Saturday, February 18, 2017

Sapiens

"மனிதன் கடவுளைக் கண்டுபிடித்தபோது வரலாறு தோன்றியது. மனிதன் கடவுளாகும்போது அது முடிந்துவிடும்"- இது, பிரபல வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான 'நோவா ஹராரி'யின் புகழ்பெற்ற மேற்கோள்.

2014-ம் ஆண்டு ஹீப்ரூவில் வெளியான இந்தப் புத்தகம் பின்னர் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட பலரும் இந்த நூலைப் பரிந்துரைத்துள்ளனர். இந்தப் புத்தகத்திலிருந்து சில குறிப்புகள் உங்கள் பார்வைக்கு


.
இந்தப் புத்தகம் மனிதர்களின் வரலாற்றைச் சுருக்கி 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து தொடங்குகிறது.
இந்த உலகத்தில் பல்வேறு மனித இனங்கள் இருந்தன. அதில் ஒன்றாக இருந்த `ஹோமோ சேபியன்ஸ்’ என்கிற நாம் மட்டும் எப்படி இன்றைக்கு எஞ்சி நிற்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தை ஆள்கிறோம்.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் சாதாரண விலங்குகள்தான். நம்மை விட கொரில்லாக்களும் ,மின்மினிப்பூச்சிகளும், ஜெல்லி மீன்களும் நமது சுற்றுச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது உண்மை.

பன்றிகளில் பல வகை இருப்பதைப்போல, நாய்களில் பல வகை இருப்பதைப்போல, நாமும் பலவகையாக இருந்தோம்.
  • கிழக்கு ஆசியாவில் உருவான `ஹோமோ சேபியன்ஸ்’, 
  • ஐரோப்பியாவில் நமது உறவினர்களான `நியான்டர்தால்கள்’, 
  • ஆசியாவில் `ஹோமோ எரக்டஸ்’, 
  • கீழ்த்திசையில் ஜாவா தீவுகளில் ‛ஹோமோ ஸோலொனிஸிஸ்’

 என மனிதர்கள் பல்வகையாகவும் பல்வகை குணங்களுடனும் இருந்தோம்.

அதில் ஒரு குழு, பெரும் உருவத்துடனும் அச்சமறியாத வேட்டைக்குழுவாகவும் இருக்க, மற்றவை குள்ளமான உருவத்துடன் திகழ்ந்தது என ஒவ்வொரு மனிதக்குழுவும் தனித்த அடையாளங்களுடன் இருந்தது. அதேபோல் `ஹோமோ சேபியன்ஸ்’-ஸைத் தவிர மற்ற மனிதக்குழுக்களும் முற்றாக அழியவில்லை.

அவற்றுள் இனக்கலப்பு ஏற்பட்டுள்ளது. அதற்குச் சாட்சியாக இன்று ஐரோப்பிய பூர்விகக் குடிகளுள் நியாண்டர்தால் மனிதர்களின் ஜீன்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

மற்ற மனித இனத்துக்கும்தான் மூளை இருந்தது. இருந்தாலும் சேபியன்ஸ் மட்டும் உலகை வெற்றிகொண்டு ஆளும் ரகசியம் என்னவென்றால், அவர்களிடம் கூட்டணியாகச் செயல்படும் "அறிவாற்றல் புரட்சி" கண்ணுக்குத் தெரியாத இழையைப்போல் வேலை செய்தது. தொடர்ந்த அனுபவங்களின் அறிவுத்தொகுப்பாக அவர்களின் மூளை இருந்தது. அது பபூன்களைப்போல,ஓநாய்களைப்போலக் கூட்டாக செயல்படும் மூளை. ஆனால் அவை அதை ஒரு குழுவுக்குள் மட்டுமே செயல்படுத்தி நிறுத்திவிடும். ஆனால், `சேபியன்ஸ்’ அதைப் பல லட்சம் பேர்களை பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தன. உதாரணம்: "நாடு, மொழி, கடவுள், சட்டம், முதலாளித்துவம்,கம்யூனிசம் போன்றவை.

இப்படி பல்வேறு சுவையான செய்திகளைச் சொல்லும் இந்தப் புத்தகத்தில்...
"மனித குல வரலாற்றில் மிகப்பெரிய மோசடி விவசாயப் புரட்சிதான்"
"இதுவரை நடந்த வரலாற்றுக் குற்றங்களில் மிகப்பெரியது  நவீன நிறுவன வேளாண்மைதான்"

"நாம் ப்ரிட்ஜ் கொள்ளாத உணவுடன் வசதியான அபார்ட்மென்ட்களில் நிம்மதியாக இருந்தாலும், நமது ஜீன்கள் இப்போதும் நாம் சவன்னா காட்டில் உணவு தேடி அலைந்து கொண்டிருப்பதாகவே நினைத்துக்கொண்டிருக்கிறது" என அதிரடிக் கருத்துகளையும் தெரிவித்துள்ளார்.

Saturday, February 11, 2017

கரிகாலனின் இமய படையெடுப்பு !

கரிகாலனின் இமய படையெடுப்பு !

சீறிபாய்ந்து வந்த காவிரியை தடுத்து கரிகாலன் அணை கட்டிய வரலாறு நாம் அனைவரும் அறிந்திருப்போம்.. ஆனால் அதற்கு முன்பு இமயம் வரை படையெடுத்து சென்று இமய மலையில் புலி சின்னத்தை பொறித்த வரலாறு பற்றி பலரும் அறிந்திருக்கமாட்டோம். இதோ கல்லணை கட்டியவனின் கம்பீர வரலாறு....

தென்னகத்தில் பெற்ற வெற்றிகளால் மன்னன் கரிகாலன் திருப்தியடையவில்லை.கரிகாலனின் போர்த் தாகம் தணியாத நிலையில் அவனுடைய போர்ப் பார்வை, போரிடுவதற்கான எதிரிகளைக்த் தேடி வட திசை நோக்கிப் பாய்ந்தது. எனவே, தன் வாள் மற்றும் வெண் கொற்றக் குடையுடன் மயிர்க் கண் முரசம் எனும் ஒருவகைப் போர் முரசத்தை(ஒரு புலியை கொன்ற எருதின் தோலால் செய்யப்பட்ட முரசம்) தன் படையினர் ஒலிக்க, தன் வலிமைமிக்க தோள்களுக்கு எதிரிகள் கிடைப்பார்கள் என்ற எண்ணத்தில் நல்ல நாள் ஒன்றில் வட திசை நோக்கிப் புறப்பட்டான். (ஆதாரம்-சிலப்பதிகாரம் 5:90-94).

பெரும்படையுடன் சென்ற கரிகாலன் செல்லும் வழியில் தன்னை எதிர்த்து நின்ற அரசர் அனைவரையும் வென்று, இறுதியில் இமயமலை சாரலைச் சென்றடைந்தான். இமையமலையை கடந்து வடக்கே செல்ல நினைத்த கரிகாலன், குறுக்கே அமைந்திருந்த பாதை பயணத்துக்கு ஏற்றதாக இல்லை என்பதை உணர்ந்து, பொன் போன்ற இமயமலையின் ஒரு பாகத்தை இடித்திவிட்டு புதுப்பாதை ஒன்று அமைத்தான். பின் பழைய பாதையை மூடி விட்டான்.

"பொன்மலை புலி வென்று ஓங்கப்
புதுமளையிடுத்துப்
பொற்றும் அந்நெறி வழியேயாக
அயல் வழி அடைத்த சோழன்"
- பெரியபுராணம் 55

மேலே குறிப்பிட்ட சான்றை மேற்கோள் காட்டிய குடவாயில் பாலசுப்ரமணியம், புலி சின்னம் பொறிக்கப்பட்ட இடத்தை பற்றி மேலும் சில விவரங்களை குறிப்பிடுகிறார்.

சிக்கிம் மாநிலத்திலிருந்து திபெத் நாட்டின் சீனப் பகுதிக்குச் செல்கிற சூம்பிப் பள்ளத்தாக்கை ஒட்டி அமைந்துள்ள 'சோழக் கணவாய்' மற்றும் 'சோழ மலைத் தொடர்' ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதிதான் கரிகாலன் இமயமலையில் புலிச் சின்னத்தை பொறித்த இடம். இது கரிகாலனால் புதிதாக அமைக்கப்பட்ட பாதை, அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு மலையை கடந்து மறுபுறம் செல்ல வசதியாக இருந்ததால் அதை அமைத்துக் கொடுத்த கரிகால் சோழனுக்கு நன்றி கூறும் முகமாக, அந்தப் பாதைக்குச் 'சோழக் கணவாய்' என்றும் அதை ஒட்டிய மலைத்தொடருக்கு 'சோழ மலைத்தொடர்' என்றும் பெயர்கள் சூட்டி அழைத்துள்ளனர். அவ்வாறு, புதிய வழித் தடத்தை அமைத்த பின், கரிகாலன் அந்த வழித் தடத்தை ஒட்டிய இமயமலைப் பாறையின் மீது புலிச் சின்னத்தை பொறித்தான்.

புதிய வழி தடம் அமைப்பதிலும் பழைய வழி தடத்தை மூடுவதிலும் அவன் போர்ப் படையில் இடம் பெற்றிருந்த சேர நாட்டுப் படை வீரர்களும், பாண்டிய நாட்டுப் படை வீரர்களும் வேற்றுமை பாராட்டாமல் அவன் படை வீரர்களுடன் உற்சாகமாய் ஈடுபட்டனர். ஆதலால், சேர மன்னனின் 'வில்-அம்பு' சின்னத்தையும், பாண்டிய மன்னனின் 'கயல் மீன்' சின்னத்தையும், புலி சின்னத்துடன் பொறித்துத் தன் பெருந்தன்மையை வெளிபடுத்திக்கொண்டான்.

#இமயமலை_வழித்_தடம்

கரிகாலன் தன் போர்ப் படையுடன் கிழக்குக் கடற்கரையோர வழித் தடம் மூலமாகக் #கலிங்கநாடு, வங்காளத்தில் உள்ள '#வச்சிரநாடு' மற்றும் பீகாரைச் சேர்ந்த பகுதிகள் வழியாக இமயமலையை அடைந்தான். மலையின் மீது சோழ, சேர, பாண்டிய நாடுகளின் சின்னங்களை பொறித்த பின், வச்சிர நாட்டு மன்னனை வென்று அவன் கொடுத்த 'கொற்றப் பந்தரை'த் திரையாகப் பெற்றுக் கொண்டான். திரும்பும் பொது, மேற்குத் திசை வழியாக வந்து #மகதநாட்டு(பீகார்) மன்னனை வென்று அவன் அளித்த அரச குல பட்டி மண்டபத்தை திரையாக பெற்று கொண்டான். மேற்கு திசை நோக்கி மேலும் நகர்ந்து, தன் நண்பனாகிய அவந்தி நாட்டு மன்னன் மனமுவந்து அளித்த 'தோரண வாயிலை' அன்பளிப்பாக பெற்றுக்கொண்டு, தன் நாடு திரும்பினான்.நாடு திரும்பிய கரிகால் மன்னன் தான் பெற்று திரும்பிய மூன்று அரிய பொருட்களையும் பூம்புகார் நகரில் 'சித்திர மண்டபம்' என்னும் ஒரு மண்டபத்தை வடிவமைத்து, அந்த மண்டபத்துக்குள் நிலைநிறுத்தி தன் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் காட்சி பொருட்களாக வைத்தான்.

இந்த தகவல் டாக்டர் ரா.நிரஞ்சனாதேவி அவர்கள் எழுதிய 'கரிகால் சோழன்' என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது...

கரிகாலனுக்கு பிறகு மேலும் இரண்டு தமிழ் மன்னர்கள் இமயமலை வரை படையெடுத்து சென்று வெற்றிபெற்று, இமயமலையில் தங்கள் அடையாள சின்னங்களை பொறித்து விட்டு திரும்பியுள்ளனர்