Thursday, August 24, 2017

Science Timeline

2016-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உலகின் மொத்த மக்கள் தொகை 7.442 பில்லியன். இப்போது இந்த பூமிப்பந்து முழுவதும் நாம் பரவிக் கிடந்தாலும், மனிதர்கள் தோன்றியபோது இந்த நிலை நிச்சயம் இருந்திருக்காது.

வரலாற்று ஆய்வின்படி முதல் மனித இனம் கிழக்கு ஆப்பிரிக்காவிலோ அல்லது, இந்தியாவின் தென்பகுதியிலோ உருவானதாக சொல்லப்படுகின்றது. அங்கிருந்து மனித இனம் எவ்வாறு பூமியின் எல்லா மூலைக்கும் சென்றடைந்தது என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. அப்போது வாழ்ந்த மனிதர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பிறகு எப்படிச் சரியான வரலாற்றை நாம் அறிய முடியும்?

அறிவியல் ஆராய்ச்சி

இன்றைய அறிவியல், பல ஆராய்ச்சிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காண உதவுகிறது. DNA மூலக்கூறு ஆராய்ச்சி மூலம் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. உதாரணமாக, பண்டைய மனிதனின் ஒரு எலும்பு கிடைத்தால் போதும், அது எந்தக் காலத்தை சேர்ந்த மனிதனுடையது எனவும், அந்த வகை மனித இனம் இப்போது இருக்கிறதா, அதற்கும் நமக்கும் என்னென்ன வேறுபாடுகள் என்பது வரை கண்டறிய முடியும்.

புகழ்பெற்ற நேஷனல் ஜீயோகிராஃபி சேனல் 2005-ம் ஆண்டு “ஜெனோகிராஃபிக் ப்ராஜெக்ட்” என்ற ஒன்றை ஆரம்பிக்கிறது. இதற்கு பல்வேறு நாடுகளில் இருக்கும் மானுடவியலாளர்கள் (Anthropologists) மற்றும் மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சியாளர்கள் (Paleontologists) ஆதரவு தெரிவித்து உதவி வருகின்றனர். எங்கே மனித இனம் தோன்றியது, எப்படி எல்லாம் அவர்கள் இடம்பெயர்ந்தார்கள் என்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றனர். மனித இனத்தின் வளர்ச்சி மற்றும் பயணம் பற்றிய ஒரு எளியத் தொகுப்பு இதோ…

2,00,000 வருடங்களுக்கு முன்: 500,000 வருடங்களுக்கு முன்பே பழங்கால மனிதர்கள் தோன்றி இருந்தாலும் அவர்கள் உடலமைப்பில் சற்று வேறுபட்டே இருந்தனர். தற்போது இருக்கும் மனித இனம் ஹோமோ சேபியன்கள் இனத்தைச் சார்ந்தது. இவர்கள் முதன் முதலில் கிழக்கு ஆப்பிரிக்காவில் 200,000 வருடங்களுக்கு முன் உருவாகின்றனர்.

70,000 வருடங்களுக்கு முன்: பனி யுகத்தின் குளிர்ந்த, உலர்ந்த காலத்துக்குள் பூமி நுழைகிறது. பல்வேறு பழங்கால மனித இனங்கள், விலங்கு மற்றும் பறவை இனங்கள் இதில் அழிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

60,000 வருடங்களுக்கு முன்: அதுவரை ஆப்பிரிக்காவில் மட்டும் இருந்து வந்த ஒரு சில மனித இனங்கள் முதன்முறையாக அந்தக் கண்டத்தை விட்டு வெளியே வருகின்றனர். கால்நடையாகவே நெடும்பயணம் மேற்கொள்கின்றனர். இப்போது தான் நாடோடி வாழ்க்கையே சிறந்த முறை என்று உணர்கின்றனர்.

50,000 வருடங்களுக்கு முன்: முதன் முறையாக மனித இனம் ஆசியா வழியாகக் கடல் கடந்து ஆஸ்திரேலியாவில் கால் பதிக்கிறது. அதே சமயம், மற்றோரு கூட்டம், முதன் முறையாகச் செங்கடலை கடந்து அதுவரை சென்றிடாத இடங்களுக்கு எல்லாம் ஆச்சர்யங்களுடன் பயணிக்கின்றனர்.

40,000 வருடங்களுக்கு முன்: தென் கிழக்காக பயணப்பட்ட மனிதர்கள் ஐரோப்பாவில் வாழத் தொடங்குகின்றனர். அதே சமயத்தில், நீயாண்டர்தால் (Neanderthals) இன மனிதர்கள் அழியத் தொடங்குகின்றனர். இவர்களுக்கும், நமக்கும் 99.7% DNA ஒற்றுமை உண்டு. அதே போல் மனிதர்கள் மற்றும் சிம்பன்ஸீ குரங்குகளுக்கும் 98.8% DNA பொருத்தம் உண்டு. எனவே, இந்த மூன்று இனங்களும், ஒரு பொதுவான இனத்தில் இருந்து உருவாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

35,000 வருடங்களுக்கு முன்: இப்போது அவர்கள் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பூமியை ஆக்கிரமித்து வாழத் தொடங்கியிருந்தனர்.

25,000 வருடங்களுக்கு முன்: பனி யுகத்தின் கடைசி அதிகபட்ச பனிப்பொழிவு ஏற்பட்டுப் பல வகை உயிரினங்கள் அழிந்து போயின.

15,000 வருடங்களுக்கு முன்: முதன்முறையாக மனித இனம் பெரிங் ஸ்ட்ரெய்ட்டை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைகிறது. இந்த வழித்தடம், ஒரு குறுகிய கடல் பாதை. பனியுகத்தால் உருவான பாதையான இது ரஷ்யாவில் இருக்கும் சைபீரியாவையும், அமெரிக்காவின் அலாஸ்காவையும் இணைக்கிறது. இதைக் கடந்து வந்ததன் மூலம் மனிதர்கள் பூமியின் அனைத்து வாழக்கூடிய ஸ்தலங்களுக்கும் சென்று ஆக்கிரமித்துவிட்டனர்.

12,000 வருடங்களுக்கு முன்: வேட்டையாடி மட்டும் இனி வாழ முடியாது என்பதை மனிதன் உணர்கிறான். முதன்முறையாக விவசாயம் செய்யத் தொடங்குகிறான். அது புரட்சியாக மாறி, தான் உன்ன விரும்பும் கனி மற்றும் கைகளை தானே பயிரிடும் திறனை வளர்த்துக் கொள்கிறான்.

No comments: