Friday, June 24, 2016

சிந்துவெளி நாகரிகம்: 2


அந்த நாகரிகங்கள் திராவிட நாகரிகங்கள் தான் என அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் உள்ளிட்ட பல வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகள் மூலம் நிறுவி இருந்தாலும். இன்னும் அந்த நாகரிகம் குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.  குறிப்பாக அந்த நாகரிகம் எப்படி அழிந்தது என்பது குறித்த தகவல்கள்.  இன்னும் வரலாற்று ஆய்வாளர்கள் அந்த நாகரிகம் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்கள். அதற்கு சமீபத்திய சான்று ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வு முடிவுகள்.

தமிழகத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், இப்போது ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராகவும், முதன்மை நிதிச் செயலாளராகவும் இருக்கிறார். இவர்  தனது 'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' என்னும் ஆய்வு நூலில், ஹரப்பா, மொகஞ்சாதாரோவில் இருந்த  இடப்பெயர்கள் குறித்த ஒரு நெடிய ஆய்வை மேற்கொண்டு தமிழகத்திற்கும், சிந்துவெளிக்கும் உள்ள தொடர்பை நிறுவி உள்ளார். இப்போதும் சிந்துவெளி நாகரிகம் பரந்து விரிந்திருந்த பாகிஸ்தானிலும், அதன் அருகில் இருக்கும் ஆஃப்கானிஸ்தானிலும்

- கொற்கை, 
- பாண்டி, 
- கிள்ளி, 
- சேரலா, 
- தோன்றி, 
- குன்று, 
- ஆமூர் 

என்ற பெயர்களில் இடங்கள் உள்ளன என தம் ஆய்வில் எடுத்துரைக்கிறார். 

மொகஞ்தாரோ திரைப்படமும், கோலிவுட்டும்:

நாமும் வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழனின், பாரதி, காமராஜர் வரலாற்றை சினிமாவாக ஆக்கி இருக்கிறோம் என்கிறீர்களா...? ஆம்தான். ஆனால் அது அனைத்தும் கடந்த காலம். வரலாறு என்பது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்த காலத்திலும் நாம் என்ன செய்திருக்கிறோம்?.

நாம் நமது பெருமிதங்களை சினிமாவாக ஆக்க தவறுகிறோம். அதை இன்னொருவர் எடுக்கும் போது,   நம்மை தவறாக சித்தரித்துவிட்டார்கள் என்று நாம் குதிக்கிறோம், போராடுகிறோம். இது எத்தகைய நிலைப்பாடு...?  யூத மக்களின் வலியை உலகமறிய செய்தது சினிமாதான். எத்தனை எத்தனை படங்கள் வந்துவிட்டன. ஏன் நம்மிடமிருந்து அது போன்று படைப்புகள் வருவதில்லை.  இது நம் பிழைதானே...? 

தமிழ் சமூகம் வளமான வரலாறும், அபார கற்பனை திறனும் கொண்டது. அதற்கு எடுத்துக் காட்டு சங்க இலக்கியங்கள். படிப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும், அதன் உள்ளடக்கத்தில் உள்ள வர்ணனைகள் அனைத்தும் பிரமிக்கதக்கவை.
வணிக நோக்கில் பார்த்தாலும், நிச்சயம் நம் வரலாறு சுவாரஸ்யமானதுதான் என்பது அப்பாதுரையாரின் குமரிகண்டம் மற்றும் பெ. கோவிந்தசாமியின் சிந்துவெளியும் தமிழர் நாகரிகமும் போன்ற நூல்களை படித்தால் தெரியும்.
வரலாறு தெரியாத இனம் நிச்சயம் வீழ்ந்து போகும். நாம் நம் வரலாற்றை செல்லுலாய்டில் நேர்மையாக பதிவு செய்வோம். வெற்று பெருமைகளை நம் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம். நம் உண்மையான பெருமிதங்களையும், வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு சினிமா என்னும் வலிமையான ஊடகம் மூலம் கடத்துவோம். வரலாறு பேசுவது ஒன்றும் அரசியல் அல்ல, அதே நேரம் சினிமாவில் அரசியல் பேசுவதும் தவறு அல்ல.

No comments: