Tuesday, January 29, 2013

J Jayalalthia - AIADMK Chief

மிழகத்தின் இரும்பு மனுஷி! எதிர்பாராத உயரங்களும் திடீர்த் திருப்பங்களும் ஜெய லலிதாவின் வாழ்வில் சகஜம். இரும்புத் 'தோட் டத்துக்குள்’ வளைய வரும் ஜெயலலிதாவின் பெர்சனல் இங்கே கொஞ்சம்...
1964-ம் ஆண்டு மெட்ரிக்குலேஷன் தேர்வில் 'சிறப்புத் தேர்ச்சி’ பெற்றவர், இப்போதைய தமிழக முதல்வர். மேற்படிப்பு தொடர மத்திய அரசிடம் இருந்து உதவித் தொகை கிடைத்தது. ஆனால், அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல், ஜெயலலிதாவை அரவணைத்துக் கொண்டது சினிமா உலகம்.
காலை டிபனில் இடியாப்பம்தான் இஷ்டம். தேங் காய்ப் பால் - இடியாப்பம்தான் எப்போதும் பிடித்த கூட்டணி.
வீட்டின் போர்ட்டிகோ வாசலுக்கு எதிரே சுவரில் அழகிய விநாயகர் படம் ஒன்று செதுக்கப்பட்டு இருக்கும். காரில் வெளியில் கிளம்பும்போதும், திரும்பி வரும்போதும் அந்த விநாயகர் தரிசனம் தவறாது.
சிகரெட் புகை ஆகவே ஆகாது. போயஸ் கார்டன் இல்லம் கட்டப்பட்ட காலத்தில் இருந்தே அந்த வளாகத் துக்குள் சிகரெட் புகைத் தடம் இருந்தது இல்லை. கடந்த சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தையின்போது, மிக மூத்த அரசியல்வாதிகள் இருவர் டென்ஷன் தணிக்க போர்ட்டிகோ அருகில் புகை பிடிக்கத் தொடங்கினர். அதைப் பார்த்ததும் பதறியபடியே வந்த கார்டன் ஊழியர்கள், 'அம்மாவுக்குப் பிடிக்காது. இங்கே வேண்டாம்!’ என்று தடுத்துவிட்டார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரைபோயஸ் கார்டன் வீட்டு எண் 36. கூட்டுத் தொகை 9. புதிய வீட்டு எண்கள் வழங்கப்பட்ட சமயம், அளிக்கப்பட்ட எண் 81. கூட்டுத் தொகை... அதே 9.
'நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழில் இடம் பெற வேண்டிய முக்கியமான அரசியல் சம்பந்தப்பட்ட செய்திகள் ஜெயலலிதாவின் அனுமதிக்குப் பிறகே அச்சுக்குப் போகும்.
துண்டுச் சீட்டில் அனுப்பப்படும் குறிப்புகளைப் படித்த பிறகு, அது தேவை இல்லை எனில், அந்தச் சீட்டை அங்கேயே இரண்டாக, நான்காக, எட்டாக, பதினாறாகக் கிழித்துப் போட்டுவிடுவார்.
உடல் எடை குறைக்க நடைப் பயிற்சி அவசியம் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. ஆனால், வேலைப் பளு காரணமாக போயஸ் கார்டனில் நடக்க முடிவது இல்லை. இதனால் பெரும்பாலும் அவர் கொடநாட்டுக்குச் செல்வதே நடைப் பயிற்சிக்குத்தான். பிராந்தியமே குளிரடிக்கும் கொடநாடு பங்களாவின் வெளிப்புறம் நடந்த வண்ணம் இருப்பார்.
சுயசரிதை எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால், காலம் நேரம் கைகூடவில்லை.
ஜெயலலிதாவின் எழுத்தாற்றல் திறன் யாருமே அறியாதது. நடித்துக்கொண்டு இருந்தபோது நிறைய எழுதியிருக்கிறார். கல்கியில் தொடராக வெளியான 'உறவின் கைதிகள்’ நாவல் ஒரு நடிகனுக்கும் கல்லூரி மாணவிக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்டது. கர்ப்பத்தில் கைகோக்கும் காதல் ஜோடிக்கு இறுதியில் தாங்கள் தந்தை மகள் உறவு எனத் தெரிய வருவதாக, அப்போதே துணிச்சல் திருப்பங்களுடன் நாவலைப் படைத்தார்.
'அஞ்சுவது யாதொன்றுமில்லை... அஞ்ச வருவதும் இல்லை’ அப்பர் எழுதிய இந்த வரிகள் ஜெயலலிதாவுக்கு ரொம்பப் பிடிக்கும். தைரியம் தேவைப்படும் தருணங் களில் எல்லாம் இந்த வரிகளைத்தான் உச்சரிப்பார்.
கிளாஸிக் பாடல்களின் தொகுப்பாக ஜெயா டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'தேன் கிண்ணம்’ நிகழ்ச்சியில் ஜெயலலிதா டிக் அடித்துத் தரும் பாடல்கள்தான் ஒளிபரப்பாகும்.
ஜெயா டி.வி. செய்தி வாசிப்பாளர்களின் உச்சரிப்பை உன்னிப்பாகக் கவனிப்பார். 'சுப்பிரமணிய சாமி இல்லை... சுவாமி, ஹில்லாரி இல்லை ஹிலாரி, சோ இல்லை சோ ராமசாமி’ என சின்னச் சின்னத் திருத்தங் களையும் உடனுக்குடன் சொல்வார். அல்லது நோட் போட்டு அனுப்புவார்.
செல்போன் வைத்துக்கொள்ள மாட்டார். ஆனால், இவருடைய பிரத்யேக எண் கொண்ட செல்போன் பி.ஏ. பூங்குன்றனிடம் இருக்கும். வடக்கில் இருந்து வரும் அதிமுக்கிய அழைப்புகளுக்கு மட்டும் அதில் செவி சாய்ப்பார் ஜெயலலிதா.

No comments: