Tuesday, January 29, 2013

Saina Naiwal....A super star...

'சூப்பர் சாய்னா’ என்றுதான் ரசிகர்கள் அழைக் கிறார்கள் சாய்னாவை. ஆம்... இந்திய விளை யாட்டு உலகின் சூப்பர் ஸ்டார் இப்போது சாய்னா தான்! வெற்றி, புகழ், விளம்பர வெளிச்சம் கிடைத்ததும் திறமை மறந்து, மக்கள் அபிமானம் இழந்துவிடும் வீரர்களிடையே சாய்னா மட்டும் விதிவிலக்கு. 'தங்கள் வீட்டுப் பெண்ணாக’ இந்திய தேசமே கொண்டாடும் சாய்னாவின் தனிமைப் பக்கங்களில் இருந்து இங்கே கொஞ்சம்...
22 வயது சாய்னா பிறந்தது, ஹரியானா மாவட்டத்தின் ஹிஸார் மாவட்டம். இடமாற்றம் காரணமாக சாய்னாவின் தந்தை ஹைதராபாத்துக்கு வர, கூடவே வந்தது குடும்பம். சாய்னாவின் அப்பா, அம்மா இருவருமே மாநில அளவிலான பேட்மிட்டன் பிளேயர்கள்.
கராத்தேதான் கற்றுவந்தார் சாய்னா. ஒரு முறை கராத்தே வகுப்பில், 'படுத்துக்கொள். உன் மீது இப்போது பைக் ஏறும்’ என்று பயிற்சியாளர் சொன்னபோது, நைஸாக எஸ்கேப் ஆனார். பிறகுதான் கவனம் பேட்மிட்டன் பக்கம் திரும்பியது.
1999-ம் ஆண்டு திருப்பதியில் நடந்த 10 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டியில் வென்ற சாய்னாவுக்குப் பரிசாகக் கிடைத்தது 300.
சாய்னா படித்த பாரதிய வித்யாபவன் வித்யாஷ்ரம் பள்ளியின் ஒரு பகுதிக்கு இப்போது 'சாய்னா ப்ளாக்’ என்று பெயர்.
லண்டன் ஒலிம்பிக்குக்கான பயிற்சியில் சாய்னா மும்முரமாக இருந்த நேரம்... 'நிச்சயம் பதக்கம் வெல்வார்’ என்ற நம்பிக்கையில் பல கோடி ரூபாய்க்குத் தனியார் கோலா நிறுவனம் ஒன்று இவரை விளம்பரத் தூதர் ஆக்கும் பேச்சுவார்த்தையில் இறங்கியது. 'ஒலிம்பிக் பயிற்சியில்தான் என் முழுக் கவனமும் இருக்கிறது. இப்போதைக்கு இந்தப் பேச்சுவார்த்தைகள்கூட வேண்டாம்!’ என்று ஆரம்பத்திலேயே ஃபுல்ஸ்டாப் வைத்தார் சாய்னா.
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு, நாடு முழுக்கப் பயணம் செய்து பாராட்டு விழாக்களில் சாய்னா பங்கெடுத்தார். இதற்காக ஒலிம்பிக்குக்குப் பின் நடந்த ஜப்பான் மற்றும் சீன ஓப்பன் போட்டிகளில்கூட அவர் பங்கேற்கவில்லை. 'விளையாடுவதை விட்டுவிட்டு, பரிசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்’ என்று எழுந்த விமர்சனங்களுக்கு சாய்னா இரண்டுவிதமாகப் பதில் சொன்னார்...
வார்த்தைகளில் சொல்லிய பதில் இது... 'பேட்மிட்டன், கிரிக்கெட் போல் இல்லை. ஒலிம்பிக் வெற்றியை இந்தியா முழுக்கக் கொண்டாடினால்தான் இந்த விளையாட்டைப் பற்றிய விழிப்பு உணர்வு உண்டாகும். இந்தியாவுக்கு இன்னும் நிறைய சாம்பியன்கள் வருவார் கள்.’
செயலில் உணர்த்திய பதில் இது... ஒலிம்பிக் போட்டிக்குப் பின்பு விளையாடிய டென்மார்க் சூப்பர் சீரிஸ் போட்டியில் சாய்னாதான் சாம்பியன்.
''என்னுடைய போட்டியாளர்கள் பற்றிப் பயப்பட மாட்டேன். அது சீனர்களோ, கொரியர்களோ... எப்போதும் 12-13 வயதுப் பெண்ணாக இருந்தபோது 25-26 வயது வீராங்கனைகளை எப்படித் தோற்கடித்தேன் என்று ஃப்ளாஷ்ஃபேக் ஓட்டிப் பார்த்துக்கொள்வேன்!'' என்று சக்சஸ் சீக்ரெட் சொல்கிறார்.
இந்திப் படங்களின் ரசிகை. ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் காதலி. பிடித்த நடிகர் அமீர் கான். ஷாப்பிங், ஐஸ்க்ரீம், ஐபேட் கேம்ஸ் மூன்றும் சாய்னாவின் இஷ்டம்.
ரொம்பவும் எமோஷனலான பெண் சாய்னா. தன் வீட்டருகே உள்ள ஏழைப் பள்ளி மாணவர்களின் படிப் புக்கு உதவி செய்துவருபவர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கர்நாடகாவின் கிரிஷாவுக்கு 2 லட்சம் அன்பளிப்பாக வழங்கினார்.
முன்னர் சாய்னாவின் பயிற்சி செலவுகளுக்காக அவரது தந்தை பல்வேறு காரணங்களைச் சொல்லி ஆறு முறை வைப்பு நிதியில் இருந்து பணம் எடுத்திருக்கிறார். இப்போது மூன்று வருடங்களுக்கு 40 கோடி விளம்பர ஒப்பந்தத்தில் இருக்கும் சாய்னா, கடந்த ஆண்டு செலுத்திய வருமான வரி... 1.5 கோடி.
தினமும் யோகா செய்வதே சிக்கலான பல தருணங் களைச் சமாளிக்கத் தனக்குக் கை கொடுக்கிறது என்பார்.

No comments: