Tuesday, January 29, 2013

Mugam - From Vikatan

82 வயது 'வாலி’பர். ஜாலித் தமிழர். ஐஸ்க்ரீம் பேனாக்காரர். மூன்று தலைமுறைகள் தாண்டியும் முத்திரை பதிக்கும் கவிஞர் வாலியின் பெர்சனல் முகம் இங்கே...
தன்னை சென்னைக்கு அழைத்த டி.எம்.எஸ்., பாடல் எழுத வாய்ப்பு தந்த எம்.எஸ்.வி., ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு சினிமா கம்பெனிகளுக்கு அழைத்துச் சென்று வாய்ப்பு கேட்ட நடிகர் வி.கோபாலகிருஷ்ணன்... மூவரையும் நினைக்காத நாள் இல்லை.
பாடல் கம்போஸிங்கின்போது எம்.ஜி.ஆர்., சிவாஜி... யார் வந்தாலும் மரியாதை நிமித்தம் பாதி உடம்பைத் தூக்கி உட்கார்ந்துவிடுவார். ஆனால், வி.கோபாலகிருஷ்ணன் வந்தால், மடியில் உள்ள வெற்றிலைப் பெட்டி கீழே விழுவதுகூடத் தெரியாமல் சட்டென்று எழுந்து நிற்பார்.
கையில் எப்போதும் வெற்றிலைப் பெட்டி இருக்கும். வெற்றிலைப் பெட்டியும் ஆர்மோனியப் பெட்டியும் சந்தித்தால், அந்தப் படப் பெட்டியில் ஹிட் பாடல்கள் குடியிருக்கும். ஆனால், சமீப காலமாக வெற்றிலை போடுவது இல்லை.
சை ஞானஸ்தன். எந்தப் பாடலைக் கேட்டாலும் அதன் ராகத்தை மிகச் சரியாகச் சொல்வார்.
நிறைய சென்டிமென்ட் பார்ப்பார். அவரது புத்தகத்தின் தலைப்புகள் எட்டு எழுத்துக்களில் இருப்பதும் அதில் ஒன்று. ஏ.ஆர்.ரஹ்மான் போட்டுத் தரும் டியூனுக்குப் பெரும்பாலும் 'ம’ வரிசையில் பல்லவி தொடங்கும். ஹிட் உதாரணம், 'முக்காபுலா’.
நேர நெறியாளர். ஒருவருக்கு நேரம் கொடுத்து குறித்த நேரத்துக்கு அவர் வரவில்லை என்றால் கோபப்படுவார். ஒருவருக்குக் கொடுத்த நேரத்தை வேறு எவருக்கும் மாற்றித் தர மாட்டார் - அவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும்.
முன்பு ஃபியட் கார் வைத்திருந்தார். டிரைவர் கிடையாது. அவரே ஓட்டுவார். சமீப காலமாக நண்பர் வெங்கட்டின் காரில்... டிரைவர் ஓட்டப் பயணிக்கிறார்.
வாலியின் வரிகள் உலகெங்கும் பயணிக்கின்றன. ஆனால் வாலி, தேசம் தாண்டியது இல்லை. ''நான் ஃபாரின் போனது இல்லை; ஆனா, எனக்குள்ளே நிறைய 'ஃபாரின்’ போயிருக்கு. நான் ஃபாரின் போகணும்னா விசா தேவை. எனக்குள்ளே ஃபாரின் போகணும்னா சீசா தேவை'' என்பார் நகைச்சுவையாக.
இப்போது எல்லாம் கவிஞர்கள் பழநிபாரதி, நெல்லை ஜெயந்தா, தொழில் அதிபர்கள் வெங்கட், கிருஷ்ணகுமார் குழாமுடன்தான் வாலியின் பொன்மாலைப் பொழுதுகள் கரைகின்றன.
கோபக்காரர். நியாயம் என்று தெரிந்தால் யாரிடமும் தன் கோபத்தைக் காட்டிவிடுவார் - எம்.ஜி.ஆர். உட்பட.
பிறந்த நாளை அவ்வளவாகக் கொண்டாட மாட்டார். ஆனால், சமீப காலமாக ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ஒரு புத்தகம் வெளியிடுகிறார்.
எழுதும் பாட்டில் சந்தேகம் வந்தால், அந்தத் துறை சம்பந்தப்பட்டவரிடம் விசாரித்து, அதுபற்றித் தெரிந்துகொள்வார். சமீபத்தில் சந்தேகம் தெளிந்தது - ஐபேட் பற்றி!
கையில் எந்தப் புத்தகம் கிடைத்தாலும் அட்டை டு அட்டை படித்துவிட்டுத்தான் கீழேவைப்பார். மனம் கவர்ந்தால் அதை எழுதியவரைக் கூப்பிட்டுப் பாராட்டி மகிழ்வார்.
எந்தப் பாட்டு எழுதினாலும்... நான்கு பல்லவிகள், நான்கு சரணங்கள் தயாராக இருக்கும். ஜிப்பாவின் இடது பக்கப் பையில் இருந்து ஒரு பல்லவியை எடுத்துத் தருவார். அது பிடிக்கவில்லை என்றால், வலது பக்கப் பையில் இருந்து இன்னொரு பல்லவியை நீட்டுவார்.
இவர் மிகவும் அன்புடன் நேசிப்பவர் வயதில் குறைவாக இருந்தால் அவரை 'என்ன ஓய்...’ என்று உரிமையுடன் அழைப்பார்.
ஸ்ரீரங்கத்தில் பிறந்து வைஷ்ணவத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடுகொண்டு இருந்தாலும் முருகன் மீது எல்லை இல்லாப் பற்றுகொண்டவர். அவருடைய பக்திப் பாடல் கள் பல முருகனைப் பற்றியதுதான்.
பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிவது என்றால், அலாதி ஆனந்தம்.
உரையாடலுக்கு இடையே 'இதை நான் எதுக்குச் சொல்றேன்னா...’ என்கிற வாசகம் அடிக்கடி வந்து விழும்.
சில ஆண்டுகளாக ரிக்கார்டிங் தியேட்டருக்குப் போவது இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட எந்த இசையமைப்பாளராக இருந்தாலும் இவர் வீட்டுக்கே வந்துவிடுகிறார்கள்.
ஒரு பாட்டின் மெட்டை வெற்றி பெறவைக்கும் வித்தை தெரிந்தவர் என்பது இவர் மீதான மதிப்பீடு. இதனால்தான் இன்றும் வாலியின் விரல்களுக்காகக் காத்திருக்கிறது தமிழ் சினிமா.

No comments: