Thursday, December 31, 2015

அலிபாபாவும் ஜாக் மாவின் வெற்றிக் கதையும்!

"தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான், தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்" என்ற பழமொழியை சுக்கு நூறாக உடைத்து வெற்றி கண்டவர் தான் ஜாக் மா.
அலிபாபா இன்று உலகம் முழுவதும் வர்த்தகம் செய்துவரும் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம். இது விற்பனை செய்யாத பொருட்களே இல்லை. விற்பனை செய்யாத இடமும் இல்லை.
1999 இல் ஜாக்மா என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2.6 லட்சம் கோடி. 2015 இல் இதன் வருமானம் ரூ.24 ஆயிரம் கோடி. முழுக்க முழுக்க இன்டர்நெட்டும், தொழில்நுட்பமும் பங்கு பெறும் ஒரு தொழிலில், இவை பற்றி அனுபவமோ நிபுணத்துவமோ இல்லாத ஒருவர் எப்படி உலகளாவிய வெற்றி பெற முடிந்தது என்பது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான்.

எப்படி சாத்தியம்?

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினால் 10 முறை நிராகரிக்கப்பட்டவர், பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ஜாக் மா தொழிலதிபரானது எப்படி?
அவருக்கு ஆங்கிலம் தெரியாது, ஊர் சுற்றிப் பார்க்க வந்த பயணிகளிடம் இருந்து ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அதிலும் நாட்டமின்றி அதில் இருந்து வெளியேறினார். வேலை தேடி அலைந்தார். கேஎஃப்சியில் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இன்று உலகின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கிறார்.
இவையெல்லாம் தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று அவர் குறிப்பிடுகிறார். இன்டர்நெட் என்ற வார்த்தை பரவத் தொடங்கிய நேரம் அது. எல்லோரும் இன்டர்நெட் உலகை மாற்றப் போகிறது என்று பேசும்போது, அது என்ன இன்டர்நெட், நாமும் தெரிந்துகொள்ளலாமே என்ற ஆர்வம் அவருக்குள் உருவானது. ஆனால் அதில் அனைத்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், இத்தாலி என்று இருந்ததே தவிர சீனர்களுக்காகவென்று எதுவும் இல்லை. அப்போது அவருடைய மனதில் உதித்த ஒரு யோசனைதான் இன்று 'அலிபாபா' சாம்ராஜ்யமாக எழுந்து நிற்கிறது.
சரியான நேரத்தில் அவருக்கு கிடைத்த யோசனையும், அந்த யோசனையை பிசினஸாக்க அவருக்கு அமைந்த நல்ல குழுவும்தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். ஒரு விஷயத்தில் வெற்றியடைய நமக்கு தேவையெல்லாம், ஆர்வம், அதன் மீதான முழு கவனம் மற்றும் சரியான ஒரு அணி ஆகியவைதான்.
இன்டர்நெட் உலகை மாற்றப் போகிறது என்பதிலும், அதற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது என்பதையும் உலகில் முதன்முதலில் நம்பத் தலைப்பட்டவனாகவே தன்னை கருதுகிறேன் என்றார். தான் நம்பியதையே தன்னுடைய பிசினஸுக்கும் பயன்படுத்திக்கொண்டார். அசுர வேகத்தில் வளர்ந்தார்.
ஜாக் மாவின் வெற்றிக்கு அவர் வைத்திருக்கும் மந்திரங்கள்:
- வளர்ச்சியை மட்டுமே நோக்கி பயணம் வேண்டும்.
- புத்திசாலித்தனமான செயல்பாடு வேண்டும்.
- யாரும் கண்டுபிடிக்காத வாய்ப்புகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
- திறமையானவர்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்களுடைய சிந்தனைகளுக்கு இடமளிப்பது.
- வாடிக்கையாளர்கள் உள்ளே வரும் வழி எப்போதும் எளிமையாக இருக்க வேண்டும்.
விஷயம் தெரிந்தவர்களை மதிக்க வேண்டும்:
தனக்கு, புரோகிராமிங் பற்றியோ, தொழில்நுட்பங்கள் பற்றியோ எதுவும் தெரியாதிருந்த போதிலும் அதற்காக தொழிலில் இருந்து பின்வாங்கவில்லை. விஷயம் தெரிந்த திறமைப்படைத்த கம்ப்யூட்டர் இன்ஜினியர்களை அவருடைய அணியில் சேர்த்துக்கொண்டார். அவர்களுடைய திறமைக்கான மரியாதையைக் கொடுத்து அவர்களுடைய சிந்தனைகளுக்கும் இடம் கொடுத்திருக்கிறார். இன்று அலிபாபா நிறுவனத்தின் வெற்றிக்கு அவரது அணியினரின் திறமையும், உழைப்பும்தான் காரணமாக இருக்கிறது.
பலர் தோல்வியடைய காரணம்?
பல பெரு நிறுவனங்களும் கூட தோல்வியடைய ஒரே காரணம் அவர்களிடம் இருக்கும் அதிகபட்ச பணமாகக் கூட இருக்கும். ஏனெனில் செலவு செய்யும் கவனிக்காத ஒவ்வொரு ரூபாயும் தோல்வியை நமக்கு அருகில் அழைத்து வந்துவிடக் கூடும். சிறியதோ, பெரியதோ எவ்வளவு தொகையாக இருந்தாலும் செலவுகளைக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். தேவையற்ற அல்லது அதீத செலவுகளைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.
ஒரு பழைய பழமொழி உண்டு "தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான், தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்" என்று. இந்தப் பழமொழி கூட வெற்றிக்கு ஒரு தடைதான். இதைச் சுக்கு நூறாக உடைத்து வெற்றி கண்டிருக்கிறார் ஜாக் மா. தோல்விகளெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்

Saturday, December 19, 2015

உயிர் பெறும் ராமாயண ஜடாயு...!

ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள ஜடாயு பறவையின் பிரமாண்ட சிலையுடன்,  கேரளத்தில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள பறவைகள் சரணாலயம், வரும் ஜனவரி 2016 மாதத்தில் திறக்கப்படவுள்ளது.
கொல்லம் மாவட்டம், ஜடாயுமங்கலம் என்ற இடத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் பறவைகளுக்கான இந்த அழகிய பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பூங்கா அமைப்பதற்காக ரூ. 100 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்படப்பட்டது. அழகிய குட்டி குட்டி மலைகள், பள்ளத்தாக்குள், நீர்வீழ்ச்சிகள் இந்த பூங்காவில் உள்ளன .அதோடு சுற்றுலாப்பயணிகள்  'ட்ரெக்கிங்' மேற்கொள்ளும் வகையிலும் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

ராமாயணத்தில் இடம் பெற்றுள்ள பறவை ஜடாயுவின் சிலை 200 அடி நீளத்திலும், 150 அடி அகலத்திலும், 70 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு செல்லும் போது, வழிமறித்த ஜடாயு பறவை அவனுடன் போரிடுகிறது. ராவணனால் வீழ்த்தப்பட்டு, ஜடாயு பறவை தரையில் விழுந்தது.
ஜடாயுவின் தியாகத்தை போற்றும் வகையில், அதே வடிவிலான சிலை அமைக்கப்பட்டுள்ளதாக கேரள சுற்றுலாத்துறை கூறியுள்ளது.



அதோடு இந்த ஜடாயு சிலைக்குள் 6 டி தியேட்டர், ராமாயண கதையின் டிஜிட்டல் கண்காட்சி அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. வரும் ஜனவரி மாதத்தில் ஜடாயு சிலை திறக்கப்படவுள்ளது.

 

Saturday, December 12, 2015

மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! -- சென்னை மூழ்க என்ன காரணம்?

சென்னையை மூழ்கடித்தது கொட்டித் தீர்த்த பெருமழை அல்ல... திட்டமிடாமல் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறந்துவிட்டதுதான் காரணம். ஏரிகளின் நீர்மட்டத்தைக் கையாள்வதில் நிகழ்ந்த குளறுபடிகள் பேரழிவுக்குக் காரணமாகி​விட்டன’ எனப் பரவும் தகவல்கள் அதிர வைத்திருக்கின்றன.

சென்னை குன்றத்தூர் அருகே 6,250 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையையும், காஞ்சிபுரம் மாவட்​டத்தில் ஒரு பகுதி விவசாயத்துக்கும் பயனளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்தான் சென்னை மக்களின் மீளாத் துயரத்துக்குக் காரணம். செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. மொத்தமாக 3,645 மில்லியன் கன அடி நீரைத் தேக்கிவைக்கலாம். உபரிநீரை 11 மதகுகள் வழியாக வெளியேற்ற முடியும். இப்படி வெளியேற்றப்படும் நீர் குன்றத்தூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், மணப்பாக்கம், ராமாபுரம், ஜாஃபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு முகத்துவாரம் வழியாகக் கடலில் கலக்கிறது. இதில் எங்கே தவறு நடந்தது?




சென்னையை வெள்ளம் சூழ்ந்தது டிசம்பர் 1-ம் தேதி. அதற்கு முந்தைய தினம் நவம்பர் 30-ம் தேதி ஏரியில் 3,126 மில்லியன் கன அடி நீர் இருந்தது. செம்பரம்பாக்கத்தில் அந்த நாளில் 500 கன அடி நீர் ஏரிக்கு வந்துகொண்டிருந்தது. வெளியேற்றப்பட்ட நீர் 600 கன அடி நீர். இதுதான் 30-ம் தேதி நிலவரம். 1-ம் தேதி செவ்வாய்கிழமை பெருமழை பெய்தது. அன்றைய நிலவரத்தைப் பார்ப்போம். அன்றைய தினம் 3,141 மில்லியன் கன அடி நீர் இருந்தது. வினாடிக்கு 960 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்துகொண்டிருந்தது. இதை ஏரி தாங்காது என்று சொல்லி 2-ம் தேதியன்று வினாடிக்கு 29 ஆயிரம் கன அடி வீதம் வெளியேற்றி விட்டார்கள். ஒரே நாளில் இவ்வளவு திறந்தால் என்ன ஆவார்கள் மக்கள்?
பருவ மழை ஆரம்பித்த நாளில் இருந்து  அதிக அளவு  நீர் திறந்துவிடப்பட்டது 2-ம் தேதிதான். மறுநாள் 3-ம் தேதி வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட்டிருக்கிறார்கள்.

‘டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து கனமழை பெய்யும்’ என நவம்பர் 25-ம் தேதியே அறிவித்து​விட்டது சென்னை வானிலை ஆய்வு மையம். இதுதவிர, பிறநாட்டு வானிலை ஆய்வகங்களும் சென்னையில் அதிக மழை பெய்யும் என எச்சரிக்கை செய்திருந்தன. ஆனால், இதை​யெல்லாம் அரசு அக்கறையோடு கவனத்தில் கொள்ள​வில்லை. நவம்பர் 20-ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் 3,268 மில்லியன் கன அடி நீர் இருந்தது. கிட்டத்தட்ட ஏரி நிரம்பிவிட்டது. அதன்பிறகு 10 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதற்காகத் தினமும் குறைந்தபட்சம் 500 அடியில் இருந்து அதிகபட்சம் 4 ஆயிரம் கன அடி வரையில் தினமும் தண்ணீரைத் திறந்து​விட்டார்கள். ஆனால், 1-ம் தேதி பெருமழை பெய்யும் என முன்கூட்டியே தெரிந்து அதற்கு ஏற்றார்போல தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால், ஏரிக்கு வரும் நீர்வரத்தை எதிர்கொண்டிருக்க முடியும். ஏரி நிரம்பியிருந்த நிலையில், நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் ஏரியின் அளவு தாங்க முடியாத அளவுக்கு உயர என்ன செய்வது எனத் தெரியாமல் அதிகபட்சமாக வினாடிக்கு 29 ஆயிரம் கன அடியை முதல் நாளிலும், 11 ஆயிரம் கன அடியை அதற்கு அடுத்த நாளிலும் திறந்துவிட்டு பெரு வெள்ளத்துக்குக் காரணமாகிவி​ட்டார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. இப்படி திறந்து விடப்பட்ட நீர் அடையாற்றில் பாய்ந்து வந்து சென்னை நகருக்குள் புகுந்து, பல லட்சம் வீடுகளை துவம்சம் செய்தது.

தண்ணீர் திறப்பில் அரசு காட்டிய மெத்தனத்துக்கு காரணம் ஒன்று சொல்லப்படுகிறது.
கன மழையை எதிர்பார்த்து சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, ‘செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் 5 ஆயிரம் கன அடி வெளியேற்றப்​படுகிறது. ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் வெளியேற்றப்படும் அளவு 7,500 கன அடியாக அதிகரிக்கப்​படலாம். அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்’ என்பதை டிசம்பர் 1-ம் தேதியிட்ட தன்னுடைய உத்தரவில் அவசர செய்தியாகக் கொடுத்து இருந்தார். சுந்தரவல்லி சொன்னதுபோல 7,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. 2-ம் தேதி 29 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றி​யிருக்கிறார்கள். இதை சென்னை குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியமே தனது இணைய தளத்தில் சொல்லியிருக்கிறது. கலெக்டர் சுந்தரவல்லி அறிவிப்பது ஒன்று என்றால், அரசின் பொதுப்பணித் துறை செய்தது வேறு. இப்படி அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்புக்கூட இல்லாமல், உயிர்களோடும் உடமை​களோடும் விளை​யாடி​யிருக்​கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்து நிற்கிறது. இங்கே சொன்னது எல்லாம் அரசின் கணக்கு​களை வைத்து. ஆனால், செம்பரம்​பாக்கம் ஏரியில் இருந்து 29 ஆயிரம் கன அடியைத் தாண்டி அதிகளவில் திறந்துவிட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
இப்படித்​தான் பூண்டி ஏரியின் நிலையும். அதையும் பார்ப்போம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. 2-ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியை​விட, பூண்டி ஏரியில் திறந்து​விடப்பட்ட தண்ணீரின் அளவு அதிகம். அதாவது வினாடிக்கு 30,200 கன அடி தண்ணீரை அன்றைய தினம் திறந்து​விட்டிருக்கிறார்கள். சென்னையில் மழை கொட்டியபோது ஆந்திராவில் மழை கொட்டியது. அந்த நீரும் பூண்டிக்கு வந்தது. எனவே, 2-ம் தேதி 30,200 கன அடி திறந்துவிட்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாள் 3-ம் தேதி பூண்டியில் இருந்து திறந்துவிடப்பட்டது அதைவிட அதிகம் 36,484 கன அடி. செம்பரம்பாக்கமும் பூண்டியும் சேர்த்து டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் திறந்துவிட்ட அதிகாரபூர்வ மொத்த நீரின் அளவு மட்டும் வினாடிக்கு 1 லட்சத்து 6 ஆயிரத்து 684 கன அடி. இந்தத் தண்ணீர்தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை மூழ்கடித்தது.
அதிகாரபூர்வமற்ற முறையில் கணக்கிட்டால் இரண்டு நாட்களில் இந்த இரண்டு ஏரிகளில் இருந்து வினாடிக்கு ஒன்றரை லட்சம் கன அடிக்கும் அதிகமாகத் தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கிறார்கள் என்கிற பகீர் குற்றச்சாட்டை வைக்கின்றன எதிர்க் கட்சிகள். ‘‘செம்பரம்​பாக்கம், பூண்டி ஏரிகள் தவிர அடையாற்றுடன் இணைக்கப்பட்ட 50 ஏரிகள் நிரம்பியதால், அவற்றிலிருந்து உபரி நீர் பல ஆயிரம் கன அடி வெளியேறியது. இதனால், ஒரே  நேரத்தில் 65 ஆயிரம் கன அடி உபரி நீர் அடையாற்றில் கலந்தது. இந்த நீர் அடையாற்றில் கடல்போல பெருக்கெடுத்தது. அது சென்னை நகரையும் நாசம் செய்தது. மொத்தத்தில் சொதப்பியது அரசின் பொதுப்பணித் துறைதான்’’ என்கிறார்கள். இந்தத் துறையின் அமைச்சராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். பொதுவாக, மழைக்காலங்களில் ஏரிகள் நிரம்பி வரும்போது கடந்த காலங்களில் துறையின் அமைச்சர் ஏரிகளுக்கு விசிட் அடித்து ஆய்வுசெய்வது வழக்கம். அப்படி மழைக்கு முன்பே பன்னீர்​செல்வம் போய் பார்க்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் படிக்கப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் ‘பசுமை நடை’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நடராஜன், ‘‘மக்களின் தாகம் தீர்க்க குடிநீரையும், வயிற்றுப் பசிக்கு உணவையும் கொடுத்து வரும் ‘ஹீரோ’ செம்பரம்பாக்கம் ஏரி. ஆனால், அந்த ஏரிதான் பாதிப்பை உண்டாக்கி விட்டது என ‘வில்லன்’போல பழி தூற்றுகிறார்கள். நீர் போக்குவரத்துகளைச் சீர் செய்யாமல் ஆக்கிர​மிப்பு செய்துவிட்டு, ஏரியைக் குறை சொல்வதில் பயனில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை இயற்கை நமக்குப் பாடம் புகட்டி இருக்கிறது. மூன்று சுற்று மழை பெய்து, முதல் சுற்றிலேயே செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிவிட்டது. வரலாறு காணாத மழை பெய்யும் என்று வானிலை வல்லுநர்கள் சொல்லியும் அரசு கவனத்தில் எடுக்காதது ஏன்? முதல் மழைக்கே விவரங்களைக் கணக்கிட்டு அதற்கு ஏற்றாற்போல முன்கூட்டியே திட்டமிடாமல், கண்மூடிக் கிடந்ததை என்னவென்று சொல்வது? மனித மெத்தனமே, இந்தப் பேரழிவுக்குக் காரணம்’’ என்கிறார்.
அலட்சியமும், ஆக்கிரமிப்பும் சென்னையை மூழ்கடித்தது என்பதே உண்மை!

சென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கை பேரிடரே!

சென்னையில் பெய்த பெருமழையை வெள்ளமாக மாற்றியது தமிழக அரசின் மெத்தனப்போக்குதான் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவற்றிலிருந்து முக்கிய தகவல்களை தொகுத்திருக்கும் இந்தக் கட்டுரை சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதில் அரசு அதிகாரிகள் காட்டிய மெத்தனத்தை தெள்ளத் தெளிவாக காட்டும் கட்டுரை இங்கே அப்படியே வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 8, 9, 12, 13, 15, 23 தேதிகள்: சென்னையில் கனமழை பெய்கிறது.

நவம்பர் இறுதி வாரம் (தோராயமாக 26-ம் தேதி):

1) சர்வதேச வானிலை மையங்கள் சென்னையில் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி 50செமீ வரையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கின்றன.

2) எச்சரிக்கையை ஏற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம், அதாவது பொதுப்பணித்துறை செயலாளரிடம்  செம்பரம்பாக்கம் ஏரியில் 22 அடி இருக்கும் நீரின் அளவை 18 அடியாக குறைக்க சொல்கிறார்கள். குறைத்தால் மட்டுமே வர இருக்கும் அதீத கனமழையை ஏரி தாங்கும் என்றும் சொல்கிறார்கள்.

நவம்பர் 27-ம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 28-ம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 29-ம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 30-ம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.


அதாவது சுருங்கச் சொன்னால் மழை மிகவும் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்த நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் ஏரியில் இருக்கும் நீரை வெளியேற்றி, நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பொதுப்பணித்துறை செயலாளர் தலைமைச் செயலாளரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். தலைமைச் செயலாளரோ முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார்.

டிசம்பர் 1-ம் தேதி நடந்தது என்ன?

· சர்வதேச வானிலை மையங்கள் சொன்னதைப் போலவே கிட்டத்தட்ட 50செமீ கனமழை பெய்கிறது. (தாம்பரத்தில் அவர்கள் சொன்னதை போலவே மிகச்சரியாக 49செமீ பெய்தது)

· செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு அரசு தளத்தின்படி 3141 மில்லியன் கன அடியாக இருக்கிறது.

· டிசம்பர் 1-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை கலெக்டர் சுந்தரவல்லியிடம் இருந்து பத்திரிக்கையாளர்களுக்கு, செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் நொடிக்கு 5000 கனஅடி நீரை வெளியேற்ற இருப்பதாகவும், இந்த அளவு நொடிக்கு 7500 கனஅடி வரை உயர்த்தப்படலாம் என்றும் பொத்தம்பொதுவாக ஒரு செய்தி கிடைக்கிறது.

· மாலை 5 மணிக்கு முதலில் ஏரியை திறக்கிறார்கள். பெயரை வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் நொடிக்கு 10000 கன அடி நீரை வெளியேற்றியதாகவும், இவ்வளவு பெரிய வெள்ளத்தை திறந்துவிட முடிவுசெய்த அரசு கண்டிப்பாக முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருப்பார்கள் என தான் நம்பியதாகவும்  பேட்டி அளித்துள்ளார்.

· ஆனால் தமிழக அரசின் இணையதளத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நொடிக்கு வெறும் 900கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டதாக குறிப்பிட்டிக்கிறார்கள்.

ஆகமொத்தத்தில், செய்தியாளர்களுக்கு கலெக்டர் சொன்னபடி நொடிக்கு 5000-7000 கன அடியை திறந்துவிட்டார்களா? அல்லது பொதுப்பணித்துறை ஊழியர் கூறியதைப் போல நொடிக்கு 10000கன அடி நீர் திறந்துவிட்டார்களா? அல்லது அரசு தளம் சொல்வதைப் போல நொடிக்கு வெறும் 900கன அடி நீர்தான் திறந்துவிட்டார்களா? எது உண்மை?
ஆனால், உண்மையோ இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது!

சென்னையை அலற வைத்த டிசம்பர் 2

அரசு தளத்தின்படி டிசம்பர் 1-ம் தேதி ஏரியில் நீரின் அளவு 3141 மில்லியன் கன அடி.  அதேவேளையில் டிசம்பர் 2-ம் தேதி ஏரியில் நீரின் அளவு 1134 மில்லியன் கன அடி. ஆக 2007 மில்லியன் கன அடி நீர் முந்தைய இரவு 10 மணிக்கு வெளியேற்றப்பட்டிருக்கிறது. அதாவது அறிவித்த நொடிக்கு 7500கன அடிக்கு மாறாக கிட்டத்தட்ட நொடிக்கு 29000 கன அடி நீரை டிசம்பர் 1-ம் தேதி எந்த முன்னறிவிப்புமின்றி  திடீரென வெளியேற்றியிருக்கிறார்கள். அதிகாலை 2 மணிக்கு சென்னையை வெள்ளம் வந்தடைகிறது. இரவு 10 மணிக்கு அபாயகரமான அளவில் திறந்துவிடப்பட்ட வெள்ளம் தூங்கிக்கொண்டிருந்த மக்களையும், வீடுகளையும் மூழ்கடிக்கிறது.

வெள்ளத்திற்கான பிற  காரணங்கள்:

1) 26-ம் தேதியே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கச் சொல்லியும், 27,28,29,30 ஆகிய மழையில்லா தேதிகளில் ‘மேலிட’ உத்தரவுக்காக காத்திருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

2) டிசம்பர் 1-ம் தேதி மாலை நான்கு மணிக்கு வெறும் 7500கன அடி மட்டுமே திறக்கப்போகிறோம் என செய்தி கொடுத்துவிட்டு, இரவு 10 மணிக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல், மக்கள் வெளியேற நேரமும் கொடுக்காமல் திடீரென நொடிக்கு 29000கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

3) சொல்லாமல் கொள்ளாமல் திறந்துவிட்டதை கொஞ்சம் சீக்கிரமாக 6 மணிக்கு திறந்துவிட்டிருந்தால் இரவு 10 மணிக்கு வெள்ளம் சூழ்ந்திருக்கும். ஆனால் இரவு 10மணிக்கு திறந்ததால் அதிகாலை 2மணிக்கு வெள்ளம் சூழ்ந்து மக்கள் தப்பிக்க வழியின்றி மாட்டிக்கொண்டார்கள். இவ்வளவு அபாயகரமான அளவு நீரை நடு இரவில் திறப்பது என்பது மிகப்பெரிய தவறு.


இந்த 29000 கன அடி திறப்பைப் பற்றி பத்திரிக்கைகளுக்கு எந்தத் தகவலும் தரப்படவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டபின் சில அதிகாரிகள் வாய்மொழியாக மட்டுமே இதை டிசம்பர் 2-ம் தேதி,  எல்லாம் முடிந்தபின் தெரிவித்திருக்கிறார்கள்.

5) பொதுவாகவே ஏரியில் இருக்கும் நீரை, வெளியேற்றுகிறேன் பேர்வழி என தண்ணீர் தொட்டியை உடைப்பது  மரபல்ல. அபாயகரமான அளவை எட்டிவிட்டால் தொட்டியிலிருந்து குழாய் மூலம்  நீரை வெளியேற்றுவதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவதுதான் முறை. இதை நவம்பர் 27,28,29,30-ம் தேதிகளில் செய்திருந்தால் வெள்ளத்தை கண்டிப்பாக தடுத்திருக்க முடியும் என்றும், இந்த வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல, முழுக்க முழுக்க அரசுதான் இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

6) இதெல்லாம் போக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக அரசு அவசர அவசரமாக சாலைகள் அமைத்தது நினைவிருக்கலாம். அந்தக் குப்பைகள், கழிவுகள் எல்லாம் அடையாறு கடலில் கலக்கும் வழியை அடைத்துக்கொண்டதும் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.

7) சென்னையை சுற்றியுள்ள நான்கு ஏரிகளையும், அடையாறு, கூவம் நதிப்பாதைகளையும், ஓட்டேரி, பக்ககிங்காம் கால்வாய்களையும் ஜூன் ஜூலை மாதத்தில் தூர்வாருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதைச் செய்யாமலோ/சரியாகச் செய்யாமலோ விட்டிருப்பது இன்னொரு முக்கிய காரணம். ஆனால் முறையாக தூர்வாரியதைப் போல கணக்கு மட்டும் காட்டியிருக்கிறார்கள்.
நிச்சயம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர் இது...

ஆக, மேலுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது சென்னையையும், சென்னை மக்களையும் மீளாத்துயரில் தள்ளியிருக்கும் வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல. கனமழையை அரசின் மெத்தனமும், அதிகாரிகளின் பயமும் ஊரை அழித்த வெள்ளமாக மாற்றியிருக்கிறது. இப்போது நாம் அனைவரும் ‘ஸ்டிக்கர்’ பணிகள் பற்றி பேசுவதிலும், அதிமுகவை கிண்டலடிக்கும் மீம்கள் செய்வதிலும், எல்லா கட்சிகளும் இப்படித்தான் என உண்மைகளை அறியாமல் பேசுவதுமாக  பிசியாக இருக்கிறோம்.
இன்னும் சிலரோ ஏரியில் வீடு கட்டினால் வெள்ளம் வரத்தான் செய்யும், பல்லாண்டு காலம் செய்த தவறு என்றெல்லாம் பேசி அரசின் நிர்வாகமின்மைக்கும், மெத்தனபோக்குக்கும் தங்களை அறியாமலேயே துணை போகின்றார்கள். அரசும் அதையேதான் விரும்புகிறது. இந்திய ஊடகங்கள் நம்மைக் கவனிப்பதில்லை என கூக்குரலிட்டதன் பலனாக சென்னை வெள்ளத்தின் காரணங்களை அலசி ஆராய்ந்து அவர்கள் உண்மைகளை வெளியிட்டிருக்கின்றார்கள். இதை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்?
உண்மையான நிவாரணம் என்னவாக இருக்க வேண்டும்?
எந்த அளவுக்கு நிவாரணப்பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபாட்டுடன் வேலை செய்தார்களோ, அதே அளவில் உண்மையை வெளிக்கொணர்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆட்சியாளர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் முறையான சுதந்திரமான விசாரணைக் கமிஷன் வைத்து உண்மையை உலகுக்கு கூறுவது மட்டும்தான் இறந்தவர்களுக்கும், இழந்தவர்களுக்கும் நாம் அளிக்கும் உண்மையான நிவாரணமாக இருக்கும். +

Saturday, September 12, 2015

செப் 11( 1893): சிகாகோவில் விவேகானந்தர் நிகழ்த்திய எழுச்சியூட்டும் உரை

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் எழுச்சியூட்டும் உரையை விவேகானந்தர்  இன்று தான் 1893-ல் நிகழ்த்தினார் என்றும் வழிகாட்டும் அவரின் உன்னத வாசகங்கள் இவை

* வாய்மை எந்தச் சமூகத்துக்கும் மரியாதை செலுத்துவதில்லை. வாய்மையைச் சமூகம் மதிக்க வேண்டும். இல்லையேல் அந்தச் சமூகம் அழிந்துபோகும்.


* இளம் நண்பர்களே! வலிமையோடு இருங்கள் என்பதே என் அறிவுரை. நீங்கள் பகவத் கீதை படிப்பதன் மூலம் சொர்க்கத்தை நெருங்குவதை விடக் கால்பந்து ஆடுவதன் மூலம் வேகமாக அடைய முடியும். இவை தைரியமிகுந்த வார்த்தைகள்; இருந்தாலும் உங்களை நேசிப்பதால் இதனைச் சொல்கிறேன். ... தோள்களின் வலிமை கூட்டுங்கள். தசைகளை மேலும் உறுதிப்படுத்துங்கள்.

* முரடர்களை எதிர்கொள்ளுங்கள். இதுவே வாழ்க்கைக்கான பாடம். கடுமையனவற்றைத் தீரத்தோடு எதிர்கொள்ளுங்கள். குரங்குகளைப் போல வாழ்க்கையின் துயரங்கள் நாம் அஞ்சி ஓடாத பொழுது பின்னோக்கி செல்லும்.

* ஒரு சிந்தனையை எடுத்துக்கொள்ளுங்கள். அதை வாழ்க்கையாக்கி கொள்ளுங்கள். அதைப்பற்றிக் கனவு காணுங்கள், அதனோடு வாழுங்கள். உங்கள் மூளை, தசை,நரம்பு, எல்லாப் பாகங்களும் அந்தச் சிந்தனையால் நிரம்பி வழியட்டும். இதுவே வெற்றிக்கான வழி.

* உயர்ந்த பொருட்கள் உங்கள் காலடியில் உள்ளன, ஏனெனில், நீங்கள் தேவலோக நட்சத்திரங்கள். எல்லாம் உங்கள் காலடியில் உள்ளன. உங்களில் கைகளில் அள்ளி விண்மீன்களை நீங்கள் விரும்பினால் விழுங்க முடியும். இதுவே உங்களின் உண்மையான பண்பு. வலிமையோடு இருங்கள். எல்லா மூடநம்பிக்கைகளையும் கடந்து விடுதலையுற்று இருங்கள்.

* நாம் 'என்னைத் தீண்டாதே' என்பவர்களாக இருக்கிறோம். நம்முடைய மதம் சமையலறையில் இருக்கிறது. நம்முடைய கடவுள் சமையல் சட்டியில் இருக்கிறார், நம்முடைய மதம்,'நான் புனிதமானவன், என்னைத் தீண்டாதே' என்பதாக இருக்கிறது. இது இன்னுமொரு நூறு ஆண்டுகாலம் தொடர்ந்தால் நாம் எல்லாரும் பைத்தியக்கார விடுதியில் தான் இருப்போம்.

* எல்லா விரிவடைதலும் வாழ்க்கை. சுருங்கிக்கொள்ளுவது எல்லாம் மரணம். எல்லா அன்பும் விரிவடைதல். சுயநலம் என்பது சுருங்கிக்கொள்ளுதல். இதுவே வாழ்க்கையின் ஒரே சட்டமாகும். அன்பு செய்கிறவர் வாழ்கிறார், சுயநலத்தோடு இருப்பவன் இறக்கிறான். அன்புக்காக அன்பு செய்யுங்கள், அதுவே வாழ்க்கையின் ஒரே சட்டம் என்பதற்காக அன்பு செய்யுங்கள். சுவாசிப்பதற்காக அன்பு செய்யுங்கள். இதுவே சுயநலமற்ற அன்பு, செயல் அனைத்துக்குமான ரகசியமாகும்.

* ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரை, கல்வியறிவு அற்றவர்களை, செருப்பு தைக்கும் தொழிலாளியை, தெரு பெருக்குபவரை, மறந்து விடாதீர்கள். அவர்களும் ரத்தமமும் சதையாலும் ஆன நம்முடைய சகோதரர்கள். வீரம் மிகுந்தவர்களே, தீரத்தோடு, தைரியம் பூண்டு இந்தியன் என்பதற்குப் பெருமை கொள்ளுங்கள். பெருமையோடு, 'நான் இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன்!' என்று ஆராவரியுங்கள்.

* நீங்கள் சுயநலம் அற்றவரா என்பதே இப்போதைய கேள்வி. ஆமாம் என்றால் எந்த ஒரு மதப்புத்தகத்தையும் படிக்காமலேயே, எந்த ஒரு தேவாலயத்திற்குள்ளோ கோயிலுக்குள்ளோ போகாமலேயே நீங்கள் முழுமையானவர் ஆகிறீர்கள்.

* கோடிக்கணக்கான மக்கள் பசியிலும், அறியாமையிலும் உழல்கிற பொழுது அவர்களின் நசிவில் கற்றுவிட்டு அவர்களின் குறைகளுக்குச் செவிமடுக்காமல் இருக்கிற ஒவ்வொரு மனிதனையும் நான் தேசத்துரோகியாகவே கருதுவேன்.

* வெற்றி பெற உங்களுக்கு அளவில்லாத உத்வேகமும், முனைப்பும் இருக்க வேண்டும். "நான் பெருங்கடலைப் பருகுவேன்' என்று உத்வேகம் மிகுந்த ஆன்மா கூறவேண்டும்; "என் விருப்பத்தில் மலைகள் பொடிப்பொடியாகும்!' அப்படியொரு ஆற்றலோடு இருங்கள்; அப்படியொரு முனைப்போடு முன்னேறுங்கள். ஓயாமல் உழையுங்கள், உங்களின் இலக்கை அடைவீர்கள்.


* பொதுமக்கள் தங்களின் அன்றாடப் போராட்டங்களை எதிர்கொள்ள உதவாத கல்வி, அவர்களின் பண்பின் ஆற்றலை வெளிப்படுத்தாத கல்வி, வாரிக்கொடுக்கும் தயாள உள்ளத்தைத் தராத கல்வி, சிங்கத்தின் தீரத்தை தராத கல்வி - கல்வி எனப்படும் தகுதியுடையது அல்ல. தன்னுடைய சொந்தக் கால்களில் ஒருவன் நிற்கச் செய்வதே உண்மையான கல்வியாகும்.

* யாரையும் நிந்தனை செய்யாதீர்கள். உங்களால் முடியுமென்றால் உதவிக்கரம் நீட்டுங்கள். இல்லை என்றால், கைகளைக் கூப்பி உங்கள் சகோதரர்களை வாழ்த்தி அவர்களின் பாதையில் அவர்களைச் செல்ல அனுமதியுங்கள்.

* கோழையும், மூடனுமே 'இது என்னுடைய விதி' என நொந்து கொள்வார்கள். ஆனால், வலிமை மிகுந்தவன் எழுந்து நின்று 'என் விதியை நான் தீர்மானிப்பேன்' என்பான். வயதாகிக்கொண்டிருப்பவர்கள் தான் விதியைப் பற்றிப் பேசுவார்கள். இளைஞர்கள் ஜோதிடத்தை நோக்கி செல்வதில்லை.

* கண்மூடித்தனமாக எதையும் நம்புவது ஆன்மாவை அழிப்பதாகும். நீங்கள் நாத்திகவாதியாகக் கூட இருங்கள், ஆனால், எதையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.

Saturday, September 05, 2015

செப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..

'கப்பலோட்டிய தமிழன்'வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்
 September 5.  விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய
பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில்
பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில்
வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு
இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின்
விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு
காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில்
வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை 'வந்தே மாதரம் பிள்ளை ' என்று
அழைத்தார்கள் தலைவர்கள்.



இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில்
தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி
உணர்ந்தார். சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஷாலேன் ஸ்டீமர்ஸ்
கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார்.
ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. கிளம்பிப்போய் கொழும்பில் இருந்து
கப்பல்கள் வாடகைக்கு கொண்டு வந்தார்.

இருந்தாலும் சொந்த கப்பல் தேவை என்று உணர்ந்து எங்கெங்கோ அலைந்து காலியா
எனும் கப்பலை கொண்டு வந்தார் ; வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ்.
எஸ். லாவோ" கப்பலை வாங்கி வந்தார். ஆங்கிலேய அரசின் வியாபாரம்
பாதிக்கப்பட்டது. விலையை குறைத்து ஈடு கொடுத்தது அரசு. இவரும்
குறைத்துப்பார்த்தார். இறுதியில் கப்பலில் ஏறினாலே குடை இலவசம் என்று
அரசு அறிவிக்க மக்கள் கூட்டம் அங்கே போனது

தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில்
கோரல் நூற்பாலை யில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்
வ.உ.சி. பன்னிரண்டு மணிநேரம் ஓயாமல் வேலை,விடுமுறையே இல்லாத சூழல்
ஆகியவற்றை ஒன்பது நாள் போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார்.
விடுமுறை,வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் பெறப்பட்டன. அப்பொழுது
தன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை இதற்கென்று செலவு செய்தார்.

பிபன் சந்திர பால் மார்ச் ஒன்பதை விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு
விடுத்ததும் வ.உ.சி அதை தன் பகுதியில் கொண்டாட முடிவு செய்தார். கலெக்டர்
வின்ச் பார்க்க அழைத்து சில நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்க மறுத்ததால்
அவரை கைது செய்தார். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்து
ஸ்தம்பித்து,ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு,கடைகள் மூடப்பட்டு ,நகராட்சி
ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி
ஓட்டுபவர்கள் என்று எல்லாரும் வேலை நிறுத்த போராட்டம் செய்தார்கள். அரசு
மசியவில்லை.

தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை
விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே  சிதம்பரம்பிள்ளையின்
பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்
பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில்
விடுதலை பெறும்" என்று எழுதினார். பின்னர் அந்த தண்டனை மேல்
முறையீட்டுக்கு பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.

கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து
புண்ணாகின ; சணல் நூற்று,கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த
கொடிய உணவு அவரைப்புரட்டி போட்டது.

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில்
நோவதுவுங் காண்கிலையோ?'
என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார். விடுதலைபெற்று
வ.உ.சி வந்ததும் அவரை அழைத்துப்போக கூட ஆளில்லை என்பது கசப்பான வரலாறு.

அவர் எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்தார். மணக்குடவரின் திருக்குறள் உரையை
வெளியிடுகிற பொழுது அந்நூலின் முகப்பில் ,"இந்நூலின்
எழுத்து,கட்டமைப்பு,அச்சு,மை யாவும் சுதேசியம் !" என்று குறிப்பிட்டார்.
சென்னைக்கு லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர் பஞ்சம் பிழைக்க வந்தார்.
மண்ணெண்ணெய் கடை வைத்து தெருத்தெருவாக போய் விற்று பசியாற்ற முயன்றார்.

அவரின் வழக்கறிஞர் பட்டத்தை மீட்டுத்தந்த ஆங்கிலேய நீதபதி வாலஸ் நினைவாக
தன் பிள்ளைக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார். பல்வேறு ஊர்களில் வறுமை
நீங்காமலே வாழ்ந்து  தீவிர சைவராக இருந்த பொழுதிலும் இறக்கிற பொழுது அவர்
மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின்
மோகம்? " என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய உயிர் துறந்தார்.

Monday, August 10, 2015

One of the Kural which Kalam always says..

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்; மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.


 Ulluvadhu yellam uyarvullal; mattradhu
thallinum thallamai neerthu.


Meaning of the Above Thirukural

எண்ணுவதெல்லாம் உயர்வானதாகவே இருக்கட்டும். அவ்வுயர்வு கை கூடாவிட்டலும் உயர்ந்த அந்த எண்ணத்தைக் கைவிடுதல் கூடாது.

Let the thoughts be always great, even if it is not successful, let not those thoughts be left out.

புகழை தலையில் ஏந்திக் கொள்ளாதவருக்கு சலாம்! கலாமுக்கு கமல் கவிதாஞ்சலி

கலாம்களும் கமால்களும்
கமல்களும்
இலாதுபோகும்
நாள்வரும்
இருந்தபோது
செய்தவை
அனைத்துமே
கணிப்பது
ஹெவன்என்று
ஒருவனும்
பரம் என்று ஒருவனும்
ஜன்னத்தென்று ஒருவனும்
மாறி மாறிச் சொல்லினும்
இகத்திலேயவன்
நடந்த பாதையே
புகழ் பெறும்
நிரந்தரம் தேடுகின்ற
செருக்கணிந்த
மானுடர்
தொண்டருக்கடிப்பொடி
அம்மெய்யுணர்ந்த நாளிது
புகழைத் தலையிலேந்திடாது
பாதரட்சையாக்கிய
கலாம் சாஹெப்
என்பவர்க்கு
சலாம் கூறும் நாளிது
- கமல்ஹாசன்

ஜனாதிபதி மாளிகை: குரங்குகள் வாங்கும் பென்சன்

அந்த அலுவலகம் பிரம்மாண்டமானதாக, குடைந்து வைத்ததுபோல குறைவான வெளிச்சத்தில் இருந்தது. இடுப்பளவு உயரத்தில் இருந்து சீலிங் வரைக்கும் நீண்ட பிரெஞ்சு ஜன்னல்கள். பெரும்பாலான ஜன்னல்கள் வேலைப்பாடுகள் செய்த வெல்வெட் திரைச்சீலைகளால் மறைக்கப்பட்டு டெல்லியின் சூரியனும், வெக்கையும் உள்ளே வராமல் தடுத்தன. புறாக்கள் ஜன்னல் விளிம்புகளில் உட்கார்ந்து சத்தமிட்டன. அண்மையில் இருந்த மரங்களிலும், கட்டடங்களிலும் குரங்குகள் நிறைய சஞ்சரித்தன. இயற்கையான வனப்பிரதேசச் சூழல் யன்னல்களை அங்காங்கே கறைபட வைத்திருந்தது. எந்த மனிதனுக்கு

இந்த யன்னல்களை கழுவும் பணி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நான் யோசித்தேன். அதுவரை ஒரு பெண் பணியாளரைக்கூட நான் காணவில்லை. அந்த அறையில் எதை எடுத்தாலும் அது பிரம்மாண்டமானதாகவே இருந்தது. பிரம்மாண்டமான சோபாக்கள், தடிப்பான கம்பள விரிப்புகள், ராட்சத தொங்கு விளக்குகள். அவருடைய மெய்க்காவலர்கள்கூட திடகாத்திரமாகவும், பாரமாகவும் இருந்தார்கள்.

பென்னம் பெரிய கதவுகள் வழியாக வந்துபோகும் மிலிட்டரி உடையணிந்த உதவியாளர்கள்கூட கனமான ஆகிருதிகளுடன் காணப்பட்டார்கள். எல்லாமே பெரியதாக இருந்தது, ஒரு மேசையின் முன் உட்கார்ந்து கம்ப்யூட்டர் திரையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அந்த மனிதரைத் தவிர. அவருடைய சிறிய உடலில் இருந்து சன்னமாகத்தான் குரல் எழும்பியது. அந்த அறையின் பரப்புக்குள், அவர் குரலை கேட்க வேண்டுமென்றால் சுற்றிவர கடுமையான மௌனம் தேவை. ஆனால் அந்தப் புறாக்கள் அவர் பேசுவதை மூழ்கடித்தன.'எல்' எழுத்துப்போல உயர்ந்த மரத்தில் வடிவமைக்கப்பட்ட அவருடைய தொன்மையான மேசை, ஒரு தூரத்து மூலையில் தள்ளப்பட்டு, இந்த ஆடம்பரங்களுக்கு மன்னிப்பு கேட்பதுபோல காட்சியளித்தது.

அப்துல் கலாம் ஆட்சி செலுத்துவது போலவே இல்லை. இந்தப்பெரிய படாடோபங்களில் அவர் சங்கடப்படுவது போலவே தோற்றமளித்தார். ஒரு கல்விக் கூடத்திலோ, ஒரு பல்கலைக் கழகத்திலோ அவர் இன்னும் கூடுதலான சௌகரியத்துடன் தன்னை உணர்ந்திருப்பார் என்று எனக்குப்பட்டது. என்னையும் ஒரு மாணவர் போலவே அவர் வரவேற்றார்.

நான் பிபிசி குழுவுடன் கடந்த ஒரு மாத காலமாக, விவரணப்படம் ஒன்று எடுப்பதற்காக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் அலைந்திருந்தேன். உலக அழகி ஐஸ்வர்யராயின் பேட்டி அடுத்த நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்ததால், மூன்று மாதம் முன்பாகவே ஒழுங்கு செய்திருந்த ஜனாதிபதியின் பேட்டியிலும் கடைசி நிமிடங்களில் சிறு மாறுதல் செய்யவேண்டி நேர்ந்தது. ஒரு நாட்டின் ஜனாதிபதியிலும் பார்க்க ஒரு நடிகை பிஸியாக இருந்ததை கண்டு பிபிசி டீம் அதிசயித்தது. நாளைய பேட்டியே கடைசி. அத்துடன் வந்த காரியம் முடிந்து, நான் மறுபடியும் வாஷிங்டனுக்குப் பயணமாகி விடுவேன்.

பிபிசி குழுவில் நாங்கள் எட்டுப்பேர் இருந்தோம். எல்லாமே வெள்ளைக்கார முகங்கள், என்னுடையதை தவிர்த்து. பல பாதுகாப்பு அரண்களை தாண்டி, பதினைந்து நிமிடங்கள் முன்பாகவே வந்துவிட்ட எங்களை ஒரு வரவேற்பு அறையில் உட்காரவைத்திருந்தார்கள். அதுவே ஒரு ஜனாதிபதிக்கு தகுதியான கம்பீரத்தோடு இருந்தது. எங்கள் குழுவின் தலைவர், விவரணப் படக் கலையில் புகழ்பெற்ற பட்டி ஸ்மித் என்பவர். ஜனாதிபதியைப் பார்க்க உள்ளே போகவேண்டிய நேரம் வந்ததும் இரண்டு பாதுகாவலர்களும், ஓர் உயர் அதிகாரியும் எங்களை அழைத்துச் சென்றார்கள். நான் மட்டுமே ஜனாதிபதியிடம் கைகுலுக்கினேன். மற்றவர்கள் காமிராவுக்கு பின்னே நின்று கொண்டார்கள். எங்களை அழைத்து வந்த அதிகாரியின்
முகத்தில் ஆச்சரியத்திலும் பார்க்க ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.

பாதுகாவலர் படக்கென்று திரும்பி,  தன் நேரம் வீணாகிவிட்டது என்பதை அப்பட்டமாகக் காட்டியபடி மறைந்துபோனார். ஜனாதிபதி என்னை சஞ்சயன் என்று உரிமையுடன் அழைத்தார்; நான் பதிலுக்கு ‘மிஸ்டர் பிரெசிடென்ட்’ என்றேன். எங்கள் சம்பாசணை தொழில் நுட்பம், இந்தியாவின் எதிர்காலம், சாதாரண மக்களின் அன்றாட சந்தோசம் இவற்றையெல்லாம் தொட்டது. இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தின் சிருஷ்டிகர்த்தாவான ஒரு ஜனாதிபதியின் சிந்தனைகள் கவித்துவமாகவே இருந்தது என்னை வியப்பிலாழ்த்தியது.
"இங்கே பாருங்கள் சஞ்சயன், நான் நூறு கோடி மக்களைச் சிரிக்கவைக்க விரும்புகிறேன். உங்களுக்குப் புரிகிறதா? நூறுகோடி மக்கள் சிரிக்கவேண்டும். இது முடியும்."-  அவர் அதை சொன்னவிதம், அறிவை மீறிய ஒரு தேவவாக்கு போல என் காதுகளில் விழுந்தது. என் தலை என்னையறிமால் அசைந்தது.

அவர் தன் கனவை சொல்ல ஆரம்பித்தார். "இந்தியாவைத் தொடுக்கவேண்டும். முக்கோண வடிவமான இந்தியாவை குறுக்கறுத்து ஆயிரம் புதுச்சாலைகள் ஓடவேண்டும்; இணையம் மூலமும், சாட்டிலைட் மூலமும் இந்தியா முழுவதையும் இணைக்கவேண்டும். ஒவ்வொரு நூறு கிராமத்துக்கும் ஓர் இணைய செர்வர். அதிலிருந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்னஞ்சல், இணைய தள வசதிகள். ஒரு புதிய EDUSAT என்ற செயற்கைகோளை விண்வெளியில் நிறுவுவதற்கான ராக்கெட் ஒன்று விரைவிலேயே ஏவப்படும். உலகத்திலேயே கல்விக்காக முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சாட்டிலைட் இதுவாகவே இருக்கும். இதிலிருந்து லட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களுக்கு கல்வி அறிவுப் போதனைகள் ஒலிபரப்பாகும்..." என்ற கலாம்,  'ignited minds' என்றார்.
இளம் மனங்களில் ஒரு தீ பற்றவேண்டும். வெளியே வரத் துடிக்கும் இந்திய இளைஞர்களின் உச்சமான திறமைகளை விடுவிக்கவேண்டும். இந்த அரிய மனிதர், சந்தேகமில்லாமல் தன் பரிவான உள்ளத்தில் கனவுகள் காணும் ஒரு நம்பிக்கைக்காரர்.

தேநீரும் பிஸ்கட்டும் பரிமாறினார்கள். தேநீரை சிறிய பீங்கான் கிண்ணத்தில் பருகியபடி, ஜனாதிபதி தன் மாளிகையைப் பற்றி சொன்னார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் காலத்து கட்டடக் கலைஞர்களால் நிர்மாணிக்கப்பட்ட அந்த மாளிகையின் முதல் வைஸ்ராய் எர்வின்; கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன். என்றென்றைக்கும் அடக்கியாளலாம் என்ற எண்ணத்தில் பிரிட்டிஷார் எழுப்பிய மாளிகையில், அவர்கள் 17 வருடங்கள் மட்டுமே ஆட்சி செலுத்தினர்.

ஜனாதிபதி பேசிக்கொண்டிருந்தபோது எனக்கு இன்னொன்று புலப்பட்டது. இந்த கண்ணைப் பறிக்கும் சோடனைகளும், அலங்கார தூண்களும், மாளிகையும் அப்துல் கலாமின் மாபெரும் கனவுகளை தாங்குவதற்கு போதாத ஒரு சிறு குடிசையாகவே எனக்கு அப்போது தோன்றியது.

நான் விடை பெறுமுன் கேட்டேன். "மிகுந்த அழகுணர்வோடு பராமரிக்கப்படும் உங்கள் தோட்டத்துக்கு போவீர்களா? குரங்குகள் தொல்லைப் படுத்துவதில்லையா?"

"ஓ, குரங்குகள், அவை பெரிதாக என்னை தொந்திரவு செய்வதில்லை." -இப்படிச் சொல்லியவாறே தன் மேசையில் பதித்த சிவப்பு பொத்தானை ஜனாதிபதி அழுத்தினார். அந்தப் பொத்தானை அவருடைய மேசையில் ஒருவித ஒளிவு மறைவுமின்றி ஒட்டி வைத்திருந்தார்கள். அதிலே இருந்து தாறுமாறாக சென்ற வயர்கள் மேசையின் ஓரத்தில் ஸ்டேப்பிள் செய்யப்பட்டிருந்தன. ஒரு விண்வெளி விஞ்ஞானியும், மாபெரும் நாட்டின் ஜனாதிபதியுமான அவருடைய மேசையிலே ஓடும் வயர்களை மறைத்து வைப்பது அவ்வளவு கடினமான காரியமா என்று என்னை யோசிக்க வைத்தது.

"இந்தக் குரங்குகள் எங்களைத் தொந்திரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள சில உபாயங்கள் உண்டு" என்றார். அப்பொழுது ஜனாதிபதி எழுதிய இரண்டு புத்தகங்களை அவருடைய உதவியாளர் கொண்டு வந்து கொடுத்தார். ஆங்கிலப் புத்தகத்தில் கையப்பமிட்டு என்னிடம் தந்தார். மற்றது தமிழ் புத்தகம். அதில் தமிழில் கையெழுத்து வைத்து, "இதை எழுத்தாளரான உங்கள் அப்பாவிடம் கொடுங்கள்!" என்றார்.
நான் விட்ட இடத்தைப் பிடித்துக்கொண்டு என்ன உபாயங்கள்? என்றேன். "காவல்கார குரங்குகள். எங்களுக்கு ஓயாது தொல்லை தரும் சிறிய குரங்குகளுக்கு பெயர் லங்கர். பெரிய குரங்குகளின் பெயர் மக்காக்கி. பயிற்சி கொடுத்த மக்காக்கி குரங்குகளை சங்கிலியில் கட்டி, காவல்காரர்கள் சுற்றிலும் உலாத்துவார்கள். இவற்றைக்கண்டதும் சிறிய குரங்குகள் ஓடிவிடும், கிட்ட வராது".
என் முகத்தில் தோன்றிய ஆச்சரியத்தை என்னால் மறைக்கமுடியவில்லை. 

‘காவல் காக்கும் பெரிய குரங்குகளுக்கு சம்பளம் உண்டா?’ என்றேன், பாதி நகையுடன்,  "நிச்சயமாக. ராஷ்டிரபதி பவன் ஊழியர்களின் பட்டியலில் அவற்றின் பெயர்களும் உண்டே...!"- உலகத்தின் ஆகப்பெரிய ஜனநாயகத்தின் அதிபதி என்னுடைய முழங்கையை பிடித்து தன் அற்புதமான தோட்டத்திற்கு அழைத்து சென்றார்.
கருணையே உருவான அந்த நல்ல மனிதருக்கு என்னுடைய மனக்கிலேசம் எப்படியோ தெரிந்துவிட்டது. "அவை ஓய்வு பெற்றபிறகு அவைக்கு பென்சனும் இருக்கிறது" என்றார்

ஜனாதிபதி மாளிகையில் அப்துல் கலாம் இப்தார் விருந்து வழங்காதது ஏன்?

குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது  பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார். அப்துல் கலாம் மறைவுக்கு பின் டிடி தொலைக்காட்சி பி.எம். நாயரை பேட்டி எடுத்தது. அவருடன் பணியாற்றிய அனுபவங்களை 'கலாம் எபெக்ட்' என்று நாயர் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.
அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சமயத்தில் அவருக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் வரும். வெளிநாடுகளில் இருந்தும் ஏகப்பட்ட பரிசுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கும். அவற்றையெல்லாம் அப்துல் கலாம் போட்டோ எடுத்து வைத்து வகைப்படுத்துவார். பின்னர் அப்படியே அதனை ஆவண காப்பகத்துக்கு அனுப்பி விடுவார். ஒரு பொருளை கூட திரும்பி பார்த்ததது இல்லை. ஒரு பென்சிலை கூட தனக்கு என்று எடுத்து கொண்டது இல்லை. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் அன்பளிப்புகளை மறுத்தால், அந்த நாடுகளை அவமானப்படுத்துவது போல் அமைந்து விடும் என்பதால்தான் பரிசுபொருட்களை அப்துல்கலாம் பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ரமலான் மாதத்தில் குடியரசுத் தலைவர் 'இப்தார்' விருந்தளிப்பது வழக்கமான பாரம்பரியமான நிகழ்வு.  கடந்த 2002ஆம் ஆண்டு அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற சமயம். என்னைஅழைத்த அப்துல் கலாம், இப்தார் விருந்துக்கு ராஸ்டிரபதி பவனில் எவ்வளவு செலவாகும்? என்று கேட்டார். நான் 22 லட்ச ரூபாய் செலவழிப்போம் என்றேன். இருக்கப்பட்டவர்களுக்கு இப்தார் விருந்தளிப்பதால் என்ன பயன்? அந்த 22 லட்சத்தை அனாதை இல்லங்களுக்கு பிரித்து வழங்கி விடுவோம். அந்த தொகைக்கு இணையாக அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய சொன்னார். பின்னர் தனியாக என்னை அழைத்து ஒரு லட்ச ரூபாய்க்கும் செக் அளித்து இதையும் சேர்த்து 23 லட்ச ரூபாய்க்கு குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யுங்கள் என அப்துல்கலாம் கூறிய போது, மனித நேயமிக்க மனிதரிடம் பணிபுரிவது குறித்து மிகுந்த பெருமையடைந்தேன். கலாம் இஸ்லாமியர்தான் என்றாலும் அவர் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த வரை குடியரசு தலைவர் மாளிகையில் 'இப்தார்' விருந்து அளிக்கப்பட்டதில்லை.

அப்துல் கலாம் 'யெஸ் சார்' வகை அதிகாரிகளை பக்கத்தில் வைத்து கொண்டதில்லை. ஒரு முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். இருவரும் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் நின்ற என்னை பார்த்து மிஸ்டர். நாயர் நான் சொல்வது சரியா? என்று வினா எழுப்பினார். அது சரியாக இருக்காது என்றும் அதற்கான காரணங்களையும் நான் அடுக்கி கூறினேன். உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பிரமிப்பு. ராஷ்டிரபதியின் கருத்துக்கு சாதாரண அதிகாரி எதிர் கருத்து சொல்வதும் அதனை அவர் அனுமதிப்பதையும் கண்டு நீதிபதி அசந்தே போனார்.

குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பொறுப்பேற்ற போது ராமேஸ்வரத்தில் இருந்து அவரது உறவினர்கள் 50 பேர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கியிருந்தனர். அவர்கள் டெல்லியை சுற்றிபார்க்க ஒரு பஸ் அமர்த்தி தரப்பட்டது. அந்த பேருந்துக்கான கட்டணத்தை அப்துல் கலாம் வழங்கி விட்டார். இவர்களில் யாருக்கும் எந்த சமயத்திலும் அரசுக்கு சொந்தமான கார் பயன்படுத்தப்படவில்லை. கலாமின் உறவினர்கள் டெல்லியில் தங்கியிருந்த சமயத்தில் அவர்களுக்கு உணவு செலவாக 2 லட்ச ரூபாய் குடியரசுத் தலைவர் மாளிகையில் செலவிடப்பட்டது. அந்த தொகையை கலாம் தனது கையில் இருந்து செலுத்தி விட்டார். எந்த குடியரசுத் தலைவரும் இது போன்று செலுத்தியதே இல்லை.

அப்துல் கலாமின் 5 ஆண்டு பதவி காலம் முடிய சில நாட்கள் இருந்த சமயத்தில் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் ஊழியர்கள் அவரை சந்தித்துக் கொண்டிருந்தனர். அப்போது நானும் அவரை சந்தித்தேன். என்ன மிஸ்டர் . நாயர் உங்கள் மனைவியை காணோம்? என்று கலாம்  கேட்டார். எனது மனைவி ஒரு விபத்தில் சிக்கி கால் உடைந்து வீட்டில் இருக்கிறார் என்றேன். அடுத்த நாள் எனது வீட்டை சுற்றி ஒரே போலீஸ். என்னவென்று பார்த்தால் கலாம் எனது மனைவியை பார்க்க வீட்டுக்கே வந்து விட்டார். ஒரு குடியரசுத் தலைவர் சாதாரண ஊழியரின் மனைவியை சந்தித்து பேசுகிறாரே என்று நான் வியந்து போனேன்.

இவ்வாறு முன்னாள் குடியரசுத் தலைவர் பற்றி பி.எம். நாயர் கூறியுள்ளார்

Tuesday, August 04, 2015

அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!

நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்!’ என்றேன்.
 
 
2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது. ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை. ஒவ்வொரு முறை டர்புலென்ஸ் காரணமாக விமானம் ஆட்டம் காணும்போது, நான் பயத்தில் அமர்ந்திருக்க, ஜன்னலை மூடிவிட்டு, 'இப்போது பயம்  போயிருக்குமே! என்பார்.  
கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டுக்கு 2.5 மணிநேரம் காரில் பயணம். மொத்தமான 5 மணிநேரப் பயணத்தில் நாங்கள் நிறைய பேசினோம், விவாதித்தோம். இதுவரை நூற்றுக்கணக்கான முறை அவருடன் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையுமே விஷேசமான அனுபவமாகவே இருக்கும். 
இந்தக் கடைசி பயணத்தில் இருந்து 3 முக்கிய சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...
முதலாவதாக, பஞ்சாபில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி மிகவும் கவலையுடன் இருந்தார் டாக்டர் கலாம். அப்பாவி உயிர்கள் பலியானது அவருக்கு பெரும் வேதனையை அளித்திருக்கிறது. ஷில்லாங் ஐஐஎம்மில் அவர் பேசவேண்டிய தலைப்பு ‘Creating a Livable Planet Earth’. இதனுடன் பஞ்சாப் சம்பவத்தை இணைத்து என்னுடன் பேசினார். ‘பொல்யூஷனைவிட மனிதர்களின் வேலைகள்தான் இந்த உலகுக்கு பெரிய அச்சுறுத்தல்’ என்றார்.
'வன்முறை, மாசு, மனிதர்களின் பொறுப்பில்லாத நடவடிக்கைகள்  போன்றவை தொடர்ந்தால் நாம் உலகைவிட்டு வேறு எங்காவது சென்றுவிட வேண்டியதுதான்...' என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தோம். ‘இப்படியே போனால் 30 வருடங்கள்தான். இளைஞர்களாகிய நீங்கள்தான் ஏதாவது செய்யவேண்டும். இது உங்களுடைய எதிர்கால உலகம் இல்லையா?’ என்றார் கலாம். 
இரண்டாவது. கடந்த 2 நாட்களாகவே பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து கலாம் கவலையாக இருந்தார். ‘நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது 2  முறை ஆட்சிகள் மாறியது.  பதவியில் இல்லாதபோதும் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறேன். பாராளுமன்றம் செயலிழந்துதான் இருக்கிறது. இது சரியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் பாராளுமன்றத்தில் நடைபெற வேண்டும். இதற்கான வழியை நான் கண்டுபிடிக்கவேண்டும்’ என்றார். 
உடனே, என்னை ஷில்லாங் ஐஐஎம் மாணவர்களுக்காக, சர்ப்ரைஸாக ஒரு அசைன்மென்ட் கேள்வியைத் தயார் செய்யச் சொன்னார். இந்தக் கேள்வியை தன்னுடைய உரை முடித்தபின்தான் கலாம் மாணவர்களுக்கு சொல்வதாக இருந்தார். நம் பாராளுமன்றம் இன்னும் சிறப்பாக செயல்பட 3 புதுமையான ஐடியாக்களை மாணவர்கள் தரவேண்டும் என்பதே அது. ஆனால், ‘என்னிடமே இதற்கு பதில் இல்லாதபோது, எப்படி மாணவர்களிடம் பதில் கேட்பது?’ என்று வருந்தினார் கலாம். அடுத்த 1 மணிநேரம் இதுகுறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த ஆரோக்கியமான விவாதத்தை எங்களுடைய அடுத்த புத்தகமான ‘அட்வான்ட்டேஜ் இந்தியா’வில் சேர்க்கலாம் என பேசிக்கொண்டோம்.  
 
மூன்றாவது. இங்குதான் கலாம்-ன் உண்மையான, அழகான மனதை தெரிந்துகொண்டேன். ஆறேழு கார்கள் கொண்ட அணிவகுப்பில், 2வது காரில் நாங்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்பு, ஒரு ஜிப்ஸியில் 3 பாதுகாப்பு வீரர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் மட்டும் பாதுகாப்புக்காக ஜிப்ஸி மேல் துப்பாக்கியுடன் நின்று கொண்டு வந்தார். ஒருமணிநேரம் இருக்கும். ‘ஏன் அவர் நின்றுகொண்டே இருக்கிறார். சோர்வடைந்துவிடுவாரல்லவா? பார்ப்பதற்கு ஏதோ தண்டனைக்காக நிற்பதுபோல் இருக்கிறது. உடனே அவருக்கு வயர்லெஸ்ஸில் அவரை அமரச் சொல்லி தகவல் அனுப்புங்களேன்’ என்றார் கலாம். பாதுகாப்புக்காக அவர் நிற்கக்கூடும் என்று கலாமை சமாதானப்படுத்தினேன். ஆனால், அவர் கேட்கவில்லை. எனவே, ரேடியோ மூலம் தகவல் அனுப்பினோம். அது வேலையும் செய்யவில்லை. அடுத்த ஒன்றரை மணிநேரப் பயணத்தில் மூன்று முறை அவரை அமரச்சொல்லுமாறு கை சைகை கொடுக்கச் சொல்லி என்னிடம் நினைவூட்டினார். ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. எனவே, ‘நான் அந்த பாதுகாப்பு வீரரை சந்தித்து நன்றி சொல்லவேண்டும்’ என்றார்.
 
 
ஷில்லாங் சென்றவுடன் அந்த பாதுகாப்பு வீரரைக் கண்டுபிடித்து கலாமிடம் அழைத்துச் சென்றேன். டாக்டர் கலாம் அந்தப் பாதுகாப்பு வீரரை வரவேற்று வாழ்த்தினார். கைகுலுக்கி ‘thank you buddy’ என்றார். ‘நீ சோர்வாக இருக்கிறாயா? ஏதாவது சாப்பிடு. என்னால் நீ அவ்வளவு நேரம் நிற்க வேண்டியிருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்றார். கலாம் இப்படிச் சொன்னது அந்த வீரருக்கு ஆச்சரியமாக இருந்தது. வார்த்தைகள் இல்லாமல், ‘சார். உங்களுக்காக இன்னும் 6 மணிநேரம்கூட நிற்பேன்' என்றார். 
 
பின்னர், லெக்சர் அறைக்கு சென்றோம். ‘எப்போதும் மாணவர்களைக் காக்கவைக்ககூடாது!’ என்று அடிக்கடி சொல்வார் கலாம். எனவே, அவருடைய மைக்கை உடனடியாக செட் செய்து கொடுத்து, லெக்சர் குறித்து விளக்கினேன். மைக் செட் செய்யும்போது ‘Funny guy! Are you doing well?” என்றார் கலாம். அவர் ‘Funny guy’ என்று சொன்னால் அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. அவர் சொல்லிய விதத்தைப் பொறுத்து அர்த்தங்கள் மாறுபடும். நாம் நன்றாக இயங்கினாலோ, ஏதாவது சொதப்பிவிட்டாலோ என பல தருணங்களுக்கும் இதைச் சொல்வார் கலாம். இல்லாவிட்டால் சும்மா ஜாலிக்காகவும் சொல்வார். அவருடன் இருந்த 6 வருடங்களில் ‘Funny Guy’ என்ற அவருடைய வார்த்தை பிரயோகத்தை நான் முழுவதும் புரிந்துவைத்திருந்தேன். ஆனால், இதுதான் இறுதி முறை என்பது எனக்கு அப்போது புரியவில்லை. 
 
"Funny guy! Are you doing well?” என்றார் ‘ஆம்’ என்றேன். அவைதான் கலாம் என்னிடம் கூறிய கடைசி வார்த்தைகள். 
 
மேடைப் பேச்சில் 2 நிமிடங்கள் பேசியிருப்பார். ஒரு வாக்கியத்தை  முடித்துவிட்டு, நீண்ட இடைவெளி விட்டார். நான் அவரைப் பார்த்தேன். மேடையில் இருந்து அப்படியே சரிந்தார். 
 
அவரை தூக்கி நிறுத்தினோம். மருத்துவர் ஓடி வந்தார். எல்லா விதத்திலும் முயற்சித்தோம். அவருடையை கடைசி தருணத்தை மறக்கவே முடியாது. முக்கால்வாசி கண்கள் மூடியிருந்த நிலையில் அவருடைய பார்வை இன்னும் நினைவில் உள்ளது. ஒருகையில் அவர் தலையைப் பிடித்துக்கொண்டிருந்தேன். அவருடைய கை என் விரல்களைப் இறுக்கிப் பிடித்திருந்தன. அவர் முகத்தில் ஒரு பேரமைதி. அவர் கண்களில் இருந்து ஞானம் பிரகாசித்தது. அவர் ஒருவார்த்தை பேசவில்லை. அவர் வலியையும் வெளிக்காட்டவில்லை. அவர் வாழ்க்கையின் அர்த்தம் மட்டுமே எங்களுக்குப் புரிந்தது. 
 
அடுத்த 5 நிமிடங்களில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தோம். சில நிமிடங்கள் கழித்து, கலாம் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். கடைசி தடவையாக அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன். என் நண்பர் , என் வாழ்வின் வழிகாட்டி விடைபெற்றுவிட்டார். என் நினைவுகளிலும், அடுத்த பிறப்பிலும் உங்களை மீண்டும் சந்திப்பேன் சார்!
 
இப்போது என் நினைவுகள் என்னை ஆக்கிரமித்தன.   
 
'நீ இளைஞன். நீ என்னவாக நினைவில் கொள்ளப்பட விரும்புகிறாய்?’  என்று அடிக்கடி என்னைக் கேட்பார். நானும் ஒவ்வொரு முறையும் அவரைக் கவர்வதற்காக வித்தியாசமான பதில்களைக் கண்டுபிடிப்பேன். ஒருநாள் பொறுமையிழந்து அவரிடமே திரும்பக் கேட்டேன். ‘முதலில் நீங்கள் சொல்லுங்கள். எதற்காக மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள்? குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகன், இந்தியா 2020….சொல்லுங்கள்!’ என்றேன்.
 
'ஆசிரியர்’ என்றார் கலாம்.
 
 
2 வாரங்களுக்கு முன்பு அவருடைய நண்பர்களைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது,’பிள்ளைகள்தான் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளவேண்டும். சில சமயங்களில் அப்படி நடக்காதது வருத்தமாக இருக்கிறது’. ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்பு, ‘2 விஷயங்கள் அனைத்து பெரியோர்களுக்கும். எப்போதும் உங்கள் இறுதிப் படுக்கையில் பணத்தை விட்டுச் செல்லாதீர்கள். இது குடும்பத்தின் மகிழ்ச்சியைக் குலைத்துவிடும். இரண்டாவது. வாழ்வின் முடிவில் தான் நினைத்த வேலையைச் செய்துகொண்டே மரணிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். நம் கடைசி தருணங்கள் டக்கென்று முடிந்துவிடவேண்டும்'  என்றார். 
 
இன்று, அவர் விரும்பியதை செய்தபடியே இறுதிப் பயணதை மேற்கொண்டிருக்கிறார். கற்பித்தல். இதற்காகத்தான் தான் நினைவு கொள்ளப்படவேண்டும் என்று விரும்பினார் கலாம். அவருடைய கடைசி தருணத்தில், அவருக்குப் பிடித்தவாறு, மேடையில் கற்பித்துக்கொண்டே மறைந்துவிட்டார் கலாம். ஒரு மகத்தான ஆசிரியராக நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார். அவருடைய வங்கிகணக்கில் ஒன்றுமில்லை. நமக்கான வாழ்த்துக்களும், மக்களுக்கான காதலும் மட்டுமே அவர் விட்டுச்சென்ற சொத்துகள். வாழ்க்கையில் வெற்றிபெற்றுவிட்டார் அப்துல் கலாம். 
 
உங்களுடன் நான் பகிர்ந்துகொண்ட தருணங்கள், உங்களுடைய தன்னடக்கம், எதையும் தெரிந்துகொள்ள விரும்பும் ஆர்வம் இனி எனக்கு தரிசிக்கக் கிடைக்கப் போவதில்லை. வாழ்க்கையின் அர்த்தத்தை வாழ்ந்த விதத்திலும், வார்த்தைகளிலும் நீங்கள் எனக்கு சொல்லிக்கொடுத்தீர்கள். நாம் விமானத்தைப் பிடிக்க விரைந்த தருணங்கள், நம் பயணங்கள், நம் விவாதங்கள் இனி நினைவுகள்தான். எனக்கு கனவுகள் கொடுத்தீர்கள்.  இப்போது நீங்கள் இல்லை. ஆனால், கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது! "
 
உங்கள் மாணவன்,
 
ஶ்ரீஜன் பால் சிங் 

அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில முக்கியப் பக்கங்கள் - 2

தலைமை அறிவியல் ஆலோசகர்:
 
(நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்)


* 1992 முதல் 1999 வரை பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்- II அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களிப்பு அளித்தார்.

* 1998-ல் இதயம் சம்பந்தமான டாக்டர். சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவில் கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை கெளரவப்படுத்தும் வகையில் 'கலாம்-ராஜூ ஸ்டென்ட்' என பெயரிடப்பட்டது.

* 2012-ல் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார வழிமுறைக்காக வடிவமைத்த டேப்லெட் கணினி 'கலாம்-ராஜூ டேப்லெட்' என்று பெயரிடப்பட்டது. 


 
இந்தியாவின் சக்தி - ப்ரமோஸ்
 

ஆயுதங்கள் உருவாக்கத்தில் இந்தியா கொஞ்சம் வீக்தான். சீனாவே பாராட்டினாலும், அர்ஜுன் டேங்க் இந்திய ராணுவத்தின் நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை. லைட் காம்பேட் ஏர்கிராஃப்ட் ப்ராஜெக்ட் மிகவும் தாமதமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், BrahMos பிராஜெக்ட் மட்டும் சூப்பர் சக்ஸஸ். யார் காரணம்? அப்துல் கலாம்.
 

‘ரோஹிணி’ செயற்கைக் கோள் வெற்றிக்குப் பிறகு, Integrated Guided Missile Development திட்டத்தின் மூலம் ஏவுகணை மேல் ஏவுகணை விட்டு இந்தியாவின் சக்தியை உலகுக்கு பறைசாற்றினார் கலாம். ஆனால், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளராகவும் அப்துல் கலாம் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட BrahMos ப்ராஜெக்ட்தான், உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது.
 
 

ரஷ்யாவுடன் இந்தியா இணைந்து BrahMos ஏவுகணையை உருவாக்கலாம்’ என்று அப்துல் கலாம் நினைத்த நொடி, இந்தியாவின் பாதுகாப்பு வல்லமையில் முக்கியமான தருணம். ப்ரமோஸ் ஏவுகணை உருவாக்கத்தில் கலாம் வகித்த பங்கைத் தெரிந்துகொள்ள ‘ப்ரமோஸ் ஏவுகணையின் தந்தை’ என்று அழைக்கப்படும் ஏ. சிவதாணு பிள்ளை எழுதிய ‘The Path Unexplored’ புத்தகத்தைப் படிக்கலாம். இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியதே அப்துல் கலாம்தான்.  
 
 

அதில், சிவதாணு பிள்ளை, அப்துல் கலாம் 1995-ல் தன்னிடம்  க்ரூஸ் ஏவுகணை உருவாக்கத்துக்கான  இந்தியா - ரஷ்யா கூட்டுமுயற்சிக்கு தலைமை செயல் இயக்குனராக பொறுப்பேற்றுக்கொள்ளச் சொன்னார் என்று எழுதியிருக்கிறார். ப்ரமோஸ் உருவாக்கத்தில் பிள்ளை என்ன திட்டத்தைச் சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்வாராம் கலாம். அதேபோல், கலாம் இந்த ப்ராஜெக்ட் சம்பந்தமாக எந்தக் கோப்புகளை அனுப்பினாலும், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ், முதலில் முக்கியத்துவம் கொடுத்து, கையெழுத்திட்டு திருப்பி அனுப்புவாராம்.

இன்று, ப்ரமோஸ் ஏவுகணைதான் உலகிலேயே மிகவேகமான க்ரூஸ் ஏவுகணை. ஏன், உலகிலேயே கடற்படை, விமானப் படை, தரைப்படை ஆகிய மூன்றுமே சூப்பர்சானிக் ஏவுகணை (ப்ரமோஸ்) கொண்ட ஒரே நாடு இந்தியாதான். ப்ரமோஸ் வெற்றியில் முக்கியப் பங்கு அப்துல் கலாமுக்கு இருக்கிறது.
 
ப்ரமோஸ் சீறிப்பாய்வதைப் பார்ப்பதற்கே கெத்தாக இருக்கும்

 
 
 


 

கலாமின் கனவு இந்தியா 2020!
 
 

'எப்போது பார்த்தாலும் வீண் கனவு கண்டு கொண்டே இருக்காதே! எல்லாம் பகல் கனவு தான்!' இப்படி தான் 'கனவு' என்ற வார்த்தை நம் மனதில் இந்த மனிதர் பேசுவதற்கு முன் இருந்தது. கண்களை மூடிக்கொண்டு காணும் கனவை, கண்களை திறந்து கொண்டும் காண முடியும் என்று புரிய வைத்தவர் அப்துல் கலாம். இன்று இந்தியா 2020-ம் ஆண்டுக்குள் வல்லரசாக வேண்டும் என்று பலர் கூறுவதை கேட்டிருப்போம். அவர்கள் அனைவரது பேச்சிலும் 'அப்துல் கலாம் கனவு கண்டது போல் இந்தியா 2020க்குள் வல்லரசாகும்' என்றுதான் மேற்கோள் காணப்படும்.
 

இந்தியாவிற்காக அவர் கண்ட நம்மை காண சொன்ன கனவு மிகப்பெரியது, மிகச்சிறந்தது. ஒருவேளை அவர் இந்திய குடியரசு தலைவர் ஆகாமல் போயிருந்தால் இதே விஷயத்தை ஏதோ ஒரு கல்லூரியின் விழாவில் மாணவர்களிடையே புகுத்தி நமக்குள் இந்தியாவின் வல்லரசு கனவுக்கான விதையை விதைத்திருப்பார்.
 

 
அவர் கண்ட கனவில் முதலாவது, இந்தியாவில் உள்ள மக்களின் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பது தான். இந்தியாவின் வளர்ச்சியை அளவிடும் அளவுகளான ஜிடிபி மூலம் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி என்பது 1996களில் மற்ற நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டால் 15வது இடத்தில் இருந்தது. அதனை 2020ல் 4வது இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அவரது கனவு. 
 

தொடர்ந்து உள்ளூர் சந்தைகளை ஊக்குவிப்பது, உற்பத்தி மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி என்பது நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டும். உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் நிதித்துறையில் தொழில்நுட்ப மேம்பாடுகளை கொண்டுவர வேண்டும். இந்தியாவில் தொழிநுட்ப மேம்பாடுகளை கொண்டுவர நிலையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடாக உலக நாடுகள் பார்க்க வேண்டும் என்பது தான் அவர் கண்ட முதன்மையான கனவு. மேலைநாடுகளில் இருந்த CAD மற்றும் CAM போன்ற இயந்திரவியலின் புதுமைகளை பற்றி கலாம் ஆரம்பத்தில் இருந்தே ஆணித்தரமாக வலியுறுத்தி வந்தார். அவரது சீரிய முயற்சியால் பல கல்லூரிகளில் இந்த பாடங்கள் இடம்பெற்றன.
 
 

இந்தியாவை உணவு பற்றாக்குறை இல்லாத நாடாகவும், விவசாய வளமிக்க நாடாகவும் மாற்ற வேண்டும், இந்தியாவில் ஆண்டுக்கு 14 மில்லியன் டன் உணவை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனால் இந்தியாவில் 40 சதவிகிதம் பேர் வறுமை கோட்டுக்குக்கீழ் உள்ளனர். இந்த நிலையை மாற்ற உணவுக்கான வழிவகைகளை செய்து விவசாயத்தை முன்னேற்ற வேண்டும்.
 

உற்பத்தி துறை தான் இந்தியாவின் வருங்காலம் என்று அவர் குடியரசு தலைவராக இருந்தபோது இந்தியா 2020 புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இன்று மேக் இன் இந்தியா திட்டத்தில் அரசு கணித்திருக்கும் அளவுகள் அப்துல் கலாமின் கணிப்புகளுடன் பொருந்துகின்றன என்பது ஆச்சர்யமாக உள்ளது. தற்போது வந்துள்ள திட்டத்தை பல வருடங்களுக்கு முன் கணித்திருக்கிறார் என்றால் அவர் மாமனிதர் தானே!
 

இந்தியாவில் சிறப்பான சாலைகள் இல்லாதது தான் இந்தியாவின் உற்பத்திதுறை வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது என்பதை கூறி இருந்தார். அதன்படி தான் அன்றைய பிஜேபி அரசு தங்க நாற்கர சாலை திட்டத்தையும், துறைமுகங்களை இணைக்கும் சாலைகளையும் கொண்டுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

இங்குள்ள தொழில்களையும் அதில் பணிபுரியும் பணியாட்களின் திறனையும் அதிகரிக்க சிறப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டும் அதன் மூலம் இந்தியாவுக்கு அனைத்து துறைகளிலும் வல்லமைமிக்க மனித வளத்தை அளிக்க முடியும் என்றார். இந்த கனவுகளை இந்திய இளைஞர்களால் எளிதில் சாத்தியப்படுத்த முடியும் என நம்பியவர் கலாம்.
 


 
ஒரு சினிமா நடிகரின் பேச்சையும், ஒரு கிரிக்கெட் வீரர் சொல்லும் குளிர்பானத்தை குடித்துக்கொண்டும் இருந்த இளைய சமுதாயம் 83 வயது இளைஞர் சொன்னால் இந்தியாவை உயர்த்த எண்ண வேண்டுமானாலும் செய்வோம் என மாறியது. இளைஞர்கள் நாட்டின் சொத்துக்கள். அவர்களது சக்தியை சிறப்பாக செயல்படுத்தினால் இந்தியா உலகின் அழிக்க முடியாத சக்தியாக மாறும் என்பதில் அச்சமில்லை என்றார்.

அவரது 'கனவு இந்தியா' இன்னும் உருவாகவில்லை. ஆனால் அவர் சொன்ன பாதையில் உருவாகி கொண்டிருக்கிறது. அவர் கனவு கண்ட தேசத்தை அவருக்காக உருவாக்கி தருவது அவர் நம்பிக்கை வைத்த இளைஞர்களின் கடமை. இங்கு ஊரைச் சுற்றும் இளைஞர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உலகை சுற்றும் செயற்கைக்கோள்களை தயாரித்து விண்ணைச் சுற்றுவார்கள். இந்தியா 2020-ம் ஆண்டில் அப்துல்கலாம் கண்ட 'கனவு இந்தியா'வாக உருவாகும். இந்தியாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் செயலில், கோடிக்கணக்கான அப்துல்கலாம்களை பார்ப்பது மட்டுமே இந்தியாவின் தற்போதைய இலக்கு. 
 
 


கனவு காணுங்கள்! அப்துல் கலாம் மறையவில்லை! இந்தியாவின் வளர்ச்சிக்கான கனவுகள் உள்ளவரை கலாமை அழிக்க முடியாது!
 
 
- டிஜிட்டல் ஃபர்ஸ்ட் டீம், விகடன்
 
(நன்றி: ClaysonsSkitlibrary)

அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில முக்கியப் பக்கங்கள்


 
 
அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில முக்கியப் பக்கங்கள்  
 

டாக்டர் அப்துல் கலாம் - இந்தியாவின் விஞ்ஞானி

 
முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ராணுவம், விண்வெளி, விமானம் உள்ளிட்ட ஆராய்ச்சி துறைகளில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர். ஏவுகணை உருவாக்கம் கண்டுப்பிடிப்புகளில் இவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. சுமார் 40 ஆண்டுகால ஆராய்ச்சி பணிகளில் பல ஏவுகணைகளை உருவாக்கியுள்ளார். அதில் செயற்கைகோள்களை அனுப்பி பல  சோதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

 
 
(நன்றி; தி இந்து) 
 
* ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை தொடங்கினார்.

* திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாடத்தில் 1954-ல் பட்டம் பெற்றார்.  
* சென்னையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) விண்வெளி அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து, 1960-ம் பட்டம் பெற்றார்.

*  பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) விமான அபிவிருத்தி பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக சேர்ந்தார். அங்கு  சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்துக்காக வடிவமைத்துக் கொடுத்தார்.  

* பிரபல விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த குழுவில் (INCOSPAR) ஒரு அங்கமாகவும் அப்துல் கலாம் இருந்தார்.

ஏவுகணை உருவாக்கம்:

 
* 1969-ம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு(ISRO) மாற்றப்பட்டார். அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுவதற்கான ஏவுகணை (launcher) (எஸ். எல். வி-III) தயாரிக்கும திட்டத்தின் இயக்குனர் ஆனார்.

* 1980-ல் எஸ். எல். வி-III ஏவுகணை 'ரோஹினி' என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக  விண்ணில் ஏவியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கலாம் சேர்ந்தது போன்றவை மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. எஸ். எல். வி. திட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தப் பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாகக் கூறுவார்.

* கலாம் 1965-ல் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் விண்கலத் திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார். 1969-ல், அரசாங்கத்தின் அனுமதிப் பெற்று மேலும் பல பொறியாளர்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.

* 1963–64 இல், அவர் நாசாவின் லாங்க்லியின் ஆராய்ச்சி மையம், கிரீன்ஃபீல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம், மேரிலாண்ட் மற்றும் விர்ஜீனியா கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வால்லோப்ஸ் விமான தளம் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார்.

* 1970க்கும் 1990க்கும் இடையில் உருவாக்கப்பட்டு ஏவப்பட்ட போலார் எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எல்.வி.3 ஆகிய ஏவுகணை திட்ட முயற்சிகள் வெற்றிகரமாக அமைந்தன.

* தேசத்தின் முதல் அணு ஆயுத சோதனையான  பொக்ரான் அணுகுண்டு திட்டத்தைக் காண்பதற்காக முனைய எறிகணை ஆய்வகத்தின் (TBRL) பிரதிநிதியாக அழைக்கப்பட்டார்.

* 1970-ல், எஸ். எல். வி ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோஹிணி - 1 விண்வெளியில் ஏவப்பட்டது இஸ்ரோவின் சாதனை!
 
* 1970களில், வெற்றிகரமாக ஏவப்பட்ட எஸ். எல். வி திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து எறிகணைத் (ballistic) தயாரிப்புக்காக டெவில் செயல் திட்டம் (Project Devil) மற்றும் வேலியன்ட் செயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்களை இயக்கினார். மத்திய அமைச்சரவை மறுத்தபோதிலும், பிரதமர் இந்திரா காந்தி தனது அதிகாரத்தின் மூலம்  விண்வெளி திட்டங்களுக்கு ரகசிய நிதி ஒதுக்கினார்.

* அப்துல் கலாமின் ஏவுகணை உருவாக்கும் திறமையால் 1980களில், அவரை மத்திய அரசு  கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்க தூண்டியது. கலாம் மற்றும் டாக்டர் வி.எஸ். அருணாச்சலம், உலோகவியல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும், அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமனின் யோசனையைப் பின்பற்றி ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளின் தயாரிப்பில் ஈடுபட்டார்கள்.

என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில்..?

Monday, June 08, 2015

உலகின் குட்டி நாட்டு கிரிக்கெட் அணி இது...!

லகின் மிகச்சிறிய நாடு வாட்டிகன். கத்தோலிக்க மதத் தலைவர் போப் ஆண்டவரின் தலைமையகம் இதுதான்.
போப் ஆண்டவருக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த குட்டி நாட்டின் நிர்வாகமும் போப் ஆண்டவரின் கையில்தான்.110 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 822 பேர்தான். ஆனால் இந்த குட்டி நாட்டிலும் ஒரு கிரிக்கெட் அணி இருப்பதுதான் ஆச்சர்யமானது.
ஐரோப்பாவை பொறுத்தவரை இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடையாது. வாட்டிகன் இருப்பதோ இத்தாலி தலைநகரான ரோம் நகருக்கு மத்தியில். இத்தாலி, கிரிக்கெட் வாடை என்பதே அறவே இல்லாத நாடு.

இந்நிலையில்தான் வாட்டிகன் நகரில் கடந்த 2014ஆம் ஆண்டு கிரிக்கெட் அணி ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த அணிக்கு 'செயின்ட். பீட்டர்ஸ் கிரிக்கெட் அணி' என்று பெயர் சூட்டப்பட்டது. வாட்டிகன் நகரில் தங்கி மதபோதனை வகுப்புகள் பயிலும் இளம் பாதிரியார்கள், இந்த அணியில் சேர்ந்தனர். இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்தவர்கள்தான் இந்த அணியில் சேர முதலில் ஆர்வம் காட்டினர். தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலிய நாட்டவர்களும் செயின்ட். பீட்டர்ஸ் கிரிக்கெட் அணியில் விளையாடுகின்றனர்.
இந்திய அணி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது போல், இந்த குட்டி நாட்டு அணியும் வெளிநாடுகளுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வாட்டிகன் அணியினர்,  இங்கிலாந்து சர்ச் அணி மற்றும் ராயல் பிரிட்டிஷ் அரச குடும்ப அணிகளுக்கு எதிராக கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.
அடுத்து இந்த அணியினர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.                  

Saturday, June 06, 2015

My India..

டெல்லியை ஆண்ட பால்பனும் அலாவு​தீன் கில்ஜியும், பொதுமக்கள் முன்னி​லையில் யானையை வைத்து மரண தண்ட​னையை நிறைவேற்றி இருக்கின்றனர். முகலாயப் பேரரசர் ஹுமாயூன், அவரது ஆட்சியைப் பற்றி ஓர் இமாம் தவறாக விமர்சித்ததற்காக, அவரை யானைக் காலால் மிதித்துக் கொல்ல தண்டனை அளித்து இருக்கிறார். முகலாயப் பேரரசரான ஜஹாங்கீர், யானையை வைத்து மரண தண்டனை வழங்கியதைப் பற்றி பிரெஞ்சுப் பயணி பெர்னியர் தனது குறிப்பில் பதிவுசெய்துள்​ளார். முகலாயர் ஆட்சியில் யானைகளுக்கு தந்தங்களில் இணைக்கப்பட்ட கூர்மையான தகடுகளைப் பயன்படுத்தி குற்றவாளிகளை துண்டாக்குவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. 19-ம் நூற்றாண்டின் பிற்பாதி காலம் வரை நீடித்த இந்தப் பழக்கம் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசின் வளர்ச்சியால் குறைந்து இறுதியில் முற்றிலும் கைவிடப்பட்டது.
அது போலவே, ஒருவரது கழுத்தைக் கயிற்றால் சுற்றி கயிற்றின் இரு முனைகளால் கால் கட்டை விரல்கள் இரண்டையும் கட்டிவிடுவர். இதனால், நிமிர முடியாமல் குனிந்த நிலையிலேயே இருக்க வேண்டி இருக்கும். இந்த நிலையில், முதுகின் மேல் ஒரு கல்லை வைத்துவிடுவர். இந்தத் தண்டனையின் பெயர் அண்ணாந்தாள். தேவதாசிப் பெண்களுக்கு இதுபோன்ற கொடூரத் தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது என்று பேராசிரியர் சிவசுப்ரமணியன் தனது 'தேவரடியார்களும் அடிமை முறையும்’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். பண்டைய இந்தியாவின் தண்டனை முறைகளைப்பற்றி ஆராய்ந்த விஜய் சோமன், தண்டனைகளைத் தீர்மானிப்பதில் மதம் முக்கியப் பங்கு வகித்து இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். மத குருமார்கள், துறவிகள் ஆகியோர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ள அதுவே காரணம் என்கிறார்.
மராத்தியர் ஆட்சிக் காலத்திய தண்டனை முறை​களைப் பற்றிய அரிய தகவல்களைத் தருகிறது மோடி ஆவணம். தஞ்சையைத் தலைநகராகக்கொண்டு மராத்திய மன்னர்கள் ஏறத்தாழ 180 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளனர். மராத்தியர் ஆட்சியில் அரசு ஆவணங்கள் யாவும் மராத்திய மொழியில் எழுதப்பட்டன. இவ்வாறு எழுதும்போது அவர்கள் பயன்படுத்திய எழுத்து முறைக்கு 'மோடி எழுத்து’ என்று பெயர், அதனால் இவை 'மோடி ஆவணம்’ என்று அழைக்கப்படுகிறது. தஞ்சை மராத்திய ஆட்சியில் பயன்படுத்தப்பட்டது ஆர்ச்சைக் மோடி என்று அழைக்கப்படுகிறது. இந்த வடிவம் சிவாஜி காலத்தில் இருந்த மோடி வடிவமாகும். தஞ்சைக்கு வந்த பிறகு இந்த எழுத்து முறையில் மராத்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் கலந்து, மோடி எழுத்து உருவாகி இருக்கிறது. 1858-ம் ஆண்டுக்குப் பிறகு, தஞ்சையில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆங்கிலேய அரசு, மோடி ஆவணங்களை மூட்டையாகக் கட்டிக் கிடப்பில் போட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு இந்த அரிய ஆவணங்கள் முறையாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
1,700 மூட்டைகளுக்கும் மேலாக இருந்த ஆவணங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு 59 தொகுதிகளாக தமிழில் மொழி​பெயர்க்கப்பட்டுள்ளன. 1989-ம் ஆண்டு 'தஞ்சை மராட்டிய மன்னரின் மோடி ஆவணங்கள்’ எனும் தலைப்பில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இதன் பதிப்பாசிரியர் முனைவர் பா.சுப்பிரமணியன். இந்த அரிய புத்தகத்தில், மராத்தியர் காலத்தில் நிலவிய தண்டனை முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. உதாரணமாக, சிலவற்றைப் பாருங்கள்... 'பொய் சாட்சி சொன்னவரை தண்டிப்பதற்காக அவரது உடல் முழுவதும் கறுப்பு, வெள்ளைப் புள்ளிகளை இட்டு, கழுதையின் மேல் வாலின் பக்கம் முகமாக உட்காரவைத்து, அவர் கழுத்தில் எருக்கம் பூ மாலைகளைப் போட்டு, குற்றத்தின் விவரத்தைச் சொல்லி, தமுக்கு அடித்துக்கொண்டு பிரசித்தமான வீதிகளில் பட்டணம் முழுவதும் சுற்றிவர வேண்டும் எனத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. ராஜமால்படி களிமோடு என்னும் ஊரில் இருக்கும் வீராயி என்பவள் செம்பு திருடினாள் என அவளைச் சாவடியில் அடைத்தனர். அவளுடைய கழுத்தில் செம்பைக் கட்டி இன்ன குற்றம் செய்தாளென்று வாசித்துக்கொண்டு நான்கு வீதிகளிலும் தண்டோராவுடன் சுற்றவைத்து, ஒவ்வொரு வீதியிலும் பிரம்பால் மூன்று அடி வீதம் அடித்து மூன்று வாசல்களையும் காட்டிவிட்டு, கோட்டைக்கு வெளியே விரட்டிவிட்டது. சொந்தக்காரனிடம் செம்பு கொடுக்கப்பட்டது.’
ஆயுத சாலையில் ஒரு தச்சன் வேலை செய்துவிட்டு வீட்டுக்குப் போகையில் பாராக்காரன் அவனுடைய வேஷ்டியை உதறிப் பார்த்தபோது, ஒரு பித்தளைத் தகடு வேஷ்டியில் இருந்தது. முறையாகக் காவல் பணி செய்யாமல் அஜாக்கிரதையாக இருந்த குற்றத்துக்காக பாராகாரனுக்கு ஆறு தேங்காய் அபராதம் விதிக்கப்பட்டது. ஜான் பைஃப் என்ற கிழக்கிந்தியக் கம்பெனியின் ரெசிடென்ட் பிரதிநிதி தஞ்சையில் ஆற்று வெள்ளத்தைப் பார்க்கப் பயணித்தார். அப்போது, தேவதாசியின் மகள் 'நாகு’ என்பவள் வண்டியில் அமர்ந்து ரெசிடென்டின் யானைக்கு எதிராகப் பயணித்தாள். இதன் பொருட்டு அவளுக்கு ஒரு சக்கரம் இரண்டு பணம் தண்டம் விதிக்கப்பட்டது. பொய், புரட்டு செய்தவனுக்கு காலில் விலங்கு போட்டு ஒரு வருஷம் வரை மராமரத்து வேலை செய்ய வைத்து பிறகு, முழங்காலுக்குக் கீழே பிரம்பால் அடித்து விரட்டப்பட்டு இருக்கிறான்.
மோடி ஆவனத்தில் காணப்படும் சான்றுகள் தமிழகம் குறித்து முற்றிலும் வேறுவிதமான சித்திரம் ஒன்றை நமக்குத் தருகின்றன. மோடி ஆவணங்கள் இன்னும் முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. ஒருவேளை, அவை யாவும் பதிப்பிக்கப்பட்டால், கடந்த காலத்தில் புதையுண்டு போயிருந்த பல உண்மைகள் வெளிவரும். மோடி ஆவணங்களைப் போலவே மராத்தியர்களின் காலத்தை அறிய உதவுகிறது மெக்கன்சி சுவடிகள். சென்னை மாகாணத்தின் முதல் தலைமை நில ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்ட காலின் மெக்கன்சி, பணி நிமித்தமாகச் சென்ற இடங்களில் இருந்த சுவடிகளையும், கல்வெட்டுக்​களையும், நாணயங்களையும், நாட்டுப்புறக் கதைகளையும், வழிபாட்டு முறைகளையும், வாழ்வியல் நெறிகளையும் தொகுத்து இருக்கிறார். இதற்காக, அவரோடு சமஸ்கிருதம் தெலுங்கு, சமணம் அறிந்த பண்டிதர்கள் உடன் சென்று இருக்கின்றனர். கிராமங்களில் இருந்து அவர் சேகரித்த ஏடுகளை முறையாகப் பகுத்து முக்கியச் செய்திகளை குறிப்புகளாக எழுதிவைத்து இருக்கிறார். மேலும், தான் செல்லும் இடங்களில் இருந்த சிற்பங்கள், ஓவியங்கள் குறித்தும் கோட்டோவியங்கள் தீட்டிவைத்து இருக்கிறார். திப்புவுக்கு எதிராகப் போரிட்டவர் மெக்கன்சி. ஆனாலும், மற்ற வெள்ளை அதிகாரிகளைப் போல இல்லாமல், இந்தியாவின் அரிய கலைச்செல்வங்களையும் ஏடுகளையும் பாதுகாப்பதில் அக்கறையாக இருந்திருக்கிறார். அவர் சேமிப்பில் இருந்து லண்டனுக்கு எடுத்துச் சென்றவை போக எஞ்சியவை, சென்னையில் உள்ள அரசினர் கிழக்கியல் சுவடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை நமக்குக் கிடைத்துள்ள தமிழ்ச் சுவடிகளுள் (தாள்) மெக்கன்சி தொகுத்துவைத்திருக்கும் தாள் சுவடிகள்தான் பெரும்பான்மையாக இருக்கின்றன என்று, முனைவர் ம.ராசேந்திரன் தனது 'கர்னல் காலின் மெக்கன்சி’ நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். கொலை செய்த, கொள்ளை அடித்த கைதிகளைத் தண்டிப்பதற்காக உருவாக்கப்பட்ட தண்டனைகள் அரசியல் கைதிகளுக்குப் பொருந்தாதவை என்று மனித உரிமை ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். இந்தியத் தண்டனைகளில் மிகவும் மோசமானது தூக்குத் தண்டனை. இன்று, உலகெங்கும் மரண தண்டனைக்கு எதிராக மனித உரிமையாளர்கள் போராடுகின்றனர். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரண தண்டனை விதிக்கப்படுவது இல்லை.
96 நாடுகள் அதிகாரப்பூர்வமாக மரண தண்டனையை விலக்கி விட்டன. மரண தண்டனையை அதிகம் பயன்படுத்துவது அரபு நாடுகளும், சீனாவும்​தான். சிங்கப்பூர் இதில் முதல்இடம் வகிக்கிறது. மரண தண்டனையைக் கைவிட வேண்டும் என்பது குறித்து இந்தியாவிலும் தொடர் இயக்கங்கள் நடக்கின்றன. ஒரு நாடு முன்னேறி இருப்பதன் அடையாளம் அங்கு குற்றங்கள் குறைந்து இருப்பதுதான். ஆனால், இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் அதி கமாகிக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, பெண் களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. வெளியே தெரியவருபவை குறைவே. நீதிமன்றத்தை நாடிச் செல்வதும் மிகக் குறைவுதான். குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்வதற்கே பல தடைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியே போனாலும் பணம், செல்வாக்கு, பதவி போன்றவை வழக்கின் போக்கைத் திசைதிருப்பி விடுகின்றன. பல வழக்குகளில் தீர்ப்பு வருவதற்கு பத்துப் பதினைந்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். மறுக்கப்படும் நீதி சாமான்ய மனிதன் மனதில் ஆழ மான வேதனையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் கடந்த காலங்களில் நீதி எனப்படுவது, சட்டத்தால் மட்டும் உருவாக்கப்பட்ட ஒன்றாக இல்லாமல் தனி மனிதன் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படை அறமாகவும் இருந்தது. இன்று, தனி மனிதனும் தனது அறத்தைக் கைவிட்டுவிட்டான். நீதி அமைப்புகளும் சாமான்ய மனிதனைக் கைவிட்டு விட்டன என்பது ஆழ்ந்த கவலை தரும் உண்மை.