Monday, June 08, 2015

உலகின் குட்டி நாட்டு கிரிக்கெட் அணி இது...!

லகின் மிகச்சிறிய நாடு வாட்டிகன். கத்தோலிக்க மதத் தலைவர் போப் ஆண்டவரின் தலைமையகம் இதுதான்.
போப் ஆண்டவருக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த குட்டி நாட்டின் நிர்வாகமும் போப் ஆண்டவரின் கையில்தான்.110 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 822 பேர்தான். ஆனால் இந்த குட்டி நாட்டிலும் ஒரு கிரிக்கெட் அணி இருப்பதுதான் ஆச்சர்யமானது.
ஐரோப்பாவை பொறுத்தவரை இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடையாது. வாட்டிகன் இருப்பதோ இத்தாலி தலைநகரான ரோம் நகருக்கு மத்தியில். இத்தாலி, கிரிக்கெட் வாடை என்பதே அறவே இல்லாத நாடு.

இந்நிலையில்தான் வாட்டிகன் நகரில் கடந்த 2014ஆம் ஆண்டு கிரிக்கெட் அணி ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த அணிக்கு 'செயின்ட். பீட்டர்ஸ் கிரிக்கெட் அணி' என்று பெயர் சூட்டப்பட்டது. வாட்டிகன் நகரில் தங்கி மதபோதனை வகுப்புகள் பயிலும் இளம் பாதிரியார்கள், இந்த அணியில் சேர்ந்தனர். இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்தவர்கள்தான் இந்த அணியில் சேர முதலில் ஆர்வம் காட்டினர். தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலிய நாட்டவர்களும் செயின்ட். பீட்டர்ஸ் கிரிக்கெட் அணியில் விளையாடுகின்றனர்.
இந்திய அணி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது போல், இந்த குட்டி நாட்டு அணியும் வெளிநாடுகளுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வாட்டிகன் அணியினர்,  இங்கிலாந்து சர்ச் அணி மற்றும் ராயல் பிரிட்டிஷ் அரச குடும்ப அணிகளுக்கு எதிராக கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.
அடுத்து இந்த அணியினர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.                  

No comments: