Saturday, January 09, 2016

இசைஞானி 40

சைஞானி என அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்படும் மேஸ்ட்ரோ இளையராஜா, இசையமை்பபாளராக 40வது ஆண்டில் அடிவைக்கிறார்.
அவரது இசைச் சாதனைகளை ஒரு கட்டுரைக்குள் அடக்கிவிட முடியாது. பேசி முடியாத பிரமாண்டம் அவர். 1000 படங்களைத் தாண்டி, இன்னமும் இன்னிசையைத் தந்து கொண்டிருக்கிறார். அவரது சமீபத்திய ருத்ரமாதேவி பாடல்களைக் கேட்டவர்கள், அந்த மெலடியில் கிறங்கி நிற்கிறார்கள்.

ராகதேவனின் 40 ஆண்டுகால இசைப் பயணத்தில், சில துளிகளை இங்கே தந்திருக்கிறேன். இதுபோல இன்னும் ஆயிரமாயிரம் துளிகளைத் தரமுடியும்…
இப்போது இசைஞானி 40…
1. ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத்
தேவைப்பட்டதில்லை. ‘தென்றல் வந்து தீண்டும்போது…’ என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான். அருகிலிருந்து பார்த்த நாசர் பரவசப்பட்டு இளையராஜாவின் கால்களைக் கட்டிக் கொண்டாராம்!
2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்து முடித்த படம் ”நூறுவாது நாள்”.
3. இளையராஜா பின்னணி இசையில் மிரட்டிய சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களைக் கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது!
4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை ‘பக்கா’ நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.
5. வாசித்துப் பார்த்து அந்த இசைக் கருவியின் ஒலி எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதில்லை இளையராஜா. மனதுக்குள்ளேயே அந்த இசையை இசைத்துப் பார்த்து அதை நோட்ஸாக எழுதுகிறார். இந்த அற்புதம் படைத்தவனுக்கு மட்டுமே கைவந்த அதிசயம்.
6. அமிர்தவர்ஷினி என்ற மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகத்தை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் ‘தூங்காத விழிகள்
ரெண்டு..’ பாடலை அமைத்து மழையையும் வர வழைத்தவர் இசைஞானி.
7. பாடலின் மெட்டும் அதற்கான 100 சதவீத ஆர்கெஸ்ட்ரேஷனையும் ஒருவரே செய்யும்போதுதான் கிடைக்கும் ஒரு பாடலுக்கான முழுமை! அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு… இவை அனைத்தையும் எந்த இசையமைப்பாளரிடமும் ஒருங்கே காண முடியாது… இளையராஜாவைத் தவிர!
8. இசைஞானி தான் முதல்மgறையாக ரீதிகௌளை என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார் . ‘கவிக்குயில்’ என்னும் படத்தில் பாலமுரளி கிருஷ்ணா மற்றும் ஜானகி குரல்களில் தனித்தனியாக ஒலிக்கும் ‘சின்ன கண்ணன் அழைக்கிறான்…’ என்ற பாடல்தான் அது.
9. ‘கவுன்ட்டர்பாயின்ட்’ என்ற யுக்தியை சர்வதேச இசையின் நுட்பங்களை இசைஞானி சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற “என் கண்மணி” என்ற பாடலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.
10. இந்தியத் திரை இசையில் காயத்ரி என்ற படத்தில்தான் முதன் முதலாக இசைஞானி ‘எலெக்ட்ரிக் பியானோ’ உபயோகபடுத்தினார்.
11. இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.
12. உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத, ஏன் கற்பனையும் செய்து பார்த்திராத ஒரு விஷயம் இது. ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து, பாடல் வரிகள் எழுதப்பட்டு, படமாக்கப்பட்ட ஒரு காட்சிக்கு, அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்றவர் இசைஞானி ( ஹேராம் )
13. முன்பெல்லாம் பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டுக் காண்பித்ததும் இயக்குனரோ மற்றவர்களோ இசையமைப்பாளரிடம் வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள், இந்த படத்தில் வந்தது போல போடுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பின் இசைச் சேர்ப்பு முடிந்து, அது சரியில்லாமல் மறுபடி இசையமைப்பாளரே வேறு மாதிரி இசை சேர்ப்பார். ஆனால் இளையராஜாவிடம் அப்படி இல்லை. ஒரு ரீல் திரையில் பார்த்தால் போதும் உடனே இசைக் குறிப்புகளை எழுத ஆரம்பித்து விடுவார். அதை வாசித்தாலே போதும். இப்படி வேண்டாம், வேறுமாதிரி போடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பே இருக்காது.
14. இந்தியாவில் அல்ல ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி. சிம்போனி கம்போஸ் பண்ண குறைந்தது
ஆறு மாதங்களாவது ஆகும். ஆனால் வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.
15. இசைஞானி விசிலில் டியூன் அமைத்து அதை ஒலிநாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல், “காதலின் தீபம் ஒன்று”.
16. படத்தின் கதையைக் கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம், ‘கரகாட்டக்காரன்’.
17. வசனமே இல்லாத காட்சியில் கூட, அந்த காட்சியை இசையால், மௌனத்தால் செழுமைபடுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். அதில் ராஜா கிரேட். இரண்டு பேர் மௌனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட, அவர்களின் மன உணர்வுகளைக் கூட புரியாதவர்களுக்கும் புரிய வைத்துவிடுவார் ராஜா. அந்த அற்புதமான ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு. இந்திய சினிமாவில் பின்னணி இசையில் நம்பர் ஒன் ஜீனியஸ் இளையராஜாதான்.
18. ராஜா ரீ-ரெக்கார்டிங் செய்வதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை படத்தைப் பார்ப்பார், மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பித்துவிடுவார். அவர் ஆரம்பித்து முடிக்கும்போது படம் சரியாக முடிந்திருக்கும். அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.
19. இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே படம் ‘பிள்ளை நிலா’. சவுண்ட்ராக்குகளும் பாடல்களைப் போல ரிக்கார்ட் மற்றும் கேசட்டுகளில் இடம்பெற்றது இளையராஜா இசையமைத்த படங்களில்தான்.
20. பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்தவர் இசைஞானி
21. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதைப் பெற்றவர் இசைஞானி (பழசிராஜா)
22. இசைஞானி முதன் முதலாக ‘ஸ்டீரியோ” முறையில் பாடல்களை பதிவு செய்த படம் ப்ரியா.
23. 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’
24. இசைஞானியின் பாடலுக்காக கதை எழுதிய வெற்றிக்கண்ட படங்கள் வைதேகி காத்திருந்தாள், இளமைக் காலங்கள், அரண்மனைக் கிளி.
25. இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இசைஞானி (புன்னகை மன்னன்).
26. ‘பஞ்சமுகி’ என்றொரு ராகம் நமது ராகதேவனால் இயற்றப்பட்டுள்ளது.. ஆனால் இதுவரை அவர் இந்த ராகத்தினை எந்த பாடலிலும் பயன்படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளார்..
27. பொதுவாக 2 அல்லது 3 நாட்களில் படத்திற்கான இசையமைப்பை முடித்துவிடுவார் ராஜா, ஆனால் அதிகபட்சமாக, அதாவது 24 நாட்கள் பின்னணி இசைக்கோர்ப்புக்காக எடுத்துக்கொண்ட படம் ( காலாபாணி ) தமிழில் ( சிறைச்சாலை).
28. முன்பெல்லாம் கிட்டார், தபேலாக் கலைஞர்கள் உதவியுடன் ஆர்மோனியத்தை இசைத்து டியூன் உருவாக்குவார். அதற்குப் பிறகு ஆர்மோனியத்தில் வாசித்துப் பார்ப்பதில்லை, கண்களை மூடிச் சிந்திப்பார், இசை வடிவங்கள் அவர் மூளையில் இருந்து புறப்படும். அவற்றை அப்படியே இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவார். ஆர்மோனியம் இல்லாமல் இசை அமைக்கும் இந்த ஆற்றல், இந்திய சினிமா இசை
அமைப்பாளர்களில் இவரிடத்தில் மட்டுமே இருக்கிறது என்பது பிரமிப்பான உண்மை.
29. இசைஞானியின் பின்னணி இசை மற்றும் ட்யூன்களைக் காப்பியடித்து பெரிய இசையமைப்பாளரானவர்கள் ஏராளம். இல்லாதவன் எடுத்துக்கிறான் என்று ஆரம்பத்தில் சும்மா விட்டுவிட்டார் இசைஞானி. இப்போதுதான் அதற்கு ஒரு தீர்வு கண்டிருக்கிறார்.
30. இளையராஜா இதுவரை நான்கு முறை தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். பத்மபூஷன் விருதும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.
31. உலகின் முக்கிய இசை விற்பன்னர் எனப்பட்ட பால் மரியா, பிரான்ஸ் வந்த இசைஞானியைச் சந்திக்க 5 நிமிடங்கள்தான் முதலில் நேரம் ஒதுக்கினார். ஆனால் சந்தித்த பிறகு, ராஜாவின் மேதைமை வியந்து, 3 மணி நேரம் பேசிக் கொண்டே இருந்தாராம்!
32. ரஜினி, கமல் இருவரின் அதிகப் படங்களுக்கு இசை தந்தவர் இளையராஜாதான்.
33. ரஜினியை எப்போதும் சாமி என்றுதான் இளையராஜா அழைப்பார். ரஜினியும் ராஜாவை சாமி என்றுதான் அழைப்பார்.
34. புகைப்படங்கள் எடுப்பதில் நிபுணத்துவம் மிக்கவர் இசைஞானி. இவர் எடுத்த புகைப்படங்களை வைத்து சென்னை மற்றும் கோவையில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. இவரது 100 சிறந்த புகைப்படங்களைத் தொகுத்து தனி புத்தகமும் வெளியாக உள்ளது. இதில் அவரது படங்களைப் பற்றி பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
35. இளையராஜாவின் பிரபலமான பாடல்கள் பலவற்றுக்கு வரிகள் தந்தவர் அவரது தம்பி கங்கை அமரன். ‘இசைக்குக் கிடைத்த மிகச் சிறந்த வரம் இளையராஜா’ என்பது அவர் கருத்து.
36. திரைப்படங்களுக்கு பாடல்களே எழுதமாட்டேன் என்பதைக் கொள்கையாகவே வைத்திருந்த கவிஞர் சிற்பி, இளையராஜா இசையில் எழுதிய ஒரே பாடல் ‘மலர்களே.. நாதஸ்வரங்கள்…!’ படம்: கிழக்கே போகும் ரயில்.
37. தனது சொந்தப் படங்களின் இசை வெளியீடு, தன் மகன்கள் இசையமைக்கும் படங்களின் இசை வெளியீடுகளுக்குக் கூடப் போகாத இளையராஜா, பாரதிராஜாவின் பொம்மலாட்டம், கமலின் விஸ்வரூபம் படங்களின் இசை வெளியீட்டு நிகழ்வுகளுக்குப் போய்ச் சிறப்பித்தார். இரண்டு படங்களுக்குமே அவர் இசையமைக்கவில்லை. நட்புக்கு அவர் தந்த மரியாதை அது!
38. இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி ஆரட்டோரியோவைக் கேட்ட எழுத்தாளர் சுஜாதா, ‘கடவுளைக் கோயில்களில் தேடிக் கொண்டிருக்க வேண்டாம். இளையராஜாவின் திருவாசகத்தைக் கேட்டால் போதும்.. கடவுளைக் காணலாம்!’ என்றார்.
39. தன்னிடம் பணியாற்றிய ஏ ஆர் ரஹ்மான் இரு ஆஸ்கர் விருதுகளுடன் நாடு திரும்பினார். அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் இளையராஜா பங்கேற்று ரஹ்மானுக்கு தங்கச் சங்கிலி அணிவித்தார். அப்போது ரஹ்மான், ‘எனக்கு விருது கிடைக்கக் காரணம், எனது முகவர்கள் சரியாக என் இசையை ஆஸ்கர் குழுவுக்குக் கொண்டு சென்றதுதான். ராஜா சார் இதைச் செய்திருந்தால் அவரது இசைக்கு எப்போதோ ஆஸ்கர் கிடைத்திருக்கும்,” என்றார்.
40. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல… அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது ‘குரு’ என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி