Saturday, December 27, 2014

பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை! - From Vikatan



Variamuthu Words on Balachander...

டுகபட்டியில் என் கால்சட்டை நாட்களில் எனக்கு ஒரு கனவு இருந்தது. கலைஞர்  எம்.ஜி.ஆர் – சிவாஜி  பி.சுசீலா  கே.பாலசந்தர் என்ற ஆளுமைகளைச் சந்திக்க வேண்டும் என்பதே அந்தக் கனவு. ஆனால் என் கனவுக்குரிய பாலசந்தர் என்னைச் சந்திக்க தொலைபேசியில் அழைப்பார் என்று நான் நினைக்கவில்லை. கமல்ஹாசனின் ராஜபார்வையில் 'அந்தி மழை’ எழுதப்பட்ட நேரம்... புதிய திரைமொழியோடு ஒரு கவிஞன் தமிழ் சினிமாவுக்குள் புகுந்திருக்கிறான் என்ற செய்தியை பாலசந்தருக்குச் சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். அப்போது சொந்தமாக தொலைபேசியோ, வாகனமோ இல்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்த எனக்கு மாடிவீட்டுத் தொலைபேசியிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. 'உங்களுக்கு ஒரு போன்; உடனே வாருங்கள்’ என்று. நான் சென்று எடுத்தால் எதிர்முனைக்குரல் நான் பாலசந்தர் பேசுகிறேன் என்றது. நான் நெகிழ்ந்தே போனேன். நாளை என் வீட்டுக்கு வந்து சந்திக்க முடியுமா என்று கேட்டார். மகிழ்ச்சியோடு வருகிறேன் என்றேன். மறுநாள் காலையில் சாலையில் வந்து பார்த்தால் சென்னையில் முழு அடைப்பு. எந்த வாகனமும் ஓடவில்லை. ட்ரஸ்ட்புரத்திலிருந்து மயிலாப்பூர் வாரன் சாலைக்கு 35 நிமிடத்தில் நடந்து சென்றேன். வியர்வையோடு என்னைப் பார்த்த பாலசந்தர் வியந்துபோனார். பாட்டெழுத வாய்ப்பு வரும் என்று போனால் வசனம் எழுத வாய்ப்பு தந்தார் பாலசந்தர்..


பாரதியார் வரலாற்றைப் படமாக்கப் போகிறேன். கமல்ஹாசன் தான் பாரதியார். நீங்கள் வசனம் எழுத வேண்டும் என்றார். அச்சத்தோடு ஒப்புக்கொண்டேன்... பாரதியார் குறித்த 300 நூல்கள் திரட்டி இரவு – பகல் குறிப்பெடுத்தேன். ஆனால் அந்தப் படம் தயாராகவில்லை. அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., பாரதியார் படத்தை அரசே தயாரிக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பில் பாலசந்தர் சோர்ந்துபோனார். பின்னாளில் புதுக்கவிதையில் பாரதியாரின் சரிதை 'கவிராஜன் கதை’யாக என்னால் எழுதப்பட்டதற்கு இயக்குநர் சிகரமே முழுமுதற்காரணம்.
அவர் மகாரசிகர். குழந்தையை 'இடுப்பிலுள்ள நந்தவனம்’ என்று தண்ணீர் தண்ணீர் படத்துக்கு நான் எழுதியதை திரையுலகில் அவர் சொல்லாத ஆளில்லை. திருத்தம் சொன்னாலும் அது நெற்றிக்குப் பொட்டு வைத்தது மாதிரி நேர்த்தியாக இருக்கும். சிந்து பைரவியில் –
 
'கவல ஏதுமில்ல
ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேரவேணும்
அதுக்கும் பாட்டுப்படி
எண்ணியே பாரு
எத்தன பேரு
தங்கமே நீயும்
தமிழ்ப்பாட்டுப் பாடு’ – என்று எழுதியிருந்தேன்.
 
 
ஒற்றெழுத்தை அவர் 'ம்’ என்று மாற்றினார். தமிழ்ப்பாட்டும் பாடு என்று வருகிறபோது அது இரண்டு மொழிப் பாடல்களுக்கும் கட்டப்பட்ட பாலமாகிவிட்டது. அவர் தொழில்நுட்பக் கலைஞர் மட்டுமல்ல; தமிழ்நுட்பக் கலைஞர்.
அவர் கற்றுக் கொண்டேயிருந்தார்.
தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தார்.
தெரியாத செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள அவர் தயங்கியதே இல்லை. 'அச்சமில்லை அச்சமில்லை’ படத்திற்கு 'ஆவாரம் பூவு’ என்று ஒரு பாட்டு எழுதியிருந்தேன். ஆவாரம் பூ என்றால் என்ன என்று கேட்டார். அதுகுறித்த விவரங்களையெல்லாம் விளக்கினேன். படம் பார்க்கும்போது பார்த்தால் ஒரு கயிற்றுப்பாலத்தில் வண்டி வண்டியாகக் கொண்டுவந்த ஆவாரம் பூக்களைக் கொட்டி நிரப்பியிருந்தார். பாட்டு வரிகளுக்கு உயிர்கொடுக்க வேண்டுமென்பதில் அதிக அக்கறை உள்ளவர். 'புன்னகை மன்னன்’ படத்தில் 'என்ன சத்தம் இந்த நேரம்’ பாட்டில் 'ஆரிரரோ யார் இவரோ?’ என்ற வரியை படமாக்கும்போதும் கேமராவையே தூளிகட்டி ஆடவிட்டிருப்பார்.
 
பாலசந்தர் அவர்களுக்கு என் திரைவாழ்க்கை நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் வெற்றி தோல்வி என்று எது வந்தாலும் அதை சமமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைக் காலம் கொடுத்திருக்கிறது. இனி பெறப்போகும் எதுவும் வெற்றியுமில்லை; அடையப்போவது எதுவும் தோல்வியும் இல்லை. ஆனால் 90களில் நான் தோற்றுப்போய்விட்டதாக துவண்டுகிடந்தேன். 92-ல் ஒரே ஆண்டில் பாலசந்தரின் கவிதாலயா மூன்று படங்களைத் தயாரித்தது.
 
வானமே எல்லை – அண்ணாமலை – ரோஜா. மூன்று படங்களுக்கும் இயக்குநர்கள் வேறு, இசையமைப்பாளர்கள் வேறு – நடிகர்கள் வேறு. ஆனால் பாடலாசிரியர் மட்டும் ஒருவன்  வைரமுத்து என்று எனக்குப் பெருவாய்ப்பு வழங்கியிருந்தார் பாலசந்தர். அந்த மூன்று படங்களுக்கும் என் உயிர் மூச்சையே ஊற்றி எழுதினேன். மூன்றும் வெற்றி பெற்றன. நான் இன்று வரைக்கும் தொடரும் என் பாட்டுப்பாதை அவர் போட்டுக்கொடுத்தது.
 
 
கமல் மீது காதல் அவருக்கு. தன்னை விட்டு வளர்ந்து வெகுதூரம் போய்விட்டதில் ஒரு சின்ன ஆதங்கமும் அவருக்கிருந்தது. அவன் நாத்திகனாகவே இருக்கட்டும்; அதை ஏன் வெளியே சொல்லி அலைகிறான் என்று என்னிடம் அவரைச் செல்லமாகக் கோபித்ததுண்டு. அவர் கூப்பிட்டு 'வயலும் வாழ்வும்’ எடுத்தாலும் நான் நடிப்பேன்; அவர் மீது நான்கொண்ட பக்தி அப்படியென்று கமலும் என்னிடம் மனம் திறந்திருக்கிறார்.
 
ரஜினியை எப்படித் தேர்வு செய்தீர்கள் என்று அவரிடம் ஆர்வமாக நான் கேட்டிருக்கிறேன். 'கனவு மிதக்கும் அந்தக் கண்கள்... கலகம் செய்யும் கண்கள்... அதுதான் ரஜினியை நான் தேர்வு செய்யக்
காரணம்’ என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.
 
 
எங்கள் வாழ்வுக்குப் பக்கத்திலேயே வரமாக வந்த மாபெரும் கலைஞன் மறைந்துவிட்டார் என்ற செய்தி இதயத்தை உடைத்தெறிந்துவிட்டது. சில மரணங்கள் வெறும் செய்திகள். சில மரணங்கள் வாழ்வின் கடைசிச் சம்பவங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் பாலசந்தரின் மறைவு என்பது என் தகப்பன் இரண்டாம் முறை இறந்து போனதுபோல் துக்கமானது. அன்று மாலை பாலசந்தர் இல்லத்தில் அவரது பூத உடலுக்குப் பக்கத்தில் ரஜினியும் நானும் கவிதாலயா நடராஜனும், இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும், மகன் மதன் கார்க்கியும் இரண்டு மணி நேரங்களுக்குமேல் அமர்ந்து துக்கம் பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு வந்துவிட்டார் ரஜினி. மயானமேடைக்கு அருகே ரஜினியும், நானும், தங்கை ஐஸ்வர்யாவும் சோகம் கப்பிப்போய் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தபோது திடீரென்று ரஜினி என்னைப் பார்த்துக் கேட்டார்; 'சாருக்கு நான் வாய்க்கரிசி போடவேண்டுமே.’ நான் சம்பந்தப்பட்ட ஒரு நண்பரை அழைத்து அதற்கு ஏற்பாடு செய்து ரஜினியை வெளியே அனுப்பிவைத்தேன். இயக்குநர் சிகரத்துக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு மீண்டும் எங்களை வந்தடைந்தார். ஒரு தகப்பனாருக்கு மகன் செய்ய வேண்டிய கடைசி மரியாதையை செய்துவிட்ட நிறைவோடு ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டார்.
 
பாலசந்தர் மார்பின் மீது கற்பூரம் கொளுத்தப்பட்டது. அது கொழுந்துவிட்டு குபுகுபுவென்று எரிந்தது. அந்த நெஞ்சில் எரிந்த 60 வருட அக்கினிதானே தமிழ் சினிமாவைப் புடம்போட்டுக்கொடுத்தது. அந்தக் கற்பூரத்தீ அணைந்துவிடலாம். அந்தக் கலைத்தீ அணையுமா? என்று கருதிக்கொண்டு கண்களில் நீர்முட்ட நின்றபோது... 'தடக்’கென்ற சப்தத்தோடு உள் எரிவாயில் சென்று விழுந்தது பாலசந்தரின் உடல். உடனே திரை விழுந்தது; இரும்புத்திரை. கனத்த நெஞ்சோடு கலங்கிய கண்களோடு கலைந்தோம். பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை.

Thursday, November 27, 2014

கருணாநிதி@Facebook - Interesting Article in Vikatan

''பேட்டியா... எங்களையா? தலைவர்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு, பத்து நிமிஷத்தில் லைன்ல வர்றோம்!'' என்றவர்கள், சரியாக ஆறு நிமிடங்கள் கழித்து தொடர்புகொண்டார்கள். ''தலைவர் ஓ.கே சொல்லிட்டார்'' என்று வரச் சொன்னார்கள்.  நேரில் சென்றால், ''அஞ்சு நிமிஷம் சார்... தலைவர் எழுதின ஜோக் ஒண்ணை போஸ்ட் பண்ணிட்டு வந்துடுறோம். அது பாட்டுக்கு லைக்ஸ் குவிச்சுட்டு இருக்கும்!'' என்று ஒரு துண்டுச் சீட்டைப் பார்த்து ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். பார்க்க 'தமிழ் சினிமாவின் அமெரிக்க மாப்பிள்ளைகள்’போல 'சாஃப்ட்’டாக இருப்பவர்களின் வேலை என்ன தெரியுமா? தி.மு.க தலைவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்க நிர்வாகிகள் (பேஜ் அட்மின்!).  
''என் பேரு நவீன் நரேந்திரன். இவர் சுரேஷ் இம்மானுவேல். நான் சென்னைக்காரன். சுரேஷ§க்கு சேலம். ரெண்டு பேரும் எம்.பி.ஏ;  ரெண்டு பேரும் தி.மு.க ஆதரவுக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க!''-அறிமுகம் கொடுத்துவிட்டுத் தொடர்கிறார் நவீன்.
 
 
 
 
 
''நானும் சுரேஷ§ம் இ-மெயில் கண்டுபிடிச்ச தமிழர் சிவா அய்யாதுரையின் 'எக்கோ மெயில்’ நிறுவனத்தில் 2008-ம்  ஆண்டு வேலைக்குச் சேர்ந்தோம். சென்னையில்தான் வேலை. ஆனா, என் பேர் 'பாப் டேவீல்ஸ்’. சுரேஷ் பேர் 'வில்லியம் ஸ்மித்’. எப்பவும் நைட் ஷிஃப்ட்தான் வேலை. ஏன்னா,  எங்க புராஜெக்ட் அப்படி. 2008-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா போட்டியிட்டார். அப்போ சமூக வலைதளங்கள் மூலம் உலகத்தின் சந்துபொந்துகளுக்கு எல்லாம் அவரோட பிரசாரத்தைக் கொண்டுபோகணும். அதுக்காக 200 பேர் தீவிரமா வேலைபார்த்தோம். எப்பவுமே கூகிள்ல யாரைப் பத்தி தேடினாலும், அவரைப் பத்தின நெகட்டிவ் விஷயங்கள்தான் முதலில் வரும். எஸ்.சி.ஓ, டேக்ஸ் போன்ற 25 கோடிங் வார்த்தைகளைப் பயன்படுத்தி, கூகுளில் மெள்ள மெள்ள ஒபாமா பத்தின நெகட்டிவ் செய்திகளை மூணாவது, நாலாவது பக்கத்துக்குத் தள்ளிருவோம். பாசிட்டிவ் நியூஸ் முன்னாடி வர்ற மாதிரி பண்ணிடுவோம். ஏன்னா, கூகுளில் தேடுறவங்க 99 சதவிகிதம் முதல் ரெண்டு பக்கங்களைத்தான் பார்ப்பாங்க. இதே கோடிங் மேஜிக்கைத்தான் மோடி பிரசாரத்துக்கும் பண்ணினாங்க!'' என்கிறார் நவீன்.  
 
''ஒரு சமயம் தலைவர் கலைஞர் பெயரை கூகிளில் தேடினா, நெகட்டிவ் நியூஸா வந்து விழும். 2011-ல் தேர்தலில் தி.மு.க தோல்விக்கு சமூக வலைதளங்களில் பரவிய நெகட்டிவ் விஷயங்களும் ஒரு காரணம். அப்பத்தான், ஏதோ ஒரு நாட்டுக்கு யாரோ ஒருத்தர் அதிபர் ஆவதற்கு  நம்ம உழைப்பைக் கொடுக்கிறோம். நம்ம தலைவருக்கு அதே வேலையைப் பார்த்தா என்னன்னு தோணுச்சு. உடனே 'எக்கோ மெயில்’ நிறுவன வேலையை விட்டுட்டோம். 2012-ம் ஆண்டு ஜூன் 3. தலைவர் பிறந்த நாள். ஒபாமா பிறந்த நாளுக்கு முதன்முதலாக அவரை வாழ்த்த wishobama.com-னு ஒரு வெப்சைட் உருவாக்கினோம். அதுக்கு அமெரிக்காவில் நல்ல ரெஸ்பான்ஸ். இங்கேயும் அதே மாதிரி wishthalaivar.com-னு இ-மெயில் மூலம்  தலைவருக்கு வாழ்த்துச் செய்திகளை சேகரிச்சோம். பல்லாயிரக்கணக்கில் குவிஞ்சது வாழ்த்து. அதை தலைவர்கிட்ட சொன்னப்ப, ரொம்ப சந்தோஷப்பட்டார்.
 
அதைக் கேள்விப்பட்ட கட்சியின் சீனியர்ஸ் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ஜெ.அன்பழகன், தா.மோ.அன்பரசன் எல்லாரும் சமூக வலைதளங்கள், ஸ்மார்ட் போன் பத்தி ஆர்வமாக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டாங்க. 'டச் போனைப் பயன்படுத்தத் தெரியலைன்னா, நம்மளை படிக்காதவன்னு நினைச்சுக்கிறாங்கய்யா’னு துரைமுருகன் சார் ஜாலி கமென்ட் அடிச்சார்.
இப்படியே போயிட்டு இருந்தப்ப ஒருமுறை ஆ.ராசா அண்ணா, 'அந்த கோடிங்கைப் பயன்படுத்தி கூகுளில் என்னைப் பத்தின நெகட்டிவ் நியூஸ்களைப் பின்னுக்குத் தள்ள முடியுமா?’னு கேட்டார். அவருக்கும் பண்ணிக் கொடுத்தோம். அப்போதான் தலைவருடைய உதவியாளர் நித்தியானந்தம் அண்ணா மூலம் தலைவரைச் சந்திச்சோம்!'' என்று சுரேஷ் பாஸ்விட, அவர் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார் நவீன்.
''இன்டர்நெட், கூகுள், ஒபாமா பிரசார டெக்னிக் பத்தி தலைவர்கிட்ட முழுசும் சொன்னோம். உடனே புரிஞ்சுக்கிட்டார். 'இந்த இன்டர்நெட்டால ஒரு சதவிகிதம் தி.மு.க-வோட வாக்குவங்கி கூடினாக்கூட சந்தோஷம்தான்யா’னு சொல்லி அவர் பேர்ல ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிக்க அனுமதி கொடுத்தார். 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி, தலைவருக்கு ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிச்சோம்
 
 
 
ஆனா, ஆரம்பத்துல அந்தப் பக்கத்தை ஓப்பன் பண்ணிப் பார்க்கவே முடியலை. வண்டிவண்டியாத் திட்டி கமென்ட்ஸ் போட்டிருந்தாங்க. விஷயத்தை தலைவர்கிட்ட தயங்கித் தயங்கிச் சொன்னோம். 'கண்டபடி திட்டுவாங்களே! அதெல்லாம் எனக்குப் பழகிருச்சு. திட்டுறதைப் பத்தி கவலைப்பட மாட்டீங்கன்னா, வேலைபாருங்க. அதைப் பத்தி கவலைப்பட்டா, வேலையே பார்க்க முடியாது’னு சிரிச்சுட்டே சொல்லி திட்டுக்களைச் சமாளிக்க நிறைய ஐடியாஸ் கொடுத்தார்.  ஃபேஸ்புக் பத்தி முழுசாத் தெரிஞ்சதும் தலைவர் செமத்தியா பிக்கப் ஆகிட்டார். ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் எவ்வளவு லைக்ஸ் வருது, எந்த மாதிரி ஸ்டேட்டஸ் போட்டா லைக்ஸ் கூடும், எதெல்லாம் நிறைய ஷேர் ஆகுதுனு அப்பப்போ விவரம் கேட்பார். திடீர்னு வேற ஏதோ ஒரு விஷயம் வைரல் ஆகி, இவர் பேஜ்ல லைக் குறைஞ்சா, 'என்னய்யா லைக்ஸ் குறைஞ்சிடுச்சு? என்ன பண்றது இப்போ?’னு தீவிரமா விசாரிப்பார். 'நீங்க அ.தி.மு.க அரசாங்கத்தை விமர்சனம் பண்ணும் அறிக்கைகளுக்கு நிறைய லைக்ஸ், ஷேர் வருது’னு சொன்னோம். அப்புறம்தான் அரசாங்கத்தை விமர்சிச்சு நிறைய அறிக்கைகள் கொடுக்க ஆரம்பிச்சார். இப்போ தினமுமே தலைவருக்கு அன்னன்னைக்கு அப்டேட்ஸ் கொடுத்துட்டு இருக்கோம்!'' என்று முடித்தார் நவீன்.
''திடீர் திடீரென எதிர்பார்க்காத கோணத்தில் அறிக்கை விடுகிறாரே... அந்த ஐடியாவெல்லாம் யாருடையது?'' என்று கேட்டபோது, ''வேற யாரு..? தலைவர் ஐடியாதான்!'' என்று சொல்லி விவரிக்கத் தொடங்கினார் சுரேஷ்.
''ஒருநாள் 'யாருய்யா இந்த ஃபேஸ்புக், ட்விட்டர்லாம் கண்டுபிடிச்சது?’னு கேட்டார் தலைவர். நாங்க ஃபேஸ்புக் ஆரம்பிச்ச மார்க் ஸக்கர்பெர்க், ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்ஸேவை பத்தி விளக்கமா சொன்னோம். 'பரவாயில்லையே... இந்தச் சின்ன வயசுலயே இவ்வளவு சாதனைகள் பண்ணியிருக்காங்க. அவங்களைப் பாராட்டி ஓர் அறிக்கை விடலாம்யா’னு உடனே பேப்பர் பேனா எடுத்து எழுத ஆரம்பிச்சிட்டார். 'அவங்க கண்டுபிடிச்சதை நாம பயன்படுத்துறோம். அதுக்கு அவங்களுக்கு சின்னதா நன்றிகூட சொல்லலைனா எப்படி?’னு அவர் கேட்டதும்,  'அட... ஆமாம்ல. இது ஒபாமாவுக்கே தோணாத ஆங்கிளா இருக்கே’னு எங்களுக்குத் தோணுச்சு.
ஒருநாள் சச்சின் எழுதின சுயசரிதை புத்தகம் பத்தி செய்தி பரபரப்பா இருந்தப்ப, தலைவர் அந்தப் புத்தகத்தைப் படிக்கக் கேட்டார். வாங்கிக் கொடுத்தோம். படிச்சுட்டே இருந்தவர் எங்களைக் கூப்பிட்டு, 'இந்தப் புத்தகத்தை நான் படிக்கிற மாதிரி போட்டோ எடுத்துப் போடுங்கய்யா. நிறைய லைக்ஸ் வரும்’னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே அந்த போட்டோவுக்கு லைக்ஸ் பிச்சுக்கிச்சு. சச்சினோட மேனேஜர் லைன்ல வந்து நன்றி சொன்னார். இதே மாதிரிதான் ரோஹித் ஷர்மா கிரிக்கெட்ல        264 ரன் அடிச்சு அது வைரல் பரபரப்பா இருந்தப்ப, உடனே அவரைப் பாராட்டி அறிக்கை ரெடி பண்ணி போஸ்ட் பண்ணச் சொன்னார்.
ஒருநாள் எங்களை தனியாக் கூப்பிட்டுப் பேசினார் தலைவர். 'நீங்க இனிமே ரொம்பக் கவனமா இருக்கணும். உங்க குடும்பத்தை நல்லபடியா பாத்துக்கங்க. என்கூட அடிக்கடி நீங்க பேச வர்றதால, நம்ம கட்சியிலேயே சிலர் பொறாமைப்படலாம். எதிர்க்கட்சிகாரங்க ஏதாவது இடைஞ்சல் பண்ணலாம். எனக்காக வேலை செய்றீங்க. என்னால் உங்களுக்கு எந்தத் தொந்தரவோ, ஆபத்தோ வந்துடக் கூடாது’னு அவர் சொன்னப்ப, அவரோட அன்பையும்அக்கறையையும் பார்த்து நாங்க நெகிழ்ந்துட்டோம்!'' என்கிற சுரேஷ் நெகிழ, ''இதுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க?'' என்று கேட்டேன்.
''நீங்க கேட்பீங்கனு தெரியும். ஆனா, இதுவரை ஐயாகிட்ட இருந்து ஒரு ரூபாய்கூட  சம்பளமா வாங்கினது இல்லை. அவர்கூட வேலைபார்க்கிறதே பெரிய பாக்கியம். பணம் எங்களுக்குப் பிரச்னையே இல்லை. மாயாவதி, சரத்பவார்னு பல அரசியல்வாதிகள் அவங்களுக்காக வேலைபார்க்க, பிரசாரம் பண்ண எங்களைக் கூப்பிட்டாங்க. ஆனா, நாங்கதான் தலைவருக்காக வேலை செய்றதே போதும்னு இங்கேயே இருக்கோம். தலைவர்கிட்ட எப்படியாவது லைக்ஸ் வாங்கிரணும். அதைவிட வேற எங்களுக்கு என்ன பெரிய சம்பளம் வேணும்?'' என்கிறார்கள்  இருவரும்.
நல்லா பண்றீங்கப்பா!
 
 
 
 
 

Tuesday, November 11, 2014

உங்கள் உணவில் விஷம்! - Thanks to Vikatan

உங்கள் உணவில் விஷம்!
பூச்சிக்கொல்லி பயங்கரம்
ஆர்.குமரேசன், ஓவியங்கள்: ஹாசிப் கான்
ந்தப் பூமியை ஒரு நஞ்சுப்படலம்போல சூழ்ந்திருக்கின்றன பூச்சிக்கொல்லி மருந்துகள். பெயர்தான் 'பூச்சிக்கொல்லி...’, அவை உண்மையில் அழிப்பது சுற்றுச்சூழலைத்தான். இதில் சமீபத்திய வரவு ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள். பூச்சிகளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தத்தில், பூச்சிகளின் தொடர் வெற்றியைச் சகித்துக்கொள்ள முடியாத மனிதன் கண்டுபிடித்த கொடிய நஞ்சு இது.  
தற்போது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் வீரியம் குறைந்தது எண்டோசல்பான். இந்தப் பூச்சிக்கொல்லி ஏற்படுத்திய பேரழிவுக்கு உதாரணம், கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதி. ஒரு காலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருந்த காசர்கோட்டில் மாநில அரசுக்கு சொந்தமான முந்திரித் தோப்புகளில், 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்பான் தெளிக்கப்பட்டது. அதன் பலன், இன்றைக்கும் அந்தப் பகுதியில் மனிதர்களும் கால்நடைகளும் நரம்பு மண்டலப் பாதிப்பு, மனநலப் பாதிப்புகளுடன் நடைபிணங்களாகத் திரிகிறார்கள். வீரியம் குறைந்த எண்டோசல்பானுக்கே இப்படி என்றால், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் அதைவிட பல மடங்கு வீரியமானவை. பசுமைப் புரட்சியின் விளைவாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, நாடு முழுவதும் அபரிமிதமாக அதிகரித்துவிட்ட ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, பல்வேறு நோய்களாக விகார விஸ்வரூபம் எடுக்கின்றன!
 
கோவில்பட்டியில் உள்ள மண்வளப் பரிசோதனை நிலையத்தின் வேளாண் அலுவலரும் பூச்சியியல் வல்லுநருமான நீ.செல்வம் இது தொடர்பாக விவரிப்பவை அனைத்தும் அதிரவைக்கும் உண்மைகள்...
''மனித இனம் இன்றைக்கு சந்திக்கும் பெரும்பாலான நோய்களுக்கு பூச்சிக்கொல்லிகளும் ஒரு காரணம். பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி நஞ்சுகள் காற்று, மண், நீரில் எஞ்சிவிடுகின்றன. இந்த எஞ்சிய நஞ்சு, பயிர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வழியாக நம் உடலுக்குள் சென்று தங்கி மெள்ள மெள்ளக் கொல்லும் விஷமாக மாறுகின்றன. 100 மில்லி பூச்சிக்கொல்லியைக் குடித்தால், உடனே மரணம். அதே பூச்சிக்கொல்லி பல்வேறு காரணிகள் வழியாக, மனித உடலில் கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து 10, 15 ஆண்டுகளில் 100 மில்லி அளவை எட்டும்போது, உடனடி மரணம் நிகழாவிட்டாலும் உள்உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும். சிறுநீரகம், மூளை, எலும்புகள், ரத்தம் எனப் பல இடங்களிலும் இந்த நஞ்சு பரவும்போது, ரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு, ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு என நோய்கள் உருவாகத் தொடங்குகின்றன. இதையெல்லாம்விட தற்போது சந்தையில் கிடைக்கும் ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகளால், மனித இனம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கப்போகிறது!'' என்கிறார்.
அது என்ன ஐந்தாம் தலைமுறை?  
 
 
 
 
 
தலைமுறை 5:
'நியோ நிக்கோடினாய்டு’ (neo nicotinoid) என அறிமுகம் ஆன ஐந்தாம் தலைமுறை பூச்சுக்கொல்லிகளால் பூச்சிகள் ஆடிப்போயின. பூச்சிகளை முட்டை பொறிக்கவிடாமல் செய்வது, வளர்சிதை மாற்றத்தைத் தடுப்பது, அதன் நரம்பு மண்டலத்தைக் கடுமையாகத் தாக்குவது எனப் பல்வேறு வகைகளில் இவை செயல்படுகின்றன. இத்தகைய கொடிய நஞ்சு நிறைந்த ஐந்தாம் தலைமுறை பூச்சிமருந்தைத் தெளித்து விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களை உட்கொள்ளும் போது, மனிதர்களுக்குள்ளும் இந்த நஞ்சு சென்று அதே பாதிப்பைக் கொடுக்கிறது. உதாரணமாக ஐந்தாம் தலைமுறை நஞ்சுகள் அறிமுகம் ஆன பிறகு, தேன் எடுக்கச் செல்லும் தேனீக்கள் பூக்களின் வாசனை மற்றும் தாங்கள் பறந்து வந்த பாதையை மறந்துவிடுகின்றன. தங்கள் கூட்டுக்குச் சென்று சேர முடியாமல் இடையிலேயே இறந்துவிடுகின்றன. இதனால் தேனீக்கள் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்துவருகிறது. இதனால் இந்த வகை பூச்சிக்கொல்லிக்கு, ஐரோப்பிய யூனியன் 2012ம் ஆண்டு தடை விதித்திருக்கிறது.''
- இப்படி வல்லுநர் நீ.செல்வம் விவரிப்பதைக் கேட்க... கேட்க, நாம் ஒட்டுமொத்தமாக ஒரு விஷச் சூழலுக்குள் வாழ்ந்துகொண்டிருக் கிறோமோ என நடுக்கமாக இருக்கிறது. முக்கியமான ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். தேனீக்கள், உயிர்ச்சூழல் கண்ணியில் மிகவும் முக்கியமான ஓர் உயிரினம். இந்த உலகில் சுமார் இரண்டு லட்சம் பூக்கும் வகை தாவரங்கள் இருக்கின்றன. இவற்றின் உற்பத்தி அயல் மகரந்தச் சேர்க்கை மூலமாகவே நடைபெறுகிறது. இந்த அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது பெரும்பாலும் தேனீக்கள் மூலம்தான். தேனீக்கள் அழிந்தால் மகரந்தச் சேர்க்கை இல்லை; தாவரங்கள் இல்லை; உணவு இல்லை; பிறகு மனிதகுலமே இல்லை. இதை பல ஆண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொல்லியிருக்கிறார்.
'தேனீக்கள் இந்த உலகில் இருந்து முற்றிலுமாக அழிந்தால், தாவர இனமே அழியும். அதில் இருந்து ஐந்து ஆண்டுகளில் மனித இனமும் அழிந்துபோகும்’ என்பது அவரது பகீர் எச்சரிக்கை!  
 
 
இப்போது நமக்கு ஒரு நியாயமான சந்தேகம் எழுகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை எதிர்த்து உயிர்வாழும் ஆற்றலை பூச்சிகள் பெற்றுவிடுகின்றன என்றால், மனிதர்களும் இத்தகைய எதிர்ப்பாற்றலைப் பெற வேண்டும் அல்லவா? என்ன விஷயம் எனில், மனிதர்களின் ஆயுட்காலம் 60 ஆண்டுகள், 70 ஆண்டுகள். ஆனால், பூச்சிகளின் ஆயுட்காலம் ஒருசில வாரங்கள்தான். ஒரே ஒரு வருடத்தில் பூச்சிகள் 20 தலைமுறைகளைக் கடந்திருக்கும். ஐந்து ஆண்டுகளில் 100 தலைமுறைகளைக் கடந்துவிடும். இதனால் பூச்சிகள், இந்தப் பூச்சிமருந்துகளை எதிர்கொள்ளும் ஆற்றலை வெகுவிரைவில் பெற்றுவிடுகின்றன. மனிதர்களால் அது முடியாமல் பாதிப்புகளைச் சுமக்க வேண்டியிருக்கிறது.
ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த 'அல்சைமர்’ என்ற மறதி நோய் இன்றைக்கு 60 வயதைக் கடந்த பெரும்பாலானவர்களுக்கு வந்துவிடுகிறது. பலர் ஏதோ ஒரு வேளையாகச் சென்றுவிட்டு, 'எதற்காக இங்கு வந்தோம்?’ என இடையில் நின்று யோசிப்பதைப் பார்க்கலாம். ஐந்தாம் தலைமுறை நஞ்சுகளால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதன் பக்கவிளைவு இது. மனித உடலுக்குள் செல்லும் நஞ்சுகளைச் செயல் இழக்கச் செய்யும் பணியைச் செய்வது ஈரல். அதற்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா? தினமும் உணவின் மூலமாக உடலுக்குள் நஞ்சு தொடர்ந்து செல்லும்போது, ஈரலின் செயல்படும் திறன் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகச் சொல்லும் மருத்துவர்கள், இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி வேகமாகக் குறைந்து, உடல் நோய்களின் கூடாரமாக மாறிவிடுகிறது என்கிறார்கள்.
 
'எல்லாம் சரிதான். ஆனால், பூச்சிக்கொல்லி தெளிக்காவிட்டால் பயிர்களை பூச்சிகள் கபளீகரம் செய்துவிடுமே... அதற்கு என்ன செய்வது?’ எனக் கேள்வி எழும். ஆனால், பூச்சிக்கொல்லிகள் இல்லாமலேயே பூச்சி தாக்குதலைத் தடுக்க முடியும்.
''முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதுபோல, பூச்சிகளைக்கொண்டே பூச்சிகளை அழிக்க முடியும். சில பூச்சிகள் பயிர்களை உண்பதுபோல, சில பூச்சிகளுக்கு மற்ற பூச்சிகள்தான் உணவு. இவற்றை விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் என்கிறார்கள். இந்த நன்மை செய்யும் பூச்சிகளை நமது வயலுக்கு வரவழைத்துவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் பாடு திண்டாட்டமாகி விடும்!''  என்கிறார் வல்லுநர் நீ.செல்வம். இந்த இடத்தில் நம்மாழ்வார் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
 
'ஒரு விளைநிலத்தில் 100 வகைப் பூச்சிகள் இருக்கின்றன என்றால், அதில் 10 பூச்சிகள் நமக்கு எதிரிகளாக இருக்கலாம். 90 பூச்சிகள் நமக்கு நண்பர்கள். அந்த 10 பூச்சிகளை அழிக்கிறோம் என 90 பூச்சிகளையும் அழித்ததன் பாவத்தை நாம் இன்று அனுபவிக்கிறோம். கையில் தொடக்கூட அஞ்சும் எண்டோசல்பானையும், மோனோகுரோட்டோபாஸையும் சற்றும் குற்ற உணர்ச்சி இல்லாமல் பயிர்கள் மீது தெளித்துவிட்டு, அவை அனைத்து உயிர்களையும் கொன்ற பின், விளைச்சலில் ஊடுருவிக் கலந்த பின், அதை மேலோட்டமாகக் கழுவிவிட்டு தின்பதன் விளைவுதான் இத்தனை நோய்கள். ஒரு காலத்தில் வயல்வெளி முழுக்க தட்டான் பூச்சிகள் பறந்துகொண்டிருக்கும். உயிர்க்கொல்லி மருந்துகளினால் இன்று தட்டான் பூச்சிகள் காணாமல்போய்விட்டன. தட்டான் பூச்சிகள் உணவாக அதிகம் உண்டது கொசு முட்டைகளைத்தான். இன்றைக்கு தட்டான் பூச்சிகளை அழித்து, கொசுக்களைப் பெருகச் செய்து, அதில் இருந்து தப்பிக்க மின்விசிறியைப் போடுகிறோம். அதற்குத் தேவையான மின்சாரத்துக்கு நிலக்கரியை எரிக்கிறோம்; அணு உலை அமைக்கிறோம். ஆனால், எந்த மருந்தாலும் இன்னும் கொசுவை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை!’ என மனம் வெதும்பிச் சொன்னார்.
இப்போது நம் முன்னே இருப்பது 'இயற்கையா... செயற்கையா?’ என்ற எளிய கேள்வி. உயிர்போகும் ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கிறது என்பதை உணர்ந்து, ஆகக்கூடிய அனைத்து வழிகளிலும் ரசாயனங்களைத் தவிர்ப்பதும், இயற்கைக்கு இசைவான வாழ்க்கைமுறைக்குத் திரும்புவதும்தான் இதற்கு சாத்தியமான, நிரந்தரமான தீர்வு!
 
 
 
பூச்சிக்கொல்லிகளும் விவசாயிகளும்!
ரே பூச்சிக்கொல்லியை தொடர்ந்து தெளிக்கும்போது பூச்சிகள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்கின்றன. இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல், பூச்சிகளை அழிக்க ஒவ்வொரு முறையும் மருந்து தெளிக்கும் அளவை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள். எந்தெந்தப் பூச்சிக்கொல்லியை எந்தெந்தப் பயிர்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. உதாரணமாக, காய்கறிப் பயிர்களில் தடைசெய்யப்பட்ட 'மோனோகுரோட்டோபாஸ்’ (Monocrotophos) என்ற பூச்சிக்கொல்லியை மற்ற பயிர்களில் பயன்படுத்திப் பழகிவிட்ட விவசாயிகள், காய்கறி பயிர்களுக்கும் தெளிக்கிறார்கள். ஒரு லிட்டர் தண்ணீருக்கு எத்தனை மில்லி பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையையும் பின்பற்றுவது இல்லை.
கத்திரி, தக்காளியைத் தாக்கும் 'வெள்ளை ஈ’-க்கு எதிரான பூச்சிக்கொல்லியின் பரிந்துரை அளவு 20 கிராம். ஆனால், விவசாயிகள் அதிகபட்சமாக 100 கிராம் வரைகூட பயன்படுத்துகிறார்கள். இப்படிப் பயன்படுத்தும் ரசாயனங்களின் நச்சுத்தன்மை, நீண்ட நாட்களுக்கு அந்தப் பயிர்களிலேயே இருக்கும். உதாரணமாக, தென்னை மரங்களில் வரும் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்த மரத்தின் வேரில் மோனோகுரோட்டோபாஸ் மருந்தைப் புகுத்துவார்கள். அப்படி மருந்து புகட்டிய நாளில் இருந்து குறைந்தது 15 நாட்களுக்கு அந்த மரத்தின் இளநீரைப் பறிக்கக் கூடாது. நடைமுறையில் ஒருபக்கம் மருந்தைக் கொடுத்துக்கொண்டே, மறுபக்கம் இளநீரையும் பறிக்கின்றனர். இதனால் நஞ்சு, இளநீரின் வழியே அதைக் குடிப்பவர்களின் உடலுக்குள் நேரடியாகச் சென்று கலக்கிறது. இதைத்தான் காய்கறிகளிலும் பயன்படுத்துகின்றனர். கத்திரிக்காயில் முதல் நாள் மருந்து தெளிக்கிறார்கள். அடுத்த நாள், அது கடைக்கு வந்துவிடுகிறது. அந்தக் காயில் உள்ள நஞ்சு எங்கே போகும்? நம் வயிற்றுக்குள்தான்!
 
அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?
 
பூச்சிமருந்துகளின் நச்சுப்பிடியில் இருந்து இந்தப் பூவுலகைக் காப்பாற்றவேண்டிய நெருக்கடி நம் முன்பு இருக்கிறது. இதில் அரசாங்கத்தின் முக்கியமான பாத்திரம் என்ன? வேளாண் பொருளியல் நிபுணர் பாமயன் சொல்லும் ஆலோசனை இதோ...
''முதலில் உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை, நம் நாட்டில் விற்பதை முழுமையாகத் தடுக்க வேண்டும். அவை தடை செய்யப்பட்டுள்ளன என்றால், மனிதகுலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து என்றுதானே பொருள். அதைப் பயன்படுத்த அனுமதிப்பது மிகவும் அபாயகரமானது. எண்டோசல்பான் போன்ற பல பூச்சிமருந்துகள் இப்படி இங்கே விற்கப்படுகின்றன. அதேபோல பூச்சிமருந்து பயன்படுத்துவது குறித்த குறைந்தப்பட்ச விழிப்பு உணர்வையாவது நமது விவசாயிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். பயிருக்குத் தண்ணீர்ப் பாய்ச்சுவதைப்போல பூச்சிமருந்து தெளிப்பது நமக்கு நாமே விஷம் வைத்துக்கொள்வதற்கு சமம். எனினும் இது ஒரு தற்காலிகத் தீர்வு மட்டுமே.
நிரந்தரத் தீர்வு... ஒட்டுமொத்த மாநிலமும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதுதான். அரசாங்கமே கொள்கை முடிவுகள் எடுத்து மாநிலம் முழுவதும் இயற்கை வழி வேளாண் முறைகளை அறிமுகப்படுத்தி, பயிற்சி தந்து, ஊக்குவிக்க வேண்டும். இப்படிச் செய்வது இயலாத செயல் அல்ல. சிக்கிம் மாநில அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறது. அங்கு பெரும்பகுதி நிலத்தில் இயற்கை விவசாயம்தான். இப்போது கேரளாவும் இந்தப் பட்டியலில் இணைந்து, அங்கும் இயற்கை விவசாயக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும் இதில் இணைய வேண்டும். அரசாங்கமே முன்னெடுத்துச் செய்தால் ஒருசில ஆண்டுகளில் அதிசயிக்கத்தக்க மாற்றங்களைக் காண முடியும். இயற்கை விவசாயத்துக்கு மாறினால் விஷம் இல்லாத காய்கறிகள் மட்டும் அல்ல... நம் ஒட்டுமொத்த வாழ்க்கைமுறை, உடல் நலம், பொருளாதாரம் அனைத்துமே மேம்பாடு அடையும்!''
 
40 ஆண்டு நஞ்சு!
 
2010-ம் ஆண்டு, 'தேசிய அளவில் பூச்சிக்கொல்லி எச்சங்களைக் கண்காணிக்கும்’ (Monitoring of Pesticide Residues at National Level)  ஆய்வு ஒன்று இந்தியாவில் நடந்தது. அதில் நாம் பயன்படுத்தும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், முட்டைகள், பால் போன்ற அனைத்து உணவுப்பொருட்களிலும் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள், அபாய வரம்பில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. நிலத்தடி நீரிலும் பூச்சிக்கொல்லியின் எச்சங்கள் கலந்துவிட்டன. அதே 2010-ம் ஆண்டு புனேயில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம், கோலா குளிர்பானம் ஒன்றில் பூச்சிக்கொல்லிகளின் எச்சம் கலந்திருப்பதை ஆய்வில் கண்டுபிடித்தது. இது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் குளிர்பானத்தில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட ரசாயனம் டி.டி.டீ. என்ன கொடுமை எனில், இந்தியாவில் 1970-களிலேயே டி.டி.டீ தடை செய்யப்பட்டுவிட்டது. அதற்கு முன்பு பயன்படுத்திய நஞ்சின் எச்சம் நிலத்தடி நீரில் அப்படியே இருந்திருக்கிறது. அதுதான் குளிர்பானத் தயாரிப்புக்காக நிலத்தடி நீரை உறிஞ்சும்போது, தண்ணீருடன் கலந்திருந்திருக்கிறது. யோசித்துப் பாருங்கள்... கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அதன் எச்சம் நீரில் கலந்திருக்கிறது எனும்போது, உணவுப் பயிர்களில் நஞ்சைத் தெளித்து அடுத்த நாளே நாம் சாப்பிடுகிறோம். நன்றாகக் கழுவிவிட்டுச் சமைத்தால் பூச்சிமருந்து போய்விடும் என்றும் நினைக்கிறோம். கழுவினால் போய்விடுவதற்கு, அது தூசி அல்ல... விஷம்!
 
தனி மனிதர்கள் என்ன செய்ய முடியும்?
ல்லா காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களிலும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டுள்ள நிலையில் சாதாரண மக்கள் என்னதான் செய்வது? இவற்றில் இருந்து எந்த அளவுக்கு தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும்? - சித்த மருத்துவர் கு.சிவராமன் சொல்லும் ஆலோசனை என்ன?
''பளபளப்பான காய்கறிகளைத் தேடி வாங்குவதுதான் இன்றைய நுகர்வோரின் மனநிலை. காய்கறி பளபளப்பாக இருக்கிறது என்றால், அதில் ரசாயன மருந்து இருக்கிறது என்று அர்த்தம். உண்மையில் வாடிய சொத்தை காய்கறிகளிலும் கீரைகளிலும் பூச்சிக்கொல்லிகளின் எச்சம் இருக்காது. அவற்றை வாங்கி, சொத்தைப் பகுதியை நீக்கிவிட்டு மீதியைப் பயன்படுத்தலாம். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை வழி விவசாய முறைக்கு மாறிவருகிறார்கள். பெருநகரங்களில்கூட இன்று ஆர்கானிக் பொருட்கள் கிடைக்கின்றன. நாம்தான் அவற்றைத் தேடிப்பிடித்து வாங்க வேண்டும். 'ஆர்கானிக் காய்கறிகள் எங்கு கிடைக்கின்றன என்பது தெரியாதே?’ எனப் பலர் சொல்லக்கூடும். பிடித்த திரைப்படம் எந்தத் தியேட்டரில் ஓடுகிறது, என்ன டிசைன் துணி எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை ஆர்வமாகத் தேடித் தெரிந்துகொள்வதைப்போல, இதையும் ஆர்வத்துடன் அணுகினால் எளிதில் கிடைத்துவிடும்.
 
இதுபோன்ற ஆர்கானிக் பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். அதற்குக் காரணம் உற்பத்திக் குறைவே. அதிகம் பேர் இயற்கைப் பொருட்களுக்கு மாறும்போது தேவை அதிகரிக்கும்; விவசாயமும் அதிகரிக்கும்; விலையும் குறையும். ஆகவே, விலை குறைய வேண்டும் என்றாலே அதிகம் பேர் ஆர்கானிக் பொருட்களை வாங்கும்போதுதான் அது நடக்கும்.
 
நச்சு நிறைந்ததாக மாறியிருக்கும் நமது இன்றைய சூழலை, ஆரோக்கியமான உணவின் மூலம்தான் மாற்ற முடியும். அந்த நல்ல உணவைப் பெறுவதற்கான தடைகளை நம் முயற்சியில் நாம்தான் கடந்தாக வேண்டும்!''

Sunday, October 19, 2014

Chola Kingdom



மேலைநாட்டவர் வெறும் வாணிபத்துக்காகவே கீழைநாடுகளை நாடிக்கொண்டிருந்த நாட்களில், கடல் கடந்து கொடி கட்டி ஆண்ட இனம் நம் தமிழினம். காம்போஜம்(கம்போடியா), ஸ்ரீவிஜயம்(சுமாத்திரா), சாவகம்(ஜாவா), சீயம்-மாபப்பாளம்(தாய்லாந்து), கடாரம்(மலேசியா), நக்காவரம்(நிக்கோபார் தீவுகள்), முந்நீர்ப்பழந்தீவு(மாலைதீவு) போன்ற தூரதேச நாடுகளிலெல்லாம், தமிழ் மூவேந்தரில் ஒருவரான சோழரின் புலிக்கொடி பறந்து அந்நாட்டவரெல்லாம் தமிழருக்கு திறை செலுத்தி பணிந்துநின்ற ஒரு பொற்காலம் சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறது. அவ்வாறு சிறந்திருந்த சோழப்பேரரசு தொடர்ந்து நீடிக்காததன் காரணம், போருக்கும் ஆக்கிரமிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளித்ததும் ஏனைய தமிழரசரான சேரர்-பாண்டியருடன் ஒற்றுமையின்றி இணங்கி நடக்காமையுமே என்பது அதே சரித்திரம் நமக்கு தரும் பாடம்.

வரலாறு சுட்டிக்காட்டிய அதே தவற்றை, மீண்டும் மீண்டும் இன்று வரை தொடர்ந்து நாம் செய்துகொண்டிருப்பதுதான் மீண்டெழ முடியாத ஆழத்தில் நாம் வீழ்ந்துகிடப்பதன் காரணம்.

ஒற்றுமையின்மை…..!!!

இதைத்தவிர தமிழரைப்பிடித்த சனி வேறு எதுவுமே இல்லை. பள்ளன்,பறையன் என்ற சாதிவெறிக்கொடுமைகள்… போதாததற்கு தமிழ்நாட்டுத்தமிழன், இலங்கைத்தமிழன்….., அவ்வளவு ஏன், மட்டக்களப்பான், யாழ்ப்பாணத்தான், மலைநாட்டான்…. அப்பப்பா…எத்தனை பாகுபாடுகள், எத்தனை வேறுபாடுகள்!! இந்த வேறுபாடுகள், பாகுபாடுகள், முட்டாள்தனங்கள் என்றைக்கு நீங்கி தமிழன் ஒற்றுமையுடன் தன் எல்லா சகோதரர்களுடன் பேதமின்றி ஒன்றுபட்டு வாழத்தலைப்படுகிறானோ… அன்றைக்குத்தான் தமிழனுக்கு விமோசனம்…அன்றைக்குத்தான்...

தமிழனுக்கு விடிவுகாலம்…!!!

ராஜேந்திர சோழன் 1000


வங்கக் கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம்... இங்கெல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் சீறிப் பயணித்தவன் ராஜேந்திர சோழன். அவன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு இது. 'கங்கை கொண்ட சோழன்’ புதினம் மூலம் ராஜேந்திர சோழனின் அசகாய சாதனைகளை விவரித்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன். அவரிடம் ராஜேந்திர சோழனின் பராக்கிரமங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக்கேட்டோம்...

''ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு மிகப் பெரிய படை திரட்டி, கங்கை வரை போய் வெற்றிக்கொடி நாட்டி வந்த தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே. அதன்பிறகு மற்ற மன்னர்கள் பகைவரைத் தடுப்பதோடு சரி. தாக்கியதற்கான சரித்திரம் இல்லை.
கங்கை கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த ராஜராம் கோமகன் என்பவர், ராஜேந்திர சோழனின் 1000-வது பட்டாபிஷேக விழாவைக் கொண்டாடத் திட்டங்கள் போட்டிருக்கிறார். நானும் கலந்துகொள்கிறேன். இந்த மாதிரியான விழாக்கள், தமிழர் சரித்திரம் மீது ஆர்வம்கொண்ட இளைஞர்களுக்கு உதவி செய்யும். தமிழ், மேலும் வாழும்!''

''ராஜேந்திர சோழனின் தீரம் எத்தகையது?''

'' 'அலைகடல் மீது பல கலம் செலுத்தி’ என்றுதான் அவன் மெய்கீர்த்தி சொல்கிறது. கடலின் தன்மை தெரிந்து, காற்றின் தன்மை தெரிந்து, இருட்டில் சுடர் மூலம் வழி தெரிந்து, ஆமைகள் போகிற நீரோட்டப் பாதை தெரிந்து, நூற்றுக்கணக்கான நாவாய்கள் அதாவது மிகப் பெரிய மரக்கலங்களோடு அவன் கிழக்கே உள்ள நாடுகளுக்குப் போயிருக்கிறான். இன்றைய சிங்கப்பூர், மலேசியா, ஜாவா, இந்தோனேசியா... எனப் பல நாடுகளில் அவன் கால்கள் பதித்திருக்கிறான். போரில் வென்று பெரும்பொருட்களை தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக்கிறான்.

சோழர்களுக்கு நடு நாடு, தொண்டை நாடு, தாண்டி கீழைச் சாளுக்கிய நாட்டோடு மிக நல்ல நட்பு இருந்திருக்கிறது. அதாவது ஆந்திர மக்களோடு, தமிழர்கள் மிக நெருக்கமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், மேலைச் சாளுக்கியம் என்கிற கன்னட மக்களோடுதான் அவர்கள் எப்போதுமே முரண்பட்டு இருக்கிறார்கள். கீழைச் சாளுக்கியத்தை கன்னடர்கள் கபளீகரம் செய்யாதிருக்க, மணவினை ஏற்பாடு செய்து கீழைச் சாளுக்கியத்துக்கு மிகப் பெரிய படை அனுப்பவேண்டிய நிர்பந்தம் ராஜேந்திர சோழனுக்கு ஏற்பட்டது.
கீழைச் சாளுக்கியத்துக்கு மேல் இருந்து கலிங்க தேசமும் ஒட்ட தேசமும் அவனுக்குத் தொந்தரவு செய்ததால் அதைத் தண்டிக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. அவ்வளவு தொலைவு போய்விட்டதால் இன்னும் சற்று நகர்ந்து, வங்காளத்தில் புகுந்து மிகப் பெரிய கங்கை நதியையும், படகுகளையும், முகத்துவாரத்தையும் அவன் பார்த்து வியந்திருக்கிறான். யானைகள் வைத்து பாலம் கட்டி, அதன் மீது குதிரைகள் ஏற்றி மறுகரைக்குப் போயிருக் கிறான். இடைவிடாது மழை பெய்யும் அசாம் வரைக்கும் அவன் போயிருக்க வேண்டும்.

அங்கு இருந்த பெண்டிர், பண்டாரங்களை மட்டும் அல்ல... கோயில் சிலைகளையும் பெயர்த்து எடுத்து வந்திருக்கிறான். அவன் கொண்டுவந்த பல சிலைகளை என்ன காரணத்தினாலோ கங்கை கொண்ட சோழபுரத்தில் வைக்காமல், அதன் அருகே செங்கமேடு என்ற கிராமத்தில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்படுகின்றன. எந்த வழிபாடும் இல்லாமல் இருக்கின்றன!''

''ராஜேந்திர சோழனின் சொந்த வாழ்க்கையில் என்ன செய்தி இருக்கிறது?''

''அவனுக்கு மனைவியர் பலர். அதில் வீரமா தேவி என்பவள் மிக நெருக்கம். ராஜேந்திர சோழன் தன் 84-ம் வயதில் மரணமடைந்தபோது அவளும் உடன்கட்டை ஏறினாள். ராஜேந்திர சோழன் தன் மத்திம வயதில் திருவாரூரைச் சேர்ந்த பரவை என்கிற தேவரடியாரை நேசித்தான். தேவரடியார் என்று அப்போது அழைக்கப்பட்டவர்கள், தங்களை கோயிலுக்கு எனத் தீர்மானம் செய்தவர்கள்; நித்யசுமங்கலிகள். அவர்களைத் திருமணம் செய்துகொண்டால் அது ஒரு வைப்பாட்டி நிலையில்தான் இருக்கும். ஆனால், பரவையின் அறிவிலும் அழகிலும் ஈர்க்கப்பட்டு, ராஜேந்திர சோழன் அவளை அவ்விதம் நடத்தாமல், தன் தேரில் ஏற்றி திருவாரூர் முழுவதும் சுற்றி வந்தான். அவள் விரும்பியதால் செங்கல்லால் அமைந்த திருவாரூர் கோயிலைக் கருங்கல்லால் உருவாக்கி, அதன் மீது தங்கத் தகடு வேய்ந்து, அவளை முதன்முதலில் சந்தித்த இடத்தில் ஒரு கல்வெட்டு பொறித்திருக்கிறான். அவள் உயரத்துக்கு ஒரு வெண்கலக் குத்துவிளக்குச் செய்யச் சொல்லி அதைக் கருவறையில் வைத்து ஏற்றியிருக்கிறான். இன்று இருக்கும் விளக்கும் அவன் கொடுத்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது!

இதே விதமாக ராஜேந்திர சோழன் தன்னுடைய தந்தையின் அனுக்கிக்கு... அதாவது காதல் தோழிக்கு ஒரு பள்ளிப்படை கோயில் எழுப்பியிருக்கிறான். அவளுக்கு பஞ்சவன் மாதேவி என்று பெயர். பஞ்சவன் மாதேவி பட்டமகிஷியும் அல்ல; மனைவியும் அல்ல; அனுக்கி. அதாவது, கேர்ள் ஃப்ரெண்ட்போல. ஆனால், அவள் ராஜேந்திரனால் அங்கீகரிக்கப்பட்டு, தாய் எனப் போற்றியிருக்கிறான். அந்தப் பள்ளிப்படை கோயில் இன்றளவும் நன்றாக இருக்கிறது!''

''நாட்டின் நிர்வாகம் எப்படி இருந்தது?''

''மிகச் சிறப்பாக இருந்தது. விவசாயத் தொழில்கள் மிக அற்புதமாக நடைபெற்றன. ஒரு காசுக்கு 150 வாழைப்பழம். ஒரு பொற்காசுக்கு இரண்டு பசு மாடுகள், ஓர் எருமை. ஒரு பொற்காசுக்கு ஆழாக்கு ஏலக்காய் என வியாபாரங்கள் நடந்திருக்கின்றன. பசு சல்லிசாகக் கிடைக்கும். ஆனால், ஏலக்காய் கேரளத்தில் இருந்து வரவேண்டும். அதனால் விலை அதிகம். கம்மாளர்களுக்கும் சிற்பிகளுக்கும் உலோகத் தச்சர்களுக்கும் மரத் தச்சர்களுக்கும் மிகப் பெரிய மரியாதை இருந்தது. அவர்கள் நல்லது கெட்டதுக்கு சங்கு ஊதிக்கொள்ளவும், வீட்டுக்கு இரண்டு வாசல் வைத்துக்கொள்ளவும், சுண்ணாம்பு அடித்துக்கொள்ளவும், செருப்பு அணிந்துகொள்ளவும், பல்லக்கில் ஏறவும், தோளில் துணி போத்திக்கொள்ளவும், தலைப்பாகை அணியவும், பூணூல் அணிந்துகொள்ளவும் ராஜேந்திர சோழன் உரிமை கொடுத்திருக்கிறான். அளவான வரி, அனைவருக்கும் அத்தியாவசிய வசதிகள், கரை புரண்டோடிய செல்வம்... என வளமும் நலமுமாக இருந்தது சோழ சாம்ராஜ்ஜியம்!''

''இப்போது அந்தச் செல்வங்கள் எல்லாம் எங்கே?''

''400 வருட பகைமையைத் தீர்த்துக்கொள்ள, பாண்டியர்கள் படையெடுத்து வந்து சோழர்களைத் தாக்கி ஒரு தூணும் நிற்கவொட்டாது இடித்து, கோவேறு கழுதை பூட்டி, பேய் கடுகு விதைத்து ஊரை நாசம் செய்தார்கள். பொன் பொருட்களை வாரிக்கொண்டு போனார்கள். அவை அடுத்த தலைமுறையிலேயே டெல்லியில் இருந்து வந்த இஸ்லாமிய தளபதியால் கொள்ளையடிக்கப் பட்டன. 36 யானைகள் முழுவதும் பொன், பொருட்கள் டெல்லிக்குக் கொண்டுபோகப்பட்டன. டெல்லியில் உள்ள ஆட்சியாளர்களை அடுத்த 120 வருடங்களில் ஆங்கிலேயர்கள் தாக்கி, அந்தப் பொன் பொருட்களை எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குப் போனார்கள். இங்கிலாந்தின் பல சாலைகள், கட்டடங்கள் இந்தப் பொற்காசுகளால் நிர்மாணிக்கப்பட்டவை; தமிழக செல்வத்தால் வளர்ந்தவை!''

''பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் ஏன் பகை?''

''ஓர் இனம் மற்ற இனத்தால் அழிக்கப்படாது. எப்போதுமே ஓர் இனம் இரண்டாகப் பிரிந்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். தமிழ் பேசும் பாண்டியர்களைக் கடுமையாகத் தாக்கி தமிழ் பேசும் சோழர்கள் துன்புறுத்தினார்கள். கன்னியாகுமரி வரை துரத்தினார்கள். பனங்காட்டுக்குள் வாழச் செய்தார்கள். அதே பாண்டியர்கள் பல தலைமுறைகளுக்குப் பிறகு மிக வெஞ்சினத்தோடு, சோழர்களின் பல்வேறு பெருமைகளை அழித்தார்கள். மிகச் சிறந்த தமிழர் நாகரிகம் ஒன்று 10 சதவிகிதம் மட்டும்தான் பார்க்க, கேட்கக் கிடைத்தன!
இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்த ராஜேந்திர சோழன் காஞ்சிபுரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரில் இறந்துபோனான். அவன் கடைசியாகத் தரிசித்த ஒரு கோயில் இருக்கிறது. சுற்றிலும் பனைமரங்கள்; பொட்டல்காடு. ஏன் அந்தக் கோயிலுக்கு வந்து இறந்துபோனான் என்று மனம் பதறுகிறது. 'இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்துவிட்டு, அங்கே அந்தச் சிறிய கிராமத்தில் இறந்துபோனாயே... ஏனப்பா?’ என்று அலறத் தோன்றுகிறது!''

- கம்மியக் குரலில் முடிக்கிறார் பாலகுமாரன்.

விஜயநகர் பேரரசர்கள்.


இவர்கள் யார் புதிதாக? எங்கிருந்து வந்தார்கள்? – ஒரு வரலாற்று நிகழ்வு

ஒரே மொழி பேசக்கூடிய சோழனும் பாண்டியனும் நாட்டின் எல் லைகளை இரண்டாக வகுத்து கொண்டு ஒருவனை ஒருவன் மாறி மாறி அடித்துக் கொண்டு போர்க் களத்தில் செத்து மடியும் வேளையில், தாங்கள் கட்டி வை த்த கோயில்களுக்கும், செய்து வைத்த அற்புதமான ஐம்பொன் திருமேனிகளுக்கும் அப்படியொ ரு ஆபத்து வந்து சேரும் என்று கனவிலும் அவர்கள் நினைத்திரு க்கமாட்டார்கள். 

இருவரும் போரிட்டு ஒரு வழியாக
சோழன் சுவடே தெரியாமல் சுத்தமாக அழிந்தே விட, பாண்டியன் சற்று பலம் குன்றி இருந்த நேரத்தில் வடக்கில் இருந் து வந்தார்கள் முஸ்லிம் ம ன்னர்கள், 
கோயில்கள் அனைத்தும் அடித்து தரை மட் டமாக்கப்பட்டது, சிலைகள் அனைத்து உடைத்து நொ றுக்கப் பட்டது, தடுத்தவர்க ளின் தலை துண்டிக்கப்பட் டது, அப்படி ஒரு சம்ப‌வத் தை தமிழ் மக்கள் அது வரை பார்த்தததே இல்லை,

ஜென்ம விரோதிகளான சோழனும் பாண்டியனும், சாளுக்கியனும், பல்லவனும் மோதிக்கொண்டபோது கூட ஒருவர் நாட்டை மற் றொருவர் கைப்பற்றும் போது அவர்கள் எழுப்பிய கோயில்களை எதிரி நாட்டவர் தொட்டதில்லை, இவர்கள் யார் புதிதாக? எங்கிருந்து வந்தார்கள்? 

அது ஒரு குழுப்பமான காலம், தமிழத்தை ஆண் ட மூன்று பெரிய பேரரசும் வீழ்ந்து விட்டது. யார் இனி நம்மையும் நம் கோயில்களையும் காப் பாற்றப்போகிறார்கள் என்று தலை மீது தமிழ் மக்கள் கை வைத்து அமர்ந்திருந்த நேரத்தில் , துங்கபத்தரை நதிக்கரை ஓரத்தில் அற்புதமான ஒரு ஒளி உதயமானது, முஸ்லிம் மன்னர்களிடம் போராடி தமிழகத்தில் இருந்து அவர்களை முழுவதும் விரட்டி, தமிழகம் முழுவதையும் தங்கள் ஆட்சியின்கீழ் கொண்டு
வந்தவர்கள் விஜயநகர் பேரரசர்கள்.

கர்நாடக மாநிலம் ஹம்பி யில் அமைந்திருந்தது அவ ர்களின் தலைநகர் நமக்கு மேலே இருந்ததால் அவர்களைக் கடந்து தமிழகம் வர முடியவில்லை. பெரிய அரணாக இருந்து தடுத்து நம் ஊரில் இருக்கும் ஆயிரம் ஆயிரம் கோயில்களை காப்பாற் றியவ ர்கள் அவர்கள். 

தமிழகத்திற்கு அது ஒரு பொற்க்காலம் என்றே சொல்லலாம் பாதி யில் நின்ற கோயில்களை முழுமை யாக்கியது, விண்ணை முட்டும் ராஜ கோபுரங்களை எழுப்பியது, ஆயிரம் கால் மண்டப ங்கள் அமைத்தது ,அந்த மண்டபத்தில் நிற்கும் தூண்களில் ஆள் உயர பிரம் மாண்ட அற்புத சிலைகள் செய்தது என அவர்கள் செய்து வைத்துச் சென்ற வேலைகள் ஏராளம், அற்புத மான மனிதர்கள், அவர்களின் வரலாறு நம்மில் பலருக்கு தெரியவே தெரியாது. பண்டைய ரோம் நகரைக் காட்டி லும் பெரிய நக ராக விளங்கிய ஹம்பி கடைசியாக முஸ்லிம் மன்னர்களால் முற்றிலும் அழிக்கப்பட்டு, அவர்கள் அங்கு எழுப்பி இருந்த அற்புதமான கோயில்கள் அனைத்தும் இடித்து நொறுக் கப்பட்ட எச்சங்களை இன்றும் நாம் காணலாம்.

தங்கள் கோயில்களை இழந்து அவர்களை அங்கு தடுத்து நிறுத்தி இருக்காவிடில் இன்றைக்கு இங்கும் எதுவுமே இருந்திருக்காது! அந்த அற்புதமான வீரர்கள் இன்றும் நம்முடைய கோயில்களி ல் குதிரையின்மீதி வீரமாக தாவிக்கொண்டு தான் இருக்கிறார் கள், திரும் பிப் பார்க்க கூட ஆளில்லாமல்!

Monday, September 08, 2014

தமிழக வரலாற்றை மாற்றிய இரு முக்கியமான போர்கள்



வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்திருந்திருந்தாலும், சில போர்களால் தமிழகத்தின் வரலாறே மாறியுள்ளது, அப்படியான போரில் குறிப்பிட்டு நாம் பார்க்க வேண்டியது " தெள்ளாற்றுப் போர் ". இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

" தெள்ளாறு ", இன்றைக்கு, திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம், பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் வலிமையுடன் ஆட்சி புரிந்தவர்கள். இவர்களை அழிக்க எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும், குறிப்பாக சோழரும், பாண்டியரும் ஒன்றாக இணைந்து பல்லவ பேரரசின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைத்தது இங்கு தான்,பாண்டியர்கள் பேரரசர்கள், சோழர்கள் அங்கும் இங்குமாய் சிற்றசர்களாகவே இருந்தனர்,அப்போது ஆட்சி செய்த வந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850 ) ,இங்கு நடந்த போரில் சோழர் மற்றும் பாண்டிய கூட்டுப் படையை எதிர் கொண்டு அதில் வெற்றியும் கண்டான், அதுமட்டுமல்லாது அவர்களை கடம்பூர்,வெறியலூர்,வெள்ளாறு,பழையாறு ஆகிய இடங்களில் எதிர்கொண்டு பாண்டிய நாட்டு எல்லை வரை ஓட ஓட விரட்டினான், சோழர்கள் பல்லவர்களுக்கு கப்பம் கட்ட உடன்பட்டனர் !. அது முதல் நந்திவர்மன் " தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் " என போற்றப்பட்டான்.இந்த போர் குறித்து ஏராளமான கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன, அவன் மீது பாடப்பெற்ற " நந்திக் கலம்பகத்தில் ' இந்த தெள்ளாற்று வெற்றியினை பலவாறு புகழந்துரைக்கிறார்கள் . இந்த போரின் வெற்றிக்குப் பிறகு பல்லவர்கள் பெரிதும் வலிமை பெற்றனர், இறுதிக்காலம் வரை பகைவர்கள் நந்திவர்மனை கண்டு அஞ்சியே இருந்தனர்.பல்லவர்கள் தங்கள் வலிமையை நிலைநிறுத்திய போராக இது விளங்கியது.

அடுத்தாக வடக்கே கங்கை வரையும், தெற்கே கடல் கடந்து கடாரம் வரை ஆட்சி புரிந்த சோழப் பேரரசு !.விஜயலாயன் தொடங்கி,ராஜ ராஜன் சோழன் , ராஜேந்திரன் சோழன் என்று புகழின் உச்சிக்கே சென்ற சோழர்கள் கி.பி-1279 பிறகு எங்கே சென்றார்கள் ? அவர்கள் வீழ்ந்த இடமும் இந்த "தெள்ளாறு" தான் . சோழப் பேரரசு மூன்றாம் ராஜ ராஜனின் ஆட்சியின் போது அழிவின் விளிம்பில் இருந்தது, தெற்கே " சுந்தர பாண்டியன் " சற்றே வலிமை பெற்று, சோழர்களின் மீது போர் தொடுத்தான்,பாண்டியனுக்கு அஞ்சிய சோழன் காஞ்சிபுரத்தை நோக்கி ஓடினான், அவனை காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த தெள்ளாற்றில் இடைமறித்து போர் புரிந்தான், அதில் மூன்றாம் ராஜ ராஜன் தோல்வியுற்றான்,அது சோழர்களுக்கு பெரும் பின்னடைவாய் இருந்தது.பின்னர் காடவ மன்னன் அவனது தலைநகரான சேந்தமங்கலத்திற்கு கொண்டு சென்று அங்கு சோழனை சிறை வைக்கப்பெற்றான்.இதை அறிந்த பாண்டியனும், சோழனின் மாமனாரான மேலைச் சாளுக்கிய மன்னனும் சேந்தமங்கலத்தின் மீது போர் தொடுத்து சோழனை சிறை மீட்டனர், சேந்தமங்கலமும் அதன் கோட்டையும் முற்றிலுமாக அழிக்கப்பெற்றது, இங்கு தற்போது தமிழக அரசு தொல்லியல் துறை அகழாய்வு செய்து கோட்டைப் பகுதிகளையும், காடவர் தலைநகரையும் வெளிக்கொணர்ந்தது.மூன்றாம் ராசா ராசனுக்கு பின், மூன்றாம் ராஜேந்திரன் சிறிது காலம் ஆட்சி புரிந்தான், பின்னர் கி.பி-1279- ல் சோழப் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது !.

இவ்வாறு இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போருக்கு பின்னர் தமிழகத்தின் வரலாற்றின் பாதையே மாறியுள்ளது, ஒரு வேலை முதல் போரில் பல்லவர்கள் தோற்று பாண்டியர்கள் வெற்றிபெற்றிருந்தால், சோழ வம்சமே மீண்டும் வராமல் போயிருக்கும், அவர்கள் பாண்டியர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாகவே இருந்திருப்பார்கள் !.தஞ்சை கோயில், கடாரம் வரை ஆட்சி என தமிழர்களின் புகழ் விரிவடையாமலே சென்றிருக்கலாம் !. ஒரு வேலை இரண்டாவதாக காடவர்களுடன் நடந்த போரில் சோழர்கள் வென்றிருந்தால் ? இன்னும் அவர்கள் வலிமையுடன் தமிழகத்தை ஆண்டிருப்பார்கள், கடாரம் வரை கப்பலில் சென்று போர் புரிந்த சோழர்களுக்கு,ஆங்கிலேயர்களை விரட்ட எவ்வளவு காலம் பிடித்திருக்கும் ?!..