்கு ஈர்த்ததில் வியப்பு எதுவுமில்லை. பாரசீகத்தைக் கடந்து, மலபார் கரையோரம் மிதந்து வந்து, இந்தியாவின் பல பகுதிகளைச் சுற்றிவந்தார். சிலோன், சுமத்ரா, ஜாவா என்று சுற்றிவிட்டு இறுதியில் சீனாவுக்கும் சென்றிருக்கலாம். கெய்ரோவில் தன் மனைவி யையும், இரு குழந்தைகளையும் தொற்றுநோய்க்குப் பறிகொடுத்துவிட்டு மீண்டும் வெனிஸ் திரும்பியபோது, 25 ஆண்டுகள் கரைந்திருந்தன.

இந்தியாவை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தவுடனே காண்டிக்கு உறுதியாக ஒன்று தெரிந்துவிட்டது. `எண்ண முடியாத அளவுக்கு மனிதர்களும், எண்ண முடியாத அளவுக்குக் கடவுள்களும் ஒன்று கலந்து வாழும் பூமி இது. ஒவ்வொரு கடவுளுக்கும் பல வடிவங்களில், பல வண்ணங்களில் கோயில்கள் கட்டியிருக்கிறார்கள். கோயிலுக்குள் அழகிய சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. கல் தொடங்கி தங்கம், வெள்ளி, யானைத் தந்தம் என்று பலவற்றைக் கொண்டு திருவுருவச் சிலைகளை எழுப்புகிறார்கள். அளவுகள் மாறுபடுகின்றன. அறுபதடி உயரச் சிலைகளும் உள்ளன!

பலவிதமான வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன’ என்கிறார் காண்டி. காலை எழுந்ததும் நல்ல நீரில் சுத்தப்படுத்திக் கொண்டு கோயிலுக்குச் செல்கிறார்கள். மாலையும் ஒரு முறை செல்கிறார்கள். இரு கரங்களையும் மேலே உயர்த்தி நிலத்தில் அப்படியே விழுந்து கும்பிட்டுவிட்டு, மந்திரங்கள் ஓதி முடித்துவிட்டு, தரையை முத்தமிடுகிறார்கள். சிலர் நறுமணப் பொருள்களை விளக்காக ஏற்றுகிறார்கள். சில இடங்களில் மணியோசை எழுப்பியும், சில இடங்களில் சிறிய பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பியும் கடவுளின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

`கடவுளுக்கு விமரிசையாக விருந்து படைக்கப்படுகிறது. படைத்து முடித்த பிறகு அந்த உணவை ஏழை எளிய மக்களுக்கு விநியோகிக்கிறார்கள். சில கோயில்களில், கோயில் பூசாரிகள் திருவுருவச் சிலைக்கு முன்னால் தோன்றி பக்தர்களோடு உரையாடுகிறார்கள். நீண்ட சொற்பொழிவுகள் (உபன்யாசம்) நிகழ்த்தப்படுகின்றன. `போதும், இவ்வுலக பந்தங்களிலிருந்து விடுபட்டு மறுமைக்குத் தயாராகுங்கள்’ என்று சொற்பொழிவின் ஒரு பகுதியாக பக்தர்களை அவர்கள் வேண்டிக் கொள்கின்றனர். `கடவுளுக்காக அல்ல, உங்களுக்காக இதை நீங்கள் செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார்கள்

வழிபட்டோமா, எழுந்து வந்தோமா என்று அவர்கள் இருப்பதில்லை. தியாகம் வழிபாட்டின் ஒரு பகுதி என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தியாகம் என்றால் பொன்னோ பொருளோ அல்ல, உயிர். உயிர்த் தியாகம் செய்பவர்கள் உன்னத மானவர்களாகக் கருதப்படுகின்றனர். தீக்குளிப்பது தொடங்கி பல வழிகளில் கடவுளுக்காக உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அவற்றுள் ஒரு வழிமுறையை காண்டி விரிவாக விவரிக்கிறார்.

வட்ட வடிவில் பெரிய இரும்பு வளையம் ஒன்று இருக்கிறது. வெளிப்பகுதி சாதாரணமாகவும், உள்பகுதி மிகக் கூர்மையாகவும் இருக்கும். வளையத்திலிருந்து நீண்டு வரும் சங்கிலி உறுதியான ஓரிடத்தில் பிணைக்கப்பட்டிருக்கும். தியாகிகள் திரண்டுவந்து இந்த வளையத்துக்குள் நுழைவார்கள். மந்திரங்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். கழுத்தில் கூரான பகுதி உரசிக்கொண்டிருக்கும். மந்திரத்தின் ஒலி அதிகரிக்கத் தொடங்கும்போது அவர்கள் கழுத்து மெல்ல மெல்ல அறுபட ஆரம்பிக்கும். எல்லாம் முடிந்திருக்கும்போது தலை நிலத்தில் விழுந்திருக்கும். தலையை இழந்தாலும் தியாகி எனும் பட்டத்தை ஒவ்வொருவரும் ஈட்டியிருப்பார்கள். அதன் பிறகு புனிதர்களாக அவர்கள் கொண்டாடப் படுவதும் உண்டு’ என்கிறார் காண்டி.

அதன் பிறகு பூரியில் நடப்பதை விவரிக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் மையக் கடவுளைத் தேரில் பொருத்தி நகர் முழுக்கத் தேரை இழுத்துவருவார்கள். தேரைப் பின்தொடர்ந்து மக்கள், பாடல்களை இசைத்துக்கொண்டு ஊர்வலம் செல்வார்கள். அவர்களில் பலர் பக்தி வெள்ளத்தில் தீவிரமாக ஆழ்ந்துவிடுவதுண்டு. அத்தகைய தருணங்களில் உணர்வெழுச்சியோடு அவர்கள் நிலத்தில் பாய்வார்கள். தேர்ச் சக்கரங்கள் தங்கள் உடலில் ஏறி, இறங்கும்வரை அவர்கள் அமைதியாகக் காத்திருப்பார்கள். சக்கரத்தில் சிக்கி உயிர்விடுவதை மாபெரும் பேறாக அவர்கள் கருதுகிறார்கள். சக்கரத்தில் உயிர்த் தியாகம் செய்தால் கடவுள் அதை ஏற்பார் என்பது அவர்கள் நம்பிக்கை.

பக்தர்களில் இன்னொரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உடலைக் கீறி, துளை ஏற்படுத்தி, கயிறு மூலமாகத் தேரோடு சேர்த்து தங்களைப் பிணைத்துக்கொள்வார்கள். தேர் நகரும்போது அவர்களும் சேர்ந்து இழுக்கப் படுவார்கள். இப்படியும் உயிர் பிரியும். பாதி இறந்து, பாதி பிழைத்தவர்களும் உண்டு. இந்த வகை தியாகத்தை, `கடவுளுக்கு மிகவும் விருப்பமானது’ என்கிறார் காண்டி.

நேரடியாக பூரி சென்று இதையெல்லாம் கண்டாரா அல்லது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தன் பதிவை எழுதினாரா என்று தெரியவில்லை. அவருக்குப் பிறகு பூரி ரத யாத்திரை குறித்து எழுதிய எவருமே திடீர் திடீரென்று சக்கரத்தின் முன்பு பாய்ந்து விழுந்து உயிரைவிடும் பக்தர்களைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் விமரிசையான கொண்டாட்டங்களையும், மாபெரும் மக்கள் ஊர்வலங்களையும், மிக முக்கியமாக பிரமாண்டமான தேர்ச் சக்கரங்களையும் வியந்து வியந்து அவர்கள் எழுதினார்கள்.

மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஓரிடத்தில் ஒன்று குவியும்போது நிலைமை கைமீறி, தள்ளுமுள்ளு ஏற்படுவதையும், கீழே விழுபவர்களை மிதித்துத் தள்ளிவிட்டுப் பலர் முன்னேறுவதையும் நாம் இன்றும் பார்க்கிறோம். பூரியிலும் அப்படி உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம். சக்கரத்தில் மிதிபட்டுச் சிலர் இறந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால் காண்டி குறிப்பிடுவதைப்போல் பெரிய அளவில் தற்கொலைகள் நடைபெற்றிருக்காது. அப்படி ஒரு நம்பிக்கையோ, சடங்கோ நிலவியதாகவும் சொல்லவும் முடியாது.

இருந்தாலும் நாளடைவில் ஜெகந்நாதர் தேர் சக்கரம் ஒரு குறியீடாக மாறிப்போனது. `நீ ஒழுங்காக நடந்துகொள்ளாவிட்டால் சக்கரத்திடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன்’ என்று அம்மாக்கள் குழந்தைகளை மிரட்டுவதற்குச் சக்கரத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள். நாகரிகமற்ற, பழைமைவாத நாடாக இந்தியாவை முன்னிலைப்படுத்த ஐரோப்பியர்கள் சக்கரக் கதைகளை ஆதாரங்களாகக் காட்டினார்கள்.

`பலி வாங்கும் சக்கரம்’ என்றும் `ரத்தம் குடிக்கும் சக்கரம்’ என்றும் சிலர் வர்ணித்தனர். சக்கரத்தைக்கொண்டு இந்து மதம் குறித்தும், இந்தியா குறித்தும் சிலர் மோசமான மதிப்பீடுகளை உருவாக்கிக்கொண்டனர். ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 4,000 பேர் சக்கரத்தில் விழுந்து உயிர் மாய்த்துக்கொள்வதாக யாரோ ஆதாரமே இல்லாமல் எழுதினார்கள். அதையே ஆதாரமாகக்கொண்டு மேலும் பல சக்கரக் கதைகள் புனையப்பட்டன. சக்கரம் என்னவோ அதேபோல்தான் இன்னமும் சுழன்றுகொண்டிருக்கிறது!

No comments: