Thursday, November 27, 2014

கருணாநிதி@Facebook - Interesting Article in Vikatan

''பேட்டியா... எங்களையா? தலைவர்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு, பத்து நிமிஷத்தில் லைன்ல வர்றோம்!'' என்றவர்கள், சரியாக ஆறு நிமிடங்கள் கழித்து தொடர்புகொண்டார்கள். ''தலைவர் ஓ.கே சொல்லிட்டார்'' என்று வரச் சொன்னார்கள்.  நேரில் சென்றால், ''அஞ்சு நிமிஷம் சார்... தலைவர் எழுதின ஜோக் ஒண்ணை போஸ்ட் பண்ணிட்டு வந்துடுறோம். அது பாட்டுக்கு லைக்ஸ் குவிச்சுட்டு இருக்கும்!'' என்று ஒரு துண்டுச் சீட்டைப் பார்த்து ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். பார்க்க 'தமிழ் சினிமாவின் அமெரிக்க மாப்பிள்ளைகள்’போல 'சாஃப்ட்’டாக இருப்பவர்களின் வேலை என்ன தெரியுமா? தி.மு.க தலைவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்க நிர்வாகிகள் (பேஜ் அட்மின்!).  
''என் பேரு நவீன் நரேந்திரன். இவர் சுரேஷ் இம்மானுவேல். நான் சென்னைக்காரன். சுரேஷ§க்கு சேலம். ரெண்டு பேரும் எம்.பி.ஏ;  ரெண்டு பேரும் தி.மு.க ஆதரவுக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க!''-அறிமுகம் கொடுத்துவிட்டுத் தொடர்கிறார் நவீன்.
 
 
 
 
 
''நானும் சுரேஷ§ம் இ-மெயில் கண்டுபிடிச்ச தமிழர் சிவா அய்யாதுரையின் 'எக்கோ மெயில்’ நிறுவனத்தில் 2008-ம்  ஆண்டு வேலைக்குச் சேர்ந்தோம். சென்னையில்தான் வேலை. ஆனா, என் பேர் 'பாப் டேவீல்ஸ்’. சுரேஷ் பேர் 'வில்லியம் ஸ்மித்’. எப்பவும் நைட் ஷிஃப்ட்தான் வேலை. ஏன்னா,  எங்க புராஜெக்ட் அப்படி. 2008-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா போட்டியிட்டார். அப்போ சமூக வலைதளங்கள் மூலம் உலகத்தின் சந்துபொந்துகளுக்கு எல்லாம் அவரோட பிரசாரத்தைக் கொண்டுபோகணும். அதுக்காக 200 பேர் தீவிரமா வேலைபார்த்தோம். எப்பவுமே கூகிள்ல யாரைப் பத்தி தேடினாலும், அவரைப் பத்தின நெகட்டிவ் விஷயங்கள்தான் முதலில் வரும். எஸ்.சி.ஓ, டேக்ஸ் போன்ற 25 கோடிங் வார்த்தைகளைப் பயன்படுத்தி, கூகுளில் மெள்ள மெள்ள ஒபாமா பத்தின நெகட்டிவ் செய்திகளை மூணாவது, நாலாவது பக்கத்துக்குத் தள்ளிருவோம். பாசிட்டிவ் நியூஸ் முன்னாடி வர்ற மாதிரி பண்ணிடுவோம். ஏன்னா, கூகுளில் தேடுறவங்க 99 சதவிகிதம் முதல் ரெண்டு பக்கங்களைத்தான் பார்ப்பாங்க. இதே கோடிங் மேஜிக்கைத்தான் மோடி பிரசாரத்துக்கும் பண்ணினாங்க!'' என்கிறார் நவீன்.  
 
''ஒரு சமயம் தலைவர் கலைஞர் பெயரை கூகிளில் தேடினா, நெகட்டிவ் நியூஸா வந்து விழும். 2011-ல் தேர்தலில் தி.மு.க தோல்விக்கு சமூக வலைதளங்களில் பரவிய நெகட்டிவ் விஷயங்களும் ஒரு காரணம். அப்பத்தான், ஏதோ ஒரு நாட்டுக்கு யாரோ ஒருத்தர் அதிபர் ஆவதற்கு  நம்ம உழைப்பைக் கொடுக்கிறோம். நம்ம தலைவருக்கு அதே வேலையைப் பார்த்தா என்னன்னு தோணுச்சு. உடனே 'எக்கோ மெயில்’ நிறுவன வேலையை விட்டுட்டோம். 2012-ம் ஆண்டு ஜூன் 3. தலைவர் பிறந்த நாள். ஒபாமா பிறந்த நாளுக்கு முதன்முதலாக அவரை வாழ்த்த wishobama.com-னு ஒரு வெப்சைட் உருவாக்கினோம். அதுக்கு அமெரிக்காவில் நல்ல ரெஸ்பான்ஸ். இங்கேயும் அதே மாதிரி wishthalaivar.com-னு இ-மெயில் மூலம்  தலைவருக்கு வாழ்த்துச் செய்திகளை சேகரிச்சோம். பல்லாயிரக்கணக்கில் குவிஞ்சது வாழ்த்து. அதை தலைவர்கிட்ட சொன்னப்ப, ரொம்ப சந்தோஷப்பட்டார்.
 
அதைக் கேள்விப்பட்ட கட்சியின் சீனியர்ஸ் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ஜெ.அன்பழகன், தா.மோ.அன்பரசன் எல்லாரும் சமூக வலைதளங்கள், ஸ்மார்ட் போன் பத்தி ஆர்வமாக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டாங்க. 'டச் போனைப் பயன்படுத்தத் தெரியலைன்னா, நம்மளை படிக்காதவன்னு நினைச்சுக்கிறாங்கய்யா’னு துரைமுருகன் சார் ஜாலி கமென்ட் அடிச்சார்.
இப்படியே போயிட்டு இருந்தப்ப ஒருமுறை ஆ.ராசா அண்ணா, 'அந்த கோடிங்கைப் பயன்படுத்தி கூகுளில் என்னைப் பத்தின நெகட்டிவ் நியூஸ்களைப் பின்னுக்குத் தள்ள முடியுமா?’னு கேட்டார். அவருக்கும் பண்ணிக் கொடுத்தோம். அப்போதான் தலைவருடைய உதவியாளர் நித்தியானந்தம் அண்ணா மூலம் தலைவரைச் சந்திச்சோம்!'' என்று சுரேஷ் பாஸ்விட, அவர் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார் நவீன்.
''இன்டர்நெட், கூகுள், ஒபாமா பிரசார டெக்னிக் பத்தி தலைவர்கிட்ட முழுசும் சொன்னோம். உடனே புரிஞ்சுக்கிட்டார். 'இந்த இன்டர்நெட்டால ஒரு சதவிகிதம் தி.மு.க-வோட வாக்குவங்கி கூடினாக்கூட சந்தோஷம்தான்யா’னு சொல்லி அவர் பேர்ல ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிக்க அனுமதி கொடுத்தார். 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி, தலைவருக்கு ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிச்சோம்
 
 
 
ஆனா, ஆரம்பத்துல அந்தப் பக்கத்தை ஓப்பன் பண்ணிப் பார்க்கவே முடியலை. வண்டிவண்டியாத் திட்டி கமென்ட்ஸ் போட்டிருந்தாங்க. விஷயத்தை தலைவர்கிட்ட தயங்கித் தயங்கிச் சொன்னோம். 'கண்டபடி திட்டுவாங்களே! அதெல்லாம் எனக்குப் பழகிருச்சு. திட்டுறதைப் பத்தி கவலைப்பட மாட்டீங்கன்னா, வேலைபாருங்க. அதைப் பத்தி கவலைப்பட்டா, வேலையே பார்க்க முடியாது’னு சிரிச்சுட்டே சொல்லி திட்டுக்களைச் சமாளிக்க நிறைய ஐடியாஸ் கொடுத்தார்.  ஃபேஸ்புக் பத்தி முழுசாத் தெரிஞ்சதும் தலைவர் செமத்தியா பிக்கப் ஆகிட்டார். ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் எவ்வளவு லைக்ஸ் வருது, எந்த மாதிரி ஸ்டேட்டஸ் போட்டா லைக்ஸ் கூடும், எதெல்லாம் நிறைய ஷேர் ஆகுதுனு அப்பப்போ விவரம் கேட்பார். திடீர்னு வேற ஏதோ ஒரு விஷயம் வைரல் ஆகி, இவர் பேஜ்ல லைக் குறைஞ்சா, 'என்னய்யா லைக்ஸ் குறைஞ்சிடுச்சு? என்ன பண்றது இப்போ?’னு தீவிரமா விசாரிப்பார். 'நீங்க அ.தி.மு.க அரசாங்கத்தை விமர்சனம் பண்ணும் அறிக்கைகளுக்கு நிறைய லைக்ஸ், ஷேர் வருது’னு சொன்னோம். அப்புறம்தான் அரசாங்கத்தை விமர்சிச்சு நிறைய அறிக்கைகள் கொடுக்க ஆரம்பிச்சார். இப்போ தினமுமே தலைவருக்கு அன்னன்னைக்கு அப்டேட்ஸ் கொடுத்துட்டு இருக்கோம்!'' என்று முடித்தார் நவீன்.
''திடீர் திடீரென எதிர்பார்க்காத கோணத்தில் அறிக்கை விடுகிறாரே... அந்த ஐடியாவெல்லாம் யாருடையது?'' என்று கேட்டபோது, ''வேற யாரு..? தலைவர் ஐடியாதான்!'' என்று சொல்லி விவரிக்கத் தொடங்கினார் சுரேஷ்.
''ஒருநாள் 'யாருய்யா இந்த ஃபேஸ்புக், ட்விட்டர்லாம் கண்டுபிடிச்சது?’னு கேட்டார் தலைவர். நாங்க ஃபேஸ்புக் ஆரம்பிச்ச மார்க் ஸக்கர்பெர்க், ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்ஸேவை பத்தி விளக்கமா சொன்னோம். 'பரவாயில்லையே... இந்தச் சின்ன வயசுலயே இவ்வளவு சாதனைகள் பண்ணியிருக்காங்க. அவங்களைப் பாராட்டி ஓர் அறிக்கை விடலாம்யா’னு உடனே பேப்பர் பேனா எடுத்து எழுத ஆரம்பிச்சிட்டார். 'அவங்க கண்டுபிடிச்சதை நாம பயன்படுத்துறோம். அதுக்கு அவங்களுக்கு சின்னதா நன்றிகூட சொல்லலைனா எப்படி?’னு அவர் கேட்டதும்,  'அட... ஆமாம்ல. இது ஒபாமாவுக்கே தோணாத ஆங்கிளா இருக்கே’னு எங்களுக்குத் தோணுச்சு.
ஒருநாள் சச்சின் எழுதின சுயசரிதை புத்தகம் பத்தி செய்தி பரபரப்பா இருந்தப்ப, தலைவர் அந்தப் புத்தகத்தைப் படிக்கக் கேட்டார். வாங்கிக் கொடுத்தோம். படிச்சுட்டே இருந்தவர் எங்களைக் கூப்பிட்டு, 'இந்தப் புத்தகத்தை நான் படிக்கிற மாதிரி போட்டோ எடுத்துப் போடுங்கய்யா. நிறைய லைக்ஸ் வரும்’னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே அந்த போட்டோவுக்கு லைக்ஸ் பிச்சுக்கிச்சு. சச்சினோட மேனேஜர் லைன்ல வந்து நன்றி சொன்னார். இதே மாதிரிதான் ரோஹித் ஷர்மா கிரிக்கெட்ல        264 ரன் அடிச்சு அது வைரல் பரபரப்பா இருந்தப்ப, உடனே அவரைப் பாராட்டி அறிக்கை ரெடி பண்ணி போஸ்ட் பண்ணச் சொன்னார்.
ஒருநாள் எங்களை தனியாக் கூப்பிட்டுப் பேசினார் தலைவர். 'நீங்க இனிமே ரொம்பக் கவனமா இருக்கணும். உங்க குடும்பத்தை நல்லபடியா பாத்துக்கங்க. என்கூட அடிக்கடி நீங்க பேச வர்றதால, நம்ம கட்சியிலேயே சிலர் பொறாமைப்படலாம். எதிர்க்கட்சிகாரங்க ஏதாவது இடைஞ்சல் பண்ணலாம். எனக்காக வேலை செய்றீங்க. என்னால் உங்களுக்கு எந்தத் தொந்தரவோ, ஆபத்தோ வந்துடக் கூடாது’னு அவர் சொன்னப்ப, அவரோட அன்பையும்அக்கறையையும் பார்த்து நாங்க நெகிழ்ந்துட்டோம்!'' என்கிற சுரேஷ் நெகிழ, ''இதுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க?'' என்று கேட்டேன்.
''நீங்க கேட்பீங்கனு தெரியும். ஆனா, இதுவரை ஐயாகிட்ட இருந்து ஒரு ரூபாய்கூட  சம்பளமா வாங்கினது இல்லை. அவர்கூட வேலைபார்க்கிறதே பெரிய பாக்கியம். பணம் எங்களுக்குப் பிரச்னையே இல்லை. மாயாவதி, சரத்பவார்னு பல அரசியல்வாதிகள் அவங்களுக்காக வேலைபார்க்க, பிரசாரம் பண்ண எங்களைக் கூப்பிட்டாங்க. ஆனா, நாங்கதான் தலைவருக்காக வேலை செய்றதே போதும்னு இங்கேயே இருக்கோம். தலைவர்கிட்ட எப்படியாவது லைக்ஸ் வாங்கிரணும். அதைவிட வேற எங்களுக்கு என்ன பெரிய சம்பளம் வேணும்?'' என்கிறார்கள்  இருவரும்.
நல்லா பண்றீங்கப்பா!
 
 
 
 
 

Tuesday, November 11, 2014

உங்கள் உணவில் விஷம்! - Thanks to Vikatan

உங்கள் உணவில் விஷம்!
பூச்சிக்கொல்லி பயங்கரம்
ஆர்.குமரேசன், ஓவியங்கள்: ஹாசிப் கான்
ந்தப் பூமியை ஒரு நஞ்சுப்படலம்போல சூழ்ந்திருக்கின்றன பூச்சிக்கொல்லி மருந்துகள். பெயர்தான் 'பூச்சிக்கொல்லி...’, அவை உண்மையில் அழிப்பது சுற்றுச்சூழலைத்தான். இதில் சமீபத்திய வரவு ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள். பூச்சிகளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தத்தில், பூச்சிகளின் தொடர் வெற்றியைச் சகித்துக்கொள்ள முடியாத மனிதன் கண்டுபிடித்த கொடிய நஞ்சு இது.  
தற்போது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் வீரியம் குறைந்தது எண்டோசல்பான். இந்தப் பூச்சிக்கொல்லி ஏற்படுத்திய பேரழிவுக்கு உதாரணம், கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதி. ஒரு காலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருந்த காசர்கோட்டில் மாநில அரசுக்கு சொந்தமான முந்திரித் தோப்புகளில், 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்பான் தெளிக்கப்பட்டது. அதன் பலன், இன்றைக்கும் அந்தப் பகுதியில் மனிதர்களும் கால்நடைகளும் நரம்பு மண்டலப் பாதிப்பு, மனநலப் பாதிப்புகளுடன் நடைபிணங்களாகத் திரிகிறார்கள். வீரியம் குறைந்த எண்டோசல்பானுக்கே இப்படி என்றால், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் அதைவிட பல மடங்கு வீரியமானவை. பசுமைப் புரட்சியின் விளைவாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, நாடு முழுவதும் அபரிமிதமாக அதிகரித்துவிட்ட ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, பல்வேறு நோய்களாக விகார விஸ்வரூபம் எடுக்கின்றன!
 
கோவில்பட்டியில் உள்ள மண்வளப் பரிசோதனை நிலையத்தின் வேளாண் அலுவலரும் பூச்சியியல் வல்லுநருமான நீ.செல்வம் இது தொடர்பாக விவரிப்பவை அனைத்தும் அதிரவைக்கும் உண்மைகள்...
''மனித இனம் இன்றைக்கு சந்திக்கும் பெரும்பாலான நோய்களுக்கு பூச்சிக்கொல்லிகளும் ஒரு காரணம். பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி நஞ்சுகள் காற்று, மண், நீரில் எஞ்சிவிடுகின்றன. இந்த எஞ்சிய நஞ்சு, பயிர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வழியாக நம் உடலுக்குள் சென்று தங்கி மெள்ள மெள்ளக் கொல்லும் விஷமாக மாறுகின்றன. 100 மில்லி பூச்சிக்கொல்லியைக் குடித்தால், உடனே மரணம். அதே பூச்சிக்கொல்லி பல்வேறு காரணிகள் வழியாக, மனித உடலில் கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து 10, 15 ஆண்டுகளில் 100 மில்லி அளவை எட்டும்போது, உடனடி மரணம் நிகழாவிட்டாலும் உள்உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும். சிறுநீரகம், மூளை, எலும்புகள், ரத்தம் எனப் பல இடங்களிலும் இந்த நஞ்சு பரவும்போது, ரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு, ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு என நோய்கள் உருவாகத் தொடங்குகின்றன. இதையெல்லாம்விட தற்போது சந்தையில் கிடைக்கும் ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகளால், மனித இனம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கப்போகிறது!'' என்கிறார்.
அது என்ன ஐந்தாம் தலைமுறை?  
 
 
 
 
 
தலைமுறை 5:
'நியோ நிக்கோடினாய்டு’ (neo nicotinoid) என அறிமுகம் ஆன ஐந்தாம் தலைமுறை பூச்சுக்கொல்லிகளால் பூச்சிகள் ஆடிப்போயின. பூச்சிகளை முட்டை பொறிக்கவிடாமல் செய்வது, வளர்சிதை மாற்றத்தைத் தடுப்பது, அதன் நரம்பு மண்டலத்தைக் கடுமையாகத் தாக்குவது எனப் பல்வேறு வகைகளில் இவை செயல்படுகின்றன. இத்தகைய கொடிய நஞ்சு நிறைந்த ஐந்தாம் தலைமுறை பூச்சிமருந்தைத் தெளித்து விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களை உட்கொள்ளும் போது, மனிதர்களுக்குள்ளும் இந்த நஞ்சு சென்று அதே பாதிப்பைக் கொடுக்கிறது. உதாரணமாக ஐந்தாம் தலைமுறை நஞ்சுகள் அறிமுகம் ஆன பிறகு, தேன் எடுக்கச் செல்லும் தேனீக்கள் பூக்களின் வாசனை மற்றும் தாங்கள் பறந்து வந்த பாதையை மறந்துவிடுகின்றன. தங்கள் கூட்டுக்குச் சென்று சேர முடியாமல் இடையிலேயே இறந்துவிடுகின்றன. இதனால் தேனீக்கள் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்துவருகிறது. இதனால் இந்த வகை பூச்சிக்கொல்லிக்கு, ஐரோப்பிய யூனியன் 2012ம் ஆண்டு தடை விதித்திருக்கிறது.''
- இப்படி வல்லுநர் நீ.செல்வம் விவரிப்பதைக் கேட்க... கேட்க, நாம் ஒட்டுமொத்தமாக ஒரு விஷச் சூழலுக்குள் வாழ்ந்துகொண்டிருக் கிறோமோ என நடுக்கமாக இருக்கிறது. முக்கியமான ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். தேனீக்கள், உயிர்ச்சூழல் கண்ணியில் மிகவும் முக்கியமான ஓர் உயிரினம். இந்த உலகில் சுமார் இரண்டு லட்சம் பூக்கும் வகை தாவரங்கள் இருக்கின்றன. இவற்றின் உற்பத்தி அயல் மகரந்தச் சேர்க்கை மூலமாகவே நடைபெறுகிறது. இந்த அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது பெரும்பாலும் தேனீக்கள் மூலம்தான். தேனீக்கள் அழிந்தால் மகரந்தச் சேர்க்கை இல்லை; தாவரங்கள் இல்லை; உணவு இல்லை; பிறகு மனிதகுலமே இல்லை. இதை பல ஆண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொல்லியிருக்கிறார்.
'தேனீக்கள் இந்த உலகில் இருந்து முற்றிலுமாக அழிந்தால், தாவர இனமே அழியும். அதில் இருந்து ஐந்து ஆண்டுகளில் மனித இனமும் அழிந்துபோகும்’ என்பது அவரது பகீர் எச்சரிக்கை!  
 
 
இப்போது நமக்கு ஒரு நியாயமான சந்தேகம் எழுகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை எதிர்த்து உயிர்வாழும் ஆற்றலை பூச்சிகள் பெற்றுவிடுகின்றன என்றால், மனிதர்களும் இத்தகைய எதிர்ப்பாற்றலைப் பெற வேண்டும் அல்லவா? என்ன விஷயம் எனில், மனிதர்களின் ஆயுட்காலம் 60 ஆண்டுகள், 70 ஆண்டுகள். ஆனால், பூச்சிகளின் ஆயுட்காலம் ஒருசில வாரங்கள்தான். ஒரே ஒரு வருடத்தில் பூச்சிகள் 20 தலைமுறைகளைக் கடந்திருக்கும். ஐந்து ஆண்டுகளில் 100 தலைமுறைகளைக் கடந்துவிடும். இதனால் பூச்சிகள், இந்தப் பூச்சிமருந்துகளை எதிர்கொள்ளும் ஆற்றலை வெகுவிரைவில் பெற்றுவிடுகின்றன. மனிதர்களால் அது முடியாமல் பாதிப்புகளைச் சுமக்க வேண்டியிருக்கிறது.
ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த 'அல்சைமர்’ என்ற மறதி நோய் இன்றைக்கு 60 வயதைக் கடந்த பெரும்பாலானவர்களுக்கு வந்துவிடுகிறது. பலர் ஏதோ ஒரு வேளையாகச் சென்றுவிட்டு, 'எதற்காக இங்கு வந்தோம்?’ என இடையில் நின்று யோசிப்பதைப் பார்க்கலாம். ஐந்தாம் தலைமுறை நஞ்சுகளால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதன் பக்கவிளைவு இது. மனித உடலுக்குள் செல்லும் நஞ்சுகளைச் செயல் இழக்கச் செய்யும் பணியைச் செய்வது ஈரல். அதற்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா? தினமும் உணவின் மூலமாக உடலுக்குள் நஞ்சு தொடர்ந்து செல்லும்போது, ஈரலின் செயல்படும் திறன் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகச் சொல்லும் மருத்துவர்கள், இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி வேகமாகக் குறைந்து, உடல் நோய்களின் கூடாரமாக மாறிவிடுகிறது என்கிறார்கள்.
 
'எல்லாம் சரிதான். ஆனால், பூச்சிக்கொல்லி தெளிக்காவிட்டால் பயிர்களை பூச்சிகள் கபளீகரம் செய்துவிடுமே... அதற்கு என்ன செய்வது?’ எனக் கேள்வி எழும். ஆனால், பூச்சிக்கொல்லிகள் இல்லாமலேயே பூச்சி தாக்குதலைத் தடுக்க முடியும்.
''முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதுபோல, பூச்சிகளைக்கொண்டே பூச்சிகளை அழிக்க முடியும். சில பூச்சிகள் பயிர்களை உண்பதுபோல, சில பூச்சிகளுக்கு மற்ற பூச்சிகள்தான் உணவு. இவற்றை விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் என்கிறார்கள். இந்த நன்மை செய்யும் பூச்சிகளை நமது வயலுக்கு வரவழைத்துவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் பாடு திண்டாட்டமாகி விடும்!''  என்கிறார் வல்லுநர் நீ.செல்வம். இந்த இடத்தில் நம்மாழ்வார் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
 
'ஒரு விளைநிலத்தில் 100 வகைப் பூச்சிகள் இருக்கின்றன என்றால், அதில் 10 பூச்சிகள் நமக்கு எதிரிகளாக இருக்கலாம். 90 பூச்சிகள் நமக்கு நண்பர்கள். அந்த 10 பூச்சிகளை அழிக்கிறோம் என 90 பூச்சிகளையும் அழித்ததன் பாவத்தை நாம் இன்று அனுபவிக்கிறோம். கையில் தொடக்கூட அஞ்சும் எண்டோசல்பானையும், மோனோகுரோட்டோபாஸையும் சற்றும் குற்ற உணர்ச்சி இல்லாமல் பயிர்கள் மீது தெளித்துவிட்டு, அவை அனைத்து உயிர்களையும் கொன்ற பின், விளைச்சலில் ஊடுருவிக் கலந்த பின், அதை மேலோட்டமாகக் கழுவிவிட்டு தின்பதன் விளைவுதான் இத்தனை நோய்கள். ஒரு காலத்தில் வயல்வெளி முழுக்க தட்டான் பூச்சிகள் பறந்துகொண்டிருக்கும். உயிர்க்கொல்லி மருந்துகளினால் இன்று தட்டான் பூச்சிகள் காணாமல்போய்விட்டன. தட்டான் பூச்சிகள் உணவாக அதிகம் உண்டது கொசு முட்டைகளைத்தான். இன்றைக்கு தட்டான் பூச்சிகளை அழித்து, கொசுக்களைப் பெருகச் செய்து, அதில் இருந்து தப்பிக்க மின்விசிறியைப் போடுகிறோம். அதற்குத் தேவையான மின்சாரத்துக்கு நிலக்கரியை எரிக்கிறோம்; அணு உலை அமைக்கிறோம். ஆனால், எந்த மருந்தாலும் இன்னும் கொசுவை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை!’ என மனம் வெதும்பிச் சொன்னார்.
இப்போது நம் முன்னே இருப்பது 'இயற்கையா... செயற்கையா?’ என்ற எளிய கேள்வி. உயிர்போகும் ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கிறது என்பதை உணர்ந்து, ஆகக்கூடிய அனைத்து வழிகளிலும் ரசாயனங்களைத் தவிர்ப்பதும், இயற்கைக்கு இசைவான வாழ்க்கைமுறைக்குத் திரும்புவதும்தான் இதற்கு சாத்தியமான, நிரந்தரமான தீர்வு!
 
 
 
பூச்சிக்கொல்லிகளும் விவசாயிகளும்!
ரே பூச்சிக்கொல்லியை தொடர்ந்து தெளிக்கும்போது பூச்சிகள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்கின்றன. இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல், பூச்சிகளை அழிக்க ஒவ்வொரு முறையும் மருந்து தெளிக்கும் அளவை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள். எந்தெந்தப் பூச்சிக்கொல்லியை எந்தெந்தப் பயிர்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. உதாரணமாக, காய்கறிப் பயிர்களில் தடைசெய்யப்பட்ட 'மோனோகுரோட்டோபாஸ்’ (Monocrotophos) என்ற பூச்சிக்கொல்லியை மற்ற பயிர்களில் பயன்படுத்திப் பழகிவிட்ட விவசாயிகள், காய்கறி பயிர்களுக்கும் தெளிக்கிறார்கள். ஒரு லிட்டர் தண்ணீருக்கு எத்தனை மில்லி பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையையும் பின்பற்றுவது இல்லை.
கத்திரி, தக்காளியைத் தாக்கும் 'வெள்ளை ஈ’-க்கு எதிரான பூச்சிக்கொல்லியின் பரிந்துரை அளவு 20 கிராம். ஆனால், விவசாயிகள் அதிகபட்சமாக 100 கிராம் வரைகூட பயன்படுத்துகிறார்கள். இப்படிப் பயன்படுத்தும் ரசாயனங்களின் நச்சுத்தன்மை, நீண்ட நாட்களுக்கு அந்தப் பயிர்களிலேயே இருக்கும். உதாரணமாக, தென்னை மரங்களில் வரும் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்த மரத்தின் வேரில் மோனோகுரோட்டோபாஸ் மருந்தைப் புகுத்துவார்கள். அப்படி மருந்து புகட்டிய நாளில் இருந்து குறைந்தது 15 நாட்களுக்கு அந்த மரத்தின் இளநீரைப் பறிக்கக் கூடாது. நடைமுறையில் ஒருபக்கம் மருந்தைக் கொடுத்துக்கொண்டே, மறுபக்கம் இளநீரையும் பறிக்கின்றனர். இதனால் நஞ்சு, இளநீரின் வழியே அதைக் குடிப்பவர்களின் உடலுக்குள் நேரடியாகச் சென்று கலக்கிறது. இதைத்தான் காய்கறிகளிலும் பயன்படுத்துகின்றனர். கத்திரிக்காயில் முதல் நாள் மருந்து தெளிக்கிறார்கள். அடுத்த நாள், அது கடைக்கு வந்துவிடுகிறது. அந்தக் காயில் உள்ள நஞ்சு எங்கே போகும்? நம் வயிற்றுக்குள்தான்!
 
அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?
 
பூச்சிமருந்துகளின் நச்சுப்பிடியில் இருந்து இந்தப் பூவுலகைக் காப்பாற்றவேண்டிய நெருக்கடி நம் முன்பு இருக்கிறது. இதில் அரசாங்கத்தின் முக்கியமான பாத்திரம் என்ன? வேளாண் பொருளியல் நிபுணர் பாமயன் சொல்லும் ஆலோசனை இதோ...
''முதலில் உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை, நம் நாட்டில் விற்பதை முழுமையாகத் தடுக்க வேண்டும். அவை தடை செய்யப்பட்டுள்ளன என்றால், மனிதகுலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து என்றுதானே பொருள். அதைப் பயன்படுத்த அனுமதிப்பது மிகவும் அபாயகரமானது. எண்டோசல்பான் போன்ற பல பூச்சிமருந்துகள் இப்படி இங்கே விற்கப்படுகின்றன. அதேபோல பூச்சிமருந்து பயன்படுத்துவது குறித்த குறைந்தப்பட்ச விழிப்பு உணர்வையாவது நமது விவசாயிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். பயிருக்குத் தண்ணீர்ப் பாய்ச்சுவதைப்போல பூச்சிமருந்து தெளிப்பது நமக்கு நாமே விஷம் வைத்துக்கொள்வதற்கு சமம். எனினும் இது ஒரு தற்காலிகத் தீர்வு மட்டுமே.
நிரந்தரத் தீர்வு... ஒட்டுமொத்த மாநிலமும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதுதான். அரசாங்கமே கொள்கை முடிவுகள் எடுத்து மாநிலம் முழுவதும் இயற்கை வழி வேளாண் முறைகளை அறிமுகப்படுத்தி, பயிற்சி தந்து, ஊக்குவிக்க வேண்டும். இப்படிச் செய்வது இயலாத செயல் அல்ல. சிக்கிம் மாநில அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறது. அங்கு பெரும்பகுதி நிலத்தில் இயற்கை விவசாயம்தான். இப்போது கேரளாவும் இந்தப் பட்டியலில் இணைந்து, அங்கும் இயற்கை விவசாயக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும் இதில் இணைய வேண்டும். அரசாங்கமே முன்னெடுத்துச் செய்தால் ஒருசில ஆண்டுகளில் அதிசயிக்கத்தக்க மாற்றங்களைக் காண முடியும். இயற்கை விவசாயத்துக்கு மாறினால் விஷம் இல்லாத காய்கறிகள் மட்டும் அல்ல... நம் ஒட்டுமொத்த வாழ்க்கைமுறை, உடல் நலம், பொருளாதாரம் அனைத்துமே மேம்பாடு அடையும்!''
 
40 ஆண்டு நஞ்சு!
 
2010-ம் ஆண்டு, 'தேசிய அளவில் பூச்சிக்கொல்லி எச்சங்களைக் கண்காணிக்கும்’ (Monitoring of Pesticide Residues at National Level)  ஆய்வு ஒன்று இந்தியாவில் நடந்தது. அதில் நாம் பயன்படுத்தும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், முட்டைகள், பால் போன்ற அனைத்து உணவுப்பொருட்களிலும் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள், அபாய வரம்பில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. நிலத்தடி நீரிலும் பூச்சிக்கொல்லியின் எச்சங்கள் கலந்துவிட்டன. அதே 2010-ம் ஆண்டு புனேயில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம், கோலா குளிர்பானம் ஒன்றில் பூச்சிக்கொல்லிகளின் எச்சம் கலந்திருப்பதை ஆய்வில் கண்டுபிடித்தது. இது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் குளிர்பானத்தில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட ரசாயனம் டி.டி.டீ. என்ன கொடுமை எனில், இந்தியாவில் 1970-களிலேயே டி.டி.டீ தடை செய்யப்பட்டுவிட்டது. அதற்கு முன்பு பயன்படுத்திய நஞ்சின் எச்சம் நிலத்தடி நீரில் அப்படியே இருந்திருக்கிறது. அதுதான் குளிர்பானத் தயாரிப்புக்காக நிலத்தடி நீரை உறிஞ்சும்போது, தண்ணீருடன் கலந்திருந்திருக்கிறது. யோசித்துப் பாருங்கள்... கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அதன் எச்சம் நீரில் கலந்திருக்கிறது எனும்போது, உணவுப் பயிர்களில் நஞ்சைத் தெளித்து அடுத்த நாளே நாம் சாப்பிடுகிறோம். நன்றாகக் கழுவிவிட்டுச் சமைத்தால் பூச்சிமருந்து போய்விடும் என்றும் நினைக்கிறோம். கழுவினால் போய்விடுவதற்கு, அது தூசி அல்ல... விஷம்!
 
தனி மனிதர்கள் என்ன செய்ய முடியும்?
ல்லா காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களிலும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டுள்ள நிலையில் சாதாரண மக்கள் என்னதான் செய்வது? இவற்றில் இருந்து எந்த அளவுக்கு தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும்? - சித்த மருத்துவர் கு.சிவராமன் சொல்லும் ஆலோசனை என்ன?
''பளபளப்பான காய்கறிகளைத் தேடி வாங்குவதுதான் இன்றைய நுகர்வோரின் மனநிலை. காய்கறி பளபளப்பாக இருக்கிறது என்றால், அதில் ரசாயன மருந்து இருக்கிறது என்று அர்த்தம். உண்மையில் வாடிய சொத்தை காய்கறிகளிலும் கீரைகளிலும் பூச்சிக்கொல்லிகளின் எச்சம் இருக்காது. அவற்றை வாங்கி, சொத்தைப் பகுதியை நீக்கிவிட்டு மீதியைப் பயன்படுத்தலாம். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை வழி விவசாய முறைக்கு மாறிவருகிறார்கள். பெருநகரங்களில்கூட இன்று ஆர்கானிக் பொருட்கள் கிடைக்கின்றன. நாம்தான் அவற்றைத் தேடிப்பிடித்து வாங்க வேண்டும். 'ஆர்கானிக் காய்கறிகள் எங்கு கிடைக்கின்றன என்பது தெரியாதே?’ எனப் பலர் சொல்லக்கூடும். பிடித்த திரைப்படம் எந்தத் தியேட்டரில் ஓடுகிறது, என்ன டிசைன் துணி எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை ஆர்வமாகத் தேடித் தெரிந்துகொள்வதைப்போல, இதையும் ஆர்வத்துடன் அணுகினால் எளிதில் கிடைத்துவிடும்.
 
இதுபோன்ற ஆர்கானிக் பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். அதற்குக் காரணம் உற்பத்திக் குறைவே. அதிகம் பேர் இயற்கைப் பொருட்களுக்கு மாறும்போது தேவை அதிகரிக்கும்; விவசாயமும் அதிகரிக்கும்; விலையும் குறையும். ஆகவே, விலை குறைய வேண்டும் என்றாலே அதிகம் பேர் ஆர்கானிக் பொருட்களை வாங்கும்போதுதான் அது நடக்கும்.
 
நச்சு நிறைந்ததாக மாறியிருக்கும் நமது இன்றைய சூழலை, ஆரோக்கியமான உணவின் மூலம்தான் மாற்ற முடியும். அந்த நல்ல உணவைப் பெறுவதற்கான தடைகளை நம் முயற்சியில் நாம்தான் கடந்தாக வேண்டும்!''

Sunday, October 19, 2014

Chola Kingdom



மேலைநாட்டவர் வெறும் வாணிபத்துக்காகவே கீழைநாடுகளை நாடிக்கொண்டிருந்த நாட்களில், கடல் கடந்து கொடி கட்டி ஆண்ட இனம் நம் தமிழினம். காம்போஜம்(கம்போடியா), ஸ்ரீவிஜயம்(சுமாத்திரா), சாவகம்(ஜாவா), சீயம்-மாபப்பாளம்(தாய்லாந்து), கடாரம்(மலேசியா), நக்காவரம்(நிக்கோபார் தீவுகள்), முந்நீர்ப்பழந்தீவு(மாலைதீவு) போன்ற தூரதேச நாடுகளிலெல்லாம், தமிழ் மூவேந்தரில் ஒருவரான சோழரின் புலிக்கொடி பறந்து அந்நாட்டவரெல்லாம் தமிழருக்கு திறை செலுத்தி பணிந்துநின்ற ஒரு பொற்காலம் சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறது. அவ்வாறு சிறந்திருந்த சோழப்பேரரசு தொடர்ந்து நீடிக்காததன் காரணம், போருக்கும் ஆக்கிரமிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளித்ததும் ஏனைய தமிழரசரான சேரர்-பாண்டியருடன் ஒற்றுமையின்றி இணங்கி நடக்காமையுமே என்பது அதே சரித்திரம் நமக்கு தரும் பாடம்.

வரலாறு சுட்டிக்காட்டிய அதே தவற்றை, மீண்டும் மீண்டும் இன்று வரை தொடர்ந்து நாம் செய்துகொண்டிருப்பதுதான் மீண்டெழ முடியாத ஆழத்தில் நாம் வீழ்ந்துகிடப்பதன் காரணம்.

ஒற்றுமையின்மை…..!!!

இதைத்தவிர தமிழரைப்பிடித்த சனி வேறு எதுவுமே இல்லை. பள்ளன்,பறையன் என்ற சாதிவெறிக்கொடுமைகள்… போதாததற்கு தமிழ்நாட்டுத்தமிழன், இலங்கைத்தமிழன்….., அவ்வளவு ஏன், மட்டக்களப்பான், யாழ்ப்பாணத்தான், மலைநாட்டான்…. அப்பப்பா…எத்தனை பாகுபாடுகள், எத்தனை வேறுபாடுகள்!! இந்த வேறுபாடுகள், பாகுபாடுகள், முட்டாள்தனங்கள் என்றைக்கு நீங்கி தமிழன் ஒற்றுமையுடன் தன் எல்லா சகோதரர்களுடன் பேதமின்றி ஒன்றுபட்டு வாழத்தலைப்படுகிறானோ… அன்றைக்குத்தான் தமிழனுக்கு விமோசனம்…அன்றைக்குத்தான்...

தமிழனுக்கு விடிவுகாலம்…!!!

ராஜேந்திர சோழன் 1000


வங்கக் கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம்... இங்கெல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் சீறிப் பயணித்தவன் ராஜேந்திர சோழன். அவன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு இது. 'கங்கை கொண்ட சோழன்’ புதினம் மூலம் ராஜேந்திர சோழனின் அசகாய சாதனைகளை விவரித்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன். அவரிடம் ராஜேந்திர சோழனின் பராக்கிரமங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக்கேட்டோம்...

''ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு மிகப் பெரிய படை திரட்டி, கங்கை வரை போய் வெற்றிக்கொடி நாட்டி வந்த தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே. அதன்பிறகு மற்ற மன்னர்கள் பகைவரைத் தடுப்பதோடு சரி. தாக்கியதற்கான சரித்திரம் இல்லை.
கங்கை கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த ராஜராம் கோமகன் என்பவர், ராஜேந்திர சோழனின் 1000-வது பட்டாபிஷேக விழாவைக் கொண்டாடத் திட்டங்கள் போட்டிருக்கிறார். நானும் கலந்துகொள்கிறேன். இந்த மாதிரியான விழாக்கள், தமிழர் சரித்திரம் மீது ஆர்வம்கொண்ட இளைஞர்களுக்கு உதவி செய்யும். தமிழ், மேலும் வாழும்!''

''ராஜேந்திர சோழனின் தீரம் எத்தகையது?''

'' 'அலைகடல் மீது பல கலம் செலுத்தி’ என்றுதான் அவன் மெய்கீர்த்தி சொல்கிறது. கடலின் தன்மை தெரிந்து, காற்றின் தன்மை தெரிந்து, இருட்டில் சுடர் மூலம் வழி தெரிந்து, ஆமைகள் போகிற நீரோட்டப் பாதை தெரிந்து, நூற்றுக்கணக்கான நாவாய்கள் அதாவது மிகப் பெரிய மரக்கலங்களோடு அவன் கிழக்கே உள்ள நாடுகளுக்குப் போயிருக்கிறான். இன்றைய சிங்கப்பூர், மலேசியா, ஜாவா, இந்தோனேசியா... எனப் பல நாடுகளில் அவன் கால்கள் பதித்திருக்கிறான். போரில் வென்று பெரும்பொருட்களை தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக்கிறான்.

சோழர்களுக்கு நடு நாடு, தொண்டை நாடு, தாண்டி கீழைச் சாளுக்கிய நாட்டோடு மிக நல்ல நட்பு இருந்திருக்கிறது. அதாவது ஆந்திர மக்களோடு, தமிழர்கள் மிக நெருக்கமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், மேலைச் சாளுக்கியம் என்கிற கன்னட மக்களோடுதான் அவர்கள் எப்போதுமே முரண்பட்டு இருக்கிறார்கள். கீழைச் சாளுக்கியத்தை கன்னடர்கள் கபளீகரம் செய்யாதிருக்க, மணவினை ஏற்பாடு செய்து கீழைச் சாளுக்கியத்துக்கு மிகப் பெரிய படை அனுப்பவேண்டிய நிர்பந்தம் ராஜேந்திர சோழனுக்கு ஏற்பட்டது.
கீழைச் சாளுக்கியத்துக்கு மேல் இருந்து கலிங்க தேசமும் ஒட்ட தேசமும் அவனுக்குத் தொந்தரவு செய்ததால் அதைத் தண்டிக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. அவ்வளவு தொலைவு போய்விட்டதால் இன்னும் சற்று நகர்ந்து, வங்காளத்தில் புகுந்து மிகப் பெரிய கங்கை நதியையும், படகுகளையும், முகத்துவாரத்தையும் அவன் பார்த்து வியந்திருக்கிறான். யானைகள் வைத்து பாலம் கட்டி, அதன் மீது குதிரைகள் ஏற்றி மறுகரைக்குப் போயிருக் கிறான். இடைவிடாது மழை பெய்யும் அசாம் வரைக்கும் அவன் போயிருக்க வேண்டும்.

அங்கு இருந்த பெண்டிர், பண்டாரங்களை மட்டும் அல்ல... கோயில் சிலைகளையும் பெயர்த்து எடுத்து வந்திருக்கிறான். அவன் கொண்டுவந்த பல சிலைகளை என்ன காரணத்தினாலோ கங்கை கொண்ட சோழபுரத்தில் வைக்காமல், அதன் அருகே செங்கமேடு என்ற கிராமத்தில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்படுகின்றன. எந்த வழிபாடும் இல்லாமல் இருக்கின்றன!''

''ராஜேந்திர சோழனின் சொந்த வாழ்க்கையில் என்ன செய்தி இருக்கிறது?''

''அவனுக்கு மனைவியர் பலர். அதில் வீரமா தேவி என்பவள் மிக நெருக்கம். ராஜேந்திர சோழன் தன் 84-ம் வயதில் மரணமடைந்தபோது அவளும் உடன்கட்டை ஏறினாள். ராஜேந்திர சோழன் தன் மத்திம வயதில் திருவாரூரைச் சேர்ந்த பரவை என்கிற தேவரடியாரை நேசித்தான். தேவரடியார் என்று அப்போது அழைக்கப்பட்டவர்கள், தங்களை கோயிலுக்கு எனத் தீர்மானம் செய்தவர்கள்; நித்யசுமங்கலிகள். அவர்களைத் திருமணம் செய்துகொண்டால் அது ஒரு வைப்பாட்டி நிலையில்தான் இருக்கும். ஆனால், பரவையின் அறிவிலும் அழகிலும் ஈர்க்கப்பட்டு, ராஜேந்திர சோழன் அவளை அவ்விதம் நடத்தாமல், தன் தேரில் ஏற்றி திருவாரூர் முழுவதும் சுற்றி வந்தான். அவள் விரும்பியதால் செங்கல்லால் அமைந்த திருவாரூர் கோயிலைக் கருங்கல்லால் உருவாக்கி, அதன் மீது தங்கத் தகடு வேய்ந்து, அவளை முதன்முதலில் சந்தித்த இடத்தில் ஒரு கல்வெட்டு பொறித்திருக்கிறான். அவள் உயரத்துக்கு ஒரு வெண்கலக் குத்துவிளக்குச் செய்யச் சொல்லி அதைக் கருவறையில் வைத்து ஏற்றியிருக்கிறான். இன்று இருக்கும் விளக்கும் அவன் கொடுத்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது!

இதே விதமாக ராஜேந்திர சோழன் தன்னுடைய தந்தையின் அனுக்கிக்கு... அதாவது காதல் தோழிக்கு ஒரு பள்ளிப்படை கோயில் எழுப்பியிருக்கிறான். அவளுக்கு பஞ்சவன் மாதேவி என்று பெயர். பஞ்சவன் மாதேவி பட்டமகிஷியும் அல்ல; மனைவியும் அல்ல; அனுக்கி. அதாவது, கேர்ள் ஃப்ரெண்ட்போல. ஆனால், அவள் ராஜேந்திரனால் அங்கீகரிக்கப்பட்டு, தாய் எனப் போற்றியிருக்கிறான். அந்தப் பள்ளிப்படை கோயில் இன்றளவும் நன்றாக இருக்கிறது!''

''நாட்டின் நிர்வாகம் எப்படி இருந்தது?''

''மிகச் சிறப்பாக இருந்தது. விவசாயத் தொழில்கள் மிக அற்புதமாக நடைபெற்றன. ஒரு காசுக்கு 150 வாழைப்பழம். ஒரு பொற்காசுக்கு இரண்டு பசு மாடுகள், ஓர் எருமை. ஒரு பொற்காசுக்கு ஆழாக்கு ஏலக்காய் என வியாபாரங்கள் நடந்திருக்கின்றன. பசு சல்லிசாகக் கிடைக்கும். ஆனால், ஏலக்காய் கேரளத்தில் இருந்து வரவேண்டும். அதனால் விலை அதிகம். கம்மாளர்களுக்கும் சிற்பிகளுக்கும் உலோகத் தச்சர்களுக்கும் மரத் தச்சர்களுக்கும் மிகப் பெரிய மரியாதை இருந்தது. அவர்கள் நல்லது கெட்டதுக்கு சங்கு ஊதிக்கொள்ளவும், வீட்டுக்கு இரண்டு வாசல் வைத்துக்கொள்ளவும், சுண்ணாம்பு அடித்துக்கொள்ளவும், செருப்பு அணிந்துகொள்ளவும், பல்லக்கில் ஏறவும், தோளில் துணி போத்திக்கொள்ளவும், தலைப்பாகை அணியவும், பூணூல் அணிந்துகொள்ளவும் ராஜேந்திர சோழன் உரிமை கொடுத்திருக்கிறான். அளவான வரி, அனைவருக்கும் அத்தியாவசிய வசதிகள், கரை புரண்டோடிய செல்வம்... என வளமும் நலமுமாக இருந்தது சோழ சாம்ராஜ்ஜியம்!''

''இப்போது அந்தச் செல்வங்கள் எல்லாம் எங்கே?''

''400 வருட பகைமையைத் தீர்த்துக்கொள்ள, பாண்டியர்கள் படையெடுத்து வந்து சோழர்களைத் தாக்கி ஒரு தூணும் நிற்கவொட்டாது இடித்து, கோவேறு கழுதை பூட்டி, பேய் கடுகு விதைத்து ஊரை நாசம் செய்தார்கள். பொன் பொருட்களை வாரிக்கொண்டு போனார்கள். அவை அடுத்த தலைமுறையிலேயே டெல்லியில் இருந்து வந்த இஸ்லாமிய தளபதியால் கொள்ளையடிக்கப் பட்டன. 36 யானைகள் முழுவதும் பொன், பொருட்கள் டெல்லிக்குக் கொண்டுபோகப்பட்டன. டெல்லியில் உள்ள ஆட்சியாளர்களை அடுத்த 120 வருடங்களில் ஆங்கிலேயர்கள் தாக்கி, அந்தப் பொன் பொருட்களை எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குப் போனார்கள். இங்கிலாந்தின் பல சாலைகள், கட்டடங்கள் இந்தப் பொற்காசுகளால் நிர்மாணிக்கப்பட்டவை; தமிழக செல்வத்தால் வளர்ந்தவை!''

''பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் ஏன் பகை?''

''ஓர் இனம் மற்ற இனத்தால் அழிக்கப்படாது. எப்போதுமே ஓர் இனம் இரண்டாகப் பிரிந்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். தமிழ் பேசும் பாண்டியர்களைக் கடுமையாகத் தாக்கி தமிழ் பேசும் சோழர்கள் துன்புறுத்தினார்கள். கன்னியாகுமரி வரை துரத்தினார்கள். பனங்காட்டுக்குள் வாழச் செய்தார்கள். அதே பாண்டியர்கள் பல தலைமுறைகளுக்குப் பிறகு மிக வெஞ்சினத்தோடு, சோழர்களின் பல்வேறு பெருமைகளை அழித்தார்கள். மிகச் சிறந்த தமிழர் நாகரிகம் ஒன்று 10 சதவிகிதம் மட்டும்தான் பார்க்க, கேட்கக் கிடைத்தன!
இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்த ராஜேந்திர சோழன் காஞ்சிபுரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரில் இறந்துபோனான். அவன் கடைசியாகத் தரிசித்த ஒரு கோயில் இருக்கிறது. சுற்றிலும் பனைமரங்கள்; பொட்டல்காடு. ஏன் அந்தக் கோயிலுக்கு வந்து இறந்துபோனான் என்று மனம் பதறுகிறது. 'இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்துவிட்டு, அங்கே அந்தச் சிறிய கிராமத்தில் இறந்துபோனாயே... ஏனப்பா?’ என்று அலறத் தோன்றுகிறது!''

- கம்மியக் குரலில் முடிக்கிறார் பாலகுமாரன்.

விஜயநகர் பேரரசர்கள்.


இவர்கள் யார் புதிதாக? எங்கிருந்து வந்தார்கள்? – ஒரு வரலாற்று நிகழ்வு

ஒரே மொழி பேசக்கூடிய சோழனும் பாண்டியனும் நாட்டின் எல் லைகளை இரண்டாக வகுத்து கொண்டு ஒருவனை ஒருவன் மாறி மாறி அடித்துக் கொண்டு போர்க் களத்தில் செத்து மடியும் வேளையில், தாங்கள் கட்டி வை த்த கோயில்களுக்கும், செய்து வைத்த அற்புதமான ஐம்பொன் திருமேனிகளுக்கும் அப்படியொ ரு ஆபத்து வந்து சேரும் என்று கனவிலும் அவர்கள் நினைத்திரு க்கமாட்டார்கள். 

இருவரும் போரிட்டு ஒரு வழியாக
சோழன் சுவடே தெரியாமல் சுத்தமாக அழிந்தே விட, பாண்டியன் சற்று பலம் குன்றி இருந்த நேரத்தில் வடக்கில் இருந் து வந்தார்கள் முஸ்லிம் ம ன்னர்கள், 
கோயில்கள் அனைத்தும் அடித்து தரை மட் டமாக்கப்பட்டது, சிலைகள் அனைத்து உடைத்து நொ றுக்கப் பட்டது, தடுத்தவர்க ளின் தலை துண்டிக்கப்பட் டது, அப்படி ஒரு சம்ப‌வத் தை தமிழ் மக்கள் அது வரை பார்த்தததே இல்லை,

ஜென்ம விரோதிகளான சோழனும் பாண்டியனும், சாளுக்கியனும், பல்லவனும் மோதிக்கொண்டபோது கூட ஒருவர் நாட்டை மற் றொருவர் கைப்பற்றும் போது அவர்கள் எழுப்பிய கோயில்களை எதிரி நாட்டவர் தொட்டதில்லை, இவர்கள் யார் புதிதாக? எங்கிருந்து வந்தார்கள்? 

அது ஒரு குழுப்பமான காலம், தமிழத்தை ஆண் ட மூன்று பெரிய பேரரசும் வீழ்ந்து விட்டது. யார் இனி நம்மையும் நம் கோயில்களையும் காப் பாற்றப்போகிறார்கள் என்று தலை மீது தமிழ் மக்கள் கை வைத்து அமர்ந்திருந்த நேரத்தில் , துங்கபத்தரை நதிக்கரை ஓரத்தில் அற்புதமான ஒரு ஒளி உதயமானது, முஸ்லிம் மன்னர்களிடம் போராடி தமிழகத்தில் இருந்து அவர்களை முழுவதும் விரட்டி, தமிழகம் முழுவதையும் தங்கள் ஆட்சியின்கீழ் கொண்டு
வந்தவர்கள் விஜயநகர் பேரரசர்கள்.

கர்நாடக மாநிலம் ஹம்பி யில் அமைந்திருந்தது அவ ர்களின் தலைநகர் நமக்கு மேலே இருந்ததால் அவர்களைக் கடந்து தமிழகம் வர முடியவில்லை. பெரிய அரணாக இருந்து தடுத்து நம் ஊரில் இருக்கும் ஆயிரம் ஆயிரம் கோயில்களை காப்பாற் றியவ ர்கள் அவர்கள். 

தமிழகத்திற்கு அது ஒரு பொற்க்காலம் என்றே சொல்லலாம் பாதி யில் நின்ற கோயில்களை முழுமை யாக்கியது, விண்ணை முட்டும் ராஜ கோபுரங்களை எழுப்பியது, ஆயிரம் கால் மண்டப ங்கள் அமைத்தது ,அந்த மண்டபத்தில் நிற்கும் தூண்களில் ஆள் உயர பிரம் மாண்ட அற்புத சிலைகள் செய்தது என அவர்கள் செய்து வைத்துச் சென்ற வேலைகள் ஏராளம், அற்புத மான மனிதர்கள், அவர்களின் வரலாறு நம்மில் பலருக்கு தெரியவே தெரியாது. பண்டைய ரோம் நகரைக் காட்டி லும் பெரிய நக ராக விளங்கிய ஹம்பி கடைசியாக முஸ்லிம் மன்னர்களால் முற்றிலும் அழிக்கப்பட்டு, அவர்கள் அங்கு எழுப்பி இருந்த அற்புதமான கோயில்கள் அனைத்தும் இடித்து நொறுக் கப்பட்ட எச்சங்களை இன்றும் நாம் காணலாம்.

தங்கள் கோயில்களை இழந்து அவர்களை அங்கு தடுத்து நிறுத்தி இருக்காவிடில் இன்றைக்கு இங்கும் எதுவுமே இருந்திருக்காது! அந்த அற்புதமான வீரர்கள் இன்றும் நம்முடைய கோயில்களி ல் குதிரையின்மீதி வீரமாக தாவிக்கொண்டு தான் இருக்கிறார் கள், திரும் பிப் பார்க்க கூட ஆளில்லாமல்!

Monday, September 08, 2014

தமிழக வரலாற்றை மாற்றிய இரு முக்கியமான போர்கள்



வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்திருந்திருந்தாலும், சில போர்களால் தமிழகத்தின் வரலாறே மாறியுள்ளது, அப்படியான போரில் குறிப்பிட்டு நாம் பார்க்க வேண்டியது " தெள்ளாற்றுப் போர் ". இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

" தெள்ளாறு ", இன்றைக்கு, திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம், பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் வலிமையுடன் ஆட்சி புரிந்தவர்கள். இவர்களை அழிக்க எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும், குறிப்பாக சோழரும், பாண்டியரும் ஒன்றாக இணைந்து பல்லவ பேரரசின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைத்தது இங்கு தான்,பாண்டியர்கள் பேரரசர்கள், சோழர்கள் அங்கும் இங்குமாய் சிற்றசர்களாகவே இருந்தனர்,அப்போது ஆட்சி செய்த வந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850 ) ,இங்கு நடந்த போரில் சோழர் மற்றும் பாண்டிய கூட்டுப் படையை எதிர் கொண்டு அதில் வெற்றியும் கண்டான், அதுமட்டுமல்லாது அவர்களை கடம்பூர்,வெறியலூர்,வெள்ளாறு,பழையாறு ஆகிய இடங்களில் எதிர்கொண்டு பாண்டிய நாட்டு எல்லை வரை ஓட ஓட விரட்டினான், சோழர்கள் பல்லவர்களுக்கு கப்பம் கட்ட உடன்பட்டனர் !. அது முதல் நந்திவர்மன் " தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் " என போற்றப்பட்டான்.இந்த போர் குறித்து ஏராளமான கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன, அவன் மீது பாடப்பெற்ற " நந்திக் கலம்பகத்தில் ' இந்த தெள்ளாற்று வெற்றியினை பலவாறு புகழந்துரைக்கிறார்கள் . இந்த போரின் வெற்றிக்குப் பிறகு பல்லவர்கள் பெரிதும் வலிமை பெற்றனர், இறுதிக்காலம் வரை பகைவர்கள் நந்திவர்மனை கண்டு அஞ்சியே இருந்தனர்.பல்லவர்கள் தங்கள் வலிமையை நிலைநிறுத்திய போராக இது விளங்கியது.

அடுத்தாக வடக்கே கங்கை வரையும், தெற்கே கடல் கடந்து கடாரம் வரை ஆட்சி புரிந்த சோழப் பேரரசு !.விஜயலாயன் தொடங்கி,ராஜ ராஜன் சோழன் , ராஜேந்திரன் சோழன் என்று புகழின் உச்சிக்கே சென்ற சோழர்கள் கி.பி-1279 பிறகு எங்கே சென்றார்கள் ? அவர்கள் வீழ்ந்த இடமும் இந்த "தெள்ளாறு" தான் . சோழப் பேரரசு மூன்றாம் ராஜ ராஜனின் ஆட்சியின் போது அழிவின் விளிம்பில் இருந்தது, தெற்கே " சுந்தர பாண்டியன் " சற்றே வலிமை பெற்று, சோழர்களின் மீது போர் தொடுத்தான்,பாண்டியனுக்கு அஞ்சிய சோழன் காஞ்சிபுரத்தை நோக்கி ஓடினான், அவனை காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த தெள்ளாற்றில் இடைமறித்து போர் புரிந்தான், அதில் மூன்றாம் ராஜ ராஜன் தோல்வியுற்றான்,அது சோழர்களுக்கு பெரும் பின்னடைவாய் இருந்தது.பின்னர் காடவ மன்னன் அவனது தலைநகரான சேந்தமங்கலத்திற்கு கொண்டு சென்று அங்கு சோழனை சிறை வைக்கப்பெற்றான்.இதை அறிந்த பாண்டியனும், சோழனின் மாமனாரான மேலைச் சாளுக்கிய மன்னனும் சேந்தமங்கலத்தின் மீது போர் தொடுத்து சோழனை சிறை மீட்டனர், சேந்தமங்கலமும் அதன் கோட்டையும் முற்றிலுமாக அழிக்கப்பெற்றது, இங்கு தற்போது தமிழக அரசு தொல்லியல் துறை அகழாய்வு செய்து கோட்டைப் பகுதிகளையும், காடவர் தலைநகரையும் வெளிக்கொணர்ந்தது.மூன்றாம் ராசா ராசனுக்கு பின், மூன்றாம் ராஜேந்திரன் சிறிது காலம் ஆட்சி புரிந்தான், பின்னர் கி.பி-1279- ல் சோழப் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது !.

இவ்வாறு இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போருக்கு பின்னர் தமிழகத்தின் வரலாற்றின் பாதையே மாறியுள்ளது, ஒரு வேலை முதல் போரில் பல்லவர்கள் தோற்று பாண்டியர்கள் வெற்றிபெற்றிருந்தால், சோழ வம்சமே மீண்டும் வராமல் போயிருக்கும், அவர்கள் பாண்டியர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாகவே இருந்திருப்பார்கள் !.தஞ்சை கோயில், கடாரம் வரை ஆட்சி என தமிழர்களின் புகழ் விரிவடையாமலே சென்றிருக்கலாம் !. ஒரு வேலை இரண்டாவதாக காடவர்களுடன் நடந்த போரில் சோழர்கள் வென்றிருந்தால் ? இன்னும் அவர்கள் வலிமையுடன் தமிழகத்தை ஆண்டிருப்பார்கள், கடாரம் வரை கப்பலில் சென்று போர் புரிந்த சோழர்களுக்கு,ஆங்கிலேயர்களை விரட்ட எவ்வளவு காலம் பிடித்திருக்கும் ?!..

Monday, September 30, 2013

''இது ஆண்டவன் கட்டளை!'' - சூப்பர் ஸ்டாரின் இதயம் திறக்கிறது

எங்கோ தொலைதூரச் சிகரத்தின் அடர்ந்த பனிக் குகையில் மௌனத்தின் மத்தியில் உற்பத்தியாகி, பிரதேசமெங்கும் உருகிப் பெருகி வழிந்தோடும் மகா நதியான கங்கையின் பிரணவ மந்திரப் பேரோசை தவிர, சில்லிடும் அமைதி!
மனசுக்குள்ளும் மழை பெய்ய ஆரம்பிக்கும் நேரம்... குளிர்க் காற்றுக்கு இதமாக, காசித் துண்டை உதறி நெற்றியில் இறுக்கிக் கட்டிக்கொள்கிறார் ரஜினி.
சவரம் செய்யப்படாத முகம்; கிழிசலான கதர்ச் சட்டை; இடுப்பில் காவி வேட்டி; காலில் ரப்பர் செருப்பு; கையில் ஊன்றுகோல். அந்த குளிர் கண்ணாடியும், லெதர் பேக்கும் இல்லையென்றால் ரஜினி... கூட்டத்தில் ஒரு முகம்!
ன்ன இல்லை இவரிடம்?
இதோ இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படம்.... 'சந்திரமுகி’!
தமிழ் சினிமாவின் அத்தனை ரிக்கார்டுகளையும் அடித்து நொறுக்கி தூக்கித் தூரப்போட்டுவிட்டு, துள்ளலாய் ஓடுகிறது படம்.
'சூப்பர் ஸ்டார்’ என்பது ஆளுக்காள் அமரத் துடிக்கிற மியூசிக்கல் சேர் அல்ல; அது ரஜினியின் அடையாளம்... அடையாளங்களில் ஒன்று!
இந்த ஜென்மத்துக்குப் போதுமான புகழ் பார்த்தாகிவிட்டது. இன்னும் ஏழு தலைமுறைக்குத் தேவையான பொருள் சேர்த்தாகிவிட்டது. இவர் பேசினால் செய்தி. பேசாவிட்டாலும் செய்தி. புதிய படத்துக்கு பூஜை போட்டாலோ கொட்டும் கரன்ஸி அருவி. நிரந்தரமாக லட்சக்கணக்கான இதயங்களிலும், நிம்மதி தேடும்போதெல்லாம் இமயத்திலும் வசிக்கிற வாழ்க்கை!
சம காலத்தில் இவர் போல் யாரும் சிகரங்களைத் தொட்டதுமில்லை. சர்ச்சைகளில் சிக்கி, இவரளவுக்கு எவரையும் விமர்சனங்கள் சுட்டதுமில்லை!
'சந்திரமுகி’யின் வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு, தன் நன்றியைச் சொல்ல அழைத்தார் ரஜினி. வீட்டிலேயே விருந்து படைத்தார். நள்ளிரவு தாண்டியும் நடந்தது கொண்டாட்டம். விடிந்தபோது, ரஜினி சென்னையில் இல்லை. தன் குருவின் பாதம் பணிந்து நன்றி சொல்ல பயணமாகிக்கொண்டு இருந்தார் இமயமலைக்கு!
டெல்லிக்கு விமானம். அங்கிருந்து ரிஷிகேஷ். பிறகு ராணிகேத். இடுப்பொடிக்கிற இரண்டு நாள் பயணம் காத்திருக்கிறது. ரஜினியுடன் வழித்துணையாக பாபாஜி தரிசனத்துக்குப் பயணமாகிற நண்பர் ஹரி உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார். ''ரஜினி என்ற நடிகருக்கு உங்களைப் போல நானும் ஒரு ரசிகன். ஆனால், ரஜினி என்கிற மனிதருக்கு நான் நண்பன். 'இருந்தும் இல்லாமல் இரு’ என்பார்களே.. அதற்கு எனக்குத் தெரிந்த ஒரே உதாரணம் ரஜினிதான்'' என்கிறவர் எதையோ நினைத்துக்கொண்டு சிரிக்கிறார்.
''ரஜினிக்கும் எனக்கும் இருக்கிற நட்பு தெரிந்த சிலர், 'ஏன் சார் ரஜினி அடிக்கடி இமயமலைக்குப் போறார்? சாமியார் ஆகிடுவாரா?” என்று என்னிடம் கேட்பார்கள்.
துறவு என்பதில் பலவிதங்கள் உண்டு. மகா பெரியவரும் துறவிதான். மதர் தெரஸாவும் துறவிதான். பெரியவர் தெய்வங்களைத் தொழுதார். மக்களுக்கு ஆசிர்வாதங்களை வழங்கினார். தெரஸா தெருவோர தொழுநோயாளிகளையே தெய்வங்களாகப் பார்த்தார். அவர்களுக்குச் சேவை செய்தார். அப்படி ரஜினியிடம் என்னைக் கவர்ந்தது அவரது பற்றற்ற மனசு!'' என்கிறார் ஹரி.
''ரஜினி நிறைய குட்டிக் கதைகள் சொல்வார் தெரியுமா'' என்று பயணத்தை சுவாரசியப்படுத்துகிறார் ஹரி.
இதோ ரஜினி சொல்லும் கதை!
''ஒரு தாய் ஒட்டகமும் அதன் குட்டி ஒட்டகமும் பேசிக்கொண்டு இருந்தன. குட்டி மனசில் நிறைய கேள்விகள். 'நமக்கு ஏன் அம்மா இத்தனை நீளமான கால்கள்?’ என்றது குட்டி. 'அதுவா மகனே, பாலைவனத்தில் மிக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதுவும் மணல் பூமி. அதனால்தான் நமக்கு நீண்ட கால்கள் வழங்கினார் கடவுள்’ என்றாள் தாய்.
'நமக்கு ஏன் இத்தனை முரட்டு உதடுகள்? கற்கள் போல பற்கள்?’
'அதுவா மகனே, பாலைவனத்தில் கிடைப்பதெல்லாம் முள் தாவரங்கள்தானே. அவற்றை மெல்லுவதற்கு வசதியாகக் கடவுள் செய்த ஏற்பாடு!’
'நமக்குள் ஏன் இத்தனை பெரிய தண்ணீர்ப் பை?’
'அதுவா மகனே, பாலைவனத்தில் தண்ணீர் கிடையாதே. அதனால் பயணத்தில் தாகமெடுத்தால், நா வறண்டு நாம் தடுமாறக் கூடாது என்று கருணைகொண்டு கடவுள் தந்த பரிசு இது!’ என்று தாய் ஒட்டகம் பதில் சொன்னதும், 'அதெல்லாம் சரி, பிறகு ஏனம்மா நாம் இப்படி சர்க்கஸில் இருக்கிறோம்?’ எனக் கேட்டதாம் குட்டி ஒட்டகம்.”
இது ரஜினிக்கு மிகவும் பிடித்த தத்துவார்த்தமான குட்டிக் கதை. ''நாமெல்லாம் சர்க்கஸ் ஒட்டகங்கள்தானே!’ எனச் சிரிப்பார் ரஜினி'' என ஹரி சொல்லும்போதே சிரிக்கிறார்.
சாலையோர தேநீர்க் கடைக்குள் நுழைகிறார் ரஜினி.
யாரோ புது கஸ்டமர் என்பதுபோல எட்டிப் பார்க்கிற கடைப் பையன், ''ரஜினி சாப்!'' என அலறுகிறான் பரவசமாக!
சத்தம் கேட்டு ஏழெட்டு குட்டிப் பையன்கள் பக்கத்துக் காட்டுக்குள்ளிருந்து ஓடி வருகிறார்கள். டீக்கடை மாஸ்டர் அமிதாப்பின் ரசிகராம். 'அந்தா கானூன்’ பார்த்த பிறகு ரஜினிக்கும்.
மரத்தடியில் அமர்கிற ரஜினி, அந்த சின்னப் பையன்களிடம் பேச ஆரம்பிக்கிறார். காட்டு ரோஜாக்கள் போல சிவந்த நிறம். பூனைக் கண்கள். குளிர் அந்தப் பையன்களுக்கு கூடுதல் வசீகரத்தை வழங்கி இருக்கிறது. 'மித்வா சுன் மித்வா...’ என லகான் படப் பாடலை கீச்சிடும் குரலில் பாடிக் காட்டுகிறான் பையன். தேயிலை மணக்கும் பானம் கொஞ்சம் கதகதப்பு கூட்டுகிறது. உழைத்தால்தான் பிழைப்பு என வாழ்கிற அந்தப் பையன்கள், ரஜினிக்கு அவரது பெங்களூர் பால்ய காலத்தை நினைவுப்படுத்தி இருப்பார்கள் போல. தன்னை மறந்து ஏகாந்தமாக ரசிக்கிறவர், ''நல்லா பாடுறாப்லல்ல!'' என்கிறார் தன் புருவம் சொடுக்கிச் சிரித்து.
பயணம் தொடர்கிறது!
மிழ்நாடே கொண்டாடுகிற ஒரு நடிகர், அந்த ஒளிவட்டம் எதுவும் இல்லை. பாதுகாப்புக்கு யாரும் இல்லை. படை பரிவாரங்கள், உதவியாளர்கள் இல்லவே இல்லை. தன் பையைத் தானே சுமந்தபடி, பாத யாத்திரையாகச் செல்கிறார்.
கற்பிழக்காத காற்று. இரைச்சலே இல்லாத இயற்கை. ''நம்ம ஊர்ல இருக்கிற வசதிகள் என்னென்னவோ இங்கே இல்லைதான். ஆனா இங்கே இருக்கிற அமைதி வேறெங்கேயும் இல்லை. அமைதியான சூழல், நம்ம மனசைத் திறக்கும். மனசு அமைதியா இருந்தா எண்ணம் தூய்மையாகும். எண்ணம் தூய்மையா இருந்தா, எல்லோரும் சுத்தமா இருப்போம்ல!''
மயமலைத் தொடரின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றான நந்தாதேவியின் (25,661 அடிகள்) அடிவாரத்தில், அல்மோரா மாவட்டத்தில் இருக்கிறது ராணிகேத். அங்கிருந்து துரோண்மலை மீது ஏற வேண்டும். புலிகள் உலவும் அந்த மலை உச்சியில், காலங்கள் தாண்டிய கம்பீரத்துடன் காத்திருக்கிறது பாபாஜியின் கற்குகை!
'பாபாஜி’ என்றால் 'வணக்கத்துக்குரிய தந்தை’ என்று பொருள்.
மூன்றாவது முறையாக தன்னைத் தரிசிக்க, தன் தாள் பணிந்து நன்றி சொல்ல வருகிற சிஷ்யனுக்காக, இந்தமுறை சிலிர்ப்பூட்டும் அனுபவம் தரக் காத்திருக்கிறார் மகாமுனி பாபாஜி மகராஜ்!
த்தனை காலத்தில் ஆறேழு பேர் மட்டுமே நுழைய முயற்சித்த குகை அது. குத்திக் கிழிக்கும் கூரிய கற்கள் கொண்ட அபாயகரமான குழி அது. அதற்குள் ஒரு மனிதன் உடலைத் திணித்து நகர்ந்து நகர்ந்து செல்வதென்பது, உயிரைப் பணயம் வைக்கும் தருணம்.
விடுகதைதானோ இவர் வாழ்க்கை...
விடை தேடித்தானோ இந்தப் பயணம்!

Sunday, May 05, 2013

Ancient tamils follow the Trutles and create the Sea route to travel around the world

பழந்தமிழர்கள் ஆமைகளின் வழித்தடத்தைப் பின்பற்றி கடல்வழிகளைக் கண்டறிந்து உலகம் முழுவதும் கடல்வழிப் பயணம் மேற்கொண்டனர் என்று ஒருங்கிணைந்த பெருங்கடல் கலாசார ஆய்வு அறக்கட்டளை தலைவர் சிவ. பாலசுப்பிரமணி என்ற ஒரிசா பாலு தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் மாதாந்திர கருத்தரங்கு எழும்பூர் தமிழ் வளர்ச்சித் துறை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொல்லியல்துறை ஆணையர் (பொறுப்பு) சீ.வசந்தி தலைமை வகித்தார். இதில் ஆமைகளின் கடல் வழியில் -கடலோடி தமிழர்களின் தொன்மை" என்ற தலைப்பில் ஒரிசா பாலு பேசியதாவது:

ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.

முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர்.

தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது. கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர் கிழக்கில் இருந்து வந்த வேளாண் தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன. ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன.

கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு. இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது ஆராயத்தக்கது. பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன. பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான். கரையோரப் பகுதி வாழ்வியல்கள் இன்னும் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்றார் பாலசுப்பிரமணி.

Wednesday, February 27, 2013

News About Dwaraka...

5200 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய.. கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகை இருந்தது உண்மை தான்!

ராமர் கட்டிய சேது பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளாக ராமேஸ்வரம் கடலில் மூழ்கி இருப்பதைப் போல, மகாபாரத காலத்தில் கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகையும் 5200 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியது. தொல்லியல் ஆராய்ச்சியில், புதைந்த பகுதிகளைக் காண முடிந்ததால் துவாரகை இருந்தது உண்மை என்பது நிரூ...பணம் ஆகியுள்ளது.

தொல்லியல் ஆராய்ச்சி: இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம், துவாரகை கடல்பகுதியில், 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. குஜராத் மாநிலம் லோத்தல் பகுதியில் தொல்லியில் ஆய்வாளர் எஸ்.ஆர். ராவ் தலைமையில் ஆய்வு நடந்தது.
 
பழமையான நகரமான துவாரகை கடலுக்குள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆய்வின்போது துவாரகையின் ஒருபகுதியான பேட் துவாரகையில் கி.மு.1528ம் ஆண்டைச் சேர்ந்த மண்பாண்டத்தையும், கடற்கரையில் 560மீட்டர் நீளமுள்ள சுவர் ஒன்றையும் கண்டனர். இப்பகுதி கிருஷ்ணர் ஆண்ட துவாரகை என முடிவு செய்தனர். இந்த முடிவுகளை எஸ்.ஆர்.ராவ், தி லாஸ்ட் சிட்டி ஆப் துவாரகா என்னும் நூலாக ஆங்கிலத்தில் வெளியிட்டார். இந்த ஆய்வு மூலம் மகாபாரதம் உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்பது உறுதியானது. மகாபாரத முடிவில் வந்த கலியுகம் தொடங்கி, 5113 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு 87 ஆண்டுகளுக்கு முன்பே துவாரகை மூழ்கியதால், இந்நகரம் மூழ்கி 5200 ஆண்டுகளாகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

பேட் துவாரகை: கோமதி நதிக்கரையில் அமைந்த துவாரகாவுக்கு துவாரமதி, துவாரவதி, குசஸ்தலை என்ற பெயர்களும் உண்டு. துவாரகை அருகிலுள்ள பேட் துவாரகையிலும் கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இங்கு 18 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்ட கட்டடத் தொகுப்புகள் தென்படுகின்றன. சுவரைக் கட்ட பயன்படுத்திய கற்கள், 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்ததாக உள்ளது. பேட் துவாரகை ஒரு தீவுப்பகுதியாகும். இங்கு தான் கிருஷ்ணர், சத்தியபாமா, ஜாம்பவதி ஆகியோர் பொழுதுபோக்க வந்துள்ளனர். ஆங்காங்கே பூந்தோட்டம், ஏரிகளும் உள்ளன.

மூழ்கிய துவாரகை: கடலில் மூழ்கிய துவாரகையில், அடிப்படை வசதியுள்ள குடியிருப்பு, வியாபார இடங்கள், அகன்ற சாலை, அழகான துறைமுகம் இருந்துள்ளன. தங்கம்,வெள்ளி, நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட கட்டடங்களும் இங்கு பிரசித்தமாக விளங்கியுள்ளன. குரு÷க்ஷத்ர யுத்தம் முடிந்து 36 ஆண்டுகளுக்குப்பின், துவாரகை முழுவதும் கடலுக்கடியில் மூழ்கியது. இதனை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர் யாதவர்களை பிரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாத்தார். தற்போது இப்பகுதி சோம்நாத் எனப்படுகிறது. அழிந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பலில் சென்று பக்தர்கள் பார்ப்பதற்கு இந்தியக்கடல் அகழ்வாராய்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. தேவலோக தச்சன் விஸ்வகர்மா இந்நகரத்தைக் கட்டியதாக புராணங்கள் சொல்கின்றன.

துவாரகாநாத்ஜி மந்திர்: துவாரகை அழிந்த பிறகு, அங்கு மூன்று முறை கோயில் கட்டப்பட்டிருக்கிறது. எல்லாமே கடலில் மூழ்கியிருக்கலாம் அல்லது பிற சமயத்தாரால் அழிக்கப்பட்டிருக்கலாம். தற்போது உள்ள கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது துவாரகாநாத்ஜி மந்திர் எனப்படுகிறது. மூலவர் கல்யாண நாராயணர் என்ற திருநாமத்துடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் திருநாமம் கல்யாண நாச்சியார். கண்ணனின் எட்டு துணைவியர் (அஷ்ட மகிஷிகள்), அண்ணன் பலராமன், துர்வாச மகரிஷி ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. இங்கு மன்னராக கண்ணன் வீற்றிருப்பதாக ஐதீகம்.

17முறை போக்: துவாரகை கிருஷ்ணருக்கு தினமும் 17முறை உணவு படைக்கப்படுகிறது. இதை போக் என்பர். உடையும் தொடர்ந்து மாற்றப்படுகிறது. காலையில் சுவாமியை எழுப்பும் நிகழ்ச்சி உடாபன் எனப்படும். கிருஷ்ணனை பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் பாடியுள்ளனர்.

இருப்பிடம்: குஜராத் தலைநகர் அகமதாபாத்திலிருந்து 455 கி.மீ.
 

Sunday, February 24, 2013

About Buddishm - Part 1

'அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உணவாக இருப்பது எது?’ என்ற கேள்விக்கு 'புகழ்ச்சி’ என்று மகா​பாரதத்​தில் விதுரன் பதில் சொல்கிறான். என்ன ஓர் அற்புதமான பதில்!
புகழ்ச்சிதான் அதிகாரத்தில் இருப்பவர்களை சந்தோஷப்படுத்துகிறது. புகழ்ச்சி என்பது தேடிப் பெற வேண்டிய ஒன்று அல்ல. அது, தானே தேடி வர வேண்டிய ஒன்று. புகழ்ந்து பாடுவதற்காகவே அரசவைக் கவிஞர்கள் நியமிக்கப்பட்டனர். சில அரசர்கள் தாங்களும் கவிஞனாக ஆசைப்பட்டுப் புனையும் அபத்தமான கவிதைகளை, இதுதான் உலகின் உன்னதக் கவிதை என்று புகழ வேண்டிய நெருக்கடியும் புலவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், யாரோ எழுதியதை அரசர்கள் தங்கள் பெயரில் வெளியிட்டு பாராட்டுகளை அள்ளிக்கொள்வதும் நடந்து இருக்கிறது. இசை, இலக்கியம் மற்றும் நுண்கலைகளில் தீவிர ஈடுபாடுகொண்ட சில மன்னர்கள், தங்களின் உயர்ந்த படைப்புகளால் மக்களிடம் புகழ்பெற்றதும் இந்திய வரலாற்றில் உண்டு. அரசுக் கட்டிலில் இருந்தபோதும் ஹர்ஷர், ஜகனாரா பேகம், மகேந்திர வர்மன் போன்றவர்கள் எழுதுவதில் ஆர்வம்கொண்டு இருந்தனர். மாமன்னர் ஹர்ஷனும் மகேந்திர பல்லவனும் சமஸ்கிருத நாடகங்களை எழுதி புகழ்பெற்று இருக்கின்றனர். மகாகவி காளிதாசன், பாஷன், பாண பட்டர் ஆகியோருக்கு இணையாக இவர்களது நாடகங்களும் சமஸ்கிருத இலக்கியத்தில் இன்றும் விருப்பத்துடன் வாசிக்கப்படுகின்றன. இருவரது நாடகங்களையும் வாசிக்கும்போது, அரசியல் கொந்தளிப்புகளுக்கு ஊடே எப்படி இவர்கள் இதுபோன்ற நாடகங்களை எழுதினர் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இன்று, சமஸ்கிருத நாடகங்கள் அதிகம் நடத்தப்படுவது இல்லை. ஆனால், அதன் ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் கிடைக்கின்றன. ஒன்றிரண்டு நாடகங்கள் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன.
பல்லவ மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவர் மகேந்திர வர்மன். சிம்ம விஷ்ணுவின் மகனான இவர், காஞ்சிபுரத்தை கி.பி. 600 முதல் 630 வரை ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் மகாபலிபுரத்தில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. ஓவியம், சிற்பம், கட்டடக்கலை என ஆர்வம்கொண்டமகேந்திர வர்மனுக்கு, சித்திரகாரப்புலி என்ற சிறப்புப் பெயரும் இருந்தது. இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்றும், பின்னாளில் இவர் சைவ சமயத்துக்கு மாறினார் என்றும் கூறப்படுகிறது. இவரது ஆட்சிக் காலத்தில் சாளுக்கிய அரசன் புலிகேசி, காஞ்சியின் மீது படை எடுத்து வென்றான். பல்லவர்கள் எங்கிருந்து வந்தனர்? அவர்களின் மூலம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் இன்றும் நிலவுகின்றன. அவர்கள் பஹலவர்கள் என்னும் பாரசீக மரபினர் என ஒரு சாராரும், மணி பல்லவத்தில் இருந்து வந்தவர்கள் என சில அறிஞர்களும் கூறுகின்றனர். தொண்டை மண்டலத்தைப் பல்லவர் ஆட்சி செய்தபோது, சமஸ்கிருதமே முக்கிய மொழியாக இருந்தது. பல்லவர்களில் முற்காலப் பல்லவர்கள், இடைக்காலப் பல்லவர்கள், பிற்காலப் பல்லவர்கள் என மூன்று பிரிவினர் உண்டு. இவர்களில், பிற்காலப் பல்லவர்களில் சிம்ம விஷ்ணுவின் மரபில் வந்தவர் முதலாம் மகேந்திர வர்மன். மாமல்லபுரம், மாமண்டூர், சிங்காவரம், நாமக்கல் சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம் போன்ற இடங்களில் பல்லவர்கள் உருவாக்கிய கோயில்கள் கலைச் சிறப்புகொண்டவை. அன்று, காஞ்சிபுரத்தில் சமண பௌத்த சமயங்களுடன், பாசுபதம், காபா​லிகம், காளாமுகம் போன்ற தீவிர சைவ நெறிகளும் பின்​பற்றப்​பட்டன. திருநீறு அணிந்து சிவனே முழுமுதற் கடவுள் என்று சொல்பவர்களை பாசுபதர்கள் என அழைப்​பார்கள். காபாலிகர் என்ற பிரி​வினர், சிவனின் வடிவமான பைரவரை வணங்குபவர்கள். இவர்கள், கழுத்தில் மண்டை ஓடுகளை மாலைகளாக அணிந்து, பெண்களை சக்தி வடிவமாக வணங்கினர். அதுபோலவே, மந்திரம் சொல்லி உயிர்ப்பலி கொடுத்து சக்தியை அடைய முயன்றவர்கள் காளாமுகர். இந்த சமயப் பிரிவுகளுக்குள் கருத்து மோதல்களும் சண்டைகளும் அதிகாரத்தோடு யார் நெருக்கமாக இருப்பது என்பதிலும் போட்டி நிலவியது. மகேந்திர வர்மன், 'மத்த விலாச பிரகசனம்’, 'பகவதஜ்ஜூகம்’ ஆகிய இரண்டு நாடகங்களை எழுதி இருக்கிறார். இரண்டுமே அங்கத வகையைச் சேர்ந்த நாடகங்கள். மகேந்திர வர்மனின் நாடகத்தைப் புரிந்துகொள்ள அன்றைய சமயச் சூழலை அறிவது அவசியம்.
'மத்த விலாச பிரகசனம்’ நாடகம் காஞ்சிபுரத்தில் நடைபெறுவதுபோல எழுதப்பட்டு இருக்கிறது. நாடகத்தின் பிரதான கதாபாத்திரங்கள் ஐந்து பேர். காபாலிக சமயத்தைச் சேர்ந்த துறவி மற்றும் அவரது காதலி, இருவரையும் வீதியில் சந்திக்கும் ஒரு புத்த துறவி, அவர்களுக்கு நியாயம் சொல்ல வந்த பாசுபத சமயத்தைச் சேர்ந்த இன்னொரு துறவி. இடையிடும் ஒரு பைத்தியக்காரன் என்ற ஐந்து பேரைக்கொண்டு நாட​கம் நடத்தப்படுகிறது. மதத்தின் பெயரால் நடக்கும் குளறுபடிகள், போலித்தனங்கள் இந்த நாடகத்தில் கேலி செய்யப்​படுகின்றன. தமிழகத்தில் 7-ம் நூற்றாண்டில் பௌத்தம் தன்னுடைய செல்வாக்கை இழக்கத் தொடங்கி இருந்தது. பௌத்த மடாலயங்கள் வணிகர்களின் ஆதரவை நம்பி, அவர்களின் ஊதுகுழல்கள் போல செயல்பட்டன. அதே நேரம், சைவம் புத்துருவாக்கம் பெற ஆரம்பித்து இருந்தது. மகேந்திர வர்மன் சமண மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தபோது இந்த நாடகத்தை எழுதி இருக்கக்கூடும். காரணம், அன்று பல்லவர்களின் ஆட்சிக்கு அடங்காமல் கலகக் குரல் எழுப்பியவர்கள் காபாலிகர்கள் மற்றும் பாசுபத பிரிவைச் சேர்ந்த ஆதி சைவர்கள். அவர்களைக் கேலிசெய்து விமர்சிப்பதே இந்த நாடகங்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
மத்த விலாசம் நாடகம், சூத்ரதாரி எனும் கதை​சொல்லியின் மூலம் தொடங்குகிறது. அரச சபையில் புதிய நாடகம் நிகழ்த்த தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதைப் பயன்படுத்தி தன் மீது கோபம்கொண்டுள்ள மூத்த மனைவியை மகிழ்விக்க, வேடிக்கையான ஒரு நகைச்சுவை நாடகம் நடத்தலாம் என்கிறான் சூத்ரதாரி. அதைக் கேட்ட அவனது மனைவி நடீ, 'உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’ என்று கோபத்துடன் முறைக்கிறாள். ஆனால் அவனோ, 'உன் நடிப்பில் மகிழ்ந்து நிறையப் பாராட்டும் பரிசும் கிடைக்கும். ஆகவே, நகைச்சுவையான நாடகத்தை நிகழ்த்துவோம்’ என்று அவளை உற்சாகப்படுத்துகிறான். அவளும் சம்மதிக்கிறாள். மன்னர் மகேந்திர வர்மன் எழுதிய, 'மத்த விலாசம்’ என்ற நாடகத்தை, தாங்கள் நிகழ்த்த உள்ளதாகச் சொல்லி நாடகத்தைத் தொடங்குகிறான் சூத்ரதாரி. நாடகத்தின் முக்கியக் கதாபாத்திரம் ஓர் காபாலிகன். அவனது பெயர் சத்தியசோமன். காபாலிகர்கள் கையில் கபால ஓட்டை ஏந்தி வீதிவீதியாகப் பிட்சை வாங்கி பிழைப்பவர்கள். இவர்கள் மயானத்தில் வாழ்பவர்கள். பிட்சாடனக் கோலம்கொண்ட ருத்ரனின் வாரிசுகள். நாடகத்தில் வரும் காபாலிகன் மது, மாமிசம், மாது என்ற மூன்றுமே முக்திக்கு வழிகாட்டுபவை என்கிறான். நாடகம் தொடங்கும்போது காபாலிகனும் அவனது காதலி தேவசோமாவும் மிதமிஞ்சிக் குடித்துவிட்டு போதையோடு ஆடியபடியே மேடையில் நுழைகின்றனர். பெண்கள் போதை ஏற்றிக்கொண்ட பிறகு, புதிய அழகு பெறுகின்றனர் என்று பாராட்டுகிறான் சத்தியசோமன். அப்போது, அவள் பெயரை மாற்றிச் சொல்லிவிடுகிறான். உடனே தேவசோமா, அது எந்தப் பெண் என்று சந்தேகப்படுகிறாள். காபாலிகன், அது போதையில் ஏற்பட்ட தடுமாற்றம். இதுபோல வம்புகள் உருவாகும் காரணத்தால் நான் இனிமேல் குடிக்கவே மாட்டேன் என்கிறான்.
அதைக் கேட்ட தேவசோமா, இதற்காகப் போய் இன்பம் தரும் குடியை விட்டுவிடாதே... இது உன்னுடைய தவம் என்கிறாள். இருவரும், போதை ஏறவில்லை என்று இன்னொரு மதுக் கடையைத் தேடிப்போகின்றனர். காஞ்சிபுரம் நகரமே ஒரு புளிப்பேறிய மதுவைப் போல தித்திப்பாக இருக்கிறது என்கிறான் துறவி. இன்னொரு மதுக் கடைக்கு செல்கின்றனர். செல்லும் வழியில் சத்தியசோமனின் பிட்சைப் பாத்திரமான கபால ஓடு காணாமல் போகிறது. இப்போது, எங்கே போய் அதைத் தேடுவாய், மாட்டுக் கொம்பில் மதுவை வாங்கிக் குடி என்று அவனை சமாதானப்படுத்துகிறாள் காதலி. அவனோ, திருட்டுப்போன கபால ஓட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தனது துறவித்தன்மை கெட்டுவிடும் என்று கத்துகிறான்.
நகரம் முழுவதும் அதைத் தேடி அலையும் இருவரும் முன்பு தாங்கள் குடித்த இடத்துக்கே மறுபடி வருகின்றனர். தனது கபால பாத்திரத்தில் கொஞ்சம் மாமிசம் மீதம் இருந்தது. ஆகவே, அதை ஒரு நாயோ அல்லது புத்த துறவியோதான் திருடி இருக்க வேண்டும் என்கிறான் சத்தியசோமன். அப்போது, ஒரு புத்த பிக்கு வீதியில் நடந்து வருகிறான். தனது கபால ஓட்டைத் திருடியவன் அவன்தான் என்று கூச்சலிடுகிறான் காபாலிகன். வீதியில் இருவருக்கும் சண்டை நடக்கிறது. அவர்களது வாதத்தின் வழியே, பௌத்தம் மிக மோசமாகக் கேலிசெய்யப்படுகிறது. உன் மண்டையை உடைத்து அதையே தனது பிட்சைப் பாத்திரமாக எடுத்துக்கொள்ளப்போவதாக பிக்குவின் முடியை பிடிக்கத் துள்ளுகிறான் சத்தியசோமன். உன்னைப் போன்ற மூடர்களிடம் நாங்கள் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவே தலையை மொட்டை அடித்துக்கொள்ளச் சொல்லி இருக்கிறார் புத்தர். உன்னால் முடிந்தால் செய்து பார் என்கிறான் பிக்கு. இவர்கள் சண்டைக்கு நியாயம் சொல்ல வருகிறான் ஒரு பாசுபதன். நடந்ததைப் பற்றி அவன் விசாரிக்கிறான். வழக்காடு மன்றம் சென்றாலும் புத்த துறவிகள் தங்களுக்கு அரசாங்கத்தில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி உன்னை ஏமாற்றிவிடுவார்கள் என்று குறை சொல்கிறாள் தேவசோமா. அப்போது, கபால ஓட்டைக் கவ்விக்கொண்டு ஓடும் ஒரு நாயைத் துரத்தியபடியே ஒரு பைத்தியக்காரன் ஓடி வருகிறான். அவன், நாயிடம் இருந்து கபாலத்தைப் பறிக்கிறான்.

My India--About Buddhism

து, தன்னுடைய பிட்சைப் பாத்திரம் என்பதைப் புரிந்துகொண்ட காபாலிகன், பைத்தியக்காரனிடம் இருந்து கபால ஓட்டைப் பிடுங்க முயற்சிக்கிறான். ஆனால் பைத்தியக்காரனோ, அதை ஒரு தங்கக் கிண்ணம் என்று சொல்லி காபாலிகனுக்கே பரிசாகத் கொடுத்துவிடுகிறான். உங்களைச் சிரமப்படுத்தியதற்கு மன்னியுங்கள் என்று பௌத்த துறவியிடம் மன்னிப்பு கேட்கிறான் காபாலிகன். அதற்கு, உன்னை சந்தோஷப்படுத்த முடிந்ததற்கு நன்றி என்று பெருந்தன்மையுடன் சொல்கிறான் புத்த துறவி. அவரிடம் இருந்து விடைபெற்று சத்தியசோமன் தன் காதலியோடு புறப்பட்டுச் செல்வதோடு நாடகம் நிறைவுபெறுகிறது. நாய் தூக்கிச் சென்ற கபால ஓட்டை முன்வைத்து புத்த துறவியும், சமணத் துறவியும், காபாலிகர்களும் கேலிசெய்யப்படுகின்றனர். மூவருமே மதத்தின் பெயரால் பிறரை ஏமாற்றுகிறவர்களாக சித்திரிக்கப்பட்டு இருக்கின்றனர்.
பசுவின் கொம்பில் மது வாங்கிக் குடிப்பது, கபாலத்தில் இறைச்சி உண்பது, பெண்களும் மது குடித்துவிட்டு ஆடுவது, பௌத்த பிக்குகள் வணிகர்களின் விருந்தில் கலந்துகொண்டு உல்லாசமாக வாழ்வது, சமணர்களைக் கேலிசெய்வது என, சமூக வாழ்வு துல்லியமாக இந்த நாடகத்தில் பதிவாகி இருக்கிறது.
இந்த நாடகம், மகேந்திர வர்மனின் அரச சபையில் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. ஆகவே, இதன் பார்வையாளர்களாக இருந்தவர்கள் அரசை குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்திருக்கக் கூடும். பொதுமக்கள் இந்த சமஸ்கிருத நாடகத்தைப் பார்த்தார்களா? இந்த நாடகத்துக்கு எவ்வாறு எதிர்வினை செய்தனர் என்ற விவரங்களை அறிந்துகொள்ள முடியவில்லை. ஒரு நாயோ அல்லது பௌத்த பிக்குவோதான் கறிக்கு ஆசைப்பட்டு தன்னுடைய பிட்சைப் பாத்திரமான கபால ஓட்டைத் திருடி இருக்க வேண்டும் என்று சத்தியசோமன் சொல்வது பௌத்த சமயத்தை விமர்சிக்கும் குரலாகும். அது வெறும் கேலி அல்ல. மாறாக, பௌத்தர்கள் மீதான வெறுப்பு. அதே வேளையில், வணிகனின் விருந்தை ரசித்துப் பாராட்டும் புத்த துறவி, 'புத்தர் ஏன் மது, மாது இரண்டையும் தனது சங்கத்தில் அனுமதிக்கவில்லை. இது நிச்சயம் கையாலாகாத மூத்தத் துறவிகள் செய்த ஏற்பாடாகத்தான் இருக்கக் கூடும். மூல பாடத்தைத் தேடிப்பார்க்க வேண்டும். நிச்சயம் இதை புத்தர் தடுத்திருக்க மாட்டார்’ என்று ஆதங்கப்படுகிறான். அவனுடைய மனது, ஞானத்தைவிடவும் போகத்துக்காக ஏங்கித் தவிக்கிறது. ஆகவே, பௌத்தம் குறித்த தனது தீவிரமான எதிர்ப்பு மனநிலையை மகேந்திரவர்மன் நாடகமெங்கும் பிரதிபலித்து இருக்கிறான்.
போதையில் கைப்பொருளை மறப்பதும், தெருவில் சண்டை போடுவதும், தனது பொருளை யாரோ திருடிவிட்டனர் என்று அப்பாவியை வம்புக்கு இழுப்பதும், குடிப்பதற்காக இடம் தேடி அலைவதும் 1,000 வருடங்களுக்கு முன்பு இருந்து இன்று வரை ஒரு நீண்ட மரபாகவே நடைபெற்று வருகின்றன போலும்.
மத்த விலாசத்தைப் போலவே, பகவதஜ்ஜூகமும் புத்த மதத்தைக் கேலி செய்கிறது. இந்த நாடகத்தில் ஒரு புத்த துறவி கூடுவிட்டு கூடுபாயும் வித்தை கற்று இருக்கிறான். அவனது சீடன் சாண்டில்யன். இருவரும் ஒரு நந்தவனத்தில் இருக்கும்போது வசந்த சேனா என்ற தாசி, பாம்பு கடித்து இறந்துவிடுகிறாள். அவளை எப்படியாவது பிழைக்கவைக்க சாண்டில்யன் வேண்டுகிறான். அவள் உடலுக்குள் புத்த துறவியின் ஆவி புகுந்துகொள்கிறது. தாசியின் ஆவியோ துறவியின் உடலுக்கு மாறிவிடுகிறது. இந்த மாறாட்டம் ஏற்படுத்தும் வேடிக்கைகள்தான் நாடகம்.
இதிலும் புத்தமதத் துறவிகளைக் கடுமையாகக் கேலிசெய்து இருக்கிறார் மகேந்திர வர்ம பல்லவன். ஒரு மன்னர் பௌத்த சமயத்துக்கு எதிராக எவ்வளவு கசப்பு உணர்ச்சியுடன் இருந்தார் என்பதன் அடையாளமாகவே இந்த நாடகங்கள் இருக்கின்றன. கேரளாவின் கூடியாட்டக் கலையில் மத்தவிலாஸ் இன்றும் நிகழ் கலையாக நடத்தப்பட்டு வருகிறது. மகேந்திர வர்மனைப் போலவே, ஹர்ஷரும் சமஸ்கிருத நாடகங்களை எழுதி இருக்கிறார். 'நாகானந்தம்’, 'ரத்னாவளி’, 'ப்ரியதர்சிகா’ என்ற மூன்று நாடகங்களை இவர் எழுதி இருக்கிறார். இவை, கவிஞர் பாண பட்டரால் எழுதப்பட்டவை என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.
ஆறாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, வட இந்தியா சிறுசிறு மன்னர்களால் ஆளப்பட்டு சிதறிக்கிடந்தது. அவற்றை, ஹர்ஷரே ஒன்றிணைத்து ஆட்சி செய்தார். கி.பி. 590-ல் பிரபாகர வர்தனரின் மகனாகப் பிறந்தார் ஹர்ஷர். அவரது அண்ணன் ராஜீய வர்தன். இவனே ஹூணர்கள் என்ற நாடோடி இனத்தைப் போரிட்டு விரட்டி அடித்தவன். ஹூணர்கள், முரட்டு நாடோடி இன மக்கள். குப்தர்களின் ஆட்சி இவர்களால்தான் அழிந்தது. ஹூணர்களில் இரண்டு பிரிவுகள் இருந்தன. ஒன்று கறுப்பு ஹூணர். மற்றது வெள்ளை ஹூணர். இதில், கறுப்பு ஹூணர்கள் ரோமப் பேரரசைத் தாக்கி ஜெயித்தனர். அவர்களின் தலைவன் அட்டில்லா. ஹெபாத லேட்ஸ் எனப்படும் வெள்ளை ஹுணர்கள், இந்தியாவைத் தாக்கி இங்கிருந்த குப்த அரசை நிலைகுலையச் செய்து பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானியப் பகுதிகளைப் பிடித்து, தோராமான் தலைமையில் ஆட்சி செய்யத் தொடங்கினர். இந்த ஹுணர்களை ஒடுக்கியதில் ராஜீய வர்தன் முக்கியமானவர்.
ஹர்ஷரின் சகோதரி ராஜஸ்ரீயின் கணவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க ராஜீய வர்தன் சென்றபோது, கௌட மன்னன் சசாங்கனால் சூழ்ச்சிசெய்து கொலை செய்யப்பட்டான். அதற்கு பழிவாங்க ஹர்ஷர் படை எடுத்துச்சென்று சசாங்கனை வீழ்த்தி வங்காளத்தைக் கைப்பற்றினார்.
புத்த கயாவில் இருந்த போதி மரத்தைத் தோண்டி எடுத்துக் கொளுத்தியதோடு, பௌத்த விகாரைகளை இடித்துப் புத்த உருவங்களை சிதைத்தவன் இந்த சசாங்கனே. ஹர்ஷரின் ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டன. கடுமையான சட்டங்கள் அமலில் இருந்தன. குறிப்பாக, கொள்ளையரின் வலது கை துண்டிக்கப்பட்டது. ஹர்ஷர், கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தார். அவரது ஆட்சியின்போது நாளந்தா பல்கலைக்கழகம் சிறப்பாக இயங்கியது. அப்போது வந்த சீனப் பயணி யுவான் சுவாங், ஹர்ஷர் காலத்து இந்தியா குறித்து விரிவாக எழுதி இருக்கிறார். பௌத்த மதத்தைத் தழுவிய ஹர்ஷர், பௌத்த மடாலயங்களுக்கும் விகாரைகளுக்கும் நிறைய பொருளுதவிகள் செய்து இருக்கிறார். பௌத்த இலக்கியங்களை முறையாகக் கற்றுத்தேர்ந்ததோடு புத்த ஜாதகக் கதையின் கருப்பொருளைக்கொண்டு புதிய நாடகங்களை எழுதி இருக்கிறார். ஹர்ஷர் அறிவைப் பரவலாக்குகிறார். எல்லோருக்கும் கல்வி வழங்குகிறார் என்று உயர் ஜாதியினர் குற்றம் சாட்டி, அவரைக் கொலைசெய்ய சதித் திட்டம் தீட்டினர். ஹர்ஷர் தலைமையில் நடக்க இருந்த தத்துவ விவாத அரங்குக்குத் தீ வைத்தனர். ஆனால், ஹர்ஷர் இந்தச் சதியில் இருந்து தப்பிவிட்டார். விசாரணையின்போது, சதியின் பின்னால் பண்டிதர்கள் பலர் இருப்பதை அறிந்து அவர்களை நாடு கடத்தினார் ஹர்ஷர். போரில் தோல்வியே காணாத ஹர்ஷர், தெக்காணத்தை நோக்கிப் படை எடுத்து வந்தபோது, சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியிடம் தோற்றுப்போனார்.
அசோகரைப் போலவே பௌத்த மத வளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்தார் ஹர்ஷர். அசோகர், இந்தியாவுக்கு வெளியே கடல் கடந்து புத்த மதம் பரவ வேண்டும் என்பதற்காக, இலங்கைக்குத் துறவிகளை அனுப்பி வைத்தார். அவரைப் போலவே, ஹர்ஷரும் பௌத்த மதம் பரவி இருந்த சீனாவுக்குத் தனது தூதுவர்களை அனுப்பி சீன அரசனுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார்.
ஹர்ஷருக்கு சமஸ்கிருதக் கவிதைகள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவர் முறையாக சமஸ்கிருத இலக்கணங்களைக் கற்றுத்தேர்ந்ததோடு, இசையோடு பாடுவதற்கு ஏற்ற பாடல்களைப் புனைபவராகவும் இருந்தார். அவரது நாடகங்களின் உரையாடல்களும் கவித்துவமாகவே இருக்கின்றன. சமஸ்கிருத நாடக மரபில், உயிரோடு வாழ்ந்த ஒருவரின் வரலாற்றைக் கேலியாக நகைக்கும்படி மாற்றி எழுதும் நாடகங்களை பிரஹசனம் என்பார்கள். அப்படியான ஒரு நாடகம்தான், 'மத்தவிலாச பிரஹசனம்’.
இன்று நமக்கு கிடைத்துள்ள சமஸ்கிருத நாடகங்களில் மிகப் பழமையானது சுபந்து இயற்றிய 'உதயணன் வாசவதத்தை’ என்ற நாடகம். இது, கி.மு. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதே கதையை, கவிஞர் பாஷனும் 'ஸ்வப்ன வாசவதத்தை’ என்ற பெயரில் நாடகமாக எழுதி இருக்கிறார்.
திருமணமான உதயணனை, ரத்னாவளிக்குக் கட்டிவைக்க சதி நடக்கிறது. அதற்காக, வாசவதத்தை காட்டில் இறந்து போய்விட்டாள் என்ற கட்டுக்கதை உருவாக்கப்படுகிறது.
அதை நம்பிய உதயணன், ரத்னாவளியை திருமணம் செய்துகொள்கிறான். ஆனால், முகத்திரை போட்டு முகத்தை மறைத்த காரணத்தால் ரத்னாவளியை உதயணன் நேரில் பார்க்கவே இல்லை. அவர்கள் பயணம் செய்த கப்பல் விபத்துக்கு உள்ளாகி ஆளுக்கு ஒரு பக்கம் சிதறடிக்கப்படுகின்றனர். தன் கணவன் என அறியாமலேயே வேறு பெயரில் ரத்னாவளி அவனுடன் பழகத் தொடங்குகிறாள். அதில் ஏற்படும் விளைவுகளையும் குழப்பத்தையும் விவரிக்கிறது ஹர்ஷரின் நாடகம்.
சமஸ்கிருத மொழியின் முக்கியக் கவியான பாண பட்டர், ஹர்ஷரின் ஆஸ்தானக் கவிஞராக இருந்தார். இவரே, ஹர்ஷர் வாழ்க்கை வரலாற்றை, 'ஹர்ஷ சரிதம்’ என்ற நூலாக எழுதியவர். அதில், ஹர்ஷரின் கொடைத்திறனையும் அவரது அரசாட்சியின் சிறப்புக்களையும் நுட்பமாகப் பதிவுசெய்து இருக்கிறார். ரத்னாவளி எழுதிய ஹர்ஷரைப் போலவே, ஸ்ரீஹர்ஷர் என்ற இன்னோர் அரசர் 12-ம் நூற்றாண்டில் நள சரித்திரத்தை நைஷதம் என்ற பெயரில் எழுதினார். அதை புகழேந்திப் புலவர் நைடதம் என தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். இரண்டு ஹர்ஷர்களும் வேறுவேறு நபர்கள்.
ஹர்ஷரும் மகேந்திர பல்லவனும் கால வெள்ளத்தில் மறைந்துவிட்டனர். ஆனால் அவர்களின் நாடகங்கள் காலத்தின் அழியாத சாட்சிகளாக மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுகின்றன. தன்னுடைய வாழ்க்கையை காலவெளியில் நீட்சி பெறச்செய்யவே மனிதன் ஆசைப்படுகிறான். மாமன்னராக இருந்தாலும் மரணம் வாழ்வின் முற்றுப்புள்ளியாகிவிடுகிறது. மரணத்தையும் தாண்டி தன் படைப்புகளின் வழியே வாழ்வது கலைஞர்களால் மட்டுமே சாத்தியம். அதுதான், உண்மையான கலைக்குக் காலம் தரும் பரிசு.

ajantha and Ellaora - Part 1

இந்தியக் கலைகள் என்றதுமே நம் நினைவுக்கு வருபவை அஜந்தாவும் எல்லோ​ராவும். இந்தியாவின் சமூக வரலாறு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு அதன் கலை வரலாறும் முக்கியமானதே. கிரேக்கக் கலைகள் எப்படி அதன் உன்னத நாகரிகத்துக்கு அடையாளமாக இருக்கிறதோ, அதுபோலவே, இந்தியக் கலைகள் தனக்கெனத் தனித்துவமான அழகியலுடன் இருக்கின்றன. இந்தியக் கலைகளின் ஊடாக கலைஞனின் ஞானமும் வாழ்க்கை குறித்த தத்துவ​சாரமும் ஒன்றிணைந்து இருக்கின்றன. கலைஞனின் ஆன்ம வெளிப்பாடே, கலையின் உன்னதமாகக் கருதப்படுகிறது.
சாஞ்சியில் ஒரு சிற்பம் உள்ளது. அதில், ஞானம் பெற்ற பிறகு தன் தாயிடம் பிட்சை ஏற்க வரும் புத்தர் பிரமாண்டமாக நிற்கிறார். பிட்சை அளிக்கும் தாயும் அந்த அரண்மனையும் சதுக்கமும் படைகளும் அவரது முழங்காலுக்குக் கீழே இருப்பதுபோல், அந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஞான நிலையின் முன், உலகம் மிகச் சிறியது என்ற கலைஞனின் ஆன்மிக வெளிப்பாட்டின் உதாரணம் இது.
கலையின் வரலாறு, குகையில் வாழ்ந்த மனிதர்கள் உருவாக்கிய கலைப் பொருட்​களில் இருந்தே தொடங்குகிறது. கலைகளே இந்தியப் பண்பாட்டின் மகத்தான ஆவணங்கள். ஆதிகாலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தனர், அவர்களுடைய பண்பாடு, நம்பிக்கைகள் எப்படி இருந்தன என்பதற்கு இன்றும் ஆதாரமாக இருப்பவை குகை ஓவியங்களே.
அகழ்வாய்வுகளில் கிடைக்கும் மணிகள், தாழிகள், கல்வெட்டுகள் வழியாக நாம் 3,000 ஆண்டுகள் வரைதான் பின்னோக்கிப் போக முடிகிறது. ஆனால், குகை ஓவியங்கள் வழியாக நாம் மொழியின் பயன்பாடு உருவாவதற்கு முந்தைய மனிதர்களின் உலகையே அறிந்துகொள்ள முடிகிறது. அதுதான் கலையின் சிறப்பு. அஜந்தா மற்றும் எல்லோராவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன், இதுபோல குகைகளில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
உலகின் மிகப் பழைமையான குகை ஓவியம் பிரான்சில் உள்ள குரோட்டே சோவெட்டில் உள்ளது. இது, 32 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்களில் குதிரைகள், காண்டாமிருகங்கள், சிங்கங்கள், எருமைகள், மனிதர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. பெரும்​பாலும் இவை வேட்டைக் காட்சிகளாகவே இருக்கின்றன. இதுபோன்ற வேட்டைக் காட்சிகள்கொண்ட குகை ஓவியங்கள் பிரான்ஸ், இந்தியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல், சீனா, ஆஸ்திரேலியா உட்பட உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன.
தொல்பழங்காலத்தில் வாழ்ந்த குகை மனிதர்கள், வன விலங்குகளின் இயல்பைப் பதிவு செய்வதற்காகவும் நினைவைப் பாதுகாக்கவும் இவை வரையப்​பட்டு இருக்கலாம். அடுத்த தலைமுறைக்கு வேட்டை குறித்த தகவல்களைப் பரிமாறுவதற்காக வரையப்பட்டது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எட்வர்டோ கலியானே என்ற ஆய்வாளர் இது​போன்ற குகை ஓவியங்களைப் பெண்கள்தான் வரைந்து இருப்பார்கள் என்று கருதுகிறார். குகை ஓவியங்களில் மனித உருவங்கள் மிகவும் குறைவாகவே இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் விலங்குகளே வரையப்பட்டு இருக்கின்றன. வேட்டை​யாடப்பட்ட மிருகங்களை மட்டுமின்றி வலிமையான காண்டாமிருகம் போன்ற விலங்குகளும் குகை ஓவியங்களில் காணப்படுகின்றன.
ஓவியங்கள் காணப்படும் பல குகைகளில் மனிதர்கள் வசித்த தடயங்கள் இல்லை. விலங்குகள் குறியீடுகளுடன் சேர்த்து வரையப்பட்டு இருப்பதால், இந்தக் குகைகள் மந்திரச் சடங்குகள் செய்யப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்கின்றனர்.
தமிழகத்தில் குகை ஓவியங்களை ஆய்வு செய்யும் அறிஞர் காந்திராஜன், குகை ஓவியங்​களின் வரலாற்றைப் பற்றி நிறையத் தகவல்கள் தருகிறார். அவர் தனது தொடர்ந்த தேடுதலில் கரிக்கியூரில் காணப்படும் அரிய பாறை ஓவியங்​களைக் கண்டறிந்துள்ளார். இது, கி.மு. 7000-ம் ஆண்டைச் சேர்ந்தது. இவரது கருத்துப்படி நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குகை ஓவியங்கள் காணப்படுகின்றன. தர்மபுரி மாவட்டம் மல்லப்​பாடியில் உள்ள பாறை ஓவியத்தில் குதிரை மீது அமர்ந்த ஒரு வீரன் காணப்படுகிறான். கீழ்வாலை என்ற ஊரில் காணப்படும் குகை ஓவியத்தில் செம்மண் வண்ணத்தால் வரையப்பட்டுள்ள பறவையின் முக அமைப்புடைய மனிதர்கள் காணப்​படுகின்றனர். இந்த ஓவியம் 3,500 ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கணக்கிடுகின்றனர். சேத்தவாரை என்ற இடத்தில் எழில்மிக்க மான் ஓவியம் காணப்​படுகிறது. ஐயனார் மலையில் எருமை, கரடி, புலி, மீன் போன்ற உருவங்கள் கோட்டோவியங்களாக வரையப்பட்டுள்ளன.
கோயம்புத்தூரில் வெள்ளெருக்கம்பாளையம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினக்குடி, ஆலம்பாடி, பதியாண்டாள், கொல்லூர், மல்லசமுத்திரம் திண்டுக்​கல் மாவட்டம் சிறுமலைக் குகைகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம் என்ற ஊரில் குகை ஓவியங்​கள் இருக்கின்றன. பௌத்தத் துறவிகள் குகைகளில் தங்கி வாழ்ந்தனர். மாணவர்களுக்கு ஞானம் அளிக்கும் கல்விச் சாலைகளும் குகைகளில் இருந்தன. பௌத்தக் கலைஞர்கள் குகைகளில் படுகை​களையும், புத்தரின் சிலைகளையும், புத்த ஜாதகக் கதைகளைப் பற்றிய ஓவியங்களையும், பல்வேறு விதமான கலைச்சிற்பங்களையும் உருவாக்கி இருக்கின்றனர். அப்படி உருவாக்கப்பட்ட குகைவரைக் கோயில்கள்தான் அஜந்தாவும் எல்லோராவும்!
7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா ஓவியங்​கள் இயற்கையாக உருவாக்கப்பட்ட சிவப்பு, செம்மஞ்சள் முதலிய நிறங்களைப் பயன்படுத்தி வரையப்பட்டு இருக்கின்றன. இவை, பௌத்தக் கலை மரபின் சாட்சிகள். மகாராஷ்டிராவின் ஒளரங்கபாதில் இருந்து 70 மைல் தூரத்தில் இருக்​கிறது அஜந்தா குகை. இங்கே உள்ள குகைகளில் பாதி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் மீதம் உள்ளவை 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அஜந்தா ஒரு கல்வி நிலையமாகவும் ஞான மார்க்கத்தின் அற நிலையமாகவும் புகழ்பெற்று விளங்கியது. அஜந்தாவை ஒரு கலைத் தொகுப்பு என்றே சொல்லலாம். இங்குள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்களில் இருந்து அந்தக் காலத்தைய உடைகள், நகைகள், இசைக் கருவிகள், நடனமுறைகள், அரண்மனை அழகிகள், சமூக அந்தஸ்து, துறவிகளின் இயல்பு, மன்னர்களின் வாழ்க்கைமுறை எனப் பல உண்மைகளை அறிந்துகொள்ள முடிகிறது.
ஹீனயான பௌத்த மரபு, புத்தருக்கு உருவம் தந்து வழிபடுவது இல்லை. குறியீடுகள் வழியாகவே அவை பௌத்த ஞானத்தை அடையாளப்படுத்துகின்றன. மஹாயான மரபில்தான் புத்த உருவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அஜந்தாவில் இந்த இரண்டு மரபுகளின் சாட்சிகளையும் காணலாம். ஆரம்ப காலக் குகைகளில் புத்த பாதம், போதி மரம் போன்ற குறியீடுகளும் அலங்கார ஸ்தூபங்களும் மட்டுமே இருக்கின்றன. அதன் பிறகே, மிகப் பெரிய புத்தர் உருவங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அஜந்தா குகைகள் கி.பி. 460 முதல் 480 வரை வாகதகர் காலகட்டத்தில் செதுக்கப்பட்டு இருக்கக்கூடும் என்கிறார் வால்டர் எம்.ஸ்பிங் என்ற ஆய்வாளர். வாகதகப் பேரரசர் ஹரிசேனரின் காலகட்டத்தில் இந்தக் குகைகளில் பல ஓவியங்கள் செதுக்கப்பட்டன. கி.பி. 3-ம் நூற்றாண்டில் மகாராஷ்டிர நிலப்பகுதியில் தோன்றிய அரசு வாகதகப் பேரரசு. குஜராத்தின் மால்வா பகுதியையும் தெக்காணத்தின் வடக்குப் பகுதியையும் இணைத்து வாகதகர்கள் ஆட்சி செய்து இருக்கின்றனர்.
வாகதக வம்சம் இந்து தர்மத்தைப் பின்பற்றிய​போதிலும் அஜந்தா குகை ஓவியங்களை நிர்மாணித்​திட உதவி செய்துள்ளது. இது நடைபெற்றது குப்தப் பேரரசின் காலத்தில் என்ப​துடன், வாகதகர்களே குப்தர்களுடன் மண உறவு​கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜந்தாவின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த சாதவாகனர் மற்றும் வாகத​கர்கள் வைதீக நெறியைப் பின்பற்றுகிறவர்கள் என்றபோதிலும், அவர்களின் ஆதரவில் பௌத்தக் கலை, வளர்ச்சி அடைந்து இருக்கிறது. பௌத்தம், இந்தியாவில் வீழ்ந்த பிறகு, அஜந்தா குகைகள் கவனிப்பார் இல்லாமல் சிதிலம் அடையத் தொடங்கியது.
1819-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியான ஜான் ஸ்மித், புலி வேட்டை ஆடுவதற்காக காட்டுக்குள் சென்றார். ஒரு புலியைத் துரத்திச் சென்றபோது தற்செயலாக ஒரு குகைக்குள் நுழைந்து இருக்கிறார். அப்போது கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இது முற்றிலும் நிரூபணம் செய்யப்படாத தகவல். ஆனால், அவரது முயற்சியால் அஜந்தாவின் ஓவியங்​களும் சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்பது வரலாற்று உண்மை.
அஜந்தாவில் 30 குடைவரைக் கோயில்கள் உள்ளன. அவற்றில் 9, 10, 19, 26 மற்றும் 29 ஆகிய குகைகள் சைத்யங்கள் எனப்படும் பௌத்த வழி​பாட்டு ஸ்தலங்கள். மற்றவை துறவியர் தங்கும் விகாரைகள்.
குகைச் சுவரின் மீது களி மண்ணும் சாணமும் கலந்த கலவையால் வேயப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புச் சாந்து பூசப்பட்டு இருக்கிறது. அதில் பல்வேறு இயற்கையான நிறங்களைக்கொண்டு அஜந்தா ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. ஐந்து குகைகளில் ஓவியங்கள் இருக்கின்றன. பெரும்பாலான ஓவியங்கள் இன்று சிதைவுற்ற நிலையில்தான் இருக்கின்றன. இதில், புத்த ஜாதகக் கதைகளின் நிகழ்வுகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்களில் மிகப் புகழ் பெற்றவை பத்மபானி, வஜ்ரபானி போன்ற ஓவியங்கள்.