Monday, November 15, 2021

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை -- தேர்ச் சக்கரம்

 இந்தியாவிடமிருந்து ஆங்கில உலகம் பெற்றுக்கொண்ட சொற்களில் ஒன்று, ‘ஜகர்நாட்.’ பிரபஞ்சத்தின் கடவுளான ஜெகந்நாதரிடமிருந்து உருண்டுவந்த பெயர் இது. விஷ்ணுவின் அவதாரமான ஜெகந்நாதருக்கு ஒடிசாவிலுள்ள பூரியில் 12-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய கோவிலொன்று எழுப்பப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் அங்கே நடைபெறும் தேரோட்டத்தைக் காண உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் பக்தர்களும், அவர்களுக்குச் சமமாகச் சுற்றுலாப்பயணிகளும் திரண்டுவருவது வழக்கம். உற்சவ மூர்த்தியான ஜெகந்நாதர் தனது சகோதர, சகோதரியான பலபத்திரர், சுபத்ரா தேவி இருவரோடு எழுந்தருளுவதை லட்சக்கணக்கானவர்கள் தரிசிப்பது வழக்கம். முதலில் பலபத்திர தேரும், பிறகு சுபத்ரா தேவி தேரும் புறப்பட்டு வரும். ஜெகந்நாதரின் பிரமாண்டமான தேர் இறுதியாகத் தோன்றும்.

உருண்டோடி வரும் தேர்ச் சக்கரத்தைக் காணும்போது, `என் பாதையில் ஆயிரம் மலைகள் குறுக்கிட்டாலும் தவிடுபொடியாக்கி விட்டு முன்னேறிச் செல்வேன்’ என்று அது சொல்வதுபோல் இருந்தது பலருக்கும். நீங்காத அச்சத்தோடும் பரவசத்தோடும் சக்கரத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றனர் அயல்நாட்டுக்காரர்கள். தேர் அவர் களை மயக்கியது, குழப்பியது, அச்சுறுத்தியது, நிலைகுலையவைத்தது. அவர்கள் கற்பனையில் ஏறி கல்போல் அமர்ந்துகொண்டு, விலக மாட்டேன் என்றது. இந்த அசாதாரண உணர்வை ஏற்படுத்தியவர் ஜெகந்நாதர் அல்லவா?

எனவே ஓங்கி உலகளந்து நிற்கும் எதையும் ஆங்கில உலகு, `ஜகர்நாட்’ என்று அழைக்கத் தொடங்கியது.

அளவில் பெரிய சரக்கு வண்டிக்கு பிரிட்டனில் இந்தப் பெயர்தான். எதைக்கொண்டும் தடுத்து நிறுத்த முடியாத, எப்பாடுபட்டாலும் வெல்ல முடியாத, நம் சிற்றறிவுக்குச் சிக்காத பெரும் ஆற்றலுக்கும் இந்தப் பெயரையே சூட்டினார்கள்.

பூரி தேரோட்டம் குறித்து இத்தாலியப் பயணியான நிகோலோ டி காண்டி எழுதியுள்ள பதிவு முக்கியமானது. இந்தியா என்றதும் இன்றும் உலகின் மனதில் சட்டென்று விரியும் சித்திரங்களில் ஒன்றாக இது இன்றளவும் நீடிக்கிறது.

டெல்லி சுல்தானகம் எறும்பாகத் தேய்ந்துகொண்டிருந்தபோது, முகமது பின் துக்ளக்கிடம் பணியாற்றிவந்த ஹரிஹரா, புக்கா ஆகிய இரு சகோதரர்களும் பிரிந்துவந்து கர்நாடகத்தின் தலைநகரான விஜயநகரத்தில், துங்கபத்திரா நதிக்கரையில் ஒரு புதிய ஆட்சியைத் தொடங்கிவைத்தனர். அது விஜயநகரப் பேரரசாக மலர்ந்தது. விஜயநகரத்தை நேரில் கண்டு எழுதிய அயல்தேசத்துப் பயணிகளில் முக்கியமானவர் நிக்கோலோ டி காண்டி. மார்கோ போலோ தனது பயணங்களை முடித்துக்கொண்டு 1295-ம் ஆண்டு வெனிஸ் திரும்பினார். கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பிறகு காண்டி இங்கு வந்துசேர்ந்தார். குறிப்பாக, எந்த ஆண்டுகளில் அவர் பயணம் செய்தார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. சங்கம மரபைச் சேர்ந்த முதலாம் தேவராயன் (1406-1422) அல்லது இரண்டாம் தேவராயன் (1424-1446) ஆட்சிக்காலத்தில் அவர் கர்நாடகத்துக்கு வந்திருக்கலாம்.

வெனிஸில் செல்வச் செழிப்புமிக்க பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர் காண்டி. டமாஸ்கஸில் வணிகத்தில் ஈடுபட்டுவந்த அவரை, கிழக்கு ஈர்த்ததில் வியப்பு எதுவுமில்லை. பாரசீகத்தைக் கடந்து, மலபார் கரையோரம் மிதந்து வந்து, இந்தியாவின் பல பகுதிகளைச் சுற்றிவந்தார். சிலோன், சுமத்ரா, ஜாவா என்று சுற்றிவிட்டு இறுதியில் சீனாவுக்கும் சென்றிருக்கலாம். கெய்ரோவில் தன் மனைவி யையும், இரு குழந்தைகளையும் தொற்றுநோய்க்குப் பறிகொடுத்துவிட்டு மீண்டும் வெனிஸ் திரும்பியபோது, 25 ஆண்டுகள் கரைந்திருந்தன.

இந்தியாவை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தவுடனே காண்டிக்கு உறுதியாக ஒன்று தெரிந்துவிட்டது. `எண்ண முடியாத அளவுக்கு மனிதர்களும், எண்ண முடியாத அளவுக்குக் கடவுள்களும் ஒன்று கலந்து வாழும் பூமி இது. ஒவ்வொரு கடவுளுக்கும் பல வடிவங்களில், பல வண்ணங்களில் கோயில்கள் கட்டியிருக்கிறார்கள். கோயிலுக்குள் அழகிய சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. கல் தொடங்கி தங்கம், வெள்ளி, யானைத் தந்தம் என்று பலவற்றைக் கொண்டு திருவுருவச் சிலைகளை எழுப்புகிறார்கள். அளவுகள் மாறுபடுகின்றன. அறுபதடி உயரச் சிலைகளும் உள்ளன!

பலவிதமான வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன’ என்கிறார் காண்டி. காலை எழுந்ததும் நல்ல நீரில் சுத்தப்படுத்திக் கொண்டு கோயிலுக்குச் செல்கிறார்கள். மாலையும் ஒரு முறை செல்கிறார்கள். இரு கரங்களையும் மேலே உயர்த்தி நிலத்தில் அப்படியே விழுந்து கும்பிட்டுவிட்டு, மந்திரங்கள் ஓதி முடித்துவிட்டு, தரையை முத்தமிடுகிறார்கள். சிலர் நறுமணப் பொருள்களை விளக்காக ஏற்றுகிறார்கள். சில இடங்களில் மணியோசை எழுப்பியும், சில இடங்களில் சிறிய பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பியும் கடவுளின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

`கடவுளுக்கு விமரிசையாக விருந்து படைக்கப்படுகிறது. படைத்து முடித்த பிறகு அந்த உணவை ஏழை எளிய மக்களுக்கு விநியோகிக்கிறார்கள். சில கோயில்களில், கோயில் பூசாரிகள் திருவுருவச் சிலைக்கு முன்னால் தோன்றி பக்தர்களோடு உரையாடுகிறார்கள். நீண்ட சொற்பொழிவுகள் (உபன்யாசம்) நிகழ்த்தப்படுகின்றன. `போதும், இவ்வுலக பந்தங்களிலிருந்து விடுபட்டு மறுமைக்குத் தயாராகுங்கள்’ என்று சொற்பொழிவின் ஒரு பகுதியாக பக்தர்களை அவர்கள் வேண்டிக் கொள்கின்றனர். `கடவுளுக்காக அல்ல, உங்களுக்காக இதை நீங்கள் செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார்கள்

வழிபட்டோமா, எழுந்து வந்தோமா என்று அவர்கள் இருப்பதில்லை. தியாகம் வழிபாட்டின் ஒரு பகுதி என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தியாகம் என்றால் பொன்னோ பொருளோ அல்ல, உயிர். உயிர்த் தியாகம் செய்பவர்கள் உன்னத மானவர்களாகக் கருதப்படுகின்றனர். தீக்குளிப்பது தொடங்கி பல வழிகளில் கடவுளுக்காக உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அவற்றுள் ஒரு வழிமுறையை காண்டி விரிவாக விவரிக்கிறார்.

வட்ட வடிவில் பெரிய இரும்பு வளையம் ஒன்று இருக்கிறது. வெளிப்பகுதி சாதாரணமாகவும், உள்பகுதி மிகக் கூர்மையாகவும் இருக்கும். வளையத்திலிருந்து நீண்டு வரும் சங்கிலி உறுதியான ஓரிடத்தில் பிணைக்கப்பட்டிருக்கும். தியாகிகள் திரண்டுவந்து இந்த வளையத்துக்குள் நுழைவார்கள். மந்திரங்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். கழுத்தில் கூரான பகுதி உரசிக்கொண்டிருக்கும். மந்திரத்தின் ஒலி அதிகரிக்கத் தொடங்கும்போது அவர்கள் கழுத்து மெல்ல மெல்ல அறுபட ஆரம்பிக்கும். எல்லாம் முடிந்திருக்கும்போது தலை நிலத்தில் விழுந்திருக்கும். தலையை இழந்தாலும் தியாகி எனும் பட்டத்தை ஒவ்வொருவரும் ஈட்டியிருப்பார்கள். அதன் பிறகு புனிதர்களாக அவர்கள் கொண்டாடப் படுவதும் உண்டு’ என்கிறார் காண்டி.

அதன் பிறகு பூரியில் நடப்பதை விவரிக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் மையக் கடவுளைத் தேரில் பொருத்தி நகர் முழுக்கத் தேரை இழுத்துவருவார்கள். தேரைப் பின்தொடர்ந்து மக்கள், பாடல்களை இசைத்துக்கொண்டு ஊர்வலம் செல்வார்கள். அவர்களில் பலர் பக்தி வெள்ளத்தில் தீவிரமாக ஆழ்ந்துவிடுவதுண்டு. அத்தகைய தருணங்களில் உணர்வெழுச்சியோடு அவர்கள் நிலத்தில் பாய்வார்கள். தேர்ச் சக்கரங்கள் தங்கள் உடலில் ஏறி, இறங்கும்வரை அவர்கள் அமைதியாகக் காத்திருப்பார்கள். சக்கரத்தில் சிக்கி உயிர்விடுவதை மாபெரும் பேறாக அவர்கள் கருதுகிறார்கள். சக்கரத்தில் உயிர்த் தியாகம் செய்தால் கடவுள் அதை ஏற்பார் என்பது அவர்கள் நம்பிக்கை.

பக்தர்களில் இன்னொரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உடலைக் கீறி, துளை ஏற்படுத்தி, கயிறு மூலமாகத் தேரோடு சேர்த்து தங்களைப் பிணைத்துக்கொள்வார்கள். தேர் நகரும்போது அவர்களும் சேர்ந்து இழுக்கப் படுவார்கள். இப்படியும் உயிர் பிரியும். பாதி இறந்து, பாதி பிழைத்தவர்களும் உண்டு. இந்த வகை தியாகத்தை, `கடவுளுக்கு மிகவும் விருப்பமானது’ என்கிறார் காண்டி.

நேரடியாக பூரி சென்று இதையெல்லாம் கண்டாரா அல்லது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தன் பதிவை எழுதினாரா என்று தெரியவில்லை. அவருக்குப் பிறகு பூரி ரத யாத்திரை குறித்து எழுதிய எவருமே திடீர் திடீரென்று சக்கரத்தின் முன்பு பாய்ந்து விழுந்து உயிரைவிடும் பக்தர்களைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் விமரிசையான கொண்டாட்டங்களையும், மாபெரும் மக்கள் ஊர்வலங்களையும், மிக முக்கியமாக பிரமாண்டமான தேர்ச் சக்கரங்களையும் வியந்து வியந்து அவர்கள் எழுதினார்கள்.

மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஓரிடத்தில் ஒன்று குவியும்போது நிலைமை கைமீறி, தள்ளுமுள்ளு ஏற்படுவதையும், கீழே விழுபவர்களை மிதித்துத் தள்ளிவிட்டுப் பலர் முன்னேறுவதையும் நாம் இன்றும் பார்க்கிறோம். பூரியிலும் அப்படி உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம். சக்கரத்தில் மிதிபட்டுச் சிலர் இறந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால் காண்டி குறிப்பிடுவதைப்போல் பெரிய அளவில் தற்கொலைகள் நடைபெற்றிருக்காது. அப்படி ஒரு நம்பிக்கையோ, சடங்கோ நிலவியதாகவும் சொல்லவும் முடியாது.

இருந்தாலும் நாளடைவில் ஜெகந்நாதர் தேர் சக்கரம் ஒரு குறியீடாக மாறிப்போனது. `நீ ஒழுங்காக நடந்துகொள்ளாவிட்டால் சக்கரத்திடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன்’ என்று அம்மாக்கள் குழந்தைகளை மிரட்டுவதற்குச் சக்கரத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள். நாகரிகமற்ற, பழைமைவாத நாடாக இந்தியாவை முன்னிலைப்படுத்த ஐரோப்பியர்கள் சக்கரக் கதைகளை ஆதாரங்களாகக் காட்டினார்கள்.

`பலி வாங்கும் சக்கரம்’ என்றும் `ரத்தம் குடிக்கும் சக்கரம்’ என்றும் சிலர் வர்ணித்தனர். சக்கரத்தைக்கொண்டு இந்து மதம் குறித்தும், இந்தியா குறித்தும் சிலர் மோசமான மதிப்பீடுகளை உருவாக்கிக்கொண்டனர். ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 4,000 பேர் சக்கரத்தில் விழுந்து உயிர் மாய்த்துக்கொள்வதாக யாரோ ஆதாரமே இல்லாமல் எழுதினார்கள். அதையே ஆதாரமாகக்கொண்டு மேலும் பல சக்கரக் கதைகள் புனையப்பட்டன. சக்கரம் என்னவோ அதேபோல்தான் இன்னமும் சுழன்றுகொண்டிருக்கிறது!

Wednesday, November 10, 2021

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - இபின் பதூதாவின் டெல்லி

 துக்ளக்கின் இன்னொரு பக்கத்தை அவரோடு பணியாற்றிய காலத்தில் அல்ல, அவரிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ஓடிய பிறகே பதிவுசெய்துள்ளார் இபின் பதூதா. டெல்லியில் இருந்தவரை அடக்க ஒடுக்கமாகவே இருந்திருக்கிறார். தனது பயணங்களை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய பிறகே அவர் குரல் வெளியில் வந்திருக்கிறது.


`துக்ளக்கின் மாளிகைக் கதவை எப்போது தட்டினாலும், உங்கள் கைநிறைய பணம் கிடைக்கலாம் அல்லது உங்கள் தலை துண்டிக்கப்படலாம். இந்த இரண்டில் எதுவும் நடக்கலாம். இரண்டும் நடந்துகொண்டிருந்தன’ என்கிறார் இபின் பதூதா.

அள்ளி அள்ளிக் கொடுப்பதால் துக்ளக்கின் கரம் சிவந்திருக்கிறதா அல்லது ஓயாமல் கொன்று குவிப்பதால் ரத்தக்கறை நிரந்தரமாகப் படிந்துவிட்டதா என்றால், இரண்டுமேதான் என்பார் பதூதா. டெல்லியில் மக்கள் கூட்டம் மிகுந்திருக்கும் பகுதிகளில் திடீரென்று துக்ளக்கின் யானைகள் தோன்றும். அவற்றின்மீது அமர்ந்திருக்கும் சுல்தானின் ஆட்கள் கவட்டை மூலம் தங்கம், வெள்ளி நாணயங்களை மக்களை நோக்கிச் செலுத்துவார்கள். கூட்டம் போட்டி போட்டு, முண்டியத்துக்கொண்டு பரிசுகளைப் பெற்றுக்கொள்ளும். இதுவொரு வகை துக்ளக். கோபாவேசத்தில் யாரேனும் ஒருவர் தப்பித்தவறி துக்ளக்கைப் பழித்துவிட்டால் அவரைக் கைதுசெய்து இழுத்துவருவார்கள். உலோகக் கருவிகள் மூலம் அவர் வாயை அகலமாகப் பிரித்துக் கிழித்து, மனிதக்கழிவுகளைத் தொண்டை வழியே உள்ளே செலுத்துவார்கள். இது இன்னொரு துக்ளக்.

ஒருநாள் பதூதாவுக்கே ஆபத்து வந்துவிட்டது. ஒரு சூஃபி துறவியோடு பதூதா நெருங்கிப் பழகுகிறார் என்னும் தகவல் துக்ளக்கின் காதுகளை எட்ட, உடனடியாக இருவரும் கைதுசெய்யப்பட்டனர். மத நம்பிக்கைகளுக்கு விரோதமாகச் செயல்பட்ட துறவிக்கு உடனடி மரண தண்டனை விதித்தார் துக்ளக். தண்டனை எப்படி நிறைவேற்றப்பட்டது தெரியுமா? அவருடைய தாடியைப் பிடித்து ஒவ்வொரு ரோமமாகப் பிடுங்கியெடுத்து இறுதியில் அவர் தலையைக் கொய்திருக்கிறார்கள். அடுத்து பதூதா விசாரிக்கப்பட்டார். அதற்குள் குலை நடுங்கிவிட்டது அவருக்கு. `எனக்கு அந்தத் துறவியைத் தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர் தங்கியிருந்த குகையைக் காணவே சென்றேன், அவரைக் காண அல்ல’ என்று மன்றாடினார் பதூதா. மௌன விரதம் பூண்டு, 33,000 முறை பரிகார உச்சாடனம் செய்த பிறகு ஒரு வழியாக அவர் விடுவிக்கப்பட்டார்.


அதன் பிறகு, டெல்லி அவருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. துறவுக்கோலம் பூண்டார். உலக வாழ்க்கை போதுமென்றாகிவிட்டது. `நான் புனித யாத்திரைக்குப் போக முடிவெடுத்து விட்டேன். விடை கொடுங்கள் சுல்தான்’ என்று துக்ளக்கிடம் விண்ணப்பித்துக் கொண்டார். ‘சரி போ’ என்று விட்டுவிடுவார் என்று நினைத்தார் பதூதா. அவர் நினைப்பு பொய்த்துப்போனது.

`சமீபத்திய நிகழ்வுகளால் மனம் நொந்துவிட்டார்போலிருக்கிறது. அவரை வழிக்குக்கொண்டு வருவோம்’ என்று நினைத்த துக்ளக், மதிப்புமிக்க ஒரு புதிய பதவியைத் தூக்கி அவரிடம் கொடுத்தார். `இன்று முதல் உங்களை என் அயலகத் தூதுவராக நியமிக்கிறேன். பயணங்களை விரும்பும் உங்களுக்கு இந்தப் பதவி பொருத்தமாக இருக்கும். சீனாவுக்குச் சென்று அங்குள்ள மன்னரைச் சந்தியுங்கள். இதுதான் உங்கள் முதல் பணி.’

செய்ய மறுத்தால் அதற்கென்ன தண்டனையோ என்று பயந்த பதூதா, பரிவாரங்களோடு சீனாவுக்குக் கிளம்பினார். மொத்தம் 4,000 பேர். அவர்களில் பெரும்பாலானோர் சீன மன்னருக்குப் பரிசாக துக்ளக் அனுப்பியிருந்த அடிமைகள். ‘பரிசை’ ஒப்படைக்கவேண்டியது பதூதாவின் பணி. டெல்லியைவிட்டுக் கிளம்பி, அலிகாரை அடைவதற்குள் கொள்ளைக் கூட்டத்தினரிடம் ஒட்டுமொத்தக் கூட்டமும் சிக்கிக்கொண்டது. பதூதாவோடு வந்த பலர் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். உயிர்பிழைத்தால் போதும் என்று இபின் பதூதா அங்கிருந்து தப்பியோடினார். அலைந்து, திரிந்து உணவு கிடைக்காமல் எங்கெங்கோ சுற்றித்திரிந்து மயங்கிச் சரிந்தார். வழிப்போக்கர்கள் யாரோ கவனித்து அவரை மீட்டிருக்கிறார்கள்.

நடந்த அனைத்தையும் துக்ளக் கேள்விப்பட்டார். இப்போதும் இபின் பதூதாவை அவர் விட்டுவிடவில்லை. ‘உயிரோடுதானே இருக்கிறாய், நல்லது. நான் சொன்னபடி சீன மன்னரைச் சந்தித்துவிட்டு வா’ என்று செய்தி அனுப்பினார். ‘நிச்சயம் செல்கிறேன் சுல்தான்’ என்று பதில் அனுப்பிவிட்டு மீண்டும் இந்தியாவில் சுற்றித்திரிய ஆரம்பித்தார் பதூதா. `சுல்தான் இட்ட பணியைச் செய்து முடித்தேன். சீனா சென்றேன்’ என்று தன் குறிப்புகளில் அவர் எழுதினார். ஆனால் உண்மையில் சீனா சென்றாரா அல்லது சென்றதுபோல் கணக்கு காட்டினாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

அவ்வப்போது அவர் எழுதிவைத்திருந்த அனுபவக் குறிப்புகள் அனைத்தும் கொள்ளையர்களிடம் சிக்கித் தொலைந்து விட்டதால், இறுதிக்காலத்தில் தன் நினைவுகளிலிருந்து மீட்டெடுத்துத்தான் தன் பயண நூலை எழுதி முடித்தார் இபின் பதூதா. துக்ளக் தர்பார் குறித்து நமக்குக் கிடைத்திருக்கும் பதிவுகளில் இவருடையது முக்கியமானது. குறிப்பாக, துக்ளக் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் செயல்கள் குறித்து அவர் அளித்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு இந்தியா குறித்த ஓர் இருண்ட பிம்பத்தை, பிற்கால ஐரோப்பிய ஆய்வாளர்கள் கட்டமைத்தார்கள். `மேற்குபோல் இல்லாமல் கிழக்கு எவ்வளவு பிற்போக்காகவும் காட்டுமிராண்டித்தனத்தோடும் இருந்தது பார்த்தீர்களா?’ என்று அவர்கள் வாதிடுவதற்கு பதூதா உதவினார்.

இந்தியா மட்டுமல்ல, 14-ம் நூற்றாண்டு இஸ்லாமிய உலகம் பற்றிய ஒரு சித்திரத்தையும் அவர் குறிப்புகளிலிருந்து நம்மால் உருவாக்கிக்கொள்ள முடிகிறது. அவர் பயணம் செய்தவை பெரும்பாலும் இஸ்லாமிய நாடுகள் என்றாலும் ஒவ்வோர் இடத்திலும் இஸ்லாம் ஒவ்வொருவிதமாக வெளிப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் இடத்திலும் அங்கிருந்த மற்ற மதங்க ளோடு, மற்ற நம்பிக்கைகளோடு, தத்துவங்களோடு, பண்பாடுகளோடு அது உரையாடியிருக்கிறது. தன்னிடமிருப்பதைக் கொடுத்திருக்கிறது, அங்கிருப்பதைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் இஸ்லாமும் மொரோக்கோவின் இஸ்லாமும் ஒன்றல்ல. அரபுலகப் பண்பாடும், இந்திய இஸ்லாமியப் பண்பாடும் ஒன்றல்ல. பொதுவான அம்சங்கள் பல இருந்தாலும் வேறுபாடுகளும் மிகுதிதான். ஆக, இஸ்லாம், இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமியப் பண்பாடு ஆகிய பதங்கள் உலகப் பொதுவானவை அல்ல; அவற்றை ஒரே பொருளில் எல்லா இடங்களிலும் பயன்படுத்த இயலாது என்னும் புரிதலை பதூதா நமக்கு ஏற்படுத்துகிறார்.

அவருடைய பயண வாழ்வில், டெல்லி கால் பகுதியை எடுத்துக்கொண்டது. `இஸ்லாமிய உலகிலேயே பெரிய நகரம், டெல்லிதான்’ என்கிறார். பரந்து விரிந்த டெல்லியின் அழகும் வலிமையும் அவரை ஈர்த்தன. `இங்கே நகரைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள மதில் சுவர் போன்றதொன்றை உலகில் வேறெங்கும் கண்டதில்லை’ என்கிறார். டெல்லி சுல்தானகத்தின் அடையாளமாகத் திகழும் குதுப் மினார் அவரை மயக்கியது. சிவப்பு நிறக் கற்களால் உருவாக்கப்பட்ட மசூதியின் உயர்ந்த கோபுரத்தையும் வேலைப்பாடுகளையும் வர்ணிக்கிறார். `குதுப் மினார் அமைந்திருக்கும் இடம் விசாலமாக இருக்கிறது. யானைகூட வந்து பார்க்கலாம். உண்மையில் யானை உதவியோடுதான் இதைக் கட்டியதாகவே சொல்கிறார்கள்’ என்கிறார் பதூதா.

தெற்கு டெல்லியில் அமைந்துள்ள மெஹ்ராலி இரும்புத்தூணைக் கண்டு வாய்பிளந்து நின்றிருக்கிறார் பதூதா. `துருப்பிடிக்காத இந்தத் தூணை எந்த உலோகத்தைக்கொண்டு உருவாக்கினார்கள் என்றே தெரியவில்லை. நான் விசாரித்தவரையில் ஏழு உலோகங்களின் கலவை என்று இதைச் சொல்கிறார்கள்’ என்கிறார்.

1335-ம் ஆண்டு தொடங்கி ஏழாண்டுகள் டெல்லியில் நீடித்த பஞ்சத்தை நினைவுகூர்கிறார் பதூதா. `சுல்தான் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து மும்முரமாகப் போரிட்டுக்கொண்டிருந்தபோது, ஆயிரக்கணக்கானவர்கள் டெல்லியில் மடிந்துகொண்டிருந்தார்கள்’ என்கிறார் பதூதா. தெற்கில் தொடங்கிய கிளர்ச்சி, டெல்லியையும் நெருங்கியிருக்கிறது. ராணுவத்துக்குள்ளிருந்தே துக்ளக்குக்கு எதிர்ப்புகள் வெடித்திருக்கின்றன. எதிர்த்த அனைவரையும் துக்ளக் வீழ்த்தினார். துரோகிகளை யானைகள் மிதித்தும் கிழித்தும் (தந்தத்தில் வாளைக் கட்டிவிடுவார்களாம்!) கொன்றிருக்கின்றன. சுற்றிலும் மேளங்கள் முழங்கிக்கொண்டிருக்கும். ஒரு மனிதனை இழுத்து வந்து யானையிடம் போடுவார்கள். பந்துபோல் பாவித்து அந்த மனிதனை வானில் தூக்கிப்போட்டு கீழே விழுந்ததும் மிதிக்குமாம் யானை!

`டெல்லியில் என்னவெல்லாம் உண்டேன், என்னென்ன உணவுகளைக் கண்டேன்’ என்று தனியே விவரிக்கிறார் பதூதா. வட்ட வடிவ பெரிய ரொட்டி, ஆட்டிறைச்சி, நெய்ப் பதார்த்தங்கள், இனிப்புகள், வெங்காயம், பச்சை மிளகாய், ஏதேதோ உள்ளேவைத்து மடித்து மடித்து உருவான ‘சம்புசாக்’ (சமோசா) என்று பட்டியல் நீள்கிறது. துக்ளக் அவையில் (துக்ளக்குக்கு அடுத்து) சமோசாவை எல்லோரும் விரும்புவார்களாம். `வட இந்தியாவுக்கு உளுத்தம் பருப்பும் காராமணியும்’ பிடித்தமானவை என்கிறார்.

உண்பதற்கு முன்பு இனிப்பு சர்பத், உண்டு முடித்த பிறகு பார்லி நீர் அருந்துவது வழக்கமாம். பிறகு வெற்றிலை பாக்கு. காய்கள், இறைச்சி வகைகள், (தயாரிக்கப்படும் முறையும் உள்ளது) பழ வகைகள் ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார். எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் உள்ளதைப்போல் பெண்கள் தனியாகவும், ஆண்கள் தனியாகவும் உண்பதாகச் சொல்கிறார். விடைபெறுவதற்கு முன்பு கோழிக்கோட்டில் மூன்று மாதங்கள் தங்கியிருந்ததால், அப்பகுதியின் உணவு, வர்த்தகம், பண்பாடு ஆகியவற்றையும் சுருக்கமாகப் பேசுகிறார்.

வழி நெடுகிலும் இபின் பதூதா திருமணங்கள் செய்துகொண்டேயிருந்தார். அவருக்கு எத்தனை மனைவிகள் இருந்தனர், எத்தனை குழந்தைகள் பிறந்தன என்று சொல்வது கடினம். தனது 65-வது வயதில் மரணமடைந்தார். கலகத்தை அடக்க சிந்து மாகாணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, தனது 61-வது வயதில் துக்ளக் இறந்துபோனார்.

Sunday, October 03, 2021

யூரோ டூர் - 4 | ஐரோப்பிய நாடுகள் ஏன் மோதிக்கொண்டன, முதலாம் உலகப்போர் உருவாகக் காரணம் என்ன?

 ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆஸ்திரியா - ஹங்கேரி மற்றும் ஜெர்மனிக்கு எதிராக ஒன்று சேர்ந்தன. எனவே இந்தப் போர் முக்கியமாக triple entente & triple Alliance எனப்பட்ட நேச நாடுகள், மைய நாடுகள் எனும் இரண்டு கூட்டணிகளுக்கு இடையேயான போராக மாறியது.

உலகில் இன்றுவரை பேசப்படும் பத்து தொன்மையான மொழிகளின் பட்டியலை எடுத்தால் அதில் 

  • தமிழ், 
  • எகிப்திய மொழி, 
  • லிதுவேனியன், 
  • பார்சி, 
  • அரபு 

என பல மொழிகள் வரும். 

ஆனால் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற மொழிகள் இருக்காது. கி.பி 500-ல் தான் இங்கிலாந்திலேயே ஆங்கிலம் முதன்முதலாக புழக்கத்துக்கு வந்திருக்கிறது. ஸ்பானிஷ் நகரமான டோலிடோவில் உள்ள காஸ்டில் ராஜ்ஜியத்தில் 13-ம் நூற்றாண்டில்தான் நவீன ஸ்பானிஷ் நிலையான எழுத்து வடிவத்தில் நிறுவப்பட்டது என்கிறார்கள். ஆனால், இன்று உலகெங்கும் அதிகம் பேசப்படும் மொழிகள் இவை.

யூரோ டூர் 3-ம் பகுதியில் தொழில்துறைப் புரட்சியினால் உருவான ஐரோப்பிய ஏகாதிபத்தியம் பற்றி பேசத் தொடங்கினோம். ஏகாதிபத்தியம் காலனித்துவத்துக்கு வித்திட்டது. முதலில் காலனித்துவம் என்றால் என்ன, அது மனித வரலாற்றை, குறிப்பாக இன்றைய நவீன ஐரோப்பாவின் வரலாற்றை எவ்வளவு ஆழமாக பாதித்துள்ளது என்பதை ஒரு சிறு உதாரணம் மூலம் புரிந்துகொள்ளலாம்.

கல்லூரியில் படிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் வகுப்பில் எப்போதும் மேல்தட்டு எலைட் மாணவர்கள் ஒரு குழுவாக, கேங்காக இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும் அதுதான் கவனிக்கப்படும். அவர்கள் வைத்ததுதான் சட்டம். அது ஒரு கெத்து கேங்காக ஃபார்ம் ஆகும். அவர்கள்தான் அங்கு முக்கியமானவர்களாகக் கருதப்படுவார்கள். ஏனையவர்கள் அவர்களைப் பின்பற்றுவார்கள். மற்றவர்கள் அவர்களின் நிழலின் கீழ் ஒதுங்கிக் கொள்வார்கள். அதுதான் பாதுகாப்பு, அதைவிட்டால் வேறு வழி இல்லை என நினைப்பார்கள். இந்த எலைட் கேங்கின் ஹோம் வொர்க் உட்பட எல்லா வேலைகளையும் மற்றவர்கள் செய்து கொடுப்பார்கள். அந்த வகுப்பில் வேறு யாராவது ஏதாவது செய்தால் அந்த எலைட் கேங்குக்குப் பிடித்தால் மட்டுமே அது எல்லோருக்கும் பிடித்ததாக ஏற்றுக் கொள்ளப்படும்.

காலனித்துவம் என்பது ஓர் உலகளாவிய கல்லூரி போன்றது. இங்கே, ஐரோப்பாதான் அந்த எலைட் கேங்க். அதன் கீழ் அடிபணிந்திருந்தவர்கள்தான் ‘வளரும் நாடுகள்’ என்று கொஞ்சம் நாகரீகமாகச் சொல்லப்படும் மூன்றாம் உலக நாடுகள். மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் குழு அல்லது நாடு ஏகாதிபத்திய சக்தியாகிறது. அதற்கு அடிபணிந்த நாடு ஒரு காலனியாக மாறுகிறது. காலனித்துவ அரசுகள் தங்கள் சொந்த நலனுக்காக அந்தக் காலனிகளை சுரண்டவும், அவர்களின் கலாசாரம், மதம், மொழி மற்றும் கல்வியைத் திணிக்கவும், அவர்களின் வளங்களை பயன்படுத்தவும் ஆரம்பிக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் தொழிற்புரட்சியின் பின் எழுந்த ஐரோப்பிய ஏகாதிபத்தியம் காலனித்துவத்தில் முடிந்தது. ஐரோப்பா உலகை சுரண்ட ஆரம்பித்தது.

இன்று Mercedes-Benz, BMW, Nestle, DHL, L'Oréal, RedBull, Dove என இந்தியா மட்டுமல்ல உலகமே மோகம் கொண்டுள்ள பல முக்கியமான brand-கள் எல்லாமே ஐரோப்பாவுக்குச் சொந்தமானது. நாம் சராசரியாக ஒரு நாளைக்கு பயன்படுத்தும் நுகர்வுப் பொருள்களின் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தால் அதில் பாதிக்கும் மேல் ஐரோப்பிய brand-களாக இருக்கும். இந்த நிலைக்கு ஐரோப்பா வருவதற்குக் கடந்து வந்த பாதை வழியே பின்னோக்கிச் சென்றால் அந்தப் புள்ளிகள் ஐரோப்பிய மறுமலர்ச்சியோடும், தொழிற்புரட்சியோடும், காலனித்துவத்தோடும் இணையும். தொழில் புரட்சி வெடித்த போது முக்கியமாக மூன்று ஐரோப்பிய நாடுகள் பலம் பெற்றன. பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ். அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளும் ஆட்டத்தில் இருந்தாலும் இங்கு நாம் குறிப்பிட்டு ஐரோப்பா என்று பார்ப்பதால் அவற்றை இப்போதைக்கு கொஞ்சம் தள்ளி வைத்து விடுவோம்.

தொழில்துறை புரட்சியின்போது அதிகரித்த உற்பத்திக்கு ஏற்ற மூலப்பொருள்கள் தேவைப்பட்டன. அந்த மூலப்பொருள்களையும் மனித வளங்களையும் பெற்றுக்கொள்ள பலம் பொருந்திய நாடுகள் ஏனைய நாடுகளைக் கைப்பற்றி குடியேறத் தொடங்கின. இதனால் நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரப் போட்டி ஏற்பட்டது. யார் பலம் கூடியவர்கள் என்று அறிய தங்களுக்குள் முட்டி மோதிக்கொள்ள ஆரம்பித்தன.

இன்றைய ஐரோப்பாவின் வனப்புக்கும் வளர்ச்சிக்கும் வித்திட்ட 19-ம் நூற்றாண்டு அதன் வரலாற்றில் பொற்காலமாகக் குறிக்கப்பட்டது. தொழிற்புரட்சியின் விளைவாக உலகெங்கும் வியாபித்த ஐரோப்பிய காலனித்துவம், ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு வித்திட்டது. ஐரோப்பிய ஏகாதிபத்தியம் உலக அரங்கில் ஐரோப்பாவை ஓர் அசைக்க முடியாத வல்லரசாக உருமாற்றியது. உறுதியான ராணுவ மற்றும் பொருளாதார வலிமை கொண்ட நாடுகள் சூப்பர்பவர்களாக விஸ்வரூபம் எடுத்தன. கிரேட் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் போன்ற நாடுகள் இந்த வரிசையில் முன்னணியில் இருந்தன. தமக்கு கீழே பல காலனிகளை வைத்திருப்பது அதிக செல்வத்தையும், அதிகார பலத்தையும், கௌரவத்தையும் அவர்களுக்குக் கொடுத்தது. இதனால் நாடுகள் தமக்குள் போட்டியிட்டுக்கொள்ளத் தொடங்கின. அதிகாரங்களுக்கு இடையில் விழுந்த விரிசல் உலகையே பிளவுபடுத்தும் ஒரு மிகப்பெரும் யுத்தத்தில் போய் முடித்தது

முதலாம் உலகப் போருக்கு முன்புவரை உலகின் மிகப்பெரிய, பணக்கார மற்றும் ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய சக்தியாக இங்கிலாந்து இருந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகின் நான்கில் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருந்தது. ‘சூரியன் பிரிட்டனில் மறையாது’ (The Sun never sets on Britain) என்பது 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரபலமான கோஷமாக இருந்தது. 1800-களின் பிற்பகுதியில் உலகின் முக்கால்வாசி நாடுகளை வளைத்துப் பிடித்திருந்தது பிரிட்டன். மறுபக்கம் பிரான்ஸ், ஸ்பானிஷ், போர்ச்சுகல், இத்தாலி, பெல்ஜியம் போன்ற நாடுகளும் தமக்கு கீழான காலனிகளை வைத்திருந்தன.

இந்தக் காலனித்துவத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார ரீதியில் பெரும் பலம்பெற்றன. தமது சாம்ராஜ்ஜியத்தை எதிரி நாடு பறித்துக் கொள்ளக் கூடாது என்பதில் இவை மிகவும் கவனமாக இருந்தன. அதனால் மற்ற நாடுகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நம் நாட்டு அரசியல்வாதிகள் போல தமக்கு சாதகமானவர்களுடன் ஒப்பந்தங்கள் இட்டு கூட்டணி வைத்துக் கொண்டன.

நேச நாடுகளும் மைய நாடுகளும் (Triple entente & Triple Alliance)

ஆங்கிலத்தில் 'Cobelligerent' என்று ஒரு வார்த்தை உண்டு. அதாவது ஒரு தனி நபர் அல்லது ஒரு நாடு தமது பொது எதிரிக்கு எதிராக மற்றொரு சக்தியுடன் இணைந்து போரிடுவதை இது குறிக்கும். உதாரணமாக இந்தியாவுக்கு பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் தகராறு. என்னதான் சீனாவுக்கு பாகிஸ்தானைப் பிடிக்காது என்றாலும் இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுக்குக் கடன் உதவிகளை வழங்கி நல்லுறவை பேணி வருகிறது. அதேபோல சீனா அதன் எதிரி நாடான அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் ஈரான், ரஷ்யா போன்ற நாடுகளுடன் கூட்டு சேர்ந்து உறவைப் பலப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளது. இதேபோல தற்காலத்தில் இருக்கும் இன்னொரு மிகப்பெரிய கூட்டணிதான் அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் வடகொரியாவுடன் ரஷ்யா, சீனா, ஈரான், சிரியா மற்றும் கியூபா போன்ற நாடுகளின் ராஜதந்திர கூட்டணி.

இதே டெக்னிக்கைதான் 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய தேசங்களும் பின்பற்றின. ஆனால் என்னவொன்று ஐரோப்பிய நாடுகள் அவர்களுக்குள்ளேயே நண்பனையும் எதிரியையும் வைத்திருந்தார்கள். ஐரோப்பிய நாடுகள் உருவாக்கிக்கொண்ட இந்த cobelligerent கூட்டணிதான் உலகையே அதிர வைத்த முதல் உலகப்போருக்கு அடிக்கல் நாட்டியது.

ஜெர்மனிக்கும், ஆஸ்திரியா - ஹங்கேரிக்கும் ரஷ்யா பொது எதிரியாக இருந்தது. அதனால் அந்த இரு நாடுகளும் ராஜதந்திர ரீதியாக ஒன்றிணைந்தன. இதனால் 1879-ல் உருவான ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா - ஹங்கேரிக்கு இடையிலான Dual Alliance எனப்படும் இரட்டை கூட்டணியோடு 1882-ல் இத்தாலியும் இணைந்தது. ஏனெனில் வட ஆப்பிரிக்க நாடுகளில், முக்கியமாக துனிசியாவில் காலனித்துவ ஆட்சிக்காக நீண்ட காலம் பிரான்சுடன் போராடிய இத்தாலி இறுதியில் பிரான்சிடம் தோற்றதால் ராணுவ ஆதரவைத் தேடி ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரியோடு இணைந்தபோது அது triple Alliance எனப்படும் ஒரு பலம் பொருந்திய கூட்டணியாக உருவெடுத்தது. ஏற்கெனவே ராணுவ ரீதியாக படை பலத்தோடு இருந்த ஜெர்மனியோடு சேர்ந்த இந்தக் கூட்டணி ஏனைய நாடுகளுக்கு கிலியூட்டியது.

டிரிப்பிள் அலையன்ஸ் என்பது ஜெர்மனி, ஆஸ்திரியா - ஹங்கேரி மற்றும் இத்தாலி ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு ரகசிய ஒப்பந்தம். மே 20, 1882-ல் உருவாக்கப்பட்ட இந்த உடன்படிக்கையின் முக்கியஸ்தராக ஜெர்மனியை ஒன்றிணைத்து, ஜெர்மன் பேரரசை நிறுவியவரும், ஜெர்மனியின் முதல் அதிபருமான ஓட்டோ வான் பிஸ்மார்க் (Otto Von Bismarck) கருதப்படுகிறார். காரணமில்லாமல் பிரான்ஸ் இத்தாலியை தாக்கினால் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா - ஹங்கேரி, இத்தாலிக்கு உதவி செய்யும் என்றும், பிரான்ஸ் ஜெர்மனியை தாக்கினால் இத்தாலி ஜெர்மனிக்கு உதவி செய்யும் என்றும், பிரான்ஸ் அல்லது ரஷ்யாவால் இவற்றில் ஒன்று தாக்கப்பட்டால் மூன்று நாடுகளும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டன.

பிரான்சை ராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்த 1873-ல் ஜெர்மன் Chancellor ஓட்டோ வான் பிஸ்மார்க் போட்ட திட்டமான மூன்று பேரரசரசுகளின் லீக்கில் (The League of the Three Emperors or Union of the Three Emperors) ஆஸ்திரியா - ஹங்கேரி மற்றும் ஜெர்மனியுடன் ரஷ்யாவும் ஆரம்பத்தில் உறுப்பு நாடாக இருந்தது. எனினும் ஆஸ்திரியா - ஹங்கேரியுடன் ரஷ்யாவுக்கு இருந்த நீண்டகால பகை காரணமாகவும், பால்கன் நிலப்பரப்பின் ஆதிக்கத்திற்காக ஆஸ்திரியா - ஹங்கேரியுடன் ரஷ்யா போட்டியில் ஈடுபட்டதன் காரணமாகவும் இந்தக் கூட்டணி தோல்வியில் முடிவுற்று ரஷ்யா வெளியேறியது.

இந்த அதிரடியான மைய நாடுகளின் கூட்டணியைப் பார்த்து பிரான்ஸ் அதிர்ந்து போனது. ஏனெனில் 1871-ல் நடந்த பிராங்கோ - பிரஷ்யன் போரில் (Franco-Prussian war) பிரான்ஸ் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டு பிரான்சின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பிரதேசமான அல்சாஸ் - லோரெய்னை (Alsace-Lorraine) ஜெர்மனிக்கு பறிகொடுத்தது. இது பிரான்சுக்கு மறக்க முடியாத ஒரு அவமானமானது. அத்தோடு ஜெர்மனியின் காலனித்துவ விரிவாக்க வளர்ச்சி, செல்வம் கொழித்த ஆப்பிரிக்காவில் உள்ள பிரெஞ்சு காலனிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து. எனவே ஜெர்மனை இதற்கு மேல் வளர விட்டால் அது தனக்கு எதிரான மாபெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து நிற்கும் என்பதை உணர்ந்த பிரான்ஸ் One man ஆர்மியாக ஜெர்மனியை சமாளிக்க முடியாது என்பதனையும் நன்கு உணர்ந்திருந்தது. அதனால் ஜெர்மனிக்கு எதிராக தன்னோடு கூட்டு சேர ஒரு பொது எதிரியை தேர்ந்தெடுத்தது.

மறுபுறம் Kaiserliche Marine என்ற ஜெர்மன் பேரரசின் ஏகாதிபத்திய கடற்படையின் வேகமான வளர்ச்சியால் பிரிட்டனுக்கும் உள்ளூர உதறல் ஏற்பட்டது. 1890-களில் சிங்கம் மாதிரி சிங்கிளாக, யாரோடும் மிங்களாகாமல் தனித்தே செயற்பட்ட பிரிட்டன், ஜெர்மனியின் பிரமாண்டமான அரசியல், ராணுவ விரிவாக்கத்தை கண்டு சுதாரித்துக் கொண்டது. 19-ம் நூற்றாண்டில் பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவை தனக்கு ஆபத்தான எதிரிகளாக தள்ளி வைத்திருந்த பிரிட்டன், ஜெர்மன் இராணுவத்தின் அசுர வளர்ச்சியினால் அது வரை கொண்டிருந்த கொள்கைகளை தூக்கி தூர எறிந்துவிட்டு எடுத்த ராஜதந்திர மூவ் Entente Cordiale உடன்படிக்கை.

இந்தப் புள்ளியில்தான் அதுவரை எதிரியாக இருந்த பிரிட்டனும் பிரான்சும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் 1904-ல் Entente Cordiale (நட்பான புரிந்துகொள்ளல்) எனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தக் கூட்டணியின் நோக்கம் ஜெர்மனியின் அச்சுறுத்தலுக்கு எதிரான இரு நாடுகளின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதாகும். பிரெஞ்சு எழுத்தாளர் ஜோஸ்-அலெய்ன் ஃப்ராலன் (José-Alain) பிரிட்டிஷ்காரரை "எங்கள் மிகவும் அன்பான எதிரிகள்" (our most dear enemies) என்று விவரிக்கிறார்.

ரஷ்யாவை எடுத்துக் கொண்டால் மிகப்பெரிய மக்கள்தொகை காரணமாக அனைத்து ஐரோப்பிய சக்திகளிலும் மிகப்பெரிய மனிதவள இருப்புகள் அதன் வசம் இருந்தன. எனினும் அதன் பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது. அதேபோல செர்பியா மற்றும் மாண்டினீக்ரோவை ஆஸ்திரியா ஒன்றாக இணைக்கும் என்ற பெரும் பயமும் ரஷ்யாவுக்கு இருந்தது. போஸ்னியா - ஹெர்சகோவினாவை 1908-ல் ஆஸ்திரியா இணைக்க ஆரம்பித்தபோது, இந்தப் பயம் இன்னும் பல மடங்கானது. அதேபோல 1905-ல் ரஷ்ய-ஜப்பானியப் போரில் ரஷ்யாவின் தோல்வி அதன் ராணுவ பலத்தை பற்றிய நம்பிக்கையின்மையை கொடுத்தது. அதனால் ரஷ்யா அதன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த கூட்டணிகளை தேடத் தொடங்கியது.

இதே டெக்னிக்கைதான் 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய தேசங்களும் பின்பற்றின. ஆனால் என்னவொன்று ஐரோப்பிய நாடுகள் அவர்களுக்குள்ளேயே நண்பனையும் எதிரியையும் வைத்திருந்தார்கள். ஐரோப்பிய நாடுகள் உருவாக்கிக்கொண்ட இந்த cobelligerent கூட்டணிதான் உலகையே அதிர வைத்த முதல் உலகப்போருக்கு அடிக்கல் நாட்டியது.

 இதன் விதிமுறைகள் Triple Alliance-க்கு அப்படியே மாறாக அமைக்கப்பட்டன. அதாவது இந்த நாடுகள் மற்றவர்களின் சார்பாக போருக்குச் செல்ல வேண்டியதில்லை. ஆனால், அவை ஒருவருக்கொருவர் தார்மீக அடிப்படையில் ஆதரவளிக்க கடமைப்பட்டுள்ளதாக வரையறை செய்து கொண்டன. அதேவேளை ரஷ்யா அதன் எதிரி நாடுகளான ஆஸ்திரியா-ஹங்கேரியின் அரசியல் எல்லை ஜெர்மனியோடு சேர்ந்து விரிவுபடுவதை விரும்பவில்லை. அதனால் தனக்கு எந்நேரமும் ஆபத்து வரலாம் என அஞ்சிய ரஷ்யா இந்த முக்கூட்டு கூட்டணியின் பொது எதிரியாக இருந்த செர்பியாவுக்கு ஆதரவளிக்க முன்வந்தது. அதாவது இந்த triple Alliance நாடுகள் செர்பியாவை தாக்கினால் ரஷ்யா ராணுவ ரீதியாக உதவுவதாக வாக்களித்தது.

ஏற்கனவே ஜெர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான பொருளாதார, ராணுவ, காலனித்துவ போட்டிகள், பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையான நிலத் தகராறு, பால்கன் பகுதிகளில் நிலவிய உறுதியற்ற அரசியல் நிலைப்பாடுகள் போன்ற பல காரணங்களால் புகைந்து கொண்டிருந்த நெருப்பில் பெட்ரோல் ஊற்றியது ஆஸ்திரிய நாட்டு பட்டத்து இளவரசரின் கொலை

ஆஸ்திரிய இளவரசர் ஃபிரான்ஸ் பெர்டினாண்ட் படுகொலையும், யுத்தமும்!

ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டது அதுவரை ஒன்றை ஒன்று முறைத்துக் கொண்டிருந்த நாடுகளுக்கு இடையே ஒரு மாபெரும் யுத்தம் உருவாகக் காரணமாயிற்று.

காவ்ரீலோ பிரின்சிப் எனும் செர்பியா நாட்டைச் சேர்ந்தவாரால் நிகழ்ந்த இந்தப் படுகொலை ஒரு மாபெரும் யுத்தம் ஆரம்பமாவதற்கு ஆரம்பப் புள்ளியாக மாறியது. ஏற்கெனவே பால்கன் விவகாரங்களில் செர்பியா மீதிருந்த கடுப்பில் அதுவரை ஒரு தக்க தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்த ஆஸ்திரியா, இந்தக் கொலைக்கு பழிவாங்கும் நோக்குடன் செர்பிய மீது போர் தொடுக்கத் தீர்மானித்தது. இருந்தும் செர்பியாவுக்கு பலம் பொருந்திய ரஷ்ய ஆதரவு இருந்ததால் சற்று தயங்கிய ஆஸ்திரியா-ஹங்கேரி, மறைமுகமாக ஜெர்மனியிடம் உதவி கேட்டது. ஜெர்மனி பச்சைக் கொடி கட்டியதும் ஜூலை 28 அன்று செர்பியா மீது போரை அறிவித்தது. ஆஸ்திரியா-ஹங்கேரி போருக்குத் தயாராகிறது என்பதை உணர்ந்த செர்பிய அரசாங்கம் ரஷ்யாவிடம் உதவி கோரியது.

ஐரோப்பாவை தன் கைகளுக்குள் அடக்கி வைக்க நினைத்திருந்த ஜெர்மனியை வீழ்த்த பொருத்தமான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த ரஷ்யா, இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது.

ஒரு வாரத்திற்குள், ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆஸ்திரியா - ஹங்கேரி மற்றும் ஜெர்மனிக்கு எதிராக ஒன்று சேர்ந்தன. எனவே இந்தப் போர் முக்கியமாக triple entente & triple Alliance எனப்பட்ட நேச நாடுகள், மைய நாடுகள் எனும் இரண்டு கூட்டணிகளுக்கு இடையேயான போராக மாறியது. நேச நாடுகளின் கூட்டணியில் பெல்ஜியம், செர்பியா போன்ற பல நாடுகள் வந்து இணைந்தன. இதில் முக்கியமான கூட்டணி இணைப்பாக ஆகஸ்ட் 1914-ல் ஜப்பானும், ஏப்ரல் 1917-ல் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்தன

மறுபுறம் ஐரோப்பாவின் மையப் பகுதியில் இருந்ததால் மைய நாடுகள் (Triple Alliance) என அழைக்கப்பட்ட கூட்டணியில், ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. 1914 அக்டோபரில் ஓட்டோமான் பேரரசும், ஓராண்டு கழித்து பல்கேரியாவும் இக்கூட்டணியில் இணைந்தன.

Sunday, September 19, 2021

யூரோ டூர் - 3 | புரட்சிகளில் தொடங்கிய ஐரோப்பாவின் எழுச்சி… ஏகாதிபத்திய நாடுகள் உருவானது எப்படி?!

 ஐரோப்பாவின் மறுமலர்ச்சி ஐரோப்பியர் வாழ்விலும் மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தது. தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சுதந்திரமாக சிந்திக்கத் தொடங்கிய ஐரோப்பியர்கள் தம் வாழ்க்கைத் தரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல ஒரு நவீன ஐரோப்பாவை கனவு கண்டார்கள். கனவுகள் கைகூட காரியத்தில் இறங்கியதன் விளைவாக வெடித்தது பிரெஞ்சு புரட்சி.

ஐரோப்பிய மலர்ச்சிக்கு வித்திட்ட பிரெஞ்சு புரட்சி!

1789-ல் தொடங்கி 1799-களின் பிற்பகுதியில் நெப்போலியன் போனபார்ட்டின் வீழ்ச்சியுடன் முடிவடைந்த பிரெஞ்சு புரட்சி நவீன ஐரோப்பிய எழுச்சியின் முதல் புள்ளி. ஐரோப்பாவின் அரசியல், கலாசாரம், பண்பாடு என எல்லாவற்றையும் மாற்றி, மன்னராட்சிக்கு முடிவு கட்டி மக்களாட்சிக்கு அடித்தளம் போட்ட ஒரு தரமான சம்பவம் பிரெஞ்சு புரட்சி.

ஒரு நாட்டின் தலைமை சரியில்லை என்று மக்கள் ஒன்று கூடி வெகுண்டெழுந்தால் அது முடிசூடிய மன்னனாக இருந்தாலும் குடிகளால் தூக்கி எறியப்படுவார் என்ற வலுவான அரசியல் பாடத்தை உலகுக்கு சொல்லிச் சென்ற வரலாற்றின் முக்கிய நிகழ்வு. அக்காலகட்டத்தில் பிரான்சை ஆண்ட மன்னன் 16-ம் லூயி மக்களின் நலனின் அக்கறை செலுத்தாது, கத்தோலிக்க திருச்சபைக்கும், பிரபுக்களுக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்ததன் விளைவு திருச்சபைகளின் கைகள் ஓங்கி இருந்தது. அதிக வரிச் சுமை, கடுமையான கட்டுப்பாடுகள் என மக்கள் முடக்கப்பட்டனர். எப்போதும் கீரியும் பாம்புமாக சண்டை போட்டுக்கொள்ளும் இங்கிலாந்துக்கு எதிராக அப்போது அமெரிக்கா போர் புரிந்து கொண்டிருந்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல ஆயுத மற்றும் நிதியுதவிகளை அமெரிக்காவுக்கு வழங்கிய பிரான்ஸ் முடிவில் பெரிய நிதி நெருக்கடிக்கு ஆளானது. அதன் சுமையை மக்கள் மீது வரி வடிவில் சுமத்த, பொறுத்ததுபோதும் என பொங்கியெழுந்ததன் விளைவு பிரெஞ்சு புரட்சியாக வெடித்தது

போராட்டங்கள், சண்டைகள், பெரும் வன்முறைகள், படுகொலைகள், அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள் எனப் பிரான்சில் நிகழ்ந்த அமளி துமளிகளை அடுத்து செப்டம்பர் 1792-ல் பிரான்சு ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டது. தேசியவாதம் ஒரு புரட்சிகரமான கூற்றாக உருவானது. பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயிக்கும் அவரது மனைவி மேரி அன்டோனெட்டுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு மக்களால் கொல்லப்பட்டார். அதன் பின்னர் வந்த குடியரசின் புதிய ஆட்சியாளர்களுக்கிடையே நிகழ்ந்த அரசியல் அதிகாரப் போட்டிகளின் விளைவாக 1793-ல் மேக்சிமிலியன் ரோபெஸ்பியர் எனும் சர்வாதிகாரியின் பிடியில் சிக்கியது பிரான்ஸ்.

1794-ல் ரோபெஸ்பியர் கொல்லப்பட்ட பின் டைரக்டரேட் என்ற அமைப்பு பிரான்சை ஆண்டது. அதன் பின்னர் நெப்போலியன் போனபார்ட் ஆட்சியைக் கைப்பற்றி சில ஆண்டுகளில் தன்னைத்தானே பிரான்சின் பேரரசராக அறிவித்துக் கொண்டார். 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பாவின் பெரும்பகுதியை கைப்பற்றிய இவர் பிரெஞ்சு புரட்சியின் போது பிரெஞ்சு ராணுவத்தின் படை வரிசையில் (military ranks) வேகமாக உயர்ந்த ஒரு திறமையான, புத்திசாலியான ராணுவ வீரன். ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு கூட்டணிகளுக்கு எதிராக வெற்றிகரமாக போரை நடத்தி தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார். ஆனால், 1812-ல் ரஷ்யாவில் கால்வைக்க போய் தோல்வியை சந்தித்தார் போனபார்ட். ஆட்சியை இழந்த நெப்போலியன் எல்பா தீவுக்கு பலவந்தமாக நாடு கடத்தப்பட்டார்.

1815-ல் மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தாலும் வாட்டர்லூ போரில் படுதோல்வி அடைந்த பின்னர் அவர் பதவி விலகினார். அதன் பின்னர் வந்த லூயிஸ் XVIII, ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட பின் பிரெஞ்சு மக்களுக்கு ஒரு அமைதியான வாழ்க்கை வாய்க்கப்பெற்றது.

10 ஆண்டுகள் நீடித்த பிரெஞ்சு புரட்சி November 9, 1799-ல் முடிவுக்கு வந்தது. ஆனால் அதே வேளை 17-ம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல துளிர்க்க தொடங்கிய தொழில்துறை புரட்சி ஐரோப்பா முழுவதும் ஆல விருட்சமாக வேர் விட்டு கிளை பரப்ப தொடங்கியிருந்தது.

தொழில்துறை புரட்சி & மேற்கு ஐரோப்பாவின் வளர்ச்சி!

18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கி, பின் மெல்ல மெல்ல உலகம் முழுதும் வியாபித்த தொழில்துறை புரட்சி ஐரோப்பா கண்டத்தின் தலையெழுத்தை திருத்தி எழுதிய ஒரு முக்கிய வரலாற்றுச் சம்பவம். இது ஐரோப்பியர்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக மக்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை உண்டு பண்ணியது.


அதுவரை வேளாண்மையையும் கைவினைத் தொழில்களையும் மட்டுமே சார்ந்து இருந்த நிலை மாறி தொழிற்சாலைகளின் பங்களிப்பு அதிகரித்தது. ஒரு காலத்தில் கைகளால் கடின உழைப்பில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் மூலம் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டது. குறைந்த நேரமும், மனித உழைப்புமே தேவைப்பட்ட அதே வேளை உற்பத்தித் திறன் பெரிய அளவில் பெருகி பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்தது. ஆனால், அனைத்து பொருட்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய சூழல் உருவானது.

கிராமப்புற விவசாய சமூகங்கள், தொழில் மயமாக்கப்பட்ட, நகர்ப்புற சமூகங்களாக மாறின. 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மக்கள் தொகையில் வழக்கத்துக்கு மாறாக காணப்பட்ட அதிக வளர்ச்சி தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அளவைக் கூட்டியது. அதிகரித்த மக்கள்தொகைக்கு ஏற்ப மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய, திறமையான உற்பத்தி முறைகள் தேவைப்பட்டன. இதனால் தொழில் புரட்சி மிக வேகமாகவும் வெற்றிகரமாகவும் ஐரோப்பாவை பற்றி படரத் தொடங்கியது.

கிராமப்புற சமூகங்களில் பலர் தங்கள் பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு, புதிய வேலை வாய்ப்புக்காக நகரங்களுக்குச் சென்றனர். தொழிற்சாலைகளின் வளர்ச்சியால் பிரிட்டிஷ் நகரங்களின் வளர்ச்சி மேலும் துரிதப்படுத்தப்பட்டது. மான்செஸ்டர் மற்றும் லீட்ஸ் போன்ற தொழில்துறை நகரங்கள் வியத்தகு முறையில் வளர்ந்தன. 1800-ம் ஆண்டில், பிரிட்டிஷ் மக்களில் சுமார் 20 சதவிகிதம் பேர் நகரங்களில் வாழ்ந்தனர். வெறும் 50 ஆண்டுகளில் அதாவது 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அந்த எண்ணிக்கை 50 சதவிகிதமாக உயர்ந்தது. பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் நகர்ப்புற மக்கள் தொகையில் அதிகரிப்பு உண்டானது.


தொழில்மயமாக்கலுக்கு முன்னர் ஒப்பீட்டளவில் பழமையானதாக இருந்த ஐரோப்பாவின் சாலை நெட்வொர்க், விரைவில் கணிசமான முன்னேற்றங்களைக் கண்டது. வங்கிகளும் முதலீட்டு வணிகங்களும் இந்த காலகட்டத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றது. பெரிய தொழிற்சாலைகள் உருவாகின. 1770-களில் லண்டன் பங்குச் சந்தையும், 1790-களின் முற்பகுதியில் நியூயார்க் பங்குச் சந்தையும் நிறுவப்பட்டது.


விவசாய சங்கங்கள் மேலும் தொழில் மயமாக்கப்பட்டு நகர்ப்புறமாக மாறியது. கான்டினென்டல் ரயில், பருத்தி ஜின், மின்சாரம் மற்றும் பிற கண்டுபிடிப்புகள் ஐரோப்பிய சமூகத்தை நிரந்தரமாக மாற்றின. தொலைபேசி, நீராவி இயந்திரம், தையல் இயந்திரம், எக்ஸ்ரே, மின்விளக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய பல நவீன கண்டுபிடிப்புகள் வேர்விட்டன.


மேற்கு ஐரோப்பாவில், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் விரைவான முன்னேற்றங்களைக் கண்டன. குறிப்பாக இங்கிலாந்து அசுர வேகத்தில் முன்னேறியது. உலகிலேயே அதி முன்னேற்றமடைந்த நாடுகளாக மேற்கு ஐரோப்பா மாறத்தொடங்கியது.

இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் இயந்திரங்கள் தரமானதாகவும், வலிமை வாய்ந்ததாகவும் இருந்தன. மதவாத பாகுபாடு காரணமாக ஸ்பெயின் மற்றும் பிரான்சில் இருந்து வெளியேறிய புராட்டஸ்டண்டு கைவினைஞர்கள் இங்கிலாந்தில் அடைக்கலம் தேடி வந்தபோது ஆங்கில அரசு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அரவணைத்துக் கொண்டது. அவர்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ தேவையான சூழலை அமைத்துக் கொடுத்து அதற்கு கைமாறாக அவர்களின் நிபுணத்துவத்தையும் திறமையையும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டது. இதனால் இங்கிலாந்து ஏனைய மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை விட பல மடங்கு பாய்ச்சலில் முன்னேறிச் சென்றது. இங்கிலாந்தின் அனைத்து இடங்களிலும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது.


கிராமம் நகரம் என்ற பாகுபாடு மறைந்து அனைத்து பிரதேசங்களும் சம அளவில் முன்னேற்றம் காணத் தொடங்கின.

இதன் விளைவாக பெரிய நகரங்கள் தோன்றியதால் பாராளுமன்ற, சட்ட சீர்திருத்தங்கள் தேவைப்பட்டது. பல புதிய சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதலாளிகளின் சுரண்டல்களில் இருந்து தொழிலாளர்களை காக்கவும், தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்தவும் தொழிலாளர்களுக்கு சாதகமான பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

மேற்கு ஐரோப்பா முழுவதும் புதிய பாதைகள், பல கால்வாய்கள் மற்றும் ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட்டன. இது நாடு கடந்த வணிக்கத்துக்கு வழிகோலியது. ‘Father of Railways’ என்று அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் சிவில் இன்ஜீனியரான George Stephenson கண்டுபிடித்த ரயில் இன்ஜின் தொழிற் புரட்சியின் இன்னொரு முக்கிய மைல்கல். உற்பத்திக்குத் தேவையான பொருட்களைப் பெறவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் சந்தைகளில் விற்கவும், தேவையான இடங்களுக்கு விரைவாக பொருட்களை அனுப்பவும் இவருடைய கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவின.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயந்திரப் பொறியியலாளரான ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்த நீராவி இயந்திரம், பிரிட்டிஷ் விஞ்ஞானி Michael Faraday கண்டுபிடித்த மின் காந்தவியல், மின்காந்த தூண்டல், மற்றும் டைனமோ, இங்கிலாந்தைச் சேர்ந்த மின்னியலாளரும் வேதியியலாளருமான சர் ஹம்ப்ரி டேவி கண்டுபிடித்த சுரங்கத் தொழிலாளர்களுக்கான பதுகாப்பு விளக்கு, அமெரிக்க ஓவியரான சாமுவேல் மோர்ஸ் கண்டுபிடித்த மின்சார தந்தி இயந்திரம், லூயிஸ் ரொபேர்ட் கண்டு பிடித்த பேப்பர் தயாரிக்கும் இயந்திரம் என தொழில் புரட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து விதமான இயந்திரங்களும் கருவிகளும் தொழிற்புரட்சியை ஐரோப்பிய வரலாற்றில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குல வரலாற்றிலேயே ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக மாற்றியது.

தொழில்மயமாக்கலின் வெற்றிக்கு முதலாளித்துவம் மற்றொரு முக்கிய அங்கமாக இருந்தது. தொழில்துறை புரட்சியின் போதான முதலாளித்துவத்தின் வடிவத்தை வரலாற்றாசிரியர்கள் லைசெஸ்-ஃபேர் முதலாளித்துவம் (laissez-faire capitalism) என்று குறிப்பிடுகின்றனர். லெய்செஸ்-ஃபேர் என்றால் ‘எங்களை தனியாக விட்டுவிடு’ என அர்த்தம். அதாவது அரசாங்கம் தலையிடாது விலகி தனி நபர்கள் தங்கள் சொந்த பொருளாதார விவகாரங்களை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அந்த நேரத்தில், இது ஒரு புரட்சிகர யோசனையாக இருந்தது. ஏனென்றால் முந்தைய நூற்றாண்டுகளில் வணிகம் ஒரு மேலாதிக்க பொருளாதார அமைப்பாக இருந்தது. கடுமையான அரசாங்கக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைக்கு ஆதரவான ஒரு பொருளாதார அமைப்பாக கருதப்பட்டது.

பரந்த பேரரசுகளை ஆட்சி செய்த மன்னர்கள் பொருளாதாரத்தின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தினர். இருப்பினும், ஆடம் ஸ்மித் உள்ளிட்ட முக்கிய சிந்தனையாளர்கள் தனிநபர்களுக்கு அதிக சுதந்திரம் கொண்ட பொருளாதார அமைப்புக்கு ஆதரவாக வாதிடத் தொடங்கியதன் விளைவாக சுதந்திரப் பொருளாதார முறை நடைமுறைக்கு வந்தது. ஐரோப்பா, வணிகத்தில் சுதந்திரமாகவும் அதே வேளை சிறப்பாகவும் செயல்படத் தொடங்கியது


இவ்வாறு மெல்ல மெல்ல தலைதூக்கிய முதலாளித்துவம் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு வழிவகுத்தது.

ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தியம்!

தொழில்துறை புரட்சி ஐரோப்பாவில் பெரிய வெற்றி பெற ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் தாக்கம் மற்றுமொரு முக்கிய காரணியானது. ஏகாதிபத்தியம் என்பது ஒரு நாடு மற்றொரு பிராந்தியத்தை அல்லது நாட்டை அதன் இராணுவம், அரசியல், கலாசார, பொருளாதார, இராஜதந்திர கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது. ஐரோப்பா உலகெங்கிலும் உள்ள காலனிகளைக் கைப்பற்ற வேண்டிய அவசியத்தை தொழில்துறை புரட்சி உருவாக்கியது.


வெளிநாடுகளில் பல காலனிகளை வெற்றிகரமாக உருவாக்கி, அதனை லாபகரமாக பராமரிக்கும் ஆளுமையையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு தொழிற்புரட்சி கொடுத்தது. ஏகாதிபத்தியத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட காலனிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக அளவு மூலப்பொருட்களை வழங்கின. அவை தொழிற்சாலைகளில் பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டன. அதேபோல ஐரோப்பிய ஏகாதிபத்தியம் பொருட்களுக்கு ஒரு பெரிய சந்தையை உருவாக்கியது.

உதாரணமாக, ஐரோப்பியர்கள் உலகின் பல பகுதிகளில் குடியேறியதால், ஐரோப்பிய தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் எந்தப் பொருட்களும் உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு விற்கப்படலாம் என்ற வர்த்தக விதிகளை நிறுவினர். இது ஐரோப்பிய தொழிற்சாலைகள் மிகப் பெரிய அளவில் பொருட்கள் உற்பத்தியை தூண்டி தொழில் மயமாக்கலை மேலும் விரிவாக்க உதவியது.

பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து போன்ற சக்தி வாய்ந்த ஐரோப்பிய நாடுகள் தங்கள் பேரரசுகளை உருவாக்க பல நாடுகளை தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன. இந்த காலகட்டத்தில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா போன்ற உலகின் பெரும் பகுதிகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. காலனித்துவம் என்ற பெயரில் ஐரோப்பா அதன் கீழ்படிந்த நாடுகளின் மனித வளத்தையும் உழைப்பையும் மட்டுமல்லாது அவர்கள் நாட்டின் வளங்களையும் மொத்தமாக சுரண்ட ஆரம்பித்தது. அடிமைத்துவம் தலை தூக்கியது.

- ஆப்பிரிக்கா அடிமைகள் இங்கிலாந்து சந்தைகளில் விற்கப்பட்டனர்.

- இந்தியாவிலிருந்து மக்கள் மிருகங்களைப் போல கொத்து கொத்தாக பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகளுக்கு அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டனர். 

ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற நாடுகளின் பெறுமதி மிக்க இயற்கை வளங்கள் அனைத்தும் ஐரோப்பாவால் மொத்தமாக வழித்து சுருட்டிக் கொண்டு செல்லப்பட்டன. இதனால் ஐரோப்பா பெருத்த செல்வத்தில் கொழுக்க ஆரம்பித்தது. ஆப்பிரிக்கா ஆசியா போன்ற கண்டங்கள் வறுமையில் மெலிய ஆரம்பித்தன.

தொழிற்புரட்சிக்கு முன்பே இந்த ஐரோப்பிய நாடுகள் ஏனைய சில நாடுகளை தம் காலனித்துவத்தின் கீழ் வைத்திருந்தாலும் தொழிற்புரட்சி அந்த எல்லையை மேலும் விரிவு படுத்தியது. அதுவரை மந்த கதியில் ஊர்ந்து கொண்டிருந்த ஐரோப்பா, தொழிற்துறைப் புரட்சியின் பின் டாப் கியரில் வேகமெடுத்து உலகின் மிகுந்த செல்வச் செழிப்பான கண்டமாக மாறத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களின் வீழ்ச்சியும் ஐரோப்பாவின் விஸ்வரூப வளர்ச்சியும் ஆரம்பமானது


9-ம் நூற்றாண்டை ஐரோப்பிய வரலாற்றில் ஒரு புரட்சிகரமான நூற்றாண்டாக வரலாறு குறித்து வைத்துக் கொண்டது. மனித உரிமை, ஜனநாயகம், தேசியவாதம், தொழில்மயமாக்கல், தங்கு தடையற்ற சந்தை அமைப்புகள், சர்வதேச வர்த்தகம், அறிவியல், கணிதம், இலக்கியம், தொழில்நுட்பம், என சகல துறைகளும் முன்னேறி, நூற்றாண்டின் இறுதியில் உலக சக்தியின் உச்சத்தை அடைந்தது ஐரோப்பா.

உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் வலிமை மிக்க பேரரசாக விஸ்வரூபம் எடுத்த ஐரோப்பாவின் ஆதிக்கம் விரிவடைந்து காலனிகள் குவிந்தன. இவை அனைத்தும் தொழில்துறை புரட்சியின் உந்துதலால் முன்னோக்கி தள்ளப்பட்டன. ஐரோப்பாவில் அடிமைத்தனம் படிப்படியாக முடிவுக்கு வர ஏனைய உலக நாடுகளில் அது ஆரம்பமானது. இனவெறி புது வடிவம் எடுத்தது. சமூக, தேசிய வேறுபாடுகள், சர்வதேச போட்டிகள் அதிகரித்தன. இவை அனைத்தும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு மாபெரும் மோதலில் கொண்டுபோய் வெடிக்க வைத்தது.

WHAT IS THAT? SEE THAT IN NEXT PART.

Saturday, September 11, 2021

யூரோ டூர் - 2 | ஐரோப்பாவை முடக்கிய லிட்டில் ஐஸ் ஏஜ் காலம்… பஞ்சத்தில் வீழ்ந்தவர்கள் மீண்டது எப்படி?!?

 அதுவரை பின்னிப் பிணைந்திருந்த மதமும், மருத்துவமும் மறுமலர்ச்சிக் காலத்தில் பிரிந்து தெளிவு பெற்றது. 18-ம் நூற்றாண்டுக்குப் பின் மருத்துவ வளர்ச்சியானது குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை மையமிட்டே முன்னேற ஆரம்பித்தது.

நாம் இன்று பார்த்து பிரமிக்கும் ஐரோப்பா ஆதி காலம் தொட்டே இந்த வளர்ச்சியையும் மலர்ச்சியையும் கொண்டிருந்ததா என்ற கேள்விக்கு விடை காண வரலாற்றை துளைத்துக் கொண்டு சென்றால் அது ஒரு முடிவற்ற பயணமாக நீளும் என்பதால் நவீன ஐரோப்பாவை பற்றி தெரிந்து கொள்ள ஜஸ்ட் ஒரு மூன்று நூற்றாண்டுகள் மட்டும் பின்னோக்கிச் செல்லலாம்.

தொழில்துறைப் புரட்சிக்கு முந்தைய ஐரோப்பா

நம் சினிமாக்களில் கதாநாயகன் ஒரே பாட்டில் முன்னேறி பணக்காரனாகி விடுவது போல ஐரோப்பிய மக்கள் ஒரே இரவில் பணக்காரர்களாகிவிடவில்லை. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை உலகின் பெரும்பகுதி கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாழ்க்கைத் தரத்தையே கொண்டிருந்தது. ஐரோப்பாவும் அப்படியே...அதன் பின் வெடித்த தொழில்துறைப் புரட்சி சில நாடுகளை உயர் பொருளாதார வளர்ச்சியின் பாதையில் செல்ல விட்டு, ஏனையவற்றை மோசமான வறுமையில் தள்ளியது.

தொழில்துறை புரட்சிக்கு முந்தைய ஐரோப்பா சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் முற்றிலும் வேறுபட்ட அமைப்பில் காணப்பட்டது. என்னதான் கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஒரு காலத்தில் கோலச்சினாலும் ஐரோப்பாவும் ஏனைய நாடுகளைப் போல பல சிக்கல்களுக்கும், இன்னல்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டுதான் இருந்தது.

தொழில்துறை புரட்சிக்கு முன்னர், ஐரோப்பாவில் பெரும்பாலான மக்கள் விவசாயிகளாக அல்லது கைவினைப் பொருள் தயாரிப்பாளர்களாகத்தான் இருந்தார்கள். தொழில்துறை புரட்சி ஏற்படுவதற்கு முன்பான காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கை இன்று இருப்பதைப் போல அவ்வளவு வசதியாக இருக்கவில்லை. உற்பத்திகள் பெரும்பாலும் வீடுகளில், கை அல்லது சிறு கருவிகள் அல்லது அடிப்படை இயந்திரங்களை பயன்படுத்தி மட்டுமே செய்யப்பட்டது. ஆடைகள் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டன. விலங்குகளின் தோல்கள் மற்றும் ரோமங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் அரிதாகவே அவர்கள் வாழ்ந்த கிராமங்களுக்கு அப்பால் பயணம் செய்தனர். அதனால் மக்கள் தம் தேவையை நிவர்த்தி செய்ய தத்தமது சமூகங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருந்தது.


கிராமப்புற மக்கள் வாழ்வாதார விவசாயிகளாகவே இருந்தனர். அதாவது அவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் உணவளிக்க மட்டுமே பயிர்களை பயிரிட்டும், விலங்குகளை வளர்த்தும் வந்தனர். மாறாக அவர்கள் வர்த்தகம் செய்யவோ விற்கவோ எந்த முயற்சியையும் முன்னெடுக்கவில்லை.

பொதுவாக ஒரு நாளுக்கு 16 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனாலும் தங்கள் உழைப்புக்கு மிகக் குறைந்த ஊதியமே பெற்றனர். பெண்களும் சிறுவர்களும் கூட பல கடினமான வேளைகளில் ஈடுபட்டனர். கல்வி என்பது பணக்காரர்களுக்கும் பிரபுக்களுக்கும் மட்டுமே என்று ஒதுக்கப்பட்டு இருந்தது. பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் சாதாரண குடிமகன் உள்ளே கூட நுழைய முடியாத இடமாக இருந்தன.

Little Ice-Age

அன்றைய ஐரோப்பிய மக்களின் உலகம் மிகக் குறுகியதாக இருந்தது. அவர்களின் தேவைகள் பூரணமாக தீர்க்கப்படாமல் இருந்தன. குளிர் காலங்களில் மிகவும் சிரமங்களுக்கு ஆளானார்கள். குறிப்பாக 1303 முதல் 1860 வரையிலான காலப்பகுதியில் புவியில் உருவான Little Ice Age என்று அழைக்கப்பட்ட சிறிய பனி யுகம் ஐரோப்பாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

Little Ice-Age என அழைக்கப்பட்ட சிறிய பனி யுகம் என்பது 14 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை கடுமையாக பாதித்த ஒரு குளிர்காலம். 14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஐரோப்பிய ஆல்ப்ஸ், அலாஸ்கா மற்றும் தெற்கு ஆண்டிஸ் உட்பட உலகின் பல இடங்களில் இது விரிவடைந்தபோது, வடக்கு அரைக்கோளத்தின் சராசரி ஆண்டு வெப்பநிலை 0.6°C க்கும் கீழ் குறைந்தது. Little Ice Age-இல் தேம்ஸ் நதி உட்பட பல ஐரோப்பிய ஆறுகள் பனிக்கட்டியாக மாறியது. வயல் நிலங்கள் உறைந்து போயின. இதனால் தலைவிரித்தாடிய பஞ்சம் விவசாயிகளை ஆயிரக்கணக்கில் கொன்றது. சிறிய பனி யுகத்தின் காலநிலை பேரழிவுகளை, பிரபலமான தொல்பொருள் ஆசிரியரும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியருமான பிரிட்டிஷ் எழுத்தாளர் எமிரிடஸ் பிரையன் ஃபேகன் விரிவாக எழுதியிருக்கிறார். இந்த சிறிய பனி யுகம் ஐரோப்பியர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்த விவசாய உற்பத்தியை குறைத்து, உணவுப் பற்றாக்குறை, உடல்நலக் கோளாறு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல பிரச்னைகளுக்கு வித்திட்டு இறுதியில் ஐரோப்பிய நெருக்கடிக்கு வழிவகுத்தது.

ஐரோப்பிய நெருக்கடி - வேளாண்மைப் புரட்சி!

ஒரு மனிதனின் அடிப்படை வாழ்வாதாரத் தேவையான உணவுக்கே சிக்கல் ஏற்படும் போது தான் அவன் அதற்கான மாற்றுத் தீர்வுகளை சிந்திக்கத் தொடங்குகிறான். பொதுவாக பிரச்னைகளும் சவால்களும் நெருக்கும்போது ஒரு சராசரி மனிதன் நிலை குலைந்து போவான். ஆனால் The European crisis என அழைக்கப்பட்ட ஐரோப்பிய நெருக்கடி ஐரோப்பியர்களை தெளிவாகச் சிந்திக்கத் தூண்டியது. இவ்வாறு சிந்திக்கத் தொடங்கியதன் விளைவுதான் The Agricultural Revolution என அழைக்கப்பட்ட வேளாண்மைப் புரட்சி.

முதல் வேளாண்மைப் புரட்சியாக கி.மு 10,000-ல் மனிதன் உணவுக்காக மிருகங்களை வேட்டையாடும் நிலையில் இருந்து மாறி தனக்கான உணவை தானே பயிர்செய்து தொடங்கியதைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், உண்மையான விவசாயப் புரட்சி என்பது 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பிய விவசாயம் பழைய நுட்பங்களில் இருந்து புதிய செயல்முறைகளுக்கு மாறியதையே குறிக்கின்றது. விவசாயப் புரட்சியின் முக்கிய குறிக்கோள் பஞ்சத்தைத் தடுக்க போதுமான உணவை உற்பத்தி செய்வதாக மட்டுமே ஆரம்பத்தில் இருந்தது

18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வேளாண்மைத் தொழில்நுட்பங்களின் முன்னேற்றம் அதிக அறுவடைக்கும், சிறந்த உணவு தரத்திற்கும் வழிவகுத்தது. இக்காலத்தில் விவசாயம் சார்ந்து வளர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக விவசாய நிலங்களை விரிவாக்குதல், பயிர் சுழற்சி முறை அறிமுகத்தினால் புதிய பயிர்களை விதையிடல் போன்ற பல புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டன. அதனால் வேளாண்மைப் புரட்சி உணவு விநியோகத்தை அதிகரித்து உழைப்பின் அளவைக் குறைத்தது.

விவசாயப் புரட்சியின் மற்றொரு மிக முக்கியமான கண்டுபிடிப்பு நார்ஃபோக் நான்கு-படி சுழற்சி முறை (Norfolk four-course system). இது மண் வளத்தை மேம்படுத்தி தரிசு நிலையை குறைப்பதன் மூலம் பயிர் மற்றும் கால்நடைகளின் கருக்கட்டலை பெரிதும் அதிகரித்தது. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இரண்டு பிரிட்டிஷ் விவசாயிகளான ராபர்ட் பேக்வெல் மற்றும் தாமஸ் கோக் (Robert Bakewell and Thomas Coke), மரபணு வேறுபாட்டைக் குறைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்க முறையை ஒரு அறிவியல் நடைமுறையாக அறிமுகப்படுத்தினர். 

பிரிட்டனில் விவசாயப் புரட்சி ஐரோப்பிய மக்கள் வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனையாக நிரூபிக்கப்பட்டது. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்தின் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தித் திறனும் கணிசமாக வளர்ந்தது. 1700 மற்றும் 1870-க்கு இடையில் மொத்த விவசாய உற்பத்தி 2.7 மடங்கு அதிகரித்தது. 1900-ம் ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் விளைச்சளுடன் டென்மார்க், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் போன்ற ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளால் மட்டுமே போட்டியிட முடிந்தது. முதலாம் உலகப் போருக்கு முந்தைய நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலுமே தனித்தனி விவசாயப் புரட்சிகள் வெடித்ததால் தானிய விளைச்சல் சராசரியாக 60% உயர்ந்து ஐரோப்பா கண்டத்தின் உணவு வழங்கலை அதிகரித்தது.

இக்காலகட்டத்தில் இங்கிலாந்தில் மக்கள் தொகை விரைவாக வளர்ந்தது. 1700-ல் 5.5 மில்லியனாக இருந்த மக்கள் தொகை 1801-க்குள் 9 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்தது. அதிகரித்த மக்கள் தொகை தேவைகளையும் சேர்த்து அதிகரித்தது. தேவைகள் இவர்களை தர்க்க ரீதியாக சிந்திக்கத் தூண்டியது. அதன் விளைவு ஐரோப்பிய மறுமலர்ச்சியாக மலர்ந்தது. 

18-ம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஐரோப்பிய அரசியல், தத்துவம், அறிவியல் மற்றும் தகவல் தொடர்புகள் தீவிரமாக மறுசீரமைக்கப்பட்டன. ஐரோப்பா முழுவதிலும் உள்ள மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் அதுவரை இருந்து வந்த பாரம்பரிய அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தினர். பகுத்தறிவு மாற்றத்தின் மூலம் மனித குலத்தை மேம்படுத்த முடியும் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டனர். பல புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதப்பட்டன. பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், சட்டங்கள், கோட்பாடுகள் உருவாகின. அது ஐரோப்பாவின் தலையெழுத்தையே மாற்றியமைத்த தொழிற்துறைப் புரட்சிக்கு வழிவகுத்தது.

ஐரோப்பிய மறுமலர்ச்சி 

இத்தாலியில் 14-ம் நூற்றாண்டில் உருவான மறுமலர்ச்சி (Renaissance) காலத்தில் போடப்பட்ட விதையில் இருந்து உருவான விருட்சமாக, 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் The Enlightenment Age என குறிப்பிடப்படும் ஐரோப்பிய அறிவொளிக் காலம் மலர்ந்தது. பல தத்துவவாதிகள், அரசியல் வல்லுநர்கள், அறிவியல் அறிஞர்கள், கணித மேதைகள், இலக்கிய படைப்பாளிகளை உருவாக்கிய ஐரோப்பாவின் பொற்காலமானது. நவீன ஐரோப்பிய சமுதாயத்தை சீர்படுத்திய உறுதியான அறிவியல், அரசியல், கலை, இலக்கிய மற்றும் தத்துவ சிந்தனைகளின் பிறப்புக் காலமாக இது வரலாற்றில் பதிவானது. ஐரோப்பாவின் அறிவொளி யுகம் எனக் குறிப்பிடப்பட்ட இந்த 18-ம் நூற்றாண்டில்தான் அங்கு அறிவியல் அடித்து ஆட ஆரம்பித்தது. 

இக்காலகட்டத்தில் கணிதம், அறிவியல், புவியியல், கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், இலக்கியம், சமயம், போன்ற எல்லாவற்றிலும் எழுச்சி உண்டானது. பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அரசியல் ரீதியாக அதுவரை இருந்து வந்த நிலமானிய முறை ஒழிந்து புதிய தேசிய அரசுகள் தோன்றின. தனிமனித ஒழுக்கமும் சமூக பண்பும் தழைத்தோங்கின.

அதுவரை பின்னிப் பிணைந்திருந்த மதமும், மருத்துவமும் இந்த மறுமலர்ச்சிக் காலத்தில் பிரிந்து தெளிவு பெற்றது. 18-ம் நூற்றாண்டுக்குப் பின் மருத்துவ வளர்ச்சியானது குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை மையமிட்டே முன்னேற ஆரம்பித்தது. இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பல நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகளையும் கோட்பாடுகளையும் நிறுவினர். 

ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமான முன்னோடிகளான 

  • ஆங்கிலேயர்கள் பிரான்சிஸ் பேகன் மற்றும் தாமஸ் ஹாப்ஸ் (Francis Bacon and Thomas Hobbes), 
  • பிரெஞ்சுக்காரர் ரெனே டெஸ்கார்ட்ஸ் (René Descartes) மற்றும் 
  • அறிவியல் புரட்சியின் முக்கிய இயற்கை தத்துவவாதிகளான கலிலியோ கலிலி (Galileo Galilei), ஜோஹன்னஸ் கெப்லர் (Johannes Kepler) மற்றும் கோட்ஃபிரைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் (Gottfried Wilhelm Leibniz) 
போன்றோர் ஐரோப்பிய மறுமலர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றனர். 

  • ஐசக் நியூட்டனின் ‘Principia Mathematica’ (1686) மற்றும் 
  • ஜான் லோக்கின் ‘Essay Concerning Human Understanding’ (மனித புரிதல் பற்றிய கட்டுரை - 1689) 
ஆகிய இரண்டும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கான அறிவியல், கணித மற்றும் தத்துவக் கோட்பாடுகளை வழங்கிய இரண்டு முக்கிய படைப்புகளானது.

இந்த Age of Enlightenment காலப்பகுதியை தொடர்ந்து ஐரோப்பாவில் புரட்சி வெடித்தது. மன்னராட்சிக்கு எதிராக வெடித்த பிரெஞ்சுப் புரட்சியும், அதைத் தொடர்ந்த தொழிற்புரட்சியும் பனி போர்த்திய இருண்ட இரவுகளில் சுருண்டிருந்த ஐரோப்பாவில் படர்ந்த முதல் ஒளிக்கீற்றுகள்.

அதிரடியாக ஆட்டத்தில் இறங்கிய ஐரோப்பிய புரட்சிகள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்த ஐரோப்பிய சமூகத்தை அப்படியே மாற்றிப்போட்டது. ஏழு கண்டங்களில் ஏதோ ஒரு கண்டமாக அதுவரை இருந்த ஐரோப்பாவை, நவீன உலகின் அதி முன்னேற்றமடைந்த ஒரு பலமான வல்லரசாக மாற்றிய அந்த மேஜிக் பவர்!!!

WHO IS THAT? WHICH POWER??? LETS SEE IN NEXT UPDATES :)

Europe - A Background.

 ஐரோப்பா என்றால் எல்லோருக்கும் ஓர் மயக்கம்தான். சினிமாக்களிலும் நாம் பார்க்கும், கதைகளிலும் நாம் படிக்கும் ஐரோப்பா என்பது ஒரு கனவுலகம். தமிழ் திரைப்படங்களில் நாயகனும் நாயகியும் காதல் வசப்பட்ட உடனே காட்சி ஐரோப்பாவுக்கு மாறிவிடும். ஐரோப்பா என்றால் செல்வம், அழகு, காதல், திறந்த கலாச்சாரம், அதி உயர் வாழ்க்கைத் தரம், நிலையான அரசியல் என உலகின் அத்தனை ஆதர்சங்களும் நம் மனக்கண் முன் விரியும். ஏனெனில் இன்றைய இளைஞர்களின் கனவு தேசம் ஐரோப்பா. இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமே வியந்து பார்க்கும் பிரமாண்டம் அது.

உலக வரைபடத்தை எடுத்துக் கொண்டால் அதன் செழிப்பான இடங்களில் ஐரோப்பா முதலிடத்தை பிடிக்கும். உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் பல ஐரோப்பிய நாடுகள் பட்டியலின் முதல் வரிசையை நிரப்பியிருக்கும். உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் முதல் இடம் ஒரு ஐரோப்பிய நாட்டுக்கே கிடைத்திருக்கும். அதே போல உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை எடுத்தாலும் ஐரோப்பிய நாடுகளே முதல் இடத்துக்கு மாறி மாறி போட்டி போட்டுக்கொண்டிருக்கும்.

ஐரோப்பாவில் அப்படி என்னதான் இருக்கிறது, ஐரோப்பா உண்மையிலேயே சொர்க்க பூமியா, அங்கு மக்களுக்கு கவலைகளே இல்லையா, எல்லோரின் வாழ்க்கைத்தரமும் உச்சத்திலேயே இருக்கிறதா, எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் தேனாறும் பாலாறும் ஓடுகிறதா... அப்படியென்றால் மற்ற கண்டங்களை விட ஐரோப்பியர்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த மேஜிக் பவர் என்ன?

இந்த கேள்விகளுக்கு விடைகாண நாம் வரலாற்றின் 4-ம் நூற்றாண்டு வரையாவது பின்னோக்கி செல்ல வேண்டும். ரோமன் பேரரசு உடைந்த Dark Ages என அழைக்கப்பட்ட இருண்ட யுகத்திலேயே ரோமன் ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசங்கள் அனைத்தும் பிரிந்து, தமக்கான சுய ராஜ்ஜியத்தை கட்டமைத்துக் கொண்டன. பிளந்த நிலத்தின் உள்ளே இருந்து பசுமையான செடி வேர் விட்டு வெளிவருவது போல, பிளவுபட்ட ஐரோப்பாவில் மெல்ல மெல்ல வளர்ச்சியும் மலர்ச்சியும் துளிர் விட ஆரம்பித்தது. அப்போதிருந்தே ஐரோப்பா ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் செல்வத்திலும் அபிவிருத்தியிலும் முன்னோக்கியே இருந்தது. ஆனாலும் நவீன ஐரோப்பாவை பற்றி பார்க்க நாம் ஒரு 500 வருடங்கள் வரை முன்சென்று பார்த்தாலே போதுமானது என்பதால் வரலாற்றில் கொஞ்சம் முன்னே வருவோம்.

நாம் கண்டும், கேட்டும், பார்த்தும் தெரிந்து கொண்ட அந்த பகட்டாக ஜொலிக்கும் பக்கம்தான் ஐரோப்பாவின் உண்மை முகமா இல்லை வெளிச்சத்துக்கு வராத இருள் பிரதேசம் உள்ளதா?

ஐரோப்பா எப்படி உருவானது?

உலகின் ஏழு கண்டங்களில் இரண்டாவது சிறிய கண்டமான ஐரோப்பா பூமியின் மேற்பரப்பில் சுமார் 2 சதவிகிதத்தை உள்ளடக்கியிருக்கிறது. 'ஐரோப்பா' என்ற பெயர் பண்டைய கிரேக்க புராணமான ஜீயஸ் (Zeus)-ல் இருந்து வந்ததாக ஒரு சுவாரஸ்ய கதை உண்டு. இந்த கதையின்படி, பண்டைய கிரேக்க மதத்தில் வானம் மற்றும் இடியின் கடவுள் ஜீயஸ், ஒலிம்பஸ் மலையில் ஆட்சி செய்தார்.

அவர் ஒரு நாள் ஒரு கடற்கரையோரத்தில் அழகான ஃபீனீசிய இளவரசியான யூரோபா குளிப்பதைப் பார்த்தாராம். பார்த்த முதல் பார்வையிலே காதலில் விழுந்த Zeus தன்னை ஒரு அற்புதமான வெள்ளை காளையாக மாற்றிக்கொண்டு வந்து அவளை அணுகியிருக்கிறார். அந்த காளை மிகவும் கம்பீரமாகவும் அழகாகவும் இருக்க உடனே அதன்பால் ஈர்க்கப்பட்ட யூரோபா இளவரசி தனது கழுத்தில் அணிந்திருந்த அழகிய வண்ண வண்ண பூக்களின் மாலையைக் கழற்றி அந்தக் காளையின் கழுத்தில் போட்டு அதன் முதுகில் ஏறி அமர்ந்தாளாம்.

அவள் ஏறி அமர்ந்ததும் அந்தக் காளை கடல் நீரின் மேற்பரப்பு முழுவதும் சுற்றிச் சுற்றி நீந்தி, கிரீட் தீவுக்கு இளவரசியை கடத்திச் சென்றுள்ளது. அதன் பின் கிரீட் தீவில் ஜீயஸ் மற்றும் யூரோபா இருவரும் காதலர்களாக மாறி, கலவி கொண்டு அவர்களுக்கு மூன்று மகன்களும் பிறந்துள்ளனர்.

அதேவேளை கடலில் குளிக்கச் சென்ற ஃபீனீசிய இளவரசியான யூரோபாவைக் காணாமல் கலங்கிய அவள் குடும்பத்தினர் அவளைத் தேட அவளின் மூன்று சகோதரர்களை அனுப்பியுள்ளனர் அந்தத் தேடல் தோல்வியிலேயே முடிவுற்றது. ஆனாலும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முக்கியமான நகரங்களை கண்டுபிடித்து ஏஜியனைச் சுற்றியுள்ள (ஏஜியன் கடல் என்பது ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான மத்திய தரைக்கடலின் ஒரு பகுதி) பல்வேறு பகுதிகளுக்கு அவளின் பெயர்களைச் சூட்டினார்கள் எனப்படுகிறது. பிற்காலத்தில் இவை அனைத்தும் ஒன்றிணைந்து ஐரோப்பா என்று அழைக்கப்பட்டது என்பது ஒரு கதையாக இன்று வரை சொல்லப்படுகிறது.

ஆனால், பண்டைய கிரேக்க எழுத்தாளரும், புவியியலாளரும், வரலாற்றாசிரியருமான ஹெரோடோடஸ் (Herodotus) என்பவர் ஃபீனீசிய இளவரசியின் கதைக்கும் ஐரோப்ப கண்டத்தின் பெயருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். அவர் எழுதிய நான்கு வரலாற்று புத்தகத்திலும் “உண்மையில் ஐரோப்பாவுக்கு அதன் பெயர் எங்கிருந்து வந்தது, அல்லது யார் கொடுத்தது என்பது யாருக்கும் தெரியாது. ஏனைய கண்டங்களைப் போல பெயரிடப்படாமல் இருந்த ஐரோப்பா, யூரோபா இளவரசியின் பெயரிலிருந்து வந்தது என்று சொல்வது சாத்தியமில்லை. ஏனெனில் யூரோபா இளவரசி ஆசியாவுக்கோ அல்லது ஐரோப்பாவுக்கோ ஒருபோதும் சென்றதில்லை" என்கிறார்.

எது எப்படியோ 'ஐரோப்பா' என்ற பெயரின் தோற்றம் பற்றிய கோட்பாடுகள் பண்டைய கிரேக்கத்தை நோக்கித்தான் செல்கிறது. கிரேக்க மொழியில் யூரோபா என்ற பெயர் 'அகன்ற முகம்' என்று பொருள்படும். இது முழு நிலவைக் குறிக்கிறது. பண்டைய கிரேக்கர்கள் முதலில் யூரோபா என்ற வார்த்தையை மத்திய கிரேக்கத்தின் புவியியல் பகுதிக்கும், பின்னர் முழு கிரேக்கத்திற்கும் பயன்படுத்தினர். 500 BCE வாக்கில் யூரோபா என்ற வார்த்தை ஐரோப்பாவின் முழு கண்டத்தையும், கிரேக்கத்துடன் அதன் கிழக்குப் பகுதியையும் சேர்த்து குறிப்பிட்டது.

ஐரோப்பாவின் புவியியல்!

ஐரோப்பாவின் புவியியல் என்றதும் பள்ளி பாடபுத்தம் சிலருக்கு நினைவுக்கு வரலாம். ஆனால், ஐரோப்பாவின் புவியியலைத் தெரிந்துகொள்ளாமல் ஐரோப்பாவை புரிந்துகொள முடியாது. யூரேசியாவின் மாபெரும் ‘சூப்பர் கண்டத்தின்’ மேற்கு நிலம் ஐரோப்பா. அது ஆசியாவிலிருந்து யூரல் நதி, காஸ்பியன் கடல், கருங்கடல்கள் உள்ளிட்ட தொடர் நீர்நிலைகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

உலகின் இரண்டாவது மிகச்சிறிய கண்டமான ஐரோப்பா யூரேசியாவின் மேற்கு நோக்கிய தீபகற்பங்களால் ஆனது. உலகின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட பதினைந்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள இது வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலிலும், மேற்கில் அட்லான்ட்டிக் பெருங்கடலிலும், தெற்கே மத்தியதரைக் கடலிலும், கிழக்கில் ஆசியாவிலும் எல்லைகளைக் கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் தகவலின் படி ஐரோப்பாவில் மொத்தம் 44 நாடுகள் உள்ளடங்குகின்றன. பொருளாதார மற்றும் அரசியல் தொழிற்சங்கமான ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) 27 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 

  • ஆஸ்திரியா, 
  • பெல்ஜியம், 
  • பல்கேரியா, 
  • குரோஷியா, 
  • சைப்ரஸ், 
  • செக் குடியரசு, 
  • டென்மார்க், 
  • எஸ்டோனியா, 
  • பின்லாந்து, 
  • பிரான்ஸ், 
  • ஜெர்மனி, 
  • கிரீஸ், 
  • ஹங்கேரி, 
  • அயர்லாந்து, 
  • இத்தாலி, 
  • லாட்வியா, 
  • லிதுவேனியா, 
  • லக்சம்பர்க், 
  • மால்டா, 
  • நெதர்லாந்து, 
  • போலந்து, 
  • போர்ச்சுகல், 
  • ருமேனியா, 
  • ஸ்லோவாக்கியா , 
  • ஸ்லோவேனியா, 
  • ஸ்பெயின் மற்றும் 
  • சுவீடன் 

போன்றவை இந்த லிஸ்ட்டில் அடங்கும்.

அதே வேளை ஐரோப்பிய பொருளாதார பகுதியில் (EEA) ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன் மற்றும் நார்வே ஆகியவையும் சேர்ந்து மொத்தம் 30 நாடுகள் உள்ளடங்குகின்றன. ஐரோப்பா கண்டத்தில் இருந்தாலும் கூட சுவிட்சர்லாந்து EU மற்றும் EEA இரண்டிலும் உறுப்பினர் இல்லை. ஆனால், அது ஐரோப்பிய யூனியனின் ஒரு முக்கிய அங்கமாகவே பார்க்கப்படுகிறது. அதாவது சுவிஸ் நாட்டவர்களுக்கு ஐரோப்பிய யூனியனின் மற்ற நாடுகளில் வாழவும் வேலை செய்யவும் உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன.

வடக்கு ஐரோப்பா என்பது மேற்கு ஐரோப்பாவின் வடக்கு பகுதியான, ஆங்கில சேனல் மற்றும் பால்டிக் கடல் ஆகியவற்றைக் குறிக்கிறது. வடக்கு ஐரோப்பாவை ஸ்காண்டிநேவியா, பிரிட்டிஷ் தீவுகள் மற்றும் பால்டிக்ஸ் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 

  • நார்வே, 
  • ஸ்வீடன், 
  • டென்மார்க், 
  • பின்லாந்து, 
  • ஐஸ்லாந்து, 
  • ஐக்கிய இராஜ்ஜியம்(United Kingdom), 
  • அயர்லாந்து, 
  • லிதுவேனியா, 
  • லாட்வியா, 
  • எஸ்டோனியா 

போன்ற நாடுகள் வடக்கு ஐரோப்பாவில் வருகின்றன.

மத்திய தரைக்கடல் ஐரோப்பா என்று அழைக்கப்படும் தெற்கு ஐரோப்பா, பதினைந்து நாடுகளைக் கொண்டுள்ளது. 15 கோடி மக்களுக்கும் அதிகமாக வாழும் இங்கே 

  • அல்பேனியா, 
  • அந்தோரா, 
  • போஸ்னியா மற்றும் 
  • ஹெர்சகோவினா, 
  • குரோஷியா, 
  • கிரீஸ், 
  • இத்தாலி, 
  • மால்டா, 
  • மான்ட்டினீக்ரோ 
  • வடக்கு மசிடோனியா, 
  • போர்ச்சுகல், 
  • சான் மரினோ, 
  • செர்பியா, 
  • ஸ்லோவேனியா, 
  • ஸ்பெயின், 
  • வாடிகன் 

போன்ற நாடுகள் உள்ளன.


ஐக்கிய நாடுகள் சபையினால் கிழக்கு ஐரோப்பா என்று கருதும் 10 நாடுகள் அனைத்தும் ஒரு காலத்தில் பனிப்போரின் போது சோவியத் யூனியன் தலைமையிலான கிழக்கு கம்யூனிஸ்ட் கூட்டமைப்பின் ஒரு பகுதியாகவே இருந்தது. 1990-களின் முற்பகுதியில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பிராந்தியத்தின் பல நாடுகள் மேற்கு நாடுகளுடன் மிக நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டு, ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோவின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இவை கிழக்கு ஐரோப்பாவின் நாடுகள் என்ற கட்டமைப்புக்குள் உள்ளடங்குகின்றன. பெலாரஸ், பல்கேரியா, செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து, மால்டோவா, ருமேனியா, ரஷ்யா, ஸ்லோவாக்கியா, உக்ரைன் போன்றவையே இந்த பத்து நாடுகள்.

சரி, இவ்வளவு செழிப்பான நாடுகளின் கூட்டணியை கொண்ட ஐரோப்பாவின் ஒரு பகுதி எப்படி பொருளாதார ரீதியில் அசைக்க முடியாத பெரும்பலம் கொண்டும், மறு பகுதி சற்று பலவீனமாகியும் போனது? மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்லலாமா?!